பெர்னதெத் சுபீரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மரி பெர்னதெத் சூபிரூஸ்
லூர்து நகரின் புனித பெர்னதெத்
பிறப்பு(1844-01-07)7 சனவரி 1844 [1]
லூர்துஸ், பிரான்சு
இறப்பு16 ஏப்ரல் 1879(1879-04-16) (அகவை 35)
நிவேர்ஸ், பிரான்சு
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்14 ஜூன் 1927, ரோம் by திருத்தந்தை 11ம் பயஸ்
புனிதர் பட்டம்8 திசம்பர் 1933, ரோம் by திருத்தந்தை 11ம் பயஸ்
திருவிழா16 ஏப்ரல் (பிரான்சில் 18 பெப்ரவரி)
பாதுகாவல்உடல் நோய்கள்

புனித மரி பெர்னதெத் சுபீரு அல்லது பெர்னதெத் சூபிரூஸ் (Saint Bernadette Soubirous, 7 ஜனவரி 1844 – 16 ஏப்ரல் 1879), ஒரு திருக்காட்சியாளரும் கத்தோலிக்க புனிதரும் ஆவார்.[2]

தொடக்க காலம்[தொகு]

பெர்னதெத் சூபிரூஸ், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1844 ஜனவரி 7ந்தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே இயேசு கிறிஸ்துவின் மீதும், அன்னை மரியாவின் மேலும் பக்தியுள்ள கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு ஆலையில் வேலை செய்து வந்தார். பெர்னதெத் தனது நேரத்தை பெற்றோருக்கு பயனுள்ள விதத்தில் செலவழித்தார்.

மரியாவின் காட்சிகள்[தொகு]

பெர்னதெத்துக்கு 14 வயது நடந்தபோது, ஒருநாள் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் என்ற குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதத் ஒரு காட்சியைக் கண்டார். மரியன்னை ஒரு இளம் பெண்ணாக இவருக்கு காட்சி அளித்தார்.

பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும், “அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம் பெண்” என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த இளம் பெண், பெர்னதத்தை மீண்டும் அதே இடத்திற்கு வரச் சொன்னார். 1858 பிப்ரவரி 11 முதல் ஜூலை 16ந்தேதி வரை முதல் 18 முறை இவர் மரியன்னையின் காட்சிகளைக் காண பேறுபெற்றார். இவர் பின்னே ஒரு கூட்டம் பக்தியுடனும் மற்றொரு கூட்டம் கேலியுடனும் பின் தொடர்ந்தன.

அந்த இடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்று மரியன்னை பெர்னதெத்திடம் கூறினார்.[3] அன்னையின் வேண்டுகோளை பங்குத்தந்தையிடம் பெர்னதெத் சொன்னபோது அவர் அந்த காட்சியை நம்ப மறுத்தார்; காட்சி அளித்த பெண்ணின் பெயரை கேட்டு வருமாறு சொல்லி அனுப்பினார். மரியா இவரிடம், “நானே அமல உற்பவம்” என்று தன்னைப் பற்றிக் கூறினார். இதற்கு பாவமின்றி பிறந்தவர் என்பது பொருள்.

அதைத் தொடர்ந்து திருச்சபை அதிகாரிகள் காட்சியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தனர். பெர்னதத் 16வது காட்சியைக் கண்டபோது, இவர் கையில் இருந்த மெழுகுவர்த்தி தலைகீழாக எரிந்தது. சிலர் 15 நிமிட அளவாக, இவரது கையை தீயினால் சுட்டனர். அது இவரை ஒன்றுமே செய்யவில்லை. ஒரு காட்சியின்போது, மரியாவின் கட்டளையை ஏற்று பெர்னதத் தோண்டிய ஊற்று நீர், இக்காலத்தில் அதைப் பருகுபவர்களின் நோயைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபை இந்த காட்சிகளை முதலில் ஏற்க தயங்கினாலும், இவற்றை ஆய்வு செய்த நிபுணர் குழு இக்காட்சிகள் நம்பத்தகுந்தவை என சான்றளித்தது. இக்காட்சிகளில் காணப்பட்டவர் இயேசுவின் தாய் மரியா என்பதை ஏற்று, அவரை லூர்து அன்னை என்று கத்தோலிக்க திருச்சபை அழைக்கிறது.

அருட்சகோதரியாக[தொகு]

மெழுகினால் மூடப்பட்டுள்ள புனித பெர்னதெத் சூபிரூசின் அழியாத உடல்

பெர்னதெத் தனது 22ஆம் வயதில், நெவர்ஸ் நகரில் இருந்த இரக்கத்தின் சகோதரிகள் மடத்தில் துறவற வாழ்வைத் தொடங்கினார். அந்த மடத்தில்தான் இவர் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். இயேசுவிடமும் மரியன்னையிடமும் மிகுந்த பக்தி கொண்டவராய் வாழ்ந்தார்.

மேலும் அங்கே தையற்கலைஞராகவும், ஆலய பராமரிப்பாளராகவும் பெர்னதெத் சிறப்பாக பணி செய்தார். ஆலயத்தில் பயன்படுத்தப்படும் துணிகளில் இவர் பலவித கைவேலைப்பாடுகள் செய்து அழகுபடுத்தியுள்ளார். பின்னர், இவருக்கு வலது கால் முட்டியின் எலும்பில் காச நோய் வந்தது.

புனிதர் பட்டம்[தொகு]

நீண்ட நாட்கள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த பெர்னதெத், 1879ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி தனது 35ஆம் வயதில் இறந்தார். 1927 ஜூன் 14 அன்று, திருத்தந்தை பதினேராம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.

1933 டிசம்பர் 8ந்தேதி அமல உற்பவ அன்னை திருவிழா அன்று திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனித பெர்னதத் சூபிரூசின் அழியாத உடல், இவர் வாழ்ந்த நெவர்ஸ் நகர மடத்தின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.ichrusa.com/saintsalive/bernad.htm
  2. புனித மரி பெர்னதெத் சூபிரூஸ்
  3. Holy people of the world: a cross-cultural encyclopedia, Volume 3 by Phyllis G. Jestice 2004 ISBN 1576073556 page 816
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னதெத்_சுபீரு&oldid=3775090" இலிருந்து மீள்விக்கப்பட்டது