பயனர் பேச்சு:Melwynjensen/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிமம்:1.png
ஓலை சுவடிகள்

வரலாறு[தொகு]

இந்த சம்பவம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

நகரத்தார் சம்பந்தமான பிரச்சினைகளை நகரக் கூட்டம் கூட்டி விவாதித்து முடிவு எடுப்பது, பழங்காலம் தொட்டு உள்ள மரபாகும். 12-07-1823 தேதியில் (சித்திரபானு வருடம், ஆனி மாதம் 29-ம் தேதி ) மாத்தூர் அருகே உள்ள உஞ்சனை என்ற ஊரில் 96 ஊர் நகரக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அன்று ஏரியூரை சேர்ந்த காக்கா வெள்ளையன் செட்டியார் என்பவர் கூட்டத்திற்கு தாமதமாக வந்துள்ளார். வந்த வேகத்தில் அவர் வந்த குதிரை வண்டி கிளப்பிய தூசி, கூட்டத்தில் இருந்தவர்கள் மேல் பட்டதால் நகரத்தார்கள் கோபம் கொண்டு கூட்டத்தை பாதியில் நிறுத்தி அவரை முதலில் அபராதம் கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் அதற்கு பிறகுதான் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுத்தார்களாம்.[1]

ஆனால் காக்கா வெள்ளையன் செட்டியார் அதற்கு கட்டுப்படாமல் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாது கோபத்தில் வெளியேறி உள்ளார். அவரைச் சேர்ந்த பங்காளிகள் சிலரும், கொள்வினை, கொடுப்பினை செய்தவர்களில் சிலரும் சேர்ந்து ஆக மொத்தம் 104 புள்ளிகள் அவருடன் பிரிந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு நகர கூட்டத்தை மதிக்காமல் வெளியேறியவர்கள் மீது நகர முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கி.பி.1823-ல் பிரிந்ததிலிருந்து இவர்கள் திருமணங்களுக்கு நகரக் கோவில்களிலிருந்து மாலை அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.[2]

ஒன்பது நகரகோவில்களில் நான்கு கோவில்களை (மாத்தூர், வயிரவன் கோவில், பிள்ளையார்பட்டி, இளையாற்றங்குடி) சேர்ந்த நகரத்தார் மட்டுமே இந்த 104 புள்ளிகளில் அடக்கம். இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் என்ற தலைப்பில் ஓலைச்சுவடியில் ஒரு முறி எழுதிக்கட்டி இருக்கிறார்கள். (ஓலைச்சுவடிகளின் படங்களை பார்க்கவும்.) அதில் 104 புள்ளிகளும் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள். அந்த முறியில் கொள்வினை, கொடுப்பினை நன்மை, புதுமை, சுகசோபன காரியங்கள் எவ்விதம் செய்து கொள்வதென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரிந்து வந்த 104 புள்ளிகளும் மேற்படி முறிப்படி ஆவரங்குடி, கருங்குளம், பனக்கரை, சருகணி, உறுதிக்கோட்டை, திட்டுக்கோட்டை, ஏரியூர், சூரக்குடி ஆகிய ஊர்களில் குடியேறி நாளடைவில் இந்த ஊர்களைக் காலிசெய்து தற்சமயம் குமாரவேலூர், சீனமங்கலம், சண்முகநாதபட்டினம், S.சொக்கநாதபுரம், கருங்குளம், ஆவரங்குடி, ஏரியூர், சூரக்குடி, புதூர் ஆகிய ஊர்களில் இருந்து வருகிறார்கள்.

இந்த 104 புள்ளிகளின் வாரிசுகள் இன்று சுமார் 1400 புள்ளிகளாக வளர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகையைத் தவிர வேறு வட்டகையிலோ, வேறு சமுதாயத்திலோ கொள்வினை, கொடுப்பினை (திருமண உறவுகள்) செய்வது கிடையாது.

படிமம்:2.png
ஓலை சுவடிகள்

ஆதாரங்கள்[தொகு]

புதுவயல், நாச்சாத்தாள் படைப்பு[தொகு]

இந்தப் படைப்பை வயிரவன் கோவிலைச் சேர்ந்த நகரத்தார்கள் ஒவ்வொரு வருடமும் புதுவயலில் நடத்திவருகிறார்கள். படைப்பு என்பது பங்காளிகள் சேர்ந்து மூதாதையர்களை நினைத்து சாமி கும்பிடுவதாகும். கி.பி.1823-லிருந்து உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள் பிரிந்து வாழ்ந்தாலும் மேற்படி நாச்சாத்தாள் படைப்பில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக புதுவயலில் இருந்து உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தாரை சேர்ந்த வயிரவன் கோவில் புள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வந்துகொண்டு இருக்கிற அழைப்புகளில் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தாரை “நமது பங்காளிகள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.[3][4]

குன்றக்குடி அன்னதான மடம்[தொகு]

குன்றக்குடி அன்னதான மடத்தில் ஒவ்வொரு வருடமும் நகரத்தார்களால் புள்ளி ஒன்றுக்கு விகிதாசாரப்படி வரி வசூல் செய்து, மஹேஸ்வர பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பூஜைக்கு உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களுக்கும் வருடாவருடம் அழைப்பு வந்து புள்ளி ஒன்றுக்கு விகிதாச்சாரப்படி வரி வசூல் செய்து மேற்படி மகேஸ்வர பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.[5]

உபதேசம் பெறுதல்[தொகு]

நகரத்தார் குரு ஒருவரிடம் உபதேசம் பெறும் மரபு உண்டு. முன்பு ஆண்களுக்கு மட்டும் உபதேசம் அளிக்கப்பெற்றது என்பதும் பின்னர் பெண்களுக்கும் உபதேசம் அளிக்கப்பெறுகின்றது என்பதும் இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் உபதேசம் அளிக்கப்படுகிறது என்பதும் நகரத்தார் வழக்கில் காணப்படுவதொன்று ஆகும்.[6]

துலாவூரில் உள்ள பெண்கள் குரு பீடத்தின் முதல் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நிரம்பவழகிய ஞானப்பிரகாச தேசிகர் ஆவர். இவரது காலம் கி.பி. 913-943 ஆகும். தற்பொழுது இதன் 29-வது குருவாக ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச குரு தேசிகர் இருந்து வருகிறார்கள்.

ஆண்கள் குரு பீடத்தின் மூல நிறுவனம் மகிபாலன்பட்டி அருகில் உள்ள கலாமடம் ஆகும். இதன் தோற்றம் கி.பி.707. கி.பி.1544-ல் பாதரக்குடியில் இராமநாத சுவாமிகள் குருவாக நியமிக்கப்பட்டு ஆண்களுக்கு உபதேசம் செய்வித்தார்கள். 1975-ல் கலாமடமும் பாதரக்குடிமடமும் ஒன்றாக இணைக்கப்பட்டன.[7]

நகரத்தார்கள் சாதிமுறை நியாயப்படி ஆண்கள் பாதரக்குடி மடத்திலும், பெண்கள் துலாவூர் மடத்திலும் உபதேசம் கேட்டுக்கொள்ளவேண்டும். உறுதிக்கோட்டைவட்டகை நகரத்தார்களும், நகரத்தார் சாதிமுறை நியாயப்படி பெண்கள் துலாவூர் மடாதிபதியிடமும், ஆண்கள் பாதரக்குடி சுவாமி அவர்களிடமும் உபதேசம் பெற்று வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக 26.09.1976-ல் துலாவூர் மடாதிபதி அவர்கள் T. குமரப்பா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் பெண்களுக்கு துலாவூர் மடாதிபதியும், ஆண்களுக்கு பாதரக்குடி சாமியார் அவர்களும் தீட்சை நடத்தி வந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.[8]

நகரத்தார் சடங்குகள் & பழக்க வழக்கங்கள்[தொகு]

உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களுக்கு கோவிலும், கோவில் பிரிவுகளும் உண்டு. புதுமை, கார்திகைச்சூப்படி, திருவாதிரை, திருமணம், மகர்நோன்பு, பிள்ளையார் நோன்பு முதலிய சடங்குகளை மற்ற நகரத்தார்களைப் போலவே உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களும் செய்து வருகின்றனர்.[9] [10]

உசாத்துணைகள்[தொகு]

  1. செட்டிநாடும் செந்தமிழும். சென்னை: வானதி பதிப்பகம். 1984. பக். 540. 
  2. செட்டியார், பட்டுவேட்டி ரெ. ராமநாதன் (2015). நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு. சிவகாசி: சூர்யா பிரிண்ட் சொலூஷன்ஸ். பக். 142-197. 
  3. உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் - நாட்டுக்கோட்டை நகரத்தார்களே ! ஆதாரங்கள் கையேடு. கோயம்பத்தூர். பக். 4. 
  4. செட்டியார், பட்டுவேட்டி ரெ. ராமநாதன் (2015). நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு. சூர்யா பிரிண்ட் சொலூஷன்ஸ். பக். 159. 
  5. செட்டியார், பட்டுவேட்டி ரெ. ராமநாதன் (2015). நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு. சிவகாசி: சூர்யா பிரிண்ட் சொலூஷன்ஸ். பக். 161. 
  6. செட்டிநாடும் செந்தமிழும். சென்னை: வானதி பதிப்பகம். 1984. பக். 540. 
  7. நகரத்தார் கையேடு. காரைக்குடி. 1988. பக். 21. 
  8. உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் - நாட்டுக்கோட்டை நகரத்தார்களே ! ஆதாரங்கள் கையேடு. கோயம்பத்தூர். 1989. பக். 5. 
  9. நகரத்தார் மலர். 15.11.88. பக். 19. 
  10. செட்டிநாடும் செந்தமிழும். சென்னை: வானதி பதிப்பகம். 1984. பக். 11.