பயனர்:VishnuKiruthika

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடி மாதப் பண்டிகைகள்

ஆடி மாதம் தென்னிந்தியாவின் விசேஷமான மாதங்களில் ஒன்றாகும். அந்த மாதம் தெய்வ வழிபாடுகள் மிகுந்த மாதம். மகாபாரதத்தின் குரு ஷேத்திரப் போர் ஆடி மாதம் முதல் நாளில் தொடங்கி, பதினெட்டு நாட்கள் நடந்து முடிந்ததாக இதிகாசம் கூறுகிறது. தென்னகம் முழுவதிலும் உள்ள அம்மன் ஆலயங்களில் பூஜைகள் நடைபெறுவதும், பெண்கள் விரதங்கள் இருப்பதும் இந்த மாதத்தில் நடைபெறும்.

ஆடி 1- தேங்காய் சுடும் நிகழ்வு

ஆடி ஒன்றாம் நாள் கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் 'தேங்காய் சுடும் நிகழ்வு' நடைபெறுகிறது. தேங்காயின் அடிப் பகுதியில் சிறு துளையிட்டு, அதிலுள்ள நீரை முதலில் வெளியேற்றி விடுவார்கள். பிறகு அதே துளையின் மூலம் அவல், வெல்லத் தூள், பச்சரிசி, பாசிப் பருப்பு, வெள்ளை எள் ஆகியவற்றை உள்ளே கொட்டுவார்கள். இப்போது தேங்காயில் இருந்து வெளியேற்றப் பட்ட தண்ணீரை மீண்டும் அதே துளையின் மூலம் உள்ளே ஊற்றிவிடுவார்கள். பின் அழிஞ்சி மரக் குச்சி ஒன்றை முனையில் சீவி இந்தத் துளையில் குத்தி விடுவார்கள். பின்பு மஞ்சள், குங்குமம் வைத்து இந்தத் தேங்காயைத் தயார் செய்து, தீயில் சுடுவார்கள்.

 இப்படிச் சுட்ட தேங்காயை முதலில் பிள்ளையாருக்கு வைத்துப் படைத்துக் கும்பிடுவார்கள். பின் அதை உடைத்து சாப்பிடுகிறார்கள்.

காரணம்:

மகாபாரதப் போரில், தர்மத்தின் வெற்றிக்காக தன்னையே பலியாகக் கொடுத்த 'அரவான்' என்னும் ஒரு வீரனை நினைவில் கொள்வதற்காகத் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.அரவான் - அர்ஜுனன் மற்றும் (உலுப்பி என்கிற) அரவக்கன்னி ஆகியோரின் மகன் ஆவான். ஒரு மனிதனுக்கு வேண்டிய சகல லட்சணங்களும் பொருந்தியவனாக அவன் இருந்ததால், அவனைப் போர்க்களத்துக்கு பலியாகக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்று பாண்டவர்களுக்குத் தெரிகிறது. ஆகவே அரவான் பலியிடப் படுகிறான். பலியிடப்படும் முன் தனது இறுதி ஆசையாக ஒன்றை அவன் கேட்கிறான். "நான் பலியிடப் படுவதால் என் தந்தைக்குக் கிடைக்கும் வெற்றியை நான் காண விரும்புகிறேன். அதனால் என் தலையை மட்டும் ஒரு உயரமான ஒரு இடத்தில் (குத்தி) வைத்து விட வேண்டும்" என்கிறான். அவனது ஆசை ஏற்கப் பட்டு, நிறைவேற்றப் பட்ட நாள் ஆடி ஒன்றாம் நாள். அதை நினைவு கூறவே ஆடி ஒன்று அன்று தேங்காயைக் குச்சியில் சொருகி, கோவிலில் வைக்கும் வழக்கம் பின் பற்றப் படுகிறது. அதைத் தீயில் வாட்டும் வழக்கம் நாளடைவில் வந்து விட்டது. தமிழகத்தில் திரவுபதி அம்மன் கோவில்கள் அனைத்திலும் அரவானின் தலை, தனி தெய்வமாக வணங்கப் படுகிறது.


ஆடிப்பெருக்கு விழா

ஆடி 18 என்பது கொங்கு மண்டலத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். காவிரியின் புது நீருக்குத் தரப்படும் ஒரு வரவேற்பு இது என்றாலும், பாரதப் போரின் இறுதி நாளும் இதுவே என்பதால் சற்றுக் கூடுதல் சிறப்பானது இந்த நாள். ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆற்றில் முளைப்பாரி விடும் நிகழ்வுக்காக ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு முன்பே தானியங்களைக் கொண்டு முளைப்பாரி விதைக்கப் பட்டு விடும். பின்பு ஆடி மாதம் பதினெட்டாம் தேதியன்று ஆற்றங்கரைக்குச் சென்று காவிரி நீரை வணங்கிப் புது நீரில் குளிப்பார்கள்.

பிறகு ஆற்று மண்ணை எடுத்து 6 சிறு கூம்புகள் போல் இடுவார்கள். அவை பஞ்ச பாண்டவர்களான தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும் ஆறாவது சிலை திரவுபதியையும் குறிக்கும். அந்த ஆறாவது கூம்பு உருவத்திற்கு மட்டும் பெண்கள் உபயோகிக்கும் சில பொருட்களால் அலங்கரிக்கிறார்கள். (சிலர் ஒரே ஒரு கூம்பு உருவத்தை மட்டும் இடுவார்கள். அப்படியெனில் அது காவிரித் தாயைக் குறிக்கும்.) அந்த மண் உருவங்களுக்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் வைத்து, தெய்வச் சிலைகளைப் பூசிப்பது போல் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பின்பு முளைப்பாரியை ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வழிபாட்டை முடித்து விடுகிறார்கள்.

ஊர்க்கோவிலில் இருக்கும் அம்மன் சிலையை ஆற்றுப் புது நீரில் கழுவிப் பூஜை செய்து மீண்டும் கோவிலுக்குக் கொண்டு சென்று வைப்பதும் சில ஊர்களில் நடக்கும். சேலம் மாவட்டம் மேட்டூரில் அணைக்கட்டு இருப்பதாலும் ஆடி மாதங்களில் அணைக்கு நீர் வரத்து இருப்பதாலும் இந்த நிகழ்வு சிறப்பாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VishnuKiruthika&oldid=2558799" இலிருந்து மீள்விக்கப்பட்டது