பயனர்:Parvathisri/ கூகுள் கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கதக்கின் பிரபல முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சக்கர்வாலா டுக்ராவை நிகழ்த்தும் நடனக் கலைஞர்
குய்மெட் அருங்காட்சியகத்தில் ஷர்மிளா ஷர்மா மற்றும் இராஜேந்திர குமார் கங்கானி ஆகியோரால் நடத்தப்படும் கதக் நிகழ்ச்சி (நவம்பர் 2007)

கதக் (இந்தி: कथक, உருது: کتھک ) வட இந்தியாவில் உருவான எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும். இது உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும். இந்த நடன வடிவமானது கதாக்ஸ் அல்லது கதைச்சொல்லிகள் என்றழைக்கப்படும் பழங்காலத்து வட இந்தியாவின் நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. கதக் என்ற சொல் "கதை" என்று பொருள்படும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது,

கிராம மையப்பகுதிகள் மற்றும் கோவில் முற்றங்களில் நிகழ்வுகளை நடத்திய இந்த பாணர்கள், பெரும்பாலும் புராணக் கதைகள், இதிகாசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிக் கதைகளை விவரித்துக் கூறுவதில் நிபுணர்களாக இருந்தனர். கதக் நடனக் கலைஞர்கள் தங்களுடைய கை அசைவுகள்,கால் தாளங்கள், முகபாவங்களால் கதைகளுக்கு உயிரூட்டுகின்றனர். மேலும் இசைக் கருவிகளையும் வாய்ப்பாடல்களையும் பயன்படுத்தி ஒரு நெகிழ்வுத்தன்மையுடன் பல்வேறு கதைகளைச் சொல்கின்றனர். பிற்காலத்தில் கதக் நடனத்தின் வடிவமானது கோவில், சமயச் சடங்குக்குரிய நடனங்களாக பக்தி இயக்கத்தின் பாதிப்பையுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்துக் கடவுளான கிருஷ்ணரின் குழந்தைப் பருவக் கதைகள் அதிகமாகக் கூறப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டு முதல் அது பெர்ஷிய நடனம், முகலாய அரசவை நடனம், மத்திய ஆசிய நடனம் ஆகியவற்றின் சில குறிப்பிட்ட அம்சங்களை உள்வாங்கிக்கொண்டது. கதக் நிகழ்ச்சிகளில் உருது கசல்கள் மற்றும் முகலாயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட பொதுவாக பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியவை இசைக்கப்படுகின்றன. இதன் விளைவாக, பாரசீக கூறுகளைக் கொண்ட ஒரே இந்திய பாரம்பரிய நடன வடிவம் இதுவாகும்.

மரபுகள்[தொகு]

கதக் நடன வடிவமானது கரானா(பாணிஅல்லது மரபு)) எனப்படும் மூன்று தனித்துவமான மரபு வடிவங்களில் காணப்படுகிறது. ஜெய்ப்பூர், பனாரஸ், லக்னோ என அவை உருவான ஊர்களின் பெயர்களுடன் ஜெய்ப்பூர் கரானா, - லக்னோ கரானா, பனாரஸ் கரானா என்று அழைக்கப்படுகின்றன. இவை முறையே கச்வாஹா ராஜபுத அரசர்கள், ஔதின் நவாப் மற்றும் வாரணாசியின் அரசவைகளில் உருவானவை. இவற்றிலிருந்து ராய்கார் கரானாவும் போன்ற சில நவீன துணை மரபு வடிவங்களும் உருவாகியுள்ளன. இது முந்தைய மூன்று கரானாக்களிலிருந்த நுணுக்கங்களை ஒன்றுசேர்த்த தனித்துவமான தனிச்சிறப்புடைய இசைப்பாடல்களுக்காகப் அறியப்படுகிறது.

ஆடும் முறை[தொகு]

ஜெய்ப்பூர் கரானா கால் அசைவுகளில் அதிகக் கவனம் செலுத்துகிறது, பனாரஸ் மற்றும் லக்னோ கரானாக்கள் முகபாவங்கள் மற்றும் அழகான கை அசைவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. நவீனபாணி கதக் நடன வடிவம் தாளத்திற்கேற்ற கால் அசைவுகளை வலியுறுத்துகிறது. சிறிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட குங்குரூ எனப்படும் கால் சலங்கைகள்(Ghungroo ) தாளத்திற்கும் இசைக்கும் இசைவானதாக ஒலிக்கின்றன. இதில் கால்களும் உடற்பகுதியும் பொதுவாக நேராக இருக்கும். கைகளின் மூலமாக செய்யப்படும் சைகைகள்,மேல் உடல் அசைவுகள், முகபாவனைகள், கழுத்து அசைவுகள், கண்கள் மற்றும் புருவ அசைவுகள், மேடையில் அசைவுகள், வளைவுகள் மற்றும் திருப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சைகைகள் மூலம் கதை சொல்லப்படுகிறது. நடனத்தின் முக்கிய கவனம் கண்கள் மற்றும் கால் அசைவுகள் ஆகும். நடனக் கலைஞர் நமக்குச் சொல்ல முயற்சிக்கும் கதையின் தொடர்பு ஊடகமாக கண்கள் செயல்படுகின்றன. புருவங்களைக் கொண்டு நடனக் கலைஞர் பல்வேறு முகபாவனைகளைக் கொடுக்கிறார். பாரம்பரிய வடிவிற்கும், நவீன துணை மரபுகளுக்கிடையேயான வேறுபாடு என்னவென்றால், நடிப்பு மற்றும் கால்வேலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமாகும். லக்னோ பாணி நடிப்பை வலியுறுத்துகிறது; ஜெய்ப்பூர் பாணி அதன் கண்கவர் கால்வேலைக்கு புகழ் பெற்றது

சொற்பிறப்பியல்[தொகு]

கதக் என்னும் பெயர் சமற்கிருத வார்த்தையான கதா விலிருநு உருவானது. அதற்கு கதை என்று பொருள். தென்னிந்தியாவில் பரதநாட்டியம், கிழக்கிந்தியாவில் ஒடிசி மற்றும் தெற்காசியாவில் காணப்படும் பிற முக்கிய பாரம்பரிய நடனங்கள் போன்ற வரலாற்று தாக்கத்துடன், குறிப்பாக வட இந்தியாவில் காணப்படும் முக்கிய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகக் கதக் திகழ்கிறது. இது வடக்கிலும் இந்திய துணைக்கண்டத்தின் பிற பகுதிகளிலும் காணப்படும் ஏராளமான நாட்டுப்புற நடன வடிவங்களிலிருந்து வேறுபடுகிறது. மேலும் சமற்கிருதத்தில் கத்தாக்கா என்றால் கதை சொல்லும் ஒருவன்/ஒருத்தி அல்லது கதைக்கு சம்பந்தப்பட்டது என்று பொருள். இந்த வடிவத்தின் சரியான பெயர் कत्थक கத்தாக்ஆகும். தற்போது இது कथक கதக் என அழைக்கப்படுகிறது.

கதக் என்பது ஒரு செயல்திறன் மிக்க கலையாகும், இது வாய்வழியாக கற்பிக்கப்பட்டு பாரம்பரியமாக வளர்ந்துவரும் கலையாகும். ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு வாய்மொழியாகவும் பயிற்சி மூலமாகவும் புதுமைப்படுத்தப்பட்டு கற்பிக்கப்படுகிறது. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில், குறிப்பாக அக்பரால், முகலாய அரசவைகளில் இரசனைக்குரிய ஒரு கலையாக மாற்றமடைந்தது. அவர்கள் இக்கலையைப் போற்றி பாதுகாத்தனர். ஆனால் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இக்கலை தேக்கமடைந்து வீழ்ச்சியடைந்தது, பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதும் மறுபிறவி எடுத்தது. இந்நடனக்கலை அதன் பண்டைய வேர்களையும் தேசிய அடையாள உணர்வையும் மீண்டும் கண்டுபிடிக்க முயன்றது.

பாரம்பரிய கதக் நடனமானது எளிமையான சில பிராந்திய மாறுபாடுகளுக்கு ஊக்கமளித்துள்ளது. இதிலிருந்து பிறந்த மற்றொரு நடனவடிவம் பாவாய் ஆகும். இது குறிப்பாக இந்து பெண் தெய்வங்களின் ( சக்தி ) கதைகளை மையமாகக் கொண்ட கிராமிய நாடக வடிவமாகும். மேலும் இது இடைக்காலத்தில் தோன்றிய ஒன்று. தற்போது குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசங்களில் இன்றும் காணப்படுகிறது. பண்டைய கதக்கிலிருந்து தோன்றிய மற்றொரு மாறுபாடு தும்ரி ஆகும். ஆங்கிலேயர்களால் " நாட்ச் " நடனக் கலைஞர்கள் என்று அழைக்கப்பட்ட தவைஃப் சமூகத்தால் தும்ரி உருவாக்கப்பட்டது. கதக் நடனக் கலைஞர்கள் என்ற அவர்களின் வரலாறு நவீன இந்தியாவில் பல்லபி சக்ரவர்த்தியில் அழிக்கப்பட்டு விட்டது.[1]

வரலாறு[தொகு]

மேரி ஸ்னோட்கிராஸின் கூற்றுப்படி, இந்தியாவின் கதக் பாரம்பரியம் கிமு 400 இல் தொடங்குகிறது. கதக் நடனத்தின் வேர்களைக் கொண்ட ஆரம்பகால உரை பரத முனிவர் தொகுத்ததாகக் கருதப்படும் நாட்டிய சாஸ்திரம் ஆகும். மேலும் அதன் முதல் முழுமையான தொகுப்பு கி.பி.200 BCE க்கும் கிமு 200 CE க்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கிறது. ஆனால் அதன் மதிப்பீடுகள் கி.பி 500 BCE க்கும் கிமு 500 CE க்கும் இடையில் வேறுபடுகின்றன. 

நாட்டிய சாஸ்திர உரையின் மிகவும் ஆய்வு செய்யப்பட்ட பதிப்பு 36 அத்தியாயங்களாக கட்டமைக்கப்பட்ட சுமார் 6000 வசனங்களைக் கொண்டுள்ளது. நடாலியா லிடோவா என்பவரின் உரைப்படி அதில் கூறப்பட்டுள்ள தாண்டவக் கோட்பாடு, பாவங்கள், வெளிப்பாடு, சைகைகள், நடிப்பு நுட்பங்கள், அடிப்படை படிகள், நிற்கும் நடனக் கோட்பாடு( சிவன்), ரசக் தோரணைகள் - இவை அனைத்தும் கதக் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய நடனங்களின் ஒரு பகுதியாகும். ஆன்மீக கருத்துக்கள், நற்பண்புகள் மற்றும் வேதங்களின் சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாக கதக் நடனம் மற்றும் அதன் நிகழ்த்துக்கலைகள் திகழ்வதாக பண்டைய இந்து நூல் கூறுகிறது.

பர்குட்டில் கண்டறியப்பட்ட தூண்களில் காணப்படும் நடன முத்திரைகள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்குரியன. அதில் நடனக் கலைஞர்களின் செங்குத்து நிலைப்பாடு, கைகளின் நிலைகள் ஆகியவை இன்றைய கதக் அசைவுகளைப் பரிந்துரைக்கின்றன. அவற்றில் பெரும்பாலான நடனக் கலைஞர்கள் தங்களின் ஒரு கையை காதுக்கு அருகில் நிறுத்தி படக ஹஸ்தா(முத்திரை)யில் வைத்துள்ளனர். பிந்தைய ஆண்டுகளில், படக ஹஸ்தா மார்பளவு நிலைக்குக் குறைக்கப்பட்டது.

மஹாபாரதம் போன்ற பண்டைய இந்து நூல்களில் "கதைசொல்லிகள்" என்ற பொருளில் கதகாக்கள் என்ற சொல் காணப்படுகிறது[2] இந்து இதிகாசங்களில் பாணர்கள், நடிகர்கள், நடனக் கலைஞர்கள், பாடகர்கள், புராணங்கள் மற்றும் கதைகளை இசையோடு வாசிப்பவர்கள் ஆகியோரை நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பக்தி இயக்க காலம்[தொகு]

"கதக்" பாரம்பரிய நடன வடிவமாக வாரணாசியில் தொடங்கி அங்கிருந்து வடமேற்கே லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததாக உரை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கதக் நடனத்தின் லக்னோ பாரம்பரியமாது உத்திரபிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள ஹாண்டியா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பக்தி இயக்கத்தைச் சார்ந்த பெண்மணியின் பக்தியின் பாணியைக் கூறுகிறது, அவர் இந்து கடவுளான கிருஷ்ணர் தனது கனவில் தோன்றி "நடனத்தை ஒரு வழிபாட்டு முறையாக" வளர்க்கும்படி கேட்டுக் கொண்டார். எனக் கூறப்படுகிறது. ஈஸ்வரி தனது சந்ததியினருக்கு இந்த நடனத்தைக் கற்பித்தார், ஆறு தலைமுறைகளாக வாய்வழிப் பாரம்பரியத்தின் மூலம் கற்றும் அதனை வளர்த்துப் பாதுகாத்தும் இறுதியில் கதக் நடனத்தின் லக்னோ கரோனாவை அளித்தார் - இது இந்து மற்றும் முஸ்லீம் இலக்கியங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இசை மரமாகும்.

பக்தி இயக்கக் காலத்தில் கதக் நடனக் கருப்பொருளானது இந்து மதத்தின் வைணவ பாரம்பரியத்தில் காணப்படும் புராணங்கள் மற்றும் பாகவத புராணம் போன்ற நூல்களைச் சுற்றியே இருந்தது முதன்மையாக தெய்வீக கிருஷ்ணரையும் அவரது காதலியான ராதா, பணிப்பெண்களான கோபிகைகள் ஆகியோரை மையமாகக் கொண்டது - ராதா மற்றும் கிருஷ்ணா இடையேயான காதல் ஆத்மாவுக்கும் தெய்வத்திற்கும் இடையேயான காதலுக்கு அடையாளமாக மாறியது, இது கதக் கலைஞர்களின் நடனம் மற்றும் நடிப்பை உணர்வுடன் வெளிப்படுத்தும் சிறந்த கருப்பொருளாக விளங்கியது. கதக் நடனத்தின் விரைவாகச் சுழன்றாடும் சுழற்சிகளில் மத்திய ஆசியாவின் தாக்கமிருப்பதாக முன்மொழியப்பட்டாலும், 13 ஆம் நூற்றாண்டின் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் பற்றிய சமஸ்கிருத உரையான சங்கீதரத்னாகரா என்ற நூலில் அத்தியாயம் 4 இல் டோலா என்ற இசைக்கருவியை கொட்டுவது போல் கைகளை வைத்துக்கொண்டு வளைந்த சக்கரம் போல வேகமாகச் சுழலும் நடன இயக்கம் குறிப்பிடப்படுகிறது. உடலை உள்நோக்கி வளைப்பது 'சக்கரமண்டலா' என்று அழைக்கப்படும் இது தெய்வங்களை வழிபடுவதிலும், விறுவிறுப்பான நடன இயக்கத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பிரஜ் பகுதியில் மதுராவில் தோன்றிய ராசலீலா என்ற நடனத்தின் தோற்றம் கதக்கின் முக்கியமான வளர்ச்சி நிலையாகும். இது இசை, நடனம் மற்றும் கதையை தன்னுள் இணைத்தது. எவ்வாறாயினும், ராசலீலாவில் நடனம் குறிப்பாக கதகர்கள் அல்லது கதை சொல்லுபவர்களின் அடிப்படைச் சுவை மற்றும் சைகைகளின் நீட்டிப்பாக இருந்தது, இது தற்போதுள்ள பாரம்பரிய நடனத்துடன் எளிதாகக் கலந்தது.

முகலாயர் காலம்[தொகு]

முகலாயர்களின் வருகையால் கதக் நடன வடிவம் ஒரு புதிய உத்வேகத்தைப் பெற்றது. கோவில் முற்றத்தில் இருந்து அரண்மனை தர்பாருக்கு மாற்றம் பெற்றது. எனவே, இதனை நிகழ்த்துவதில் மாற்றங்கள் தேவைப்பட்டன. இந்து மற்றும் முகலாய அரசவைகளில், கதக் நடனம் மிகவும் பகட்டானதாக மாறியது. மேலும் ஒரு அதிநவீன பொழுதுபோக்கு வடிவமாகவும் கருதப்பட்டது. முஸ்லீம்களின் கீழ், கதக் நடனத்தின் நிருத்யா மற்றும் பாவங்களின் மீது நயமான, வெளிப்படையான மற்றும் உணர்ச்சிகரமான பரிமாணங்கள் அழுத்தமாக வெளிப்பட்டன.

டிரிட் வில்லியம்ஸின் கூற்றுப்படி: முகலாய கால அரசவைகளும் பிரபுக்களும் கதக்கை ஒரு பிரபுத்துவ பொழுதுபோக்காக ஏற்றுக்கொண்டனர். குறைந்த வருமானம் கொண்ட கதை சொல்லிக் குடும்பங்கள் அதை வழங்கத் தயாராக இருந்தனர்.

காலப்போக்கில், கதக் தொகுப்பானது பாரசீக மற்றும் மத்திய ஆசியாவின் அதாவது சூஃபி நடனத்தின் சுழற்சி போன்ற சில கருப்பொருள்களையும் சேர்த்துக் கொண்டது. இடைக்கால ஹரேம் நடனக் கலைஞர்களைப் போல் புடவைகளுக்குப் பதிலாக வயிற்றுப்பகுதியை மூடிய உடைகள் இலேசான வெளித்தெரியக்கூட முகத்திரை ஆகியவற்றை கலைஞர்கள் உடைகளாக பொதுவாக அணிந்தனர் காலனித்துவ ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியாவிற்கு வரத் தொடங்கியபோது, அவர்கள் கண்ட கதக் நடனமானது அரசவைப் பொழுதுபோக்காகவும், பண்டைய இந்திய பாரம்பரியம் மற்றும் மத்திய ஆசிய-பாரசீக நடன வடிவத்தின் தொகுப்பாகவும் இருந்தது.ஆங்கிலேயர்களால் நாட்டியம் என்ற சமற்கிருத சொல்லை உச்சரிக்கக் கடினமாக இருந்ததால் கதக் நடன கலைஞர்கள் "நாட்ச் கேர்ள்ஸ்" என்று அழைக்கப்பட்டனர்.

பிரித்தானியர் காலம்[தொகு]

19 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் விரிவாக்ககமடைந்த பொழுது, மரபு வழியாக அரசவைகளில் நிகழ்த்தப்பட்டு வந்த கதக்கின் அனைத்து பாரம்பரிய நடன வடிவங்களும் ஊக்கப்படுத்துவோரின்றி வீழ்ச்சியடைந்தன.

இது இந்து மதத்தை விமர்சித்த ஆங்கிலிகன் மிஷனரிகள், விக்டோரியன் ஒழுக்கமான பாலியல் அடக்குமுறையினை நிகழ்த்திய விளைவின் ஒரு பகுதியாகும். உதாரணமாக, ரெவரெண்ட் ஜேம்ஸ் லாங், கதக் நடனக் கலைஞர்கள் பண்டைய இந்தியக் கதைகள் மற்றும் இந்து இதிகாசங்களை மறந்துவிட்டு, அவற்றை ஐரோப்பிய புராணக்கதைகள் மற்றும் கிறிஸ்தவக் கதைகளுடன் நிகழ்த்த வேண்டும் என்று முன்மொழிந்தார். கதக் நிகழ்ச்சிகளின் போது இந்து பார்வையாளர்கள் கைதட்டி "ராம், ராம்" என்று கத்துவதைப் பார்த்த மிஷனரிகள் தங்கள் விரக்தியைப் பதிவு செய்தனர்.


கோயில்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் கதக் நிகழ்ச்சிகளின் போது வெளிப்படுத்தும் மயக்கும் சைகைகள் மற்றும் முகபாவனைகள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான "தி ராங்ஸ் ஆஃப் இந்தியன் வுமன்ஹுட்" இதழில் கேலிச்சித்திர வடிவில் மோசமாக விமர்சனம்செய்யப்பட்டன, கதக் நாட்டியப் பெண்கள் வேசிகள்; இது ஓர் இழிவான சிற்றின்ப கலாச்சாரம்; பூசாரிகளுக்கு அடிமையான பாரம்பரியத்தின் சான்றாகும். எனவே. கிரிஸ்துவர் மிஷனரிகள் இதனை ஆதரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரினர். 1892 இல் "நடன எதிர்ப்பு இயக்கம்" அல்லது "நாட்ச் எதிர்ப்பு இயக்கம்" தொடங்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் செய்தித்தாள்கள் கதக் நடனக் கலைஞர்களை மனிதநேயமற்றவர்களாக சித்தரித்தன. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இவர்கள் 'தேவதாசிகள் என்றும் தவாயிஃப்கள் என்றும் அழைக்கப்பட்ட நடன மங்கைகளை கிறித்துவ மிஷினரிகள் ஆதரிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பலர் நடன வடிவத்தை விபச்சாரத்தின் முன்னோடியாகக் குற்றம் சாட்டினர், மறுமலர்ச்சியாளர்கள் காலனித்துவ எழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்ட வரலாறுகளைக் குறித்து கேள்வி எழுப்பினர்.

மிஷனரிகளும் காலனித்துவ அதிகாரிகளும் கதக் நடனக் கலைஞர்களை கேலி செய்தது மட்டுமின்றி, பிரிட்டிஷ் நிறுவனத்தில் கல்வி கற்று விக்டோரியன் நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்ட இந்திய ஆண்களும் விமர்சனத்திற்கு ஆளாகினர் என்று மார்கரெட் வாக்கர் கூறுகிறார்.

"நடனத்தின் பின்னணியில் உள்ள கருப்பொருள்கள், இந்தியக் கலாச்சார பாரம்பரியத்தில் உள்ள சமூகத் தீமைகள்; ஒழுக்கக்கேடான மற்றும் பின்தங்கிய கூறுகளில் ஒன்று" என்று கருதினர். இருப்பினும், இந்து குடும்பங்கள் தங்கள் தனிப்பட்ட பயிற்சியைத் தொடர்ந்தன. மேலும் கதக் கலையை வாய்வழி பாரம்பரியமாக உயிர்ப்பித்தன. 20 ஆம் நூற்றாண்டில் கதக் ஆசிரியர்களும் கதக் நடன மங்கைகளும் ஏளனம் செய்யப்பட்டதால், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக சிறுவர்களைப் பயிற்றுவிப்பதற்கு மாறினர்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்கபிரசாத் மகாராஜ் மூலம் இந்தியாவுக்கு வெளியே உள்ள பார்வையாளர்களின் கவனத்திற்கு கதக் நடனம் கொண்டு வரப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்[தொகு]

காலனித்துவ சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த சுதந்திர இந்தியாவுக்கான விடுதலைஇயக்கம், கதக்கின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதோடு அதனை இன்னும் பரந்த அளவில் , கொண்டு சென்றது. மேலும் கதக்கின் கலாச்சார புத்துணர்ச்சியையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்கவும் வரலாற்றை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியையும் கண்டதாக வாக்கர் கூறுகிறார்.

கதக் மறுமலர்ச்சி இயக்கங்களோடு இணைந்து இந்து கரானாக்கள் குறிப்பாக கதக்-மிஸ்ரா சமூகம் வளர்ச்சியடைந்தது. இவற்றில் கதக்கின் ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ துணை மரபுகள் அதிக புலமைப்பரிசில்களை ஈர்த்துள்ளன.

1956 இல் கைராகரில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகமான இந்திர கலா சங்கீத் பல்கலைக்கழகத்தில் பழமையான கதக் துறையில், பட்டப்படிப்புக்கான முதல் பாடத்திட்டத்தை புருததீச் என்பவர் நிறுவினார். இது பத்கண்டே கல்லூரியில் மோகன்ராவ் கல்லியன்புர்கரின் பட்டயப் படிப்பிற்கான பாடத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டதாகும


ஒரு நவீன கதக் நடனமானது லக்னோ மரபு, வாரணாசி மரபு, ஜெய்ப்பூர் மரபு என்ற மூன்று முக்கிய மரபுகளுடன் துணை மரபுகளையும் கொண்டது. மேலும் அவை ஒவ்வொன்றிலும் பிரார்த்தனை அல்லது வந்தனம், தூய நடனத்தை நிகழ்த்தும் முறை, உணர்வுவெளிப்பாடு என்ற மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது என்று புருனோ நெட்டில் கூறுகிறார்.

வந்தனம்[தொகு]

வந்தனம் என்பது நடனக் கலைஞர் மேடைக்கு வந்து தனது குரு மற்றும் மேடையில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு மரியாதை அளிப்பதாகும். குழு இந்து பாரம்பரியத்தைச் சேர்ந்ததாக இருந்தால், நடனக் கலைஞர் முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகள் ( முத்ரா ) இணைத்து இந்துக் கடவுள்களையும் தெய்வங்களையும் வந்தனம் செய்வர். ஒரு முஸ்லீம் நிகழ்ச்சி பக்தி வெளிப்பாடுகளை சலாமி (வணக்கம்) மூலம் மாற்றுகிறது.

தூய நடனம் நிருத்தம் என்றும், உணர்வுவெளிப்பாடான நடனம் நிருத்தியம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கதக் நிகழ்ச்சியானது தனி ஒருவராலோ, இருவராலோ அல்லது குழுவாக நிகழ்த்தப்படுவதாகவோ இருக்கலாம். நடனக் கலைஞர்கள் பார்வையாளர்களுடன் செய்தி பரிமாறிக்கொள்ளும் வேகமும் ஆற்றலும் ஒரு நுட்பமான நடனத்தில் பலமடங்கு அதிகரிக்கிறது.

நிகழ்ச்சியின் போது, ​​ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதக் கலைஞர்கள் ஒலிவாங்கிக்கு வரலாம். பார்வையாளர்களுடன் உரையாடலாம், எதையாவது விளக்கலாம், ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒரு கதையைச் சொல்லலாம் அல்லது ஒரு பாடலை தாளமாகப் பாடலாம்.

  1. (2008) "பெல்ஸ் ஆஃப் சேஞ்ச்: கதக் நடனம், இந்தியாவில் பெண்கள் மற்றும் நவீனம்", மேலும் பார்க்க "தவைஃப் மற்றும் ஐட்டம் கேர்ள்: அடையாளத்திற்கான போராட்டம்" )
  2. Adi parva, CCVI.2-3, Mahabaratha, book 1