பட்டாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெடிக்கும் பட்டாசு
பட்டாசு உற்பத்தி

பட்டாசு (firecracker, cracker, banger) என்பது சிறிய அளவில் கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு வெடிக்கப்படும் வெடிகளாகும். இவை ஒளி தருவதைவிட பெரும் ஒலியை உண்டாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. வெடிப்பொருளை காகிதச் சுருள்களில் சுற்றி திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன. எத்தனை அழுத்தமாக இவை சுற்றப்பட்டுள்ளனவோ அத்தனை கூடுதலாக ஒலி எழுப்பும். பட்டாசுகளும் மத்தாப்புகளும் சீனாவில் தோன்றியவை ஆகும். இவற்றைக் கொண்டு விரிவாக திட்டமிடப்படும் வாண வேடிக்கைகளும் அவர்களது கண்டுபிடிப்பே. இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் தமிழ்நாட்டிலுள்ள சிவகாசி நகரில் அதிக அளவிலுள்ளது.

வரலாறு[தொகு]

சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த திடீர் தீச்சுவாளைதான் பட்டாசிற்கு தேவையான கரித்தூளை கண்டறிய உதவியது. துவக்கத்தில் தீச்சுவாளையை உருவாக்க கரியும் கந்தகமும் பயன்பட்டுள்ளது. இந்த கலவையை மூங்கில் குழாயில் அடைத்து வைத்து பட்டாசாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த தற்செயலான கண்டு பிடிப்பு 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. நன்கு வெடிக்கும் பட்டாசுகள் சாங் பேரரசர் காலத்தில் (960-1279) லிடியான் என்னும் துறவியினால் உருவாக்கப்பட்டது. இவர் லியு யாங் நகரின் அருகில் வாழ்ந்துவந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த இந்த பட்டாசுகள் தீய சக்திகளை அப்புறப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்த பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமே வந்தது. சீனாவில் பட்டாசு குறித்த ஆவணம் 7ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாசு என்பதைக் குறிப்பிடும் பயர் ஒர்க் என்பதன் மூலம் சப்பானிய சொல்லான ஹனாபி என்பது. இதன் பொருள் நெருப்பு மலர் ஆகும். உலகில் மிகுதியாக பட்டாசு தயாரிக்கும் நாடு சீனா உலக பட்டாசுகளில் 90 விழுக்காடு சீனாவில் தயாரிக்கப்படுகிறது. ஸ்பெயினில் பெரும்பாலோனோர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்

பட்டாசுகளின் பரவல்[தொகு]

சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீரிப்பாய்ந்து சென்று வெடித்த வாணங்களை உருவாக்கினர். 1279இல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்த தொழிர் நுட்பத்தை கற்றுக் கொண்டனர்.சீனாவுக்கு வந்துசென்ற ஆராய்ச்சியாளர்கள் இதை அறிந்துகொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினார்கள். 7ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் ராக்கெட்டுகளை சீன அம்புகள் என்றை குறிப்பிட்டுள்ளனர். 1240ஆம் ஆண்டில் அரேபியர்கள் வெடிமருந்துகள் குறித்து அறிய முயன்றுள்ளனர்.ஹசன் அல் ரம்மா என்பவர் சீனர்களிடமிருந்து வெடிமருந்துகள் பற்றிய தொழில் நுட்பத்தை அறிந்துகொண்டு பட்டாசுகள் குறித்து எழுதியுள்ளார். இத்தாலிய பயனி மார்கோகோலோ இந்த தொழில் நுட்பத்தை ஐரோப்பாவுக்கு கொண்டுசென்றார் என்றும், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து 1300களில் ஐரோப்பாவில் பட்டாசுகள் அறிமுகமாயின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டாசுகளின் வளர்ச்சி[தொகு]

1400-களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பட்டாசு உற்பத்தி துவங்கியது.பிரெஞ்சு பொறியியளாளரான அமேதி பிரென்சுவாஃபிரெசியர் எழுதிய டிரீட்ஸ் ஆன் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் புத்தகம் 1706 இல் வெளியிடப்பட்டது. அதன்பின் பட்டாசு தயாரிப்பவர்கள் இந்த புத்தகத்தை பின்பற்றியே தயாரித்தனர். தற்போது நாம் பயன்படுத்தும் வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830இல் துவங்கியது. பல வேதிப் பொருட்களை பயன்படுத்தி இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர். ஏப்ரல் 18 ஐ பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாக சீனாவில் கொண்டாடப்படுகிறது.

சிவகாசி பட்டாசுகள்[தொகு]

1922இல் கல்கத்தாவில் சப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன், ஏ. சண்முகம் ஆகியோர் தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928இல் தீப்பெட்டி தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் மேற்கொள்ளப்படுகிறது.[1],

குறிப்புகள்[தொகு]

  1. தி இந்து தமிழ்- வெற்றிக்கோடி இணைப்பு20.10.2014

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Firecracker
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாசு&oldid=3589819" இலிருந்து மீள்விக்கப்பட்டது