நூழிலாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூழிலாட்டு, வாகைத்திணையின் துறைகளில் ஒன்று. மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் என்னும் புலவர் பாடிய இரண்டு பாடல்கள் நூழிலாட்டுத் துறையினவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

தலைவன் ஒருவன் புற்றுக்குள் இருக்கும் பாம்பு போன்றவன், காட்டுக்குள் திரியும் சிங்கம் போன்றவன் என்று ஒருபாடல் குறிப்பிடுகிறது. [1]

தலைவன் ஒருவனின் தந்தை முதல் நாள் போரில் மாண்டான். மறுநாள் போரில் இந்தத் தலைவன் பகைவனின் களிற்றை வீழ்த்தி மீண்டு அது குத்திய புண் வலியைப் பொறுத்துக்கொண்டிருக்கிறான். [2]

புறப்பொருள் வெண்பாமாலை வாகைப்படலத்தில் 33 துறைகளைக் குறிப்பிடுகிறது. இவற்றில் இந்தத் துறை பற்றிய குறிப்பு இல்லை.

தொல்காப்பியம் தும்பைத்திணையின் துறைகளில் ஒன்றாக ‘நூழில்’ என்னும் துறையைக் குறிப்பிடுகிறது. [3] பல படைவீரர்கள் பின்வாங்குமாறு ஒருவன் வாட்போர் புரியும் நிலை ‘நூழில்’ எனச் சுட்டப்பட்டுள்ளது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எழுவர் நல்வலம் அடங்க ஒரு தான் ஆகிப் பொருது களத்து அடல் [4], அவன் போர்க்கள வயலில் யானைகள் சிதறி ஓடும்படிச் செய்தது [5] ஆகிய பாடல் பகுதிகள் நூழில் என்னும் போர்க்கள ஆட்டத்துக்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 309
  2. புறநானூறு 310
  3. பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
    ஒள் வாள் வீசிய நூழிலும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 14)
  4. புறம் 76
  5. வள்ளை நீக்கி வயமீன் முகந்து
    கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
    வேழப் பழனத்து நூழில் ஆட்டு (மதுரைக்காஞ்சி 255-257)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூழிலாட்டு&oldid=1261866" இலிருந்து மீள்விக்கப்பட்டது