செயற்கை மழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cloud seeding can be done by ground generators or by plane

செயற்கை மழை என்பது செயற்கையாக மழை உண்டாக்கும் செயல்முறை. இது பல முறைகளில் செய்யப்படுகிறது.

இதை ஒரு தொடர் முயற்சியாக தான் மேற்கொள்ள வேண்டும். மழை பெய்யக்கூடிய உத்திகளை வடிவமைப்பது. செயல்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் திறனாய்வு செய்வது போன்ற பல வழிமுறைகள் இதில் அடங்கியிருக்கினறன. இந்த வழிமுறைகளில் கணினியை பயன்படுத்தி மேகங்கள் ஒன்றாக கூடுவதை ஆய்வுசெய்யும் முயற்சிகளும் அடக்கம். செயற்கை மழை என்பது செயற்கையாக மேகத்தை உருவாக்கி மழை பெய்ய செய்வதல்ல. வளிமண்டலத்தில் இருக்கின்ற மேகங்கள், நாம் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கின்ற இடத்திற்கு நேர் மேலே வரும்போது வேதிப்பொருட்களை தூவி மழை மேகங்களாக்கி மழை பெய்ய செய்வதாகும். இதை தான் cloud seeding அதாவது மேக விதைப்பு முறை என்று அழைக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு தான் செயற்கை மழையை உருவாக்கி வருகிறார்கள்.

செயல்முறை[தொகு]

செயற்கை மழை பெய்ய செய்வதில் மூன்று படிநிலைகள் உள்ளன.

  • காற்றழுத்தத்தை உருவாக்குதல்
  • மழை மேகங்களை அதிகரித்தல்
  • மழை மேகங்களை குளிரச் செய்தல்

காற்றழுத்தத்தை உருவாக்குதல்[தொகு]

முதலில் காற்றழுத்தத்தை உருவாக்குவது. எந்த இடத்தில் மழையை பெய்யச் செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அந்த இடத்தில் காற்றழுத்தத்தை ஏற்படுத்த வேண்டு்ம். அதன் மூலம் மழை மேகங்களை ஒன்றுகூட செய்வதே முதல் நிலை. கேல்சியம் கார்பைடு, கேல்சியம் ஆக்ஸைடு, உப்பும் யூரியாவும் கலந்த கலவை அல்லது யூரியாவும் அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை மேகங்களில் தூவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்க உதவுகின்றன.

மழை மேகங்களை அதிகரித்தல்[தொகு]

வெள்ளி அயோடைடு தயாரிப்பான்

இரண்டாவது நிலையில் மழை மேகங்களை அதிகரிக்க செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூட செய்ப்படுகிறது. இவ்வாறு செய்ய கால்சியம் குளோரைடும் சிலநேரங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ஸைடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிக்கட்டி பொடியாகும்.

மழை மேகங்களை குளிரச் செய்தல்[தொகு]

மூன்றாவது நிலையில் மழை மேகங்களை குளிரச் செய்து அதிக அளவு மழை பெய்யச் செய்கின்ற வேதியல் பொருட்களை தூவுவது . இந்த நேரத்தில் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுகின்றனர். அவற்றை மேகங்களின் மேல் தூவினால் அவை குளிர்ந்துவிடுகின்றன. மழை மேகங்கள் குளிர்ந்தவுடன் நீர் துளிகளாக மழை பெய்ய தொடங்குகிறது.

மேக விதைப்பு கருவியுடன் விமானம்

சிலநேரங்களில் மழை வருவது போன்று மேகங்கள் கறுத்து இருண்டிருக்கும். ஆனால் மழை பெய்யாது. இதை மேகங்கள் அதிகளவு குளிரடைந்த நிலை என்று கூறுவர். இவ்வாறு தோன்றினால், மேகங்களிலுள்ள ஈரப்பதம் நீராக மாற இயலாமல் இருப்பதை குறிக்கும். இந்த வேளையில் சிறிய விமானம் மூலம் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி தூவப்பட்டால் குளிரடைந்த நிலை கலைக்கப்பட்டு மழை பெய்ய தொடங்கிவிடும். இந்நேரங்களில் மூன்றாவது படிநிலை மட்டுமே பயன்படுகிறது. சிலவேளைகளில் வெள்ளி அயோடைடு குச்சிகளை ஏவுகணை குண்டுகள் மூலம் இந்த மேகங்களின் நடுவில் வீசுவதும் உண்டு. இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நிலைகளிலும், உத்திகளை வடிவமைப்பது. செயல்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் திறனாய்வு செய்வது போன்றவை வழிமுறைகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலநேரங்களில் இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவதும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_மழை&oldid=2743059" இலிருந்து மீள்விக்கப்பட்டது