உள்ளடக்கத்துக்குச் செல்

சி. டக்ளஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. டக்ளஸ் (C. Docles or Catfield Douglas, பிறப்பு: 1951[1]) என்பவர் இந்தியாவின் கேரளத்தைப் பிறப்பிடமாக கொண்ட ஒரு ஓவியரும், சிற்பியும் ஆவார். இந்தியாவின் பல ஓவியக் கூடங்களில் இவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

துவக்க கால வழ்க்கையும் படிப்பும்

[தொகு]

டக்ளஸ் கேரளத்தின் தலச்சேரியில் பிறந்து வளர்ந்தவராவார். ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர் தன் சொந்த ஊரிலேயே ஓவியப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். தன் ஓவியத் திறமையை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள தன் 20 வயதில் 1970 இல் சென்னை ஓவியப் பள்ளியில் வந்து சேர்ந்தார்.[2] அங்கு சுடுமண் சிற்பங்கள், பீங்கான் பொருட்கள் செய்யக் கற்றார். தன் கல்லூரி காலத்தின் இறுதி காலத்தில் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்துக்கு குடிபெயர்ந்தார். டக்ளஸ் கல்லூரியிலும், சோழமண்டல கிராமத்திலும் உள்ள கலைஞர்களிடம் நிறைய அறிந்து கொண்டார். வித்தியாசமான மனம் பிசகிய ஓவியரான கே. இராமானுஜத்தை கல்லூரியிலும், சோழமண்டத்திலும் டக்ளஸ் அவதானித்து வந்தார். அவரை தன் ஞான குருவாக வரித்துக் கொண்டார். அவரின் நுட்பமான கிராஃப்பிக்ஸ் பாணியிலான ஓவியப் பாணியை டக்ளஸ் தன் வசப்படுத்த முயன்றார்.

கலை வாழ்வு

[தொகு]

கல்லூரி வாழ்வுக்குப் பிறகு டக்ளஸ் சோழமண்டத்தை தன் வசிப்பிடமாக கொண்டு முழு நேர ஓவியராக ஆனார்.[3] டக்ளஸ் தன் 27 வயதில் தொழில்முறை ஓவியராக செயல்படத் தொடங்கினார். டக்ளசின் இளமைக்கால ஓவியங்களில் இராமானுஜத்தின் தாக்கம் இருந்தது. ஒருகட்டத்தில் தாளை நன்றாக கசக்கிவிட்டுப் பின்னர் அதில் டக்ளஸ் தன் படைப்புகளை உருவாக்கினார். டக்ளசின் துவக்கக்கால ஓவியங்கள் தலைப்பு அற்றவையாகவும், அரூபப் பின்புலத்திலான ஓவியங்களாக இருந்தன. அதுவரை படங்களை வரைந்துவிட்டு அதற்கு வண்ணங்கள் தீட்டிவந்த டக்ளஸ் பின்னர் நேரடியாக வண்ணங்களைக் கொண்டு ஓவியங்களை வரையத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் ஜெர்மனி சென்ற டக்ளஸ் அங்கு சுமார் ஒன்பது ஆண்டுகள் இருந்தார். புதிய சூழலில் புதிய பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். அங்கு புதிய பாணியிலான ஓவியங்களை வரையத் தொடங்கினார். முக்கோணம், வட்டம், சதுரம், செவ்வகம், செங்குத்து, குறுக்குச்சட்டம், படுக்ககைக்கோடு ஆகியவற்றை உள்ளடக்கியதான ஓவியங்களை அப்போது வரைந்தார். வெறுமையான மனநிலையில், உணர்வுகளின் எவ்வித உந்துதலும் அற்று இவற்றை அவர் வரைந்திருக்குவேண்டும் என்று விமர்சகர் ஜோசப் ஜேம்ஸ் குறிப்பிடுகிறார். ஒரு மனத் தூண்டலினால் அதற்கு மேல் ஜெர்மனியில் இருக்க முடியாமல் சோழமண்டலம் வந்து சேர்ந்தார்.[4] இதற்குப் பின், நவீன மனிதன் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான புரிதல்களோடும் கேள்விகளோடும் அவர் உருவாக்கிய படைப்புகளே இன்று அறியப்படும் டக்ளஸ் என்கிறார் கவிஞரும் கலை விமர்சகருமான சி. மோகன்[5]

கண்காட்சிகள்

[தொகு]

1994-96 ஆண்டுகளில் டக்ளஸ் உருவாக்கிய படைப்புகள் மற்றும் பளிங்குச் சிற்பங்களைக் கொண்டு சாக்சி கேலரி- பெங்களுர், அலியாஸ் ஃபிரான்சிஸ்- சென்னை, சாக்சி கேலரி- மும்பை ஆகிய இடங்களில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]
  • 1994 சார்லஸ் வாலஸ் நல்கை பெற்றார்
  • யுனெஸ்கோ நல்கை பெற்றார்
  • 1992 இல் புது தில்லி லலித் கலா அகாதமியின் தேசிய விருது பெற்றார்
  • 1991-93, 1994-96 இல் இந்திய அரசின் கலாசார ஆய்வு உதவித் தொகை பெற்றார்
  • 1990 போபால் பாரத் பவன் விருது
  • 1980,90 தமிழ்நாடு மாநில லலித் கலா அகாதமி விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "C. Douglas" (in Indian English). {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "C. Douglas" (in ஆங்கிலம்). {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "C Douglas". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  4. ஓவியர் சி. டக்ளஸ்- கட்டுரை, எழுதியவர்- ஜோசப் ஜேம்ஸ், தமிழில் : சி. மோகன். புனைகளம் சனவரி- மார்ச் 2002
  5. "கலைவெளிப் பயணம் - 4: கலை ஆன்மிகத்தில் சுடரும் ஓவியர்". 2024-05-05. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._டக்ளஸ்&oldid=4045486" இலிருந்து மீள்விக்கப்பட்டது