சாலையோர உணவகங்கள்

சாலையோர உணவகங்கள் என்பது மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களிலுள்ள சாலைகளின் ஓரத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் ஆகும். இந்த உணவகங்கள் பல முன் கூட்டியே தயார் செய்த உணவுகளைப் பாத்திரங்களில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றன. எளிதில் தயாரிக்கும் சில உணவுகளை இவ்விடங்களில் தயாரித்து அளிப்பதுமுண்டு. பெரிய உணவகங்களில் இருப்பது போல் உட்கார்ந்து சாப்பிடும் வசதிகள் இவ்வுணவகங்களில் கிடைப்பதில்லை. உணவைப் பெற்று ஒரு கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டே மற்றொரு கையில் எடுத்துச் சாப்பிடும் நிலைதான் இங்குள்ளது. இதனால் இதை “கையேந்தி பவன்”, “தட்டுக்கடை” என்றும் குறிப்பிடுவதுமுண்டு.[1][2][3]
இந்த சாலையோர உணவகங்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்கள் பெரிய உணவகங்களின் விற்பனை விலையில் நான்கில் ஒரு பங்குதான் இருக்கும் என்பதால் இங்கு கூலித் தொழிலாளர்கள், குறைந்த வருவாயுடையோர் அதிக அளவில் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இங்கு விற்கப்படும் உணவுப் பண்டங்கள் சுகாதாரமற்றவை என்கிற குறைபாடு இருக்கின்றது. தற்போது பெரிய உணவகங்களில் விற்பனை செய்யப்படும் நூடுல்ஸ், முட்டை புரோட்டா, அசைவ உணவுகள், உடனடி உணவுகள் என பல உணவு வகைகள் சுடச்சுட செய்து தரக்கூடிய வசதியுடனும் சில உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த வருவாய்ப் பிரிவினர் மட்டுமில்லை, நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டும் இருந்த இந்த உணவகங்கள், தற்போது தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Simopoulos, Artemis P.; Bhat, Ramesh Venkataramana (2000). Street Foods (in ஆங்கிலம்). Karger Publishers. p. vii. ISBN 9783805569279.
- ↑ Wanjek, Christopher (2005). Food at Work: Workplace Solutions for Malnutrition, Obesity and Chronic Diseases (in ஆங்கிலம்). Geneva: International Labour Organization. ISBN 978-92-2-117015-0.
- ↑ "Spotlight: School Children, Street Food and Micronutrient Deficiencies in Tanzania". Rome, Italy: Food and Agriculture Organization of the United Nations. February 2007. Archived from the original on 9 April 2015. Retrieved 20 February 2008.