கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம்

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்) என்பது வடசென்னைலுள்ள, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள மடாலயம் ஆகும். இம்மடாலயத்திலுள்ள கல்வெட்டில் "ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் கலியுகாதி 5019-ஆம் ஆண்டு பிங்கள வருடம் பங்குனி மாதம் 22-ம் நாள் (4-4-1918) குருவாரம் உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்களின் சமாதி கர்பக்கிரகத்தில் அமைந்துள்ளது. அதன் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது" என்றும் "ஸ்ரீலஸ்ரீ முத்தானந்த சுவாமிகள் கலியுகாதி 5060-ஆம் ஆண்டு விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 8-ஆம் தேதி (24-10-1958) வெள்ளிக்கிழமை உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்கள் சமாதி முன்மண்டபத்தில் அமைந்துள்ளது. அதன்மீது பலீபீடம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சித்தர்களில் ஒருவராக அறியப்படும் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ என்ற சாது சங்கத்தை இங்கு அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார்.

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் மடாலயத்திலுள்ள கல்வெட்டு

வாழ்க்கை வரலாறு[தொகு]

திருப்போரூரில் முத்துசாமி பக்தர்- செங்கமலத்தம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசம். இவர் சிறு வயதிலேயே சைவ சமயத்தின் பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதிலும் தன்னுடைய சிந்தனையை செலுத்தினார்.

இந்த நேரத்தில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்தனர். சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். சிறுவயதிலேயே தனிமையை நாடினார். யோக பயிற்சிகளில் ஈடுபட்டு, அவ்வப்போது சமாதி நிலையை அடைந்துவிடுவார். ஒரு முறை அவர் சமாதி நிலையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் சிவப்பிரகாசம் இறந்து விட்டதாகக் கருதினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சமாதி நிலையில் இருந்து மீண்ட போதுதான் அனைவருக்கும் உண்மை புரிந்தது.

இவருக்கு 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த இல்லற வாழ்வில் இருந்து விடுபட நினைத்த அவர், திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதிக்கு சென்று துறவு கோலம் பூண்டார். அவரை குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீடு வரை வந்தவர், வீட்டிற்குள் செல்லாமல், திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார்.

தாயார் கொண்டு வந்து கொடுத்த உணவை கரத்தில் பெற்று உண்டார். மூன்று உருண்டை உணவை பெற்று சாப்பிட்டவர், அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் அவர் துன்பங்கள் சூழ்ந்திருந்த இல்லத்திற்குச் சென்று, ஒரு கவளம் உணவை கரத்தில் வாங்கி உண்பார். அதன் மூலம் அந்த இல்லங்கள் சுபீட்சமான வாழ்வை அடைந்தன. கரத்தையே பாத்திரமாக ஆக்கி உணவை வாங்கி அருந்திய காரணத்தால் ‘கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.

திருவான்மியூர், வேப்பேரி, சூளை, செங்கல்வராய தோட்டம் என தனது தவவாழ்க்கையை பல இடங்களில் கழித்து வந்த அவர், சாதுக்களுக்காக ஒரு மடத்தை அமைக்க விரும்பினார். இதையறிந்த ஒரு தொண்டா், வியாசர்பாடியில் ஒரு இடத்தை வாங்க உதவி செய்தார். அங்கு சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ அமைத்தார். அது ‘சாமியார் தோட்டம்’ என்றும் பெயர் பெற்றது.

தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலில் இருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார். பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர் 4.4.1918-ம் ஆண்டு சமாதி அடைந்தார். அவரது சமாதியின் மீது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உருவானது.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ‘ஆன்ம புராணம்’, ‘தத்துவாத சந்தானம்’ என்ற அத்வைத நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளார்.[1]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.