கண்ணீர்த் தடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ எக்கோட்டா வரலாற்றுக் களத்தில் உள்ள இந்த நினைவுச் சின்னம், கண்ணீர்த் தடங்கள் நிகழ்வின்போது இறந்த செரோக்கீகளை நினைவுகூரும் முகமாக நிறுவப்பட்டது.

1838 ஆம் ஆண்டில், செரோக்கீ இனத்தவரை, அவர்களுடைய தாயகமான ஜோர்ஜியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியப் பகுதி என அன்று அழைக்கப்பட்ட ஒக்லகோமாவுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வே கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிகழ்வின்போது 5,000 வரையான செரோக்கீகள் இறந்து போனதாகச் சொல்லப்படுகிறது. செரோக்கீ மொழியில் இது, நுன்னா டவுல் இசுன்யி எனப்படுகின்றது. இதன் பொருள் "அவர்கள் அழுத தடம்" என்பதாகும். அமெரிக்க இந்தியர்களை வெளியேற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி இது மட்டும் அல்ல. பிற தொல்குடி அமெரிக்க இனத்தவர்களும், இந்தியானா, புளோரிடா ஆகிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டனர். செமினோலே இனத்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இம் முயற்சியை எதிர்த்துக் கரந்தடி (Guerrilla) முறையில் போரிட்டனர். ஓராண்டு காலம் வரை அமெரிக்க அரசை வெற்றிகரமாகத் தோற்கடித்து வந்தனர் எனினும், அவர்களது அன்புக்கு உரியவனும், துணிவுள்ளவனுமான தலைவன் ஒசியோலாவின் இழப்பினால் தோற்றனர். கண்ணீர்த் தடங்கள் என்பது, பிற இந்தியக் குழுக்கள் தொடர்பிலான பலவந்தமான இடப்பெயர்வு நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு. இச் சொற்றொடர்ப் பயன்பாடு 1831 ஆம் ஆண்டில் சொக்டாவ் இனத்தவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது உருவானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணீர்த்_தடங்கள்&oldid=3289358" இலிருந்து மீள்விக்கப்பட்டது