ஊணூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்றில் என்னும் காதல்பறவை Black-headed Ibis (Threskiornis melanocephalus)

ஊணூர் என்னும் சங்ககால ஊர் இக்காலத்துக் கோடியக்கரைப் பகுதியாகும்.[சான்று தேவை] இதன் கடற்கரைப் பகுதி மருங்கூர்ப் பட்டினம். உள்ளூர்ப் பகுதி நெல் விளையும் நிலம். நெல்(நெல்லரிசி) மக்களுக்கு ஊண்(உணவு) [1]. எனவே இந்த ஊரை ஊணூர் என்றது காரணப்பெயர். [2] அன்றில் பறவைகள் மிகுதியாக வாழ்ந்த ஊர் இது.

சங்கப் பாடல்களில் ஊணூர் தகவல்கள்[தொகு]

  • கடலலை மோதிக்கொண்டிருக்கும் ஊர் ஊணூர்.
  • இது பாதுகாக்கப்பட்ட நெற்களஞ்சியமாக விளங்கியது.
  • அன்றில் பறவைகளின் புகலிடமாகவும் விளங்கியது. நோலா-இரும்புள் [3] எனப் போற்றப்படும் அன்றில் பறவைகள் கூடி மகிழும் புகலிடம் இந்த ஊணூர்.
  • இங்குக் கடலில் வலை போட்டால் இறால் மீன் மிகுதியாகப் பெறலாம்.[4]
  • ஊணூர் அரசன் வாய்மொழித் தழும்பன். இவன் யாழ்ப்பாணர்களின் தலைவன். ஊணூரில் பிச்சை எடுக்கும் யானைகள் வந்துபோகும்.[5]
  • ஊணூரைத் தாண்டிச் சென்றால் மருங்கூர்ப் பட்டினம் என்னும் துறைமுகத்தை அடையலாம்.
  • ஊணூர் மன்னன் தழும்பனைத் தூங்கல் (தூங்கல் ஓரியார்) என்னும் புலவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் கிட்டியுள்ள சங்கநூல் தொகுப்பில் இல்லை.[6]
  • இவ்வூர் மக்கள் நெல் அறுக்கும் அரிவாளால் மீனைச் சீவித் தூய்மை செய்வர்.[7]
  • இந்த ஊணூர் தழும்பன் ஆட்சியில் படை எடுப்புக்கு உள்ளானது. இதற்கு காரணம் மகள் மறுக்கும் மாண்பு என்பது புறப்பாடலால் கிடைக்கும் செய்தி. இந்த மகள் மறுக்கும் மாண்பால் இந்த பெண்ணை தேடிய அரசனின் தேர்படையும் யானைப்படையும் இம்மண்ணை பாழ்படுத்தியதாம்.[8]

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஊன் = புலால் உணவு
  2. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்ற நெல்லின் ஊர் என்பது இதுவோ என எண்ணவேண்டியுள்ளது
  3. (ஆண்-பெண் இணை பிரிந்து வாழ்வதைத் தாங்கமுடியாத பெரும் பறவை என்பது 'நோலா இரும்புள்' என்பதன் விளக்கம்)
  4. மதுரை மருதன் இளநாகனார் - அகநானூறு 220-13
  5. நரம்பின் இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்புண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் பிச்சைப் பெருங்களிறு போல அட்டிலோளைத் தொட்டனை சென்மே - பரணர் - நற்றிணை 300-10
  6. தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் வருநர் வரையாப் பெருநாள் இருக்கை தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப் பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வைப்பின் ஊணூர் உம்பர் விழுநிதி துஞ்சும் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினம் – ஆவணக் கம்பலை நக்கீரர் - அகநானூறு 227-18
  7. வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ, கண்மடற் கொண்ட தீம் தேன் இரியக் கள் அரிக்கும் குயம் சிறு சில் மீன் சீவும் பாண் சேரி, வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன --- இவள் நலம் - பரணர் - புறநானூறு 348-5
  8. குவளை உண்கண் இவளைத், தாயே ஈனா ளாயினள் ஆயின், ஆனாது நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும், செந்நுதல் யானை பிணிப்ப, வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே

ஒப்பிட்டுக் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊணூர்&oldid=2565869" இலிருந்து மீள்விக்கப்பட்டது