உயிரின ஏணிப்படிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரின ஏணிப்படிகள் என்பது தொல்லுயிரியலார் இயற்கை வரலாற்றை அல்லது படிமலர்ச்சி நிலையைப் பிரித்துள்ள பன்னிரண்டுக் காலப் பிரிவுகளாகும். நமது புவிக் கோளத்தில் 3.50 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உயிர் வாழ்க்கை நிலவுகிறது. முதலில் உயிரணுக்கள் எனும் உயிர்க் கலன்கள் (cells)தோன்றின. இவை உயிர் வாழ்க்கையின் அடிப்படை அலகுகளாகும். பிறகு இவற்றிலிருந்து உயர்நிலை உயிரிகள் தோன்றிப் படி மலந்தன. இவ்வகையாகத் தான் நமது புவியுலகில் வரம்பற்ற உயிரின வலைப் பின்னல் உருவாகிப் பல்கிப் பெருகி வருகிறது. விலங்குகளாலான இயங்கு திணை உலகும் (Animalia) மரம், செடி,கொடி, புதர், புல்,பூண்டுகளாலான நிலைத்திணை உலகும்(Plantea) மற்றும் பூஞ்சை உலகும்(ஃபுஙி) மிக நெருக்கமான உணவுத் தொடர்களாலான உணவு வலையால் பிணைக்கப்பட்டுள்ளன. படிமலர்ச்சி (evolution) என்பது தகவமைவு, வீழ்ச்சி, மீள்புனைவு ஆகிய தொடர் உள்கூறுகள் வாய்ந்ததாகும். இதன் ஒவ்வொரு பிரிவும், அக்காலஞ்சார்ந்த தொல்லுயிர் எச்சம் அல்லது புதைப் படிவத்தின் வகைமையை ஒட்டியே பிரிக்கப்படுகின்றன.

உயிரினப் பிரிவுகள்[தொகு]

  1. முதல் உயிர்க்கலன்கள் (protocells) -முந்து கேம்பிரிய ஊழி
  2. தொல் கொன்றுண்ணிகள் - கேம்பிரியக் காலம்
  3. கடலில் புத்துயிரிகள் உருவாதல் - ஆர்டோவிசியக் காலம்
  4. நில உயிரின முன்னோடிகள் - சைலூரியக் காலம்
  5. நிலம் நோக்கிய விலங்கினப் படையெடுப்பு - தெவோனியக் காலம்
  6. முதற்காடுகளின் தோற்றம் - கரியிருப்புப் படிவுக் காலம்
  7. மீப்பெருங்கண்ட கொன்றுண்ணிகள் - பெர்மியக் காலம்
  8. நிலம், நீர், காற்றென எங்கும் உயிரினப் பரவர்- மூன்றாம் உயிரினத் துணை ஊழி
  9. பேருயிரிகளின் தோற்றம் - பேருயிரிக் காலம்
  10. பூக்கடலாக மாறிய புவிக் கோளம் - கிரேட்டேசியக் காலம்
  11. பாலூட்டிகளின் வெற்றியும் ஓங்கலும் - புத்துயிரூழி
  12. பெரு விலங்கினப் பேரழிவு - நான்காம் உயிரினக் காலம்

முதல் உயிர்க்கலன்கள்(protocells) -முந்து கேம்பிரிய ஊழி[தொகு]

இக்கால வகைப்பாட்டின் முதல் பிரிவு 350 கோடி [3.5 பில்லியன்] ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. உயிரற்ற உறழ் போருண்மத்தாலான (Inert matter) கனிமங்களின் பலபடி நிலை (Polymeric) உருமாற்றங்களுக்குப் பிறகே இறுதியாக முதன் உயிரலகான உயிர்க்கலன் தோன்றிப் பிளவுற்றுப் பல்கிப் பெருகியது. உயிர்க்கலன் என்பது உயிர்ப்பொருளைத் தானே படைக்கவல்ல நுண்ணிய உயிரியல் தொழிலகமாகும். இந்த உயிர்க்கலன்களில் முன் ஊன்மப் பிண்ட (Proteinous body) உருவாக்கத்திற்கான பொருண்மச் சுழற்சி (Cycle of matter) அடங்கியிருந்ததோடு அவை பிளவுற்றுப் பிரிந்து தானே பெருகுவதற்கான மரபுத் தகவலும் அவற்றின் மரபன்களில் (Genes) அடங்கியிருந்தன. ஒவ்வொரு தலைமுறையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு இம்மரபுத் தகவலும் பொருண்மச் சுழற்சித் தகவலும் மரபன்கள் வழியாகக் கையளிக்கப்பட்டன. ஏறத்தாழ 250 கோடி [2.5 பில்லியன்] ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கநிலை உயிர்க்கலன்களின் நிலைபேறுமிக்க திரட்சியாலான பலகலன் [பல்லணு] உயிரிகள் உருவாகின. பலகலன் உயிரி என்பது அடிப்படைத் தனி உயிர்க்கலன்களின் அணிவகுப்பலான உயிர்மணி (Bipglobule) எனலாம். இவையே மிக முந்திய உயிரிகளாகும். இவற்றிலிருந்தே உயிரினத்தின் அடுத்த உயிர் நிலைக் கட்டங்கள் தோன்றிப் படிமலந்தன. இந்த முந்து கேம்பிரியக் ஊழி 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 54.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவியது.

தொல் கொன்றுண்ணிகள் - கேம்பிரியக் காலம்[தொகு]

An enrolled phacopid trilobite Phacops rana crassituberculata

தொல்லுயிர் ஊழியின் (Palaeozoic Era) ஆறுகாலங்களில் முதற்காலம் கேம்பிரியக் காலமாகும். இக்காலம் 54.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 48.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவியது. இக்காலத்தில் முன் உயிரிகளான குறுங்காலிகள் (Brachoopoda), அஸ்ட்ரோக்கோடா (Ostrocoda),மூவிதழுரு உயிரிகள் (Trilobitomorphs) ஆகியவற்றின் கனிமமேறிய எலும்பெச்சங்கள் கிடைக்கின்றன. நிலத்திணை வகையில் பாசி, பூஞ்சைப் புதைவடிவங்கள் மட்டுமே கிடைக்கின்றன. கேம்பிரியக் கால படிவடுக்கு வகைப்பட்டில் டிரைபோலைட்டீஸ் (Trilobities) வகை கணுக்காலிகள் (Orthopods) முக்கியப் பங்கு வகிக்கின்றன.
300 கோடி ஆண்டுகள் முன்பு வரை கடலில் தொடக்கநிலை உயிரிகள் மட்டுமே வாழ்ந்தன. பிறகு கேம்பிரியக் காலந் தொடங்கியதும், தொலைநோக்கி வகைத் துருத்தலான கூரிய கண்களும், நுண்மீசை போன்ற கசையாலான தூவிகளும், கவச உடலும் வாய்ந்த கொன்றுண்ணும் பெருத்த உடலுடைய விலங்குகள் குறுகிய கால இடைவெளியில் தோன்றின. இன்று நிலவும் பல்வகை விலங்குத் தொகுதிகளும் (Phyla), கேம்பிரியக் காலத் தொடக்கத்திலேயே தோன்றிவிட்டன. அதோடு அவற்றுக்கிடையேயான உடலுறுப்புகளைப் பயன்படுத்தும் போராட்டங்களும் தோன்றின. கடல் தரையில் திரண்ட நிலப்பகுதி வண்டலும் பொன்ம(metallic) கனிம வளங்களும்(mineral) இந்தக் கொன்றுண்ணி விலங்குடலில் வலிமையான புறாச்சட்டங்கள் உருவாகிட வழி வகுத்தன. எனவே, அனமலோக்கேரிஸ் (Anoma locaris), ஒபாபினா(Ophavina) ஆகிய கொன்றுண்ணிகள் கடற்படிகைகளில் தோன்றின. ஒபாபினா, ஐந்து கூம்புவடிவக் கண்களையும், திண் உடற்கட்டமைப்பையும் கொண்டிருந்தது. அனமலோக்கேரிஸ் மூன்றாடி நீள உடலைப் பெற்றிருந்தது. எனவே, இவற்றுக்கிரையாகும் உயிரினங்கள் தம்மைக் காத்துக் கொள்ள தமது கூட்டின் புறாத்தில் கூர்முள் சிம்புகளையும் உருவாக்கிக் கொண்டன. மேலும் இவை தம் கொடுக்களையே கால்களாகக் கொண்டு நடந்தன.

கடலில் புத்துயிரிகள் உருவாதல்- ஆர்டோவிசியக் காலம்[தொகு]

A diorama depicting Ordovician flora and fauna.

தொல்லுயிர் ஊழியின் ஆறு காலங்களில் இரண்டவதாகிய ஆர்டோவிசியக் காலம் 48.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 44.4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவியது. இக்காலம் கெல்டிக் பழங்குடிகளில் ஒன்றான ஆர்டோவிசியப் பழங்குடிகளின் பெயரில் அழைக்கப்படுகிறது. இக்காலப் படிவடுக்களில் பல வகை கிரப்டோலைட்டு உயிரின எச்சங்களும் தாடையில்லா மீனின் எச்சங்களும் கிடைக்கின்றன. இவற்றோடு நிலைத்திணை வகையில் பாசிப்படிவங்களும் பாசடைப் படிவங்களும் (moss follils) கிடைக்கின்றன.
ஆர்டோவிசியக் காலத்தில்தான் கடலில் பல்வகை உயிரினங்கள் பல்கிப் பெருகிச் செழிப்பாக வாழலாயின. கடலில் மட்டுமே உயிரினங்கள் வாழ்ந்துவந்தன. இதற்கு விதி விலக்காக கடலோர நிலத்தில் படர்ந்த பசியினங்களையும் (algae), பூஞ்சைப் பாசியினங்களையும் (lichens) கூறலாம். கடலில் வாழ்ந்த கொன்றுண்ணிகளிலேயே மிகவும் பெரிய கொன்றுண்ணியான காமெரோசெரசு (Cameroceros ) எனும் 36 அடி நீளத் தலைக்காலிகளும்(Cephalopods)அடங்கும். முதன் முதலில் தோன்றிய மீனினம் சாக்கோபம்பாபிசு (Sacabambapis)ஆகும். இதற்கு தாடைகளோ, பற்களோ இல்லை. அவற்றிற்கு வால்பக்கத் துடுப்புகள் மட்டுமே உண்டு. அவை இந்தத் துடுப்புகளாலும், வலிய எலும்பாலான தலைக் கவசத்தாலும் தம்மைத் தற்காத்துக் கொண்டன. இந்தத் தொல்மீன்களே முதல் தொல் முதுகெலும்பிகளுமாகும். இவை, பாசிகளையும், குச்சுயிரிகளையும் (Bacteria) தின்று வழ்ந்தன. அக்காலத்தில், பாசிகளும் தொல் நுண்ணுயிரிகளும் புவியின் முதல் பவழத் திட்டுகளில் (Coral reefs) படர்ந்திருந்தன.

நில உயிரின முன்னோடிகள் - சைலூரியக் காலம்[தொகு]

Cooksonia, the earliest vascular plant, middle Silurian

தொல்லுயிர் ஊழியின் ஆறுகாலங்களில், மூன்றாவதாகிய சைலூரியக் காலம் (Silurian Period) 44.4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவியது. இக்காலப் படிவடுக்குகளில்தான் நிலத்தில் வாழ்ந்த உயிரினத் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கின்றன. இக்கால படிவடுக்குகளுக்கு முன்பு தொடங்கி காலிடோனிய (Caledonian) மலைகள் தோன்றின. இம்மலைகள் பல் தொல்லுயிரி வாழ்ந்த படுகைகளை மூடி நிரப்பவே அப்படுகைகளிலிருந்து தப்பித்தோடிய உயிரினங்கள் நிலத்திற்குச் சென்று அதற்கேற்பத் தகவுற்று வாழவேண்டிய சூழல் உருவாகியது. எனவே, இக்காலத்தில் தான் நில உயிரினங்கள் பல்கிப் பெருகின எனலாம். தொடக்கக் கால கடலோரப் பவழத்திட்டுப் பாசி, பூஞ்சைப் பாசிகளுக்குப் பிறகு 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்வகைச் சிக்கலான நிலைத்திணை (தாவர) உயிரின வகைகள் தோன்றலாயின. நிலப் பகுதியின் நீர் குறைந்த நிலைமைக்கேற்ப முதல்;இல் தகவமைந்த வரவினங்களில் கூக்சோனியாவும் (Cooksonia) ஒன்றாகும். இவை வறட்சியைத் தாங்குவதோடு பருவ கால வெப்பநிலை மாற்ற அசைவுகளையும் சூரிய ஒளியூடே வரும் புற ஊதாக் கதிர் வீச்சுகளையும் தாங்கி வாழப் பழகின. வேர் போன்ற நீட்சிகளால் இவை மண்ணைப் பற்றிப் படர்ந்தபடி கடற்கரையோரங்களிலும், ஆற்றோரங்களிலும் குடியேறின. கடலும், ஆறும் இவற்றுக்குத் தேவையான கனிம வளங்களை வழங்கின. இக்காலத்தில் தான் மெல்லுடலிகளும் (molluses) தேள் போன்ற கணுக்காலிகளும் நிலப்பகுதி வறட்சிக்கேற்பத் தகவுற்று நிலத்தில் வாழப் பழகின. அவை தமது உடல் ஈரத்தை தக்க வைத்துக்கொள்ள நத்தைகளைப் போலக் கூடுகளில் தம்மை மறைத்து வாழ்ந்தன. அல்லது ஓட்டுடலிகளாக விளங்கின.

நிலம் நோக்கிய விலங்கினப் படையெடுப்பு - தெவோனியக் காலம்[தொகு]

தொல்லுயிர் ஊழியின் நான்காம் காலம் தெவோடியக் காலம் (devonian Period) எனப்படுகிறது. இக்காலத்தில் கடல்வாழ் விலங்கினங்கள் நிலம் நோக்கிப் படையெடுத்துப் பரவின. தெவோனியக் காலம் 41.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடங்கி 35.9 கோடி ஆண்டுகளௌக்கு முன்பு வரை நிலவியது. ஐரோப்பாவில், தெவோனியப் பாறையடுக்கமைவு ஒட்டு மொத்தமாக ஒரே வகையாக வகைப்படுத்தப்பட்டாலும், உலகின் மற்றப் பகுதிகளில் தெவோனியக் காலம் மேற்பகுதி, கீழ்ப்பகுதிஎன இரண்டாகப் பிரிக்கப்படுவதோடு இக்காலப் பகுதிகள் சார்ந்த பாறையடுக்கமைவுகள் வெவேறு பெயரிட்டும் அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய கண்ட நிலப்பகுதி பாறாஇக் கட்டமைப்பு தொல் செம்மணற்கற்களால் (Old red sand stones) கடற்சார்ந்த பாறையடுக்குகளில் முதுகெலும்பற்ற விலங்குகளின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கின்றன. குறிப்பாக கோனியாலைட்டுகள் (கொனிஅலிடெச்), அம்மோனாய்டியா (Ammonoidea) ஸ்பைரிஃபெரிடு குறுங்காலிகள் (spiri ferid branchipods-spiriferida) போன்ற விலங்கு வகைகளின் புதை படிவங்கள் கிடைக்கின்றன. கண்டப் பாறையடுக்குகளில் தாடையில்லா மீன்களும், சிலோஃபைட்டு (psilophite) வகை நிலைத்திணைகளும் புதைபடிவங்களாகக் கிடைக்கின்றன. பிந்தைய சைலூரியக் காலக் காலிடோனிய மலைத் தோற்றத்தால் பிரிட்டானியத் தீவுகளின் பெரும் பகுதி ஐரோப்பாக் கண்டச் செம்பாறாஇக் கட்டமைப்பால் மூடுண்டது. மேலும் தெவோனியப் பாறைக் கட்டமைப்பில் சாற்றுக்குழல் (vascular) நிலைத்திணைப் புதைப் படிவங்கள் செறிந்து காணப்படுகின்றன. மேலும் சைலூரியக் காலத்தே தோன்றிய பூச்சி வகைகளின் புதை படிவங்களும் ஓரளவு கிடைக்கின்றன. இக்காலத்தில், கடலிலும், ஆறுகளிலும் ஏரிகளிலும் பலவகை மீனினங்கள் தோன்றியுள்ளன. இதில் டிப்டெரஸ்(Dipterus) என்ற மீனினமும் ஒன்றாகும். நன்னீர் வாழியான இந்த டிப்டெரசில் முதனிலை நுறாஇயீரல் (primitive lung) உருவாகியதால் இது தலையை நீருக்கு மேலே தூக்கி காற்றிலுள்ள உயிர் வளிமத்தை (Oxigen)உட்கொண்டது. இத்தகவமைப்பு உயிர்வளி குறையுள்ள நீர் நிலைகளுக்கும் மீனினம் பரவ உதவியது.மேலும் நீர் நில வாழ்விகளின் (இருவாழிகளின்) முன்னோடியான டிக்டாலிக் (Tiktaalik)என்ற உயிரினம் தோன்றா வழி வகுத்தது. இந்தப் புதிய உயிரி தன் உடம்பில் அமைந்த வலிய துடுப்புகளின் வழியாக நிலத்தில் நகர்ந்து ஊர்ந்தது என்றாலும் மீனினங்கள் தாம் நிலத்தை நோக்கிப் படையெடுத்த கடைசி உயிரினங்களாகும். அதற்கு முன்பே கணுக்காலிகளும், மெல்லுடலிகளும், முதனிலைக் காளான்களும் (protoaxis mushroom) நிலத்தைக் கைப்பற்றி நெடுங்காலமாக வாழ்ந்து வந்தன. அப்போது நிலவிய முதனிலைக் காளான்களின் கனியுடலம் (Fruiting body) 24 அடி உயரம் வரை கூட வளர்ந்ததென்று கூறுவர்.

முதற்காடுகளின் தோற்றம் -கரியிரும்புப் படிவுக்காலம்[தொகு]

கரியிரும்புப் படிவுக்காலத் தவரங்கள்

தொல்லுயிர் ஊழியின் ஐந்தாம் காலப்பிரிவு கரியிரும்புப் படிவுக்காலம் (Carboniferous Period) என வழங்கப்படுகிறது. இக்காலம் 35.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 29.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தத்டு. இக்காலத்தில் தான் முதனிலைக் காடுகள் தோற்றம் கண்டன. கரிப்படிவுக்காலம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் மேலும் சில உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. கரிப்படிவுக் காலத்தில் ஈரம் ஏறிய சதுப்புநிலக்காடுகள் தாழ்நிலைப் பகுதிகளில் நிலவின. இக்காலத்தட்பவெப்பம ஈரப்பதம் செறிந்ததாக அமைந்தது. தட்பவெப்பம் சற்றே வறளத் தொடங்கியதும் 150 அடி உயரம் வரை வளந்த லைக்கோப்சிடா (Lycopsida), காலமிட்டாசியே(Calamitacea)வகை மரங்கள் நிலமெங்கும் படர்ந்தன. இம்மரங்களின் நிழலில் அடிப்பகுதியில் முதல் பெரணிச் செடிகளும் தழைத்திருந்ததன. இக்காலத்தில் தான் முதனிலை நான்கு கால் விலங்குகள் (Primitive tetropods) தோன்றின. குறிப்பாக இடிதையோச் டெகா (Idithyostega) என்ற நான்குகால் விலங்கு கரிப்படிவுக் காலத்த் தொடக்கத்திலேயே தோன்றிவிட்டது.

கரியிரும்புக்காலப் படிவுகள்

பேரளவு நில அமிழ்வுகளின் போது எங்கும் பரவியிருந்த மரஞ்செடி கொடி புதர் புல் பூண்டுகள் புவியடியில் அமிழ்ந்து அங்கு நிலவும் உயரழுத்தத்ஹாலும், உயர் வெப்பநிலையாலும் நிலக்கரிப்படிவுகளாயின. இதனாலேயே இக்காலம் கரிப்படிவுக் காலம் எனப் பெயரிடப்பட்டது. இக்காலத்தே உயிர்க்கோளம் மூலை முடுக்கெல்லாம் அங்கிங்கெனாதபடி பரவி விட்டது. முதன் முதலாகப் புவியெங்கும் பரந்து விரிந்த காடுகளுல் ஓங்கல் நிலவலானது இக்காலத்தில் மீப்பெருங்கண்டம் (Pangaea) என்ற பெரு நிலப்பரப்பாகச் சுற்றிலும் கடல் சூழ ஒரெ கண்டமாக (ஒற்றைக் கண்டப்புவி) விளங்கியது. 120 அடி உயரம் 30 அடியளவு அடிமரமும் உள்ள பெருமரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. பெருமரங்கள் அடிப்பகுதியில் 6 அடி நீள ஆர்த்தோப்பிளியூரா(Orthopleura) என்னும் உயிரிகள் வாழ்ந்து வந்தன. இவை தற்கால மரவட்டைகள் போன்ற உருவத்தில் (Centipodes) விளங்கின. இவற்றின் சிறகுகள் இரண்டடி நீளம் கொண்டவை. இவை தும்பிகளை உண்டு வாழ்ந்தன.

மீப்பெருங்கண்ட கொன்றுண்ணிகள் (பெர்மியக்காலம்)[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரின_ஏணிப்படிகள்&oldid=1465473" இலிருந்து மீள்விக்கப்பட்டது