இந்தியக் குடியுரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடியுரிமை குறித்து அரசியல் சட்ட பிரிவுகள் 5 முதல் 11 வரை விளக்குகின்றன.[1]

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடியுரிமை என்பது வரையறுக்கப்படவில்லை. குடிமகனுக்குக் கிடைக்கும் உரிமை குடியுரிமையாகும். குடிமகன் என்பவன் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதற்காக அவனுக்கு சில உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசியல் உரிமைகளும் குடிமக்கள் அல்லாதவருக்கு வழங்கப்படமாட்டாது.

குடிமகன் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும். நாட்டில் உயர்ந்த பதவிகளான குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் போன்ற பதவிகளுக்கு குடிமக்கள் மட்டும் தான் வரமுடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 5 முதல் 11 வரை குடிமக்களைப் பற்றிக் கூறுகிறது.

இந்திய குடியுரிமை சட்டம் 1955[தொகு]

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11 குடியுரிமை குறித்த சட்டம் இயற்றுவதற்கு வகை செய்கிறது. இதனடிப்படையில் பாராளுமன்றம் இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 ஐ இயற்றியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பு இந்தியாவில் குடியிருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வகை செய்கின்றது. அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின் குடியுரிமை வழங்குவது குறித்து இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 வகை செய்கின்றது.

அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய தேதியில் குடியுரிமை வழங்குவது[தொகு]

அரசியலமைப்புச்சட்டம் 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அன்றைய தேதியில் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் பின் வருமாறு.

  1. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5 ன்படி, இந்தியாவை இருப்பிடமாகக் கொண்டவர்கள், இந்தியாவில் பிறந்திருந்தாலோ அல்லது அவரின் பொற்றோரில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலோ, அவ்வாறு இருந்து, அரசியல் சட்டத் தேதிக்கு முன் ஐந்து ஆண்டுகளுகளுக்கு மேல் இந்தியாவி குடியிருந்திருந்தாலோ அவர் தகுதியுள்ளவர் ஆகிறார்.
  2. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் ஒரு சில நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். (அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 6)
  3. உரிமை கோருபவரோ அல்லது அவரது பெற்றோரோ ஒன்றுபட்ட இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் வசித்து வந்திருந்தால் குடிமகனாகக் கருதப்படுவார். ஆனால் அவர் குடியுரிமை கோரி மனு செய்தால் ஒருசில நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடியுரிமை வழங்கப்படும்.

அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின் குடியுரிமை பெறுவது[தொகு]

குடியுரிமை அடைதல்[தொகு]

  1. பிறப்பால் அடைதல்:இந்தியக் குடியுரிமை சட்டம் 1955ன் பிரிவு 3ன் படி, அரசியல் அமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட தேதிக்குப் பின் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். இவர் பிறப்பால் இந்தியக் குடிமகனாவார்.
  2. மரபுவழிக் குடியுரிமை:இந்தியக் குடியுரிமை சட்டம் பிரிவு 4 இதற்கு வகை செய்கின்றது. ஒருநபர், 26.01.1950 க்குப் பின்போ அல்லது 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு முன்போ வெளிநாட்டில் பிறந்திருந்து அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருந்தால், அவர் மரபுவழியில் குடியுரிமை பெற தகுதி உள்ளவர்.
  3. பதிவு செய்தல்:மேலே கூறிய சட்டம் பிரிவு 5 இதற்கு வகை செய்கிறது
    1. இந்தியாவில் வழக்கமான குடியிருப்பைக் கொண்ட இந்திய வழித்தோன்றல்கள் தங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
    2. ஒன்றுபட்ட இந்தியாவிற்கு வெளியில் தங்கியிருந்த இந்திய வம்சாவழியினரும் பதிவு செய்து கொள்ளலாம்.
    3. இந்தியாவில் குடியிருந்து வருபவர்கள், இந்தியக் குடிமக்களை மணந்து கொண்டாலும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் மனு அளிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
    4. இந்திய குடிமக்களின் தகுதி வயது அடையாத (minor) குழந்தைகள் பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறலாம்.
    5. இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதலாம் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாட்டினர், தகுதி வாய்ந்த வயதினை அடைந்த பின்பு பதிவு செய்து கொள்ளலாம்.

வெளிநாட்டினர் குடியுரிமை கோரிப் பெறுதல்[தொகு]

இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்படாத நாட்டைச் சேர்ந்தவர், தேவையான தகுதிகள் பெற்றிருந்தால் அரசிற்கு மனுசெய்து குடியுரிமை கோரலாம்.

இந்திய நாட்டின் எல்லையை விரிவாக்குவதினால் குடியுரிமை[தொகு]

இந்திய நாட்டின் எல்லை விரிவாக்கத்தினால் அப்பகுதியில் வாழும் மக்கள் குடியுரிமைக்கு தகுதியானவர்கள் ஆகின்றனர். இந்திய அரசு இது குறித்த அறிக்கையை அரசிதழிலில் வெளியிட வேண்டும். இந்தியக்குடியுரிமை சட்டத்தின் 7 வது பிரிவு இதற்கு வகை செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_குடியுரிமை&oldid=2899652" இலிருந்து மீள்விக்கப்பட்டது