கரைப்பானால் பிரித்தெடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சாயிக் அமிலம் ஒரு கரிமச் சேர்மத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது

கரைப்பானால் பிரித்தெடுத்தல் (Solvent extraction) என்பது கரிமச் சேர்மங்கள் நீரைவிட கரிம கரைப்பான்களில் அதிகம் கரையும் என்ற கரைதிறன் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரித்தல் முறையாகும். நீர்மம்-நீர்மம் சாறு இறக்குதல் அல்லது நீர்மம்-நீர்மம் பிரிப்புமுறை என்ற பெயர்களாலும் இம்முறை அழைக்கப்படுகிறது. கலக்காத இரண்டு திரவங்கள் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணம் நீர் மற்றும் கரிமக் கரைப்பான்.

வாசனை திரவியங்கள், தாவர எண்ணெய், அல்லது உயிரி எரிபொருள் போன்றவற்றின் பிரித்தல் செயல்முறையில் கரைப்பானால் சாறு இறக்குதல் முறை பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்க அணு எரிபொருளில் இருந்து புளூட்டோனியத்தை பிரித்தெடுக்கவும் இம்முறை பயன்படுகிறது. பொதுவாக இம்முறை அணு மறுசெயல்முறை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மீட்டெடுக்கப்படும் புளூட்டோனியம் அணுக்கரு எரிபொருளாக மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

கரிமச்சேர்மமுள்ள நீரிய கரைசல் தகுந்த கரிமக் கரைப்பானுடன் சேர்த்து நன்கு குலுக்கப்படுகிறது. கரிமச் சேர்மம் கரைப்பானில் கரைந்து நிரிலிருந்து தனித்துப் பிரிகையடைகிறது. கரிம அடுக்கு, நீரிய அடுக்கு என்று இருவேறு அடுக்குகள் பிரிக்கப்படுகின்றன. பிரிபுனலைக் கொண்டு வடிகட்டுதல் முறையில் கரைப்பானிலுள்ள கரிமச் சேர்மம் (கரிம அடுக்கு) பிரிக்கப்படுகிறது. மாசுக்கள் நீரிலேயே தங்கிவிடுகின்றன [1] தூயச் சேர்மம் காய்ச்சிவடித்தல் முறையில் பிரிக்கப்படுகிறது.

பண்டைய காலத்தில் இருந்தே தாவர எண்ணெய்களுக்காக எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் சார்ந்த கட்டிகளை நசுக்கி பிழிந்து சாறு இறக்குதல் முறை இந்தியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாவர எண்ணெய் தொழிற்சாலைகளில் 5,00,000 காளை மாட்டு செக்குகள் பயன்படுத்தப்பட்டு 8,00,000 டன் தாவர எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Solvent Extractors' Association of India". SEA India.

.