புகழேந்திப் புலவர் (நளவெண்பா)
புகழேந்திப் புலவர் என்னும் பெயருடன் இருவேறு காலங்களில் இருவேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர்.
- ஒருவர் இங்குப் குறிப்பிடப்படும் நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவர். இவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- மற்றொருவர் அம்மானைப் பாடல்களைப் பாடிய புகழேந்திப் புலவர். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
புகழேந்தி நளவெண்பா எழுதி புகழ்பெற்ற சோழர் கால புலவர் ஆவார். இவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. புகழேந்தி, புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவர் என்ற செய்தி வழிவழியாக வழங்கப்பட்டு வருகிறது. நளவெண்பா மிகச் சிறந்த 400 வெண்பாக்களையுடையது; இதன் காரணமாக வெண்பாவிற் புகழேந்தி என்றும் புகழப்படுகிறார்.
பொருளடக்கம் |
புகழேந்தி பற்றிய கட்டுக்கதைகள் [தொகு]
புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகவும் பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட பொழுது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு கூத்தன், புகழேந்தி மீது பொறாமை கொண்டான் என்றும் கூத்தனுக்கும் புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றும், கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினான், பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்துக் கொண்டார்கள் என்று செவிவழிக்கதைகள் உள்ளன. ஆனால் இதை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை.
நளவெண்பா [தொகு]
செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாக இருக்கவேண்டும். ஆனால் இதுவும் சந்தேகத்திற்குரியதே! புகழேந்தி ஒட்டக்கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்திருக்க வேண்டும், புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர் இதன் காரணமாகவே வழக்கத்தில் இருந்தது. நளவெண்பா நளன் கதையை 400 வெண்பாக்களில் கூறுகிறது, சமஸ்கிருதத்தில் அனுஸ்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; இதன் காரணமாகத் தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் மட்டுமே கையாளக் கூடியதாக வெண்பா இருந்தது, அத்தகைய இலக்கணங்கள் உடைய வெண்பாவில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக புலவ புகழேந்தி இருந்தார். புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரும் உடையனவாகயிருந்தன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது.
இலக்கியச் சிறப்பில்லாத வேறு பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழேந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புபடுத்திச் சொல்லும் மரபாகத்தான் இதைப் பார்க்க முடியும் ஏனென்றால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறுதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை.
வாழ்ந்த காலம் [தொகு]
மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம்.