பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிலிப்பியர் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
"இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்" (பிலி 2:10). இலத்தீன் சொற்றொடர் ஓவியம். கலைஞர்: அந்தோனியோ ராஜ்ஜி, லெயொனார்தோ ரெத்தி. காப்பிடம்: இயேசு பேராலயம், உரோமை.

பிலிப்பியர் அல்லது பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Philippians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினொன்றாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் ஆறாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Philippesious (Επιστολή Προς Φιλιππησίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Philippenses எனவும் உள்ளது [1]. தூய பவுல்தாம் [2] இம்மடலை எழுதியவர் என்பது விவிலிய அறிஞர்களின் ஒருமித்த கருத்து. இது கி.பி. சுமார் 55 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் [3].

பிலிப்பியர்: மகிழ்ச்சியை அறிவிக்கும் மடல்[தொகு]

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் ஒற்றுமை பற்றியும் மகிழ்ச்சி பற்றியும் அருமையான கருத்துக்களை எடுத்துக்கூறுகிறது; கிறிஸ்து இயேசுவின் வழியாய் அவற்றைப் பெற இயலும் என அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

திருமுகத்தின் ஆசிரியர்[தொகு]

தூய பவுல் இத்திருமுகத்தை எழுதினார் என அறிஞர் உறுதியாக நிலைநாட்டியுள்ளனர். இத்திருமுகம் பவுலது மிக உயர்ந்த சிந்தனைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. பவுல் எழுதியவற்றுள் மிகச் சிறந்த திருமுகமாக இதனைப் பலரும் கருதுகின்றனர்.

மடல் எழுந்த சூழலும் நோக்கமும்[தொகு]

பவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது பிலிப்பியில் பலரை மனம் மாற்றினார். சிறைப்பிடிக்கப்பட்டு, வியத்தகு முறையில் சிறையிலிருந்து தப்பினார். மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போதும் அங்கு வந்தார் (திப 20:1,6).

பின்னாளில் பவுல் சிறைப்பட்ட போது பிலிப்பியர்கள் எப்பப்பிராதித்திடம் பணம் கொடுத்துப் பவுலுக்குப் பணிவிடை செய்யுமாறு அவரை அனுப்பினர் (4: 18). எப்பப்பிராதித்து கடுமையாக நோயுற்றார். குணம் பெற்ற பின் பவுல் பிலிப்பியர் திருமுகத்தை எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் (2:25-30). தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவர்கள் மகிழ்வோடும் மன உறுதியோடும் கிறிஸ்தவ நம்பிக்கையோடு இலங்கவேண்டும் என்பதற்காகவும் பவுல் இம்மடலை எழுதுகிறார்.

பவுல் எங்குச் சிறைப்பட்டிருந்த போது இந்தத் திருமுகத்தை எழுதினார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. உரோமைச் சிறையிலிருந்து (கி.பி. 59-63) எழுதினார் என்பதே மரபுக் கருத்து. எனினும் அவரது மூன்றாம் நற்செய்திப் பயணத்தின் போது அவர் எபேசிலிருந்து கி.பி. சுமார் 55ஆம் ஆண்டளவில் இதனை எழுதியிருக்க வேண்டும் என்றே பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

திருமுகத்தின் உள்ளடக்கம்[தொகு]

இத்திருமுகத்தில் பவுல் தன்னிலை விளக்கம் தருகிறார் (1:12-26; 4:10-19); தாம் சிறைப்பட்டதைப் பற்றி எடுத்துரைக்கிறார்; துன்பங்களில் பிலிப்பியர் மனவுறுதியோடு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார் (1:27, 30; 4:4); பிலிப்பியர் தாழ்மையுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வேண்டுகின்றார்; தம்மை மிகவும் தாழ்த்திப் பின்னர் தந்தையால் உயர்த்தப்பட்ட இயேசுவை முன்மாதிரியாகக் காட்டுகிறார் (2:1-11; 4:2-3).

திமொத்தேயுவைம் எப்பப்பிராதித்துவையும் பிலிப்பியத் திருச்சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பவுல் விரும்புகிறார் (2:19-30); யூதமயமாக்கலைக் குறித்துப் பிலிப்பியரை எச்சரிக்கிறார் (3: 1-21); தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துகிறார் (4:10-20).

பிலிப்பியர் திருமுகத்தில் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் இல்லை. இக்கடிதம் மகிழ்வின் கடிதமாகும். மகிழ்வைக் குறிக்கும் 'காரா' எனும் கிரேக்கச் சொல் 16 முறை இத்திருமுகத்தில் வருகிறது. கிறிஸ்துவின் தாழ்மை உயர்வு பற்றிய கிறிஸ்தியல் பாடல் (2:5-11) மிகச் சிறப்பானது.


தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்
பெயர்
கிரேக்கம்
இலத்தீன்
சுருக்கக் குறியீடு
தமிழில் ஆங்கிலத்தில்
உரோமையர் Προς Ρωμαίους Epistula ad Romanos உரோ Rom
1 கொரிந்தியர் Προς Κορινθίους Α Epistula I ad Corinthios 1 கொரி 1 Cor
2 கொரிந்தியர் Προς Κορινθίους Β Epistula II ad Corinthios 2 கொரி 2 Cor
கலாத்தியர் Προς Γαλάτας Epistula ad Galatas கலா Gal
எபேசியர் Προς Εφεσίους Epistula ad Ephesios எபே Eph
பிலிப்பியர் Προς Φιλιππησίους Epistula ad Philippenses பிலி Phil
கொலோசையர் Προς Κολασσαείς Epistula ad Colossenses கொலோ Col
1 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Α Epistula I ad Thessalonicenses 1 தெச 1 Thess
2 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Β Epistula II ad Thessalonicenses 2 தெச 2 Thess
1 திமொத்தேயு Προς Τιμόθεον Α Epistula I ad Timotheum 1 திமொ 1 Tim
2 திமொத்தேயு Προς Τιμόθεον Β Epistula II ad Timotheum 2 திமொ 2 Tim
தீத்து Προς Τίτον Epistula ad Titum தீத் Tit
பிலமோன் Προς Φιλήμονα Epistula ad Philemonem பில Philem

பிலிப்பியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி[தொகு]

பிலிப்பியர் 2:3-11


"கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.
மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.
நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
கடவுள் வடிவில் விளங்கிய அவர்,
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை
வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
ஆனால் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.
மனித உருவில் தோன்றி,
சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி,
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர்,
மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக
'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்."

பிலிப்பியர் நூலின் உட்பிரிவுகள்[தொகு]

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை

(வாழ்த்தும், நன்றியும் இறைவேண்டலும்)

1:1-11 367
2. பவுலின் தன்னிலை விளக்கம் 1:12-26 367 - 368
3. கிறிஸ்தவ வாழ்வு 1:27 - 2:18 368 - 369
4. திமொத்தேயு, எப்பப்பிராதித்து குறித்த திட்டம் 2:19-30 369-370
5. எதிரிகள் குறித்து எச்சரிக்கை 3:1 - 4:9 370 - 371
6. பவுலும் பிலிப்பிய நண்பர்களும் 4:10-20 371 - 372
7. முடிவுரை 4:21-23 372
  1. எபேசியர் மடல்
  2. திருத்தூதர் பவுல்
  3. கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - எபேசியர்