திருவிழா மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவிழா மகாதேவர் கோயில் (Thiruvizha Sree Mahadeva Temple) என்பது, கேரளத்தின், ஆலப்புழை மாவட்டம் திருவிழா என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும் ஆகும். இது நீலகண்டப் பெருமானான சிவபெருமான் வாழும் தலமாகப் போற்றப்படுவதால் இத்தலத்து இறைவனை, காலகண்டன் என்று மலையாளத்தில் அழைக்கப்படுகிறார்.[1]

இந்த கோயிலானது எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் எர்ணாகுளம், செர்த்தலை சாலையில், திருவிழா தொடருந்து நிலையத்துக்கு அருகில் அமந்துள்ளது.

தலவரலாறு[தொகு]

பழங்காலத்தில் இந்தக் கோயில் உள்ள பகுதியானது குளமாக இருந்தது. அந்தக் குளத்தில் ஆமைகள் வாழ்ந்து வந்தன. ஒரு சமயம் இந்த ஆமைகளை உள்ளாடர்கள் என்பவர்கள் ஈட்டிகளால் குத்தி வேட்டையாடியபோது, அந்தக் குளத்தில் குருதி பீறிட்டு நீர் செந்நிறமானது.

இதனையடுத்து மக்கள் இக்குளத்து நீரை இரைத்து வெளியேற்றி பார்த்தபோது, குளத்தின் நடுவில் சிவலிங்கம் தென்பட்டது. அந்த லிங்கத்திருமேனியில் இருந்துதான் குருதி வெளியேறுகிறது என்பதைக் கண்டனர். இதனை ஒரு முனிவர் வந்து பார்த்து, தன்னிடம் இருந்த சாம்பலால் அத்திருமேனியில் வைத்து அழுத்தி, குருதி வெளியேறுவதை நிறுத்தினார். அக்குளத்திலேயே ஒரு கோயிலை அமைக்க மக்களை முனிவர் கேட்டுக்கொண்டார். அதன்படியே அக்குளத்தை மணலால் நிரப்பி, சிறிய கோயிலை எழுப்பி வழிபடத்துவங்கினர்.

இதன்பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஒருவர் இக்கோயிலில் தங்கி, சிவபெருமானை வழிபட்டு வந்தார். இவரைக் கண்டு பக்தர்கள் அஞ்சினர். இநிநலையில் கோயில் பக்தர் ஒருவரின் கனவில் வந்த இறைவன், மனநிலை பாதிக்கப்பட்டவரை அங்கேயே தங்க வைத்து, மறுநாள் கோயிலில் புதிதாக முளைக்கும் செடியிலிருந்து, இலைகளைப் பறித்துச் அதன் சாற்றில் பால் கலந்து பூசையில் வைத்துத் தரும்படி கூறினார். அவ்வாறே செய்ய அவரின் மனநிலை குணமடைந்தார் என தலவரலாறு கூறுகிறது.

கோயிலமைப்பு[தொகு]

இந்த கோயிலானது விசாலமான இடத்தோடு கேரள பாரம்பரிய கோயில் கட்டடக்கலையில் கட்டப்பட்ட கோயிலாக திருக்குளத்தோடு அமைந்துள்ளது. கருவறைக்குள் பள்ளமான இடத்தில் மகாதேவர், காலகண்டர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் உள்ளார். இந்த இடம் ஒரு காலத்தில் குளமாக இருந்ததால், மழைக்காலங்களில் கருவறை முழுவதும் நீரால் நிறைந்துவிடும். இறைவன் நீரில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் உற்சவருக்கு மட்டுமே பூசைகள் நடைபெறுவது வழக்கம்.

வழிபாடும், பிரசாதமும்[தொகு]

இப்பகுதியைச் சுற்றி கிடைக்கும் அபூர்வ மூலிகைச்சாற்றை, பசும்பாலில் கலந்து பந்தீரடி பூசையில் இறைவனுக்கு வைத்து வழிபடுகிறார்கள். இது நோயுற்றவர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. நாள்தோறும் நண்பகலில் பால் பாயசத்தை இறைவனுக்குப் படைக்கிறார்கள். அப்போது அருகேயுள்ள கோயிலில் சிவனின் மகளாகக் கருதப்படும் கனிச்சு குளங்கரா தேவியை இங்கு எழுந்தருளச் செய்து, அவருக்கும் பால் பாயசம் படைத்து, பூசை செய்து, அதனை நோயுற்றவர்களுக்கும் தருவார்கள்.

ஒவ்வொராண்டும் மார்ச் மாதத்தில், இந்த கோவிலில் ஆர்ட்டு விழா நடக்கிறது. தனு மாதத்தில் (மார்கழி-நவம்பர்-டிசம்பர்) பத்து நாட்கள் திருவிழாவானது பத்து நாட்கள் நடதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]