திணையும் காலமும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் ஆண்டை ஆறு பருவ காலங்களாகப் பகுத்துக் காண்பது தமிழ்நெறி. இந்தப் பகுப்பைப் பெரும்பொழுது என்பர். அதே போல ஒரு நாளையும் ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இதற்குச் சிறுபொழுது என்று பெயர்.
தொல்காப்பிய நெறி [தொகு]
தொல்காப்பியர் இந்தக் காலப்பொழுதுகளை ஐந்திணை நிலப் பாகுபாட்டோடும், ஐந்திணை மக்களின் ஒழுக்கப் பாகுபாட்டோடும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார். தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா எண் 6 முதல் 10 முடிய உள்ள 5 நூற்பாக்கள் தரும் செய்தியை இங்குள்ள அட்டவணையில் காணலாம்.
| திணை | சிறுபொழுது | பெரும்பொழுது |
|---|---|---|
| குறிஞ்சி | யாமம் | கூதிர் |
| முல்லை | மாலை | கார் |
| மருதம் | வைகுறு விடியல் | இல்லை |
| நெய்தல் | எற்பாடு | இல்லை |
| பாலை | நண்பகல் | இளவேனில், முதுவேனில், + பின்பனி |
ஓர் ஆண்டின் 6 பருவ காலம் [தொகு]
| பருவம் | தமிழர் வழக்கத்தில் உள்ள மாதங்கள் | இணையான ஆங்கில மாதங்கள் |
|---|---|---|
| இளவேனில் | சித்திரை, வைகாசி | ஏப்ரல் பிற்பகுதி, மே, சூன் முற்பகுதி |
| முதுவேனில் | ஆனி, ஆடி | சூன் பிற்பகுதி, சூலை, ஆகஸ்டு முற்பகுதி |
| கார் | ஆவணி, புரட்டாசி | ஆகஸ்டு பிற்பகுதி, செப்டெம்பர், அக்டோபர் முற்பகுதி |
| கூதிர் (குளிர்) | ஐப்பசி, கார்த்திகை | அக்டோபர் பிற்பகுதி, நவம்பர், டிசம்பர் முற்பகுதி |
| முன்பனி | மார்கழி, தை | டிசம்பர் பிற்பகுதி, சனவரி, பிப்ரவரி முற்பகுதி |
| பின்பனி | மாசி, பங்குனி | பிப்ரவரி பிற்பகுதி, மார்ச்சு, ஏப்ரல் முற்பகுதி |
ஒரு நாளின் 6 பொழுதுகள் [தொகு]
| பொழுது | மணி |
|---|---|
| காலை | 6 முதல் 10 மணி வரை |
| நண்பகல் | 10 முதல் 14 மணி வரை |
| எற்பாடு | 14 மணி முதல் 18 மணி வரை |
| மாலை | 18 மணி முதல் 22 மணி வரை |
| யாமம் | 22 மணி முதல் 2 மணி வரை |
| வைகறை (வைகுறு விடியல்) | 2 மணி முதல் 6 மணி வரை |