தாமரைகுளம் பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1][2]அய்யாவழி

தாமரைகுளம் பதி

வைகுண்டசுவாமியால் உருவாக்கப்பட்ட அய்யாவழி வழிபாட்டு தலமே தாமரைகுளம்பதி. கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி முனையில் இருந்து 5 கிமீ தொலைவில் தாமரைகுளத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. அய்யா வைகுண்டசாமி நீண்ட நாட்களாக தங்கிருந்து மக்களுக்கு நாமமும், பதமும் வழங்கி மக்கள் அக,புற பிணிகளை நீக்கி அருளாட்சி செய்த தலமே தாமரைகுளம் பதி.

அய்யா வைகுண்டர்

தர்மத்தை நிலைநிறுத்த இறைவன் தொடர்ந்து அவதாரங்களை எடுத்து அவதார தேவைகளை நிறைவு செய்தார். கலியுகத்தில் வைகுண்டசுவாமியாக அவதரித்த திருமால் கலியால் மக்கள் அடையும் துயரங்களுக்கு தீர்வு வழங்கி தர்மவாழ்விற்கு வழி காட்டினார். அவ்வாறு 1008 அவதரித்த வைகுண்ட அவதாாரம் மும்மூர்த்திகளின் அம்சமாக தனிசிறப்பை பெற்றது

சிறப்பு பெயர்கள்

தாமரைகுளம்பதி, தென்தாமரைகுளம் பதி, அகிலம்தந்த தாமரைபதி, தாமரைபதி, தாமரைகுளம் ஸ்ரீமன் நாராயண சுவாமிபதி, ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில், அகிலம் இயற்றிய பதி, விருந்துண்டபதி போன்ற சிறப்பு பெயர்களை பெற்றது.

ஐம்பதி

சுவாமிதோப்புபதி, தாமரைகுளம்பதி, அம்பலபதி, முட்டபதி, பூப்பதி ஆகிய அய்யாவழி வழிபாட்டு தலங்கள் மட்டும் பதி என்ற சிறப்பை பெறுகிறது. இவை அய்யாவால் தோற்றுவிக்கப்பட்டு , அய்யா நீண்ட காலமாக தங்கி இருந்து மக்களுக்கு அருளாசி வழங்கி அற்புதங்கள் நிகழ்த்தப்பட்ட சிறப்பை பெற்ற முதன்மை வழிபாட்டு தலங்கள் பதிகள் என்ற சிறப்பை பெற்றது. ஐம்பதிகள் என்றும் பஞ்சபதிகள் என்றும் சிறப்பு பெறுகிறது.

தாமரைகுளம்பதி தலவரலாறு

                 இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரமே அய்யா வைகுண்டர். திருச்செந்தூர் கடலில் இருந்து வைகுண்டமாக கலியழிக்க பூவண்டர் தோப்பு வந்த பரம்பொருள் ஆறு ஆண்டுகள் மூன்று நிலைகளில் தவம் செய்தார். முதல் இரு ஆண்டுகள் கலியுகம் அழிந்து தருமயுகம் தோன்றுவதற்காக ஆறு அடி குழியில் தவவாழ்வில் ஈடுபட்டார். இரண்டாம் இரு ஆண்டுகள் சாதிக்கொடுமைகள் நீங்க தரையிலும் , மூன்றாம் இரு ஆண்டுகள் பெண்ண்டிமை தீர்வதற்கும், நல்ல வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் உயர்ந்த பீடத்திலும் தவம் மேற்கொண்டார். இதனை

“முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனேதத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமேமூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்" அய்யா வைகுண்டர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் மட்டும் உணவாக அய்யா எடுத்துக்கொண்டார்.

    ஆறு ஆண்டுகள் தவவாழ்வுக்கு பின்னர் தாமரைகுளம் ஊரில் இருந்த அய்யாவின் அடியவர்களின் வேண்டுகோளுக்கேற்ப தாமரைகுளம் ஊருக்கு அய்யா வருகைதந்தார். தாமரைகுளத்தில் தங்கியிருந்து அருளாசி வழங்கினார். உடனடியாக ஓலைகளால் கொட்டகை அமைக்கப்பட்டது. அய்யா வைகுண்டபரம்பொருள் வந்து தங்கிய இடம்தான் தாமரைகுளம் பதி. அய்யாவுக்கும், சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் உணவு தயார்செய்து பொன்னைஞ்சன் உடையகுட்டி விருந்தளித்தார். அய்யா பல காலம் இங்கு தங்கியிருந்து தவம் வாழ்வு மேற்கொண்டார். பல ஊர்களிலிருந்து வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். முட்டபதி தவசிற்கு பிறகும் சிலகாலம் தாமரைகுளம்பதியிலிருந்து மக்களுக்கு அக புற பிணிகளை தீர்த்தார். மக்களுக்கு திருநாமம், பதமும் கொடுத்து நோய் பிணிகளை தீர்த்து வைத்தார். அய்யாவின் வருகையால் தாமரைகுளம் புண்ணிய பூமியாக மாறியது. தாமரைகுளத்தில் வாழ்ந்த செல்வந்தரான பொன்னனைஞ்சவன் அய்யா வைகுண்டரின் பக்தராகவும், அடியாராகவும் இருந்தார். அய்யா வைகுண்ட பரம்பொருள் செல்லும் இடமெல்லாம் உடன் சென்று அய்யாவிற்கு பணிவிடைகள் செய்து வந்தார். முந்தைய காலத்தில் சிறிய அளவில் இருந்த கட்டிடத்தை அய்யாவின் திருவாக்கிற்கேற்ப விரிவுபடுத்தி கட்டிய பெருமை பொன்னனைஞ்சவன் உடையகுட்டியை சாரும். உடையகுட்டிக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அய்யாவின் திருவருளால் குழந்தை பிறந்ததது. உடையகுட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க அய்யா குழந்தைக்கு "நாராயண பெருமாள்" என்று பெயர் சூட்டினார். அய்யாவை தாமரைகுளம் பதிக்கு அழைத்துவந்து விருந்து அளித்த பெருமையும் உடையகுட்டியையே சாரும். தாமரைகுளம் பதியில் அய்யா தன் சீடர்களுடன் விருந்து உண்டதால் "விருந்துண்டபதி" என்ற சிறப்பு பெயருடன் தாமரைகுளம்பதி அழைக்கப்படுகிறது.கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி அய்யா அருள ஐந்து சீடர்களுள் ஒருவரான அரிகோபாலன்சீடர் தாமரைகுளம் பதியில் இருந்து அகிலத்திரட்டு அம்மானை ஆகமத்தை இயற்றினார். சகாதேவன் சீடரான அரிகோபால சீடரின் நெருங்கிய நண்பரான உடையகுட்டி அகிலத்திரட்டு அம்மானை ஆகமத்தை கொல்லம் ஆண்டு 1064 முதல் ஏடு பிரதி எழுதினார். உடையகுட்டியால் எழுதப்பட்ட இந்த ஏடுதான் தற்போது உள்ள பழமையான திருஏடாக உள்ளது. முதன்முதலில் திருஏடு வாசிப்பு திருவிழா நடந்த பதி என்ற சிறப்பு தாமரைகுளம் பதிக்கு உள்ளது. அய்யா அருள அரிகோபால சீடரால் இயற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானையை முதன்முதலாக திருஏடு வாசித்த பெருமை தாமரைகுளம்பதி பூஜிதகுரு.உடையகுட்டியையே சாரும்.

                 அய்யா வைகுண்டபரம்பொருளின் அற்புதங்களை உணர்ந்த பதினெட்டு சாதி மக்களும் தாமரைகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அய்யா இவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணங்கொண்டார்.

“சாதி பதினெட்டும் தன்னால் கேடாகும்வரை

நீதி அழியாதே நீ சாபங்கூராதே"

"சாதி பதினெட்டும் தலையாட்டி பேய்களையும்

வாரிமலையதிலும் வன்னியிலுந்தள்ளிவிடு"

           என்று சாதி சார்ந்த சமூகத்தல் ஏற்ப்படும் தீமைகளால் ஏற்படும் அழிவை பற்றி அய்யா வைகுண்ட பரம்பொருள் சாடுகிறார்.

             அந்த காலகட்டத்தில் பொதுக்கிணற்றில் தண்ணீரெடுத்து பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது. பதினெட்டு சாதியினருக்கும் பொதுகிணறுகளில் தண்ணீரெடுக்க அனுமதியில்லை. இதனை கடுமையாக எதிர்த்த அய்யா வைகுண்டர் தன்னை பின்பற்றுகின்றவர்கள் வழிபடுகின்ற ஐந்து பதிகளிலும் முத்திரி கிணற்றை ஏற்படுத்தினார். முத்திரி கிணற்றை பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொண்டனர். தாமரைகுளம் பதியின் முத்திரி கிணற்றின் பதம் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது. தன்மானம் மட்டுமே கலியை அழிக்கவல்ல ஆயுதம் என்றும். "தன்மானத்தைத் தாங்கியிரு என் மகனே" என்றும் அய்யா போதித்தார். ஆதிக்க சாதியினர் ஆலயத்துக்குள் பதினெண்சாதி மக்களை நுழைவதற்குத் தடைவிதித்திருந்த காலம். தாழ்த்தப் பட்டமக்கள் சிறுதெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். சிறுதெய்வ வழிபாட்டில் ஆடு கோழி பலி கொடுப்பது, அசைவ உணவு போன்றவற்றை இதை அய்யா எதிர்த்தார். அனைத்து உயிரினங்களையும் தன் உயிர்போல் போற்றும் தன்மையினை வலியுறுத்தினார் ஆதிக்க சாதியினரின் ஆலயத்துக்குள் வழிபாடு செய்ய இடுப்பில் துண்டு கட்டி வழிபாடு நிகழ்த்தினர். ஆனால் அய்யா தனது பதிகளில் வழிபட வருவார் தலைக்குத் பாகைக்கட்டி தன்மானத்தோடு வா என்றுரைத்தார்.

                   உருவ வழிபாட்டை அய்யா வைகுண்டர் மிகக்கடுமையாக எதிர்த்தார். இறைவன் அன்பு வடிவானவன் அனைத்து உயிர்களிடமும் குடிகொண்டுள்ளான் என்று உணர்த்தினார். அவரவர் உள்ளிருக்கும் ஆன்மாவை அறநெறிகளின் மூலமாக பரமாத்மாவாக உயர்த்தி வழிபட கண்ணாடி முன்னால் நின்று வழிபடும் முறையை அய்யா கொடுத்தார். "உன்னிலே இறைவனைக் காண்" என்பது தான் பொருள். தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட வாழ்வியலை மக்களுக்கு போதித்தார். அன்னதர்மம் செய்வதை வலியுறுத்தினார். புலால் உணவுக்கு எதிராகவும், அறச்சிந்தனைகளை வலியுறுத்தியும், சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் அய்யாவின் கொள்கை அமைந்தது.

அகிலத்திரட்டு அம்மானை

தாமரைகுளம்பதியில் வைத்துதான் அரிகோபாலசீடர் அய்யாவழி புனிதநூலான அகிலத்திரட்டு அம்மானை நூலை இயற்றினார்.

குருபரம்பரையினர் மற்றும் பணிவிடைகள்

அய்யா வைகுண்டசுவாமியை தாமரைகுளம் ஊருக்கு அழைத்துவந்து விருந்து அளித்து உபசரித்த அய்யாவின் அடியார் உடையகுட்டிநாடார் தாமரைகுளம்பதியின் முதல் குருவாக அய்யா வைகுண்டசுவாமியால் இறைப்பணியாற்ற அமர்த்தப்பட்டனர். அதன் பின்னர் குரு.உடையகுட்டிநாடாரின் வாரிசுகள் தொடர்ந்து குருவாக இருந்து தாமரைகுளம் பதியில் குருத்துவபணிகளை மேற்க்கொண்டுவருகின்றனர். தற்போது பூஜிதகுரு உடையகுட்டிநாடாரின் பரம்பரையினரான

குரு. சௌ.இராஜசேகரன்

குரு.சௌ.பிரபாகரன்

குரு.இரா.சௌந்தரராஜபாண்டியன்

குரு.ஸ்ரீ.ஜெகன்

குரு.சௌ.பி.ஹரிபிரசாத்

குரு.சௌ.பி.ஆனந்த்

குரு.சௌ.பி.வினோத்

ஆகியோர் பதியின் குருத்துவப்பணிகளோடு அய்யாவுக்கு பணிவிடைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்வாகம்

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அய்யாவழி மக்களுக்கும், பக்தர்களுக்கும் புனித தலமாக தாமரைகுளம்பதி உள்ளது.

பக்தர்களுக்கு வழங்கப்படும் நாமம் மற்றும் பதியில் உள்ள முத்திரி கிணற்றின் பதம் ஆகியவை நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. தக்காரின் நேரடி நிர்வாகத்தில் பரம்பரைகுரு.சௌ.இராஜசேகரன், குரு.சௌ.பிரபாகரன், குரு.இரா.சௌந்தரராஜபாண்டியன், குரு.ஸ்ரீ.ஜெகன் ஆகியோர் குருத்துவப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


திருவிழாக்கள்


1.சித்திரை திருவிழா

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். பதினொரு நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் தொட்டில் வாகனம், சர்ப்பவாகனம், கருட வாகனத்தில், தாமரைபூவாகனம், என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி அய்யா வைகுண்டசுவாமி அருள்புரிவார். நாள்தோறும் அன்னதர்மம் நடைபெறும். எட்டாம் நாள் திருவிழாவில் தாமரைகுளம் ஊரின் முக்கிய வீதிகளில் வாகனத்தில் வீதிஉலா வந்து கலிவேட்டை நடைபெறும். பதினொன்றாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு பணிவிடைகள் மற்றும் வாகனபவனி, பக்தர்களுக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. தினந்தோறும் இரண்டு வேளைகளும் பணிவிடைகள் வைகுண்டசுவாமிக்கு நடைபெறுகிறது.

2.கார்த்திகை திருஏடுவாசிப்புவிழா

அய்யா வைகுண்டசுவாமியின் திருவருளால் அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடுவாசிப்பு திருவிழாவாக நடைபெறும். இத்திருவிழா கார்த்திகை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை துவங்கி ஏழுநாட்கள் நடைபெறுகிறது அதன் பின்னர் பதினேழு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஏழு நாட்கள் நடைபெற்று திருஏடு வாசிப்பு திருவிழா முடியும். (தொடக்க காலத்தில் ஏட்டுபிரதிகள் இல்லாத நிலையில் மூலஏடு தாமரைகுளம்பதியில் மட்டுமே இருந்தது. அதனால் அகிலத்திரட்டு அம்மானை ஏட்டை தாமரைகுளம்பதியில் இருந்து சுவாமிதோப்பு பதிக்கு கொண்டு சென்று பதினேழு நாட்கள் தொடர்ச்சியாக திருஏடு வாசிப்பு திருவிழா முடிந்ததும் பின்னர் மீண்டும் தாமரைகுளம்பதியில் ஏழு நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுவதால் இந்த திருவிழா இடைவெளி ஏற்பட்டது. தற்போது படி ஏடுகள் எல்லா பதிகளிலும் மற்றும் தாங்கல்களிலும் இருப்பதால் தற்போது திருஏடு எடுத்துச்சென்று வாசிக்கப்படும் வழக்கம் இல்லை)

3.அய்யா அவதார தின விழா

மாசி மாதம் 20 ம் நாள் அய்யா வைகுண்டசுவாமியின் அவதார நாள் கொண்டாடப்படுகிறது. தாமரைகுளம்பதியில் அய்யா அவதார நாள் சிறப்பு பணிவிடைகளுடன் அன்னதர்மம் மற்றும் வாகனபவனியுடன் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து அய்யாவழி பக்தர்கள் வழிபாடு செய்ய தாமரைகுளம்பதிக்கு வருகின்றனர். அய்யா வைகுண்டசுவாமி அவதார தினத்தன்று தமிழக அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RH) வழங்குகிறது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.

4.அகிலத்திரட்டு அம்மானை திருஏடு இயற்றிய திருநாள்

      அய்யாவின் திருவருளால் அரிகோபாலசீடர் தாமரைகுளம் பதியில் வைத்து 1016- ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27- ஆம் தியதி அகிலத்திரட்டு அம்மானை நூலை இயற்றினார். இந்த திருநாளை ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி அகிலத்திரட்டு அம்மானை இயற்றிய திருவிழாவாக கொண்டப்பட்டுவருகிறது . அகிலத்திரட்டு அம்மானை போற்றும் விதமாக சிறப்பு பணிவிடைகளோடு அய்யா தொட்டில் வாகனத்தில் பணியை சுற்றி வலம்வந்து அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கும் அன்னதர்மமுடன் இனிமம் வழங்குதலும் நடைபெறுகிறது.

5. விருந்துண்ட திருநாள்

   தாமரைகுளம்பதியில் முதல் குருவான பொன்னணைஞ்சவன் உடையகுட்டி அய்யா வைகுண்ட சுவாமிக்கு விருந்தளித்து உபசரிக்க விரும்பினார். இதனால் அவர் அய்யாவையும், அவர்தம் சீடர்களையும் சுவாமிதோப்பில் இருந்து தாமரைகுளம் அழைத்து வந்து விருந்து வழங்கி வழிபட்ட நாளை விருந்துண்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது . ஆண்டு தோறும் பங்குனி மாதம் இறுதி ஞயிற்றுக்கிழமை விருந்துண்ட திருநாளாக பதியில் விழாவாக நடைபெறுகிறது. அய்யா வாகனத்தில் எழுந்தருளி காட்சி தரும் நிகழ்வும், சிறப்பு வழிபாட்டு, பணிவிடைகள் மற்றும் அன்னதர்மம், இனிமம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது


பிற சிறப்புக்கள்

* சப்த கன்னியரில் கமலக்கன்னியம்மை அவதரித்த பெருமை பெற்ற தலம் தாமரைகுளம்.

* ஏடு தந்த பதி,

* முதல் திருஏடு வாசிப்பு நடை பெற்ற தலம்,

* தமிழ் முறை படி வழிபாடுகள் நடை பெறும் சிறப்பு மிக்க தலம்.

* அய்யா வைகுண்ட பரம்பொருளின் முதன்மையான கொள்கையான பசி பிணி போக்கும் அன்னதர்மம் நடைபெறுகிறது

  1. "Construction – அய்யா துணை :: தாமரைகுளம் பதி :: இணைய பக்கம்" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. தாமரைகுளம், பதி (2020-04-04). "தாமரைகுளம் பதி". www.thamaraikulampathi.com. Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

3. அகிலத்திரட்டு அம்மானை

4. அய்யா வைகுண்டசாமி நிகழ்த்திய அற்புதங்கள் (1997) திருநாமப்புகழ் பதிப்பகம், சென்னை

5. நெல்லை மாலைமுரசு சிறப்புமலர் அய்யா வைகுண்டர் அவதார மகிமை (03/03/2010)

6. https://www.thamaraikulampathi.com/

7.மாலைமலர் 03/03/2023,அய்யா வைகுண்டர் அவதார சிறப்புமலர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரைகுளம்_பதி&oldid=3674231" இலிருந்து மீள்விக்கப்பட்டது