தமிழவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுத்தாளர் தமிழவன்

தமிழவன் தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர். சிறுகதைகள் மற்றும் புதின எழுத்தாளர்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார்.

இயங்கிய களங்கள்[தொகு]

  • ஆய்வாளர்.
  • சிற்றிதழ் இயக்கத்தில் பங்காற்றிய இலக்கியப் படைப்பாளி.
  • கட்டுரையாளர்.
  • நவீன தமிழ் இலக்கிய விமர்சகர்.
  • இலக்கியக் கோட்பாட்டாளர்.
  • தமிழில் புதுக்கவிதை மற்றும் படைப்பிலக்கியங்களில் பங்காற்றியவர்.
  • நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளவர்.

இலக்கு என்கிற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர். எண்பதுகளில் கலைஇலக்கியம், எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும், புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற பல கருத்தரங்குகளை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம்.

ஆய்வு நூல்கள்[தொகு]

  • புதுக்கவிதை நான்கு கட்டுரைகள் - முதல் நூல். தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்தது.
  • ஸ்ட்ரக்சுரலிசம் - 80களில் வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான அமைப்பியல்வாதம், பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்துவம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது. அமைப்பியல்வாதம் என்கிற பிரெஞ்சுப் புதிய சிந்தனை முறையை தமிழ்ச்சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் அமைப்பியலும் அதன் பிறகும் என மறுவெளியீடாக வந்திருக்கிறது.
  • படைப்பும் படைப்பாளியும் - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
  • தமிழும் குறியியலும் - உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
  • தமிழில் மொழிதல் கோட்பாடு - ருஷ்ய மொழியியல் அறிஞர் பக்தின் முன்வைத்த மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.
  • மேற்கண்ட கட்டுரைகள், இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் கவிதை என்ற இரு நூல்களாக தொகுத்து வெளியாகியுள்ளன.
  • தமிழுணர்வின் வரைபடம் என்ற நூல் வெளியாகியிருக்கிறது. உயிரோசை இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
  • திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு என்ற புது நூலும் அடையாளம் பதிப்பக வெளியீடாக வெளியாகியிருக்கிறது. இந்நூல், தீராநதி இதழில் வெளிவரும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் என்ற தொடரில் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுதி ஆகும்.

படைப்பிலக்கியங்கள்[தொகு]

  • தமிழவன் கதைகள் சிறுகதைத் தொகுப்பு
  • ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - [ஸ்பானிஷ்] இலக்கிய உத்தியான மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதிய புதினம்.
  • சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள் - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதிய புதினம்.
  • ஜி.கே. எழுதிய மர்மநாவல் - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் தமிழீழப் போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம்.
  • வார்ஸாவில் ஒரு கடவுள் - போலந்து தலைநகர் வார்ஸாவைக் களமாகக்கொண்டு புலம்பெயர்ந்த இந்தியரின்/தமிழரின் கதைசொல்லுதலாக எழுதிய புதினம்.
  • இரட்டைச் சொற்கள் சிறுகதைத் தொகுப்பு
  • நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்பு

இதழியல் பங்களிப்புகள்[தொகு]

  • படிகள் - எண்பதுகளில் வெளிவந்த சிற்றிதழ். ஆசிரியக்குழு.
  • இங்கே இன்று - நடுவகை இதழ். ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர்.
  • மேலும் - பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த ஆய்விதழ், ஆலோசகர் பொறுப்பு.
  • வித்யாசம் - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜுனன், எஸ். சண்முகம், தி. கண்ணன் மற்றும் நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்திய இதழ். ஆசிரியக்குழுவில் பொறுப்பு.

தற்சமயம் முழுநேர எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழவன்&oldid=3792764" இலிருந்து மீள்விக்கப்பட்டது