சட்ட தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவம்பர் 26 ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம்[1][2] இறுதியாக வடிவமைக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட நாள் ஆகும். இந்த நாளானது சட்ட தினம் அல்லது இந்திய அரசியல் சாசன தினம் அல்லது அரசியல் சாசன தினம் (இந்தியா) அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் அல்லது தேசிய சட்ட தினம் அல்லது அரசியல் அமைப்பு சட்ட தினம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம்தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.

வரலாறு[தொகு]

இந்திய[தொடர்பிழந்த இணைப்பு] நாடாளுமன்ற கட்டிடம், புது தில்லி.

1949 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இறுதியாக வடிவமைக்கப்பட்டு சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றது 1947 ம் ஆண்டு ஆகஸ்டு 15 ம் நாள் ஆகும். சுதந்திர இந்தியாவுக்கு என தனியாக அரசியலமைப்புச் சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி இந்திய அரசியல் நிர்ணய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு சட்ட சாசனக் குழு அமைக்கப்பட்டது.

அரசியல் நிர்ணய சபை[3][தொகு]

சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பிறகு 1936 ம் ஆண்டிலும், மற்றும் 1939 ம் ஆண்டிலும் இருமுறை இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைத்தது. அதன்பின்பு 1946 ம் ஆண்டு மே மாதத்தில் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 ம் ஆண்டு சூலை மாதத்தில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது.

தலைவர் மற்றும் உறுப்பினர்கள்[4][தொகு]

1946 ம் ஆண்டு டிசம்பர் 11 ம் தேதியில் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அரசியலமைப்பு சாசனக் குழு என்பது இங்கிலாந்து ஆய குழுவினருக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வின் விளைவாக உருவாக்கப்பட்டது. இம்மன்றத்தின் உறுப்பினர்கள் மறைமுகமாக சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம், வங்காள மாகாணம், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு பஞ்சாப், பிகார், அசாம் மற்றும் ஒடிசா மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு பொதுத் தொகுதிகளில் 208 இடங்களைப் கைப்பற்றி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் இசுலாமியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 73 இடங்களில் வெற்றி பெற்றது. சிறுபான்மைக் கட்சிகளான பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு, இந்தியப் பொதுவுடமைக் கட்சி மற்றும் பிற கட்சிகளுக்கு 15 இடங்களும், சுதேச சமஸ்தானங்களுக்கு 93 இடங்களும் கிடைத்தன.

கூட்டத் தொடர்கள்[5][தொகு]

இந்திய[தொடர்பிழந்த இணைப்பு] அரசியல் சாசன சபை கூட்டம்

அரசியல் நிர்ணய சபையானது, டில்லியில்1946 ம் ஆண்டு திசம்பர் 9 ந் தேதியன்று முதல்முறையாகக் கூடியது. ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்ததால் அந்நாளைய மன்றத்தில் இன்றைய பாக்கிஸ்தான், பங்களாதேசத்தின் மாநிலங்கள் மற்றும் சுதேச சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தனர். சூன் 1947 முதல் சிந்து, கிழக்கு வங்காளம், பலுசிஸ்தான், மேற்கு பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பிரதிநிதிகள் கராச்சியில் பாக்கித்தானின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை அமைத்தனர். இந்திய அரசியலமைப்பு என்பது மாகாண சபைகளின் அரசியலமைப்பு சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது 389 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் (இந்தியா - பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது). அரசியல் நிர்ணய மன்றத்தில் பதினைந்து மகளிர் உட்பட இருநூற்று ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். பின்னர் சுதேச சமஸ்தானங்களின் 93 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு 82% பெரும்பான்மை பெற்றிருந்தது. அரசியலமைப்பை உருவாக்க, 165 நாட்கள் காலகட்டத்தில் பதினொரு அமர்வுகளைக் கொண்ட கூட்டத் தொடர்கள் முடிய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனது.

முக்கிய நாட்கள்[தொகு]

9 டிசம்பர் 1946: அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. தனி நாடு கோரி இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. சச்சிதானந்த சின்கா கூட்டத்திற்கு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

11 டிசம்பர் 1946: இராசேந்திர பிரசாத் அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராகவும், ஹரேந்திர கூமர் முகர்ஜி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆலோசகராக பி. என். ராவ் நியமிக்கப்பட்டார்.

13 டிசம்பர் 1946: மன்றத்தில் ஜவகர்லால் நேரு அரசியல் அமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் தீர்மானம் கொண்டு வந்தார்.

22 ஜனவரி 1947: நேருவின் குறிக்கோள் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

22 சூலை 1947: இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

15 ஆகஸ்டு 1947: இந்தியாவின் விடுதலை நாள்

29 ஆகஸ்டு 1947: அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவு குழுவிற்கு அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

16 சூலை 1948: அரேந்திர கூமர் முகர்ஜி மற்றும் வி. டி. கிருஷ்ணமாச்சாரி அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

26 நவம்பர் 1949: அம்பேத்கர் முன்மொழிந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அரசியலமைப்பு நிர்ண்ய மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

24 ஜனவரி 1950: "ஜன கண மன" எனத்துவங்கும் பாடலை இந்திய தேசிய கீதமாகவும்; "வந்தே மாதரம்" எனத்துவங்கும் பாடலை நாட்டுப் பண்ணாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரசியலமைப்பு சட்ட சாசனக் குழு[6][தொகு]

டாக்டர்[தொடர்பிழந்த இணைப்பு]. பீம் ராவ் அம்பேத்கர்

அரசியலமைப்பு சட்ட சாசனக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் நியமிக்கப்படார். அம்பேத்கர் ஒருசிறந்த அரசியலமைப்பு நிபுணர், அவர் சுமார் 60 நாடுகளின் அரசியலமைப்புகளை ஆய்வு செய்தார். அம்பேத்கர் "இந்திய அரசியலமைப்பின் தந்தை" என்று அங்கீகரிக்கப்படுகிறார். அரசியலமைப்பு சட்டசபையில், வரைவுக் குழுவின் உறுப்பினர் டி. டி. கிருஷ்ணமாச்சாரி கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

   "திரு. ஜனாதிபதி, ஐயா, டாக்டர் அம்பேத்கரை மிகவும் கவனமாகக் அறிந்தவர்களில் நானும் ஒருவன். இந்த அரசியலமைப்பை உருவாக்கும் பணியைத் தாங்க அவர் மேற்கொண்டுள்ள வேலை மற்றும் உற்சாகத்தின் அளவு எனக்குத் தெரியும். அதே நேரத்தில், நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கத்திற்கு தேவையான கவனத்தை வரைவுக் குழுவிற்கு வழங்கவில்லை என்பதை இந்த நேரத்தில் நான் உணர்கிறேன். உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களைப் பற்றி சபை அறிந்திருக்கலாம், அதில் ஒருவர் சபையிலிருந்து ராஜினாமா செய்தார், அவருக்குப் பதிலாக ஒருவர் நியமிக்கப்பட்டார். ஒருவர் இறந்தார், அவர் மாற்றப்படவில்லை. ஒருவர் அமெரிக்காவில் இருந்தார், அவருடைய இடம் நிரப்பப்படவில்லை, மற்றொரு நபர் அரசு விவகாரங்களில் ஈடுபட்டுள்ளார், அந்த அளவிற்கு ஒரு வெற்றிடம் இருந்தது. ஒன்று அல்லது இரண்டு பேர் டெல்லியில் இருந்து வெகு தொலைவில் இருந்தனர், ஒருவேளை உடல்நலக் காரணங்கள் அவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. ஆகவே, இறுதியில் இந்த அரசியலமைப்பை உருவாக்கும் சுமை முழுவதும் டாக்டர் அம்பேத்கர் மீது விழுந்தது, நாங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை."

செலவிடப்ப்பட்டவை[தொகு]

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்ற இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆயிற்று. இதற்கு செலவான மொத்த தொகை ரூபாய் ₹6.4 மில்லியன் ஆகும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேறல்[7][தொகு]

1946 ம் ஆண்டு டிசம்பர் 9 ந் தேதி முதல் 23 ந் தேதி வரையும், 1949 ம் ஆண்டு நவம்பர் 14 ந்தேதி முதல் நவம்பர் 28 ந் தேதி வரை நடைபெற்ற 11 கூட்டத்தொடர்களில் அரசியல் அமைப்புக் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது. இறுதியாக 26 நவம்பர் 1949ல் அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவைத் தொகுத்தார். இதனை 1950 ம் ஆண்டு ஜனவரி 24 ந் தேதியன்று நடைபெற்ற பனிரெண்டாவது கூட்டத் தொடரில், நான்கில் மூன்று பகுதிக்கு மேற்பட்ட அரசியல் அமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்களால் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ந் தேதி முதல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் சனவரி 26 ம் நாளை குடியரசு நாளாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்திய நாடாளுமன்றம் உருவாதல்[8][தொகு]

சுதந்திரத்திற்கு[தொடர்பிழந்த இணைப்பு] முந்தைய இந்திய நாடாளுமன்ற கட்டிடம் (1926)

2 செப்டம்பர் 1946 அன்று புதிய நிர்ணய மன்றத்திலிருந்து இந்தியாவின் இடைக்கால அரசு நிறுவப்பட்டது. 15 ஆகத்து 1947 அன்று இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இருந்த அரசியல் நிர்ணய மன்றமே, பின்னர் இந்திய நாடாளுமன்றமானது.

கொண்டாட்டம்[தொகு]

இறுதியாக 26 நவம்பர் 1949ல் அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவைத் தொகுத்தார். இதனை 24 சனவரி 1950ல் நடைபெற்ற பனிரெண்டாவது கூட்டத் தொடரில், நான்கில் மூன்று பகுதிக்கு மேற்பட்ட அரசியல் அமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்களால் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம்தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.

உறுதிமொழி[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம்தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் சட்ட தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு உறுதி எடுக்கப்படுகிறது. இது குறித்து அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டும் (2021) அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constitution of India". www.constitutionofindia.net. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  2. "Constitution of India" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Constituent Assembly of India". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Constituent Assembly". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Rajya Sabha-Constituent Assembly". rajyasabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  6. "Constitution of India". www.constitutionofindia.net. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  7. "Constituent Assembly of India Debates". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  8. "Parliament of India". parliamentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  9. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்ட_தினம்&oldid=3886568" இலிருந்து மீள்விக்கப்பட்டது