கனவுருப் புனைவு
கனவுருப் புனைவு அல்லது மிகுபுனைவு (Fantasy fiction) இலக்கியத்தில் ஒரு வகைப் பாணி. மாயவாத வித்தைகள், அமானுட கருப்பொருட்கள், பயங்கர மிருகங்கள், கற்பனை உலகுகள், சமூகங்கள் ஆகிய கருட்பொருட்களைப் பற்றி எழுதப்படும் புனைவுப் படைப்புகள் கனவுருப் படைப்புகளாக கருதப்படுகின்றன. 1950கள் வரை கனவுருப்புனைவு எழுத்து இலக்கியத்தில் மட்டும் இருந்தது. அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசை, வரைகதைகள், நிகழ்பட ஆட்டங்கள், ஓவியங்கள் மற்றும் படப் புதினங்கள் (graphic novels) என பல வடிவங்களில் கனவுருப்புனைவுகள் படைக்கப்படுகின்றன.
ஹோமரின் கிரேக்க தொன்ம காவியம் ஒடிசி கனவுருப்புனைவிற்கான கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் 19ம் நூற்றாண்டில் தான் கனவுருப்புனைவு தனிப்பாணியாக உருவானது. 20ம் நூற்றாண்டின் மத்தியில் ஜே. ஆர். ஆர். டோல்கீனின் த லார்ட் ஆப் த ரிங்ஸ் புத்தகங்கள் வெளியான பிறகு கனவுருப்புனைவு பாணி இலக்கிய உலகின் மைய நீரொட்டத்துக்கு வந்தது. 1990களில் ராபர்ட் ஜோர்டான், ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின், ஜே. கே. ரௌலிங், நீல் கெய்மென் பொன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் கனவுருப்புனைவு பாணிக்கு வெகுஜன ஆதரவைப் பெற்றுத்தந்தன. தற்போது பல கனவுருப்புனைவுகளை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கும் வழக்கமும் அதிகரித்துள்ளது.