ஒரமணகுண்டா பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரமணகுண்டா பாறை ஓவியங்கள் என்பவை தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகில் உள்ள ஒரமணகுண்டா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள் ஆகும். கிருட்டிணகிரியில் இருந்து பருகூர்-கனகமூர்ப் பேருந்து சாலையில், கனகமூர் கிராமச் சாலை வழியாகச் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேரலக்கோட்டை என்ற இடத்திற்கு அடுத்ததாக ஒப்பத்தவாடி உள்ளது. அதை அடுத்து ஒரமணகுண்டா உள்ளது. ஓரமணகுண்டாவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மேற்குப் பகுதியில் குன்றுப் பகுதிகள் உள்ளன. இந்த இடத்தில் தொட்டியம்மா குட்டை, தோட்டியன் குட்டை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. ஒரமணகுண்டா மலைப் பகுதியை வேங்கட மலை என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.[1]

இங்குள்ள இருளன் கெவியில் வெள்ளை வண்ணத்தால் ஆன கோட்டோவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் வெளிப்பாட்டில் தமிழ்நாட்டின் பிற பாறை ஓவியங்களில் இருந்து மாறுபட்டு உள்ளன. இந்த ஓவியங்களில் மனித வடிவங்கள் பல வெளிப்பாடுகளில், பல கோணங்களில் காட்டப்பட்டுள்ளன. விலங்குடன் உள்ள மனித வடிவங்களைத் தவிர்த்து, பிற மனித வடிவங்கள் நீள் வட்டத்துக்குள் உள்ளவாறு காட்டபட்டுள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். பக். 157-161. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]