எர்னான் கோட்டெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்னான் கோட்டெசு
எர்னான் கோர்டெசு
பிறப்பு1485
மெடெலின், பாடாயோசு, எக்சுட்ரீமடுரா, எசுப்பானியா
இறப்பு(1547-12-02)திசம்பர் 2, 1547
காசுடொலேயா டி லா குயெசுட்டா, செவில், அந்தாலூசியா, எசுப்பானியா

எர்னான் கோர்டெசு எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எர்னான் கோர்டெசு டெ மொன்ரோய் இ பிசாரோ (Hernán Cortés de Monroy y Pizarro) என்பவர் 1485–டிசம்பர் 2 முதல் 1547 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த ஓர் எசுப்பானிய படை வீராராவார். தேடல் வெற்றி வீரரான இவரது படையெடுப்பே அசுடெக் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பரவியிருந்த கசுதிலிய பேரரசின் கீழ் மெக்சிகோவின் பெரும்பகுதியைக் கொண்டு வருவதற்கும் இவர் காரணமாக இருந்தார். அமெரிக்காவின் எசுப்பானிய குடியேற்றத்தின் முதல் கட்டத்தை ஆரம்பித்து வைத்த எசுப்பானிய குடியேற்றக்காரர்களின் தலைமுறையில் கார்டெசும் முக்கியப் பங்கு வகித்தார்.

கடற்கரையிலிருந்து அசுடெக் தலைநகரான டெனோகிட்டிட்லானுக்கு கார்டெசு ஊடுறுவிய பாதையின் வரைபடம் காட்டப்பட்டுள்ளது.

எசுப்பானியாவிலுள்ள மெடெல்லின் நகரில் ஓர் எளிய குடும்பத்தில் கார்ட்டெசு பிறந்தார், புதிய உலகில் வாழ்வதற்கான ஒரு வாழ்வாதாரத்தைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கோர்டெசு ஈடுபட்டார். கரிபியன் கடலிலுள்ள எசுப்பானியாலோவிற்கும் பின்னர் அங்கிருந்து கியூபாவிற்கும் சென்றார், இத்தீவில் உருவாக்கப்பட்ட இரண்டாவது எசுப்பானிய நகரத்தில் சிறிதுகாலம் மேயராக இருந்து எசுப்பானிய அரசின் உதவித் தொகையைப் பெற்றார். 1519 ஆம் ஆண்டில் பிரதான நிலப்பகுதிக்காக உருவாக்கப்பட்ட மூன்றாவது பயணக்குழுவின் தலைவராக கார்டெசு தேர்ந்தெடுக்கப்பட்டு, பகுதியாக நிதியுதவியும் கிடைக்கப் பெற்றார். கியூபாவின் ஆளுநர் டீகோ வெலாசுகியூவசு டி கியுல்லாருடன் இருந்த பகைமை காரணமாக, கார்டெசு அவருடைய ஆணைக்கு செவிசாய்க்காத காரணத்தால் கடைசிநேரத்தில் பயணத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.

கண்டத்திற்குள் வந்த கார்டெசு, மற்றவர்களுக்கு எதிராகப் போராடுகின்ற உள்நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் வெற்றிகரமான ஒரு போர்த்திட்டத்தைச் செயற்படுத்தினார். இத்திட்டத்தில் ஓர் உள்ளூர் பெண்ணையும் பயன்படுத்திக் கொண்டார். டோனா மெரினா என்ற பெயர் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளரான இப்பெண் பிற்காலத்தில் கார்டெசுவின் முதல் மகனைப் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கார்டெசை கைது செய்ய கியூபாவின் ஆளுநர் தூதுவர்களை அனுப்பினார், தன் துருப்புக்களை வலுவூட்டி அவர்களை வெற்றி கொண்ட கார்டெசு, கலகம் என்று சொல்லி தண்டிப்பதற்குப் பதிலாக அவருடைய வெற்றியை ஒப்புக் கொள்ளும்படி ஆளுநருக்கு நேரடியாகக் கடிதங்களை எழுதினார். அசுடெக் பேரரசை வீழ்த்திய பிறகு கார்டெசுக்கு மார்குவசு டெல் வால்லெ டி ஓக்சாகா என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் வைசிராய் என்ற பெருமை வாய்ந்த பட்டம். தலைவரான அன்டோனியோ டி மெண்டோசாவிற்கு வழங்கப்பட்டது. 1541 ஆம் ஆண்டில் கார்டெசு எசுப்பானியாவிற்குத் திரும்பினார். அங்கு ஆறு ஆண்டுகளை அமைதியாகக் கழித்த பின்னர் அவர் இறந்து போனார்.

கார்டெசு மேற்கொண்ட சர்ச்சைக்குரிய செயல்கள் மற்றும் அவரைப் பற்றிய தகவல்களின் நம்பகத்தன்மை மிக்க ஆதாரங்களின் பற்றாக்குறை காரணமாக, அவரது ஆளுமை மற்றும் நோக்கங்களைப் பற்றி உறுதியாக எதையும் கூறுவது கடினமாக உள்ளது. தொடக்கக்கால தொடர்ச்சியான வெற்றிகளால் கார்டெசு குறித்த ஆழ்ந்த பரிசோதனை எவராலும் ஊக்கப்படுத்தவில்லை. நவீன காலனித்துவ எதிர்ப்பு உணர்வின் பின்னணியில் வெற்றியாளர்களின் நடத்தைகளை மறுபரிசீலனை செய்யும் போது கார்டெசை ஒரு தனிமனிதனாகப் புரிந்துகொள்ளும் திறன் சற்று விரிவடைகிறது. இந்த வரலாற்று போக்குகளின் விளைவாக கார்டெசு குறித்த விவரங்கள் பெரும் இலக்குகளை முன்வைத்தவையாகவோ, கண்டனத்திற்கு உட்பட்டதாகவோ இல்லாமல் எளிமையானவையாக உள்ளன.

பெயர்[தொகு]

தற்பொழுது எர்னான் என்று பொதுவாக அழைக்கப்படும் பெயரை கார்டெசு தானாகவே தன்னை எர்னாண்டோ அல்லது பெர்னாண்டோ என்ற வடிவத்தில் பயன்படுத்தினார்.

இளமைக்காலம்[தொகு]

கார்டெசு 1485 ஆம் ஆண்டில் நவீன எசுப்பானிய தன்னாட்சிச் சமூகங்களில் ஒன்றான மெட்லின் நகரில் பிறந்தார். அவரது தந்தை மார்ட்டின் கார்டெசு டி மான்ரோய், 1449 ஆம் ஆண்டில் ரோட்ரிகோ அல்லது ரூய் பெர்னாண்டசு டி மான்ரோய் மற்றும் அவரது மனைவி மரியா கார்டெசு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார், சிறப்புமிக்க மூதாதையர்களின் காலாட்படைப் பிரிவின் தலைவராக இவர் பணிபுரிந்தார். கேடலினா பிசாரோ அல்தமிரானோ. எர்னானின் தாயாராவார் [1].

கார்டெசின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியரான சாப்லைன் மற்றும் கார்டெசின் நண்பன் பிரான்சிசுகோ லோப்சே டி கோமாரா ஆகியோரின் கூற்றுப்படி, கோர்ட்டேசு ஒரு வெளிர்ந்த நிறமும் நோயுற்றவராகவும் இருந்தார். 14 வயதாக இருந்தபோது இலத்தீன் மொழியைப் படிப்பதற்காக மாமா சலமன்காவின் பொருப்பில் கார்டெசு அனுப்பப்பட்டார். சலாமன்கா பல்கலைக் கழகத்தில் நேரடியாகப் பதிவுசெய்து அடிப்படை கல்வியைப் பெற்றார் என்று நவீன வரலாற்றாசிரியர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்[2].

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளிக்கூடம் செல்வதற்கு இயலாமல் கார்டெசு மெடல்லினுக்குத் திரும்பி வீட்டிற்கு வந்தார், சட்டம் படிப்பதற்குரிய வாழ்க்கைக்கு ஆயத்தமாக கார்டெசு இருப்பதாக நம்பிய அவருடைய பெற்றோர் இதனால் பெரிதும் எரிச்சலடைந்தனர். எனினும், சலாமன்காவில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளும், ஆவண எழுத்துப் பதிவாளராக அவருக்கிருந்த நீண்டகாலப் பயிற்சியும் சட்டம் தொடர்பான பணிகளில் இவருக்குப் பெரிதும் உதவின. முதலில் வால்டோடோலிலும் பின்னர் எசுப்பானியோலாவிலும் கார்டெசு ஆவண எழுத்துப் பதிவாளர் அனுபவத்தைப் பெற்றிருந்தார். இவ்வனுபவம் பின்னாளில் இவருக்கு மெக்சிகோவின் அங்கீகரிக்கப்படாத வெற்றியை நியாயப்படுத்த உதவியது [3].

கார்டெசு தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இரக்கமற்றவராக, அகந்தையானவராக மற்றும் குறும்புத்தனம் மிக்கவராக இருந்தாரென கோமாரா கார்டெசைப் பற்றி விவரிக்கின்றார் [4]. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதற்காக மட்டுமே வீட்டிற்குத் திரும்பி வந்து அவரது சிறிய மாகாண நகரத்து வாழ்க்கையில் சலிப்படைந்த ஒரு 16 வயது சிறுவனைப் பற்றிய நியாயமான விளக்கமாக இது இருக்கலாம். இந்த நேரத்தில்தான் கிறிசுடோபர் கொலம்பசின் புதிய உலக்ம் கண்டுபிடிப்புகள் தொடர்பான உற்சாகமான செய்திகள் எசுப்பானியாவிற்கு வந்தவண்ணம் இருந்தன.

இசுப்பானியாலோ பயணம்[தொகு]

கார்டெசு 1504 ஆம் ஆண்டில் அலோன்சோ கினெட்டோரோ கட்டளையிட்டு ஓட்டிச் சென்ற கப்பலில் இசுப்பானியாலோவிற்குச் சென்று அங்கு ஒரு குடியேற்றக்காரராக மாறினார். அலோன்சா தனது மேலதிகாரிகளை ஏமாற்றுவதற்காகவும், தனிப்பட்ட நன்மைகளைப் பெறுவதற்காகவும் அவர்களுக்கு முன்பே புதிய உலகத்தை அடைய முயற்சிப்பதைக் கண்டார். அலோன்சோவின் முறையற்ற நடத்தைகள் கார்டெசுவின் அடுத்தடுத்த வாழ்க்கைக்கு ஒரு மாதிரியாகக் கூட அமைந்திருக்கலாம். எசுப்பானிய வெற்றி வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் போட்டி, பொறாமை, காட்டிக் கொடுத்தல், கலகம், சண்டை ஆகியவற்றால் ஆனது [5].

1504-இல் இசுப்பானியோலானாவின் தலைநகரமான சாண்டோ டொமினோவிற்கு வருகைதந்த 18 வயது கார்டெசு அங்கோர் குடிமகனாக பதிவு செய்தார், அது அவருக்கு ஒரு நிலம் வாங்கி வீடு கட்டும் உரிமையையும், பண்ணைக்கு நிலம் வாங்கும் உரிமையையும் கொடுத்தது. அங்கு ஆளுநராக இருந்த நிக்கோலசு டி ஒவாண்டோ கார்டெசுக்கு உதவித்தொகை அளித்து, அசுவா டி கம்போசுடெலா நகருக்கு ஆவண எழுத்து பதிவாளராக்கினார். அவரது அடுத்த ஐந்து ஆண்டுகள் காலனியில் அவரை நிலை நிறுத்திக் கொள்ள உதவின. 1506 இல், கார்டெசு இசுப்பானினியோலா மற்றும் கியூபாவின் வெற்றியில் பங்குபெற்றார், வெகுமதியாக அவருக்கு ஏராளமான நிலம். மற்றும் இந்திய அடிமைகள் கிடைத்தனர். கார்டெசு அடுத்தடுத்து மேற்கொண்ட பயணக்குழு முயற்சிகளுக்கு இவை பெரிதும் உதவின.

கியூபாவில் கார்டெசு[தொகு]

இசுப்பானியோலாவின் ஆளுநரிடம் கிடைத்த உதவியாளரான டீகோ வேலாசுகெசு டி குல்லருடன் சேர்ந்து 1511 ஆம் ஆண்டில், கார்டெசு கியூபாவை கைப்பற்றுவதற்கான தனது பயணத்தைத் தொடங்கினார். வேலாசுகெசு புதிய எசுப்பானியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 26 ஆவது வயதில் கார்டெசு கருவூகப் பணியாளருக்கு எழுத்தராகப் பணியாற்றினார், பயணக்குழுவினர் ஈட்டும் இலாபத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை கருவூலத்திற்கு செலுத்துவதை உறுதி செய்யும் பொறுப்பு இவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

கியூபாவின் ஆளுநரான டீகோ வேலாசுகெசுக்கு கார்டெசின் நடவடிக்கைகள் மிகவும் பிடித்தன. கார்டெசால் அவர் மிகவும் உயர்ந்த அரசியல் நிலைப்பாட்டைக் காலனியில் பெற்றார்.

கார்டெசு ஆளுநரின் செயலாளரானார். இரண்டு முறை சண்டியாகோ நகராட்சி மேயராக கார்டெசு நியமணம் செய்யப்பட்டார். உதவித் தொகை பெற்றுக் கொண்டு சுரங்கங்கள் மற்றும் கால்நடைகளுக்கு இந்திய தொழிலாளர்களை வழங்குகின்ற ஒரு மனிதராகக் கார்டெசு மாறினார். அதிகாரம் கொடுத்த இந்தப் புதியநிலை தலைமைப் பண்பிற்கு புதிய ஆதாரமாக அமைந்து அவரை உருவாக்கியது, அதே நேரத்தில் காலனிக்கு எதிரான எதிர்ப்பாளர்களை உருவாக்கவும் இது உதவியது. 1514 இல் கார்டெசு ஒரு குழுவை வழிநடத்தினார். குடியேறியவர்களுக்கு அதிக இந்தியர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று இக்குழு கோரியது.

காலப்போக்கில் கார்டெசு மற்றும் கவர்னர் வேலாசுகுவெசுக்கு இடையிலான உறவுகள் நலிவடைந்தன [6]. ஆளுநரின் உறவினரான யுவான் டி கிரியால்வா ஒரு புதிய காலணியை நிறுவ முற்பட்டபோது அப்புதிய பயணக்குழுவினருக்கு தளபதியாக அக்டோபர் 1518 இல் கார்டெசு நியமிக்கப்பட்டார். ஆளுநரின் மனம் மாறுவதற்கு முன் பொறுப்பேற்றுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டார் [6].

ஒரு நிர்வாகியாக கோர்டெசின் அனுபவங்களும் பல பயணக்குழுக்களில் அடைந்த தோல்விகளின் மூலம் பெற்ற அறிவும் ஒரு மாதத்திற்குள் ஆறு கப்பல்களையும் 300 ஆண்களையும் அவரால் சேகரிக்க முடிந்தது. ஆளுநருக்கு பொறாமை வெடித்தது. இதனால் பயணக்குழுவின் தலைமைப் பொறுப்பை பிறர் கைகளில் ஒப்படைக்க முடிவு செய்தார். எனினும் கார்டெசு விரைவில் மற்ற கியூப துறைமுகங்களில் இருந்து மேலும் அதிகமாக ஆண்கள் மற்றும் கப்பல்களை திரட்டிக் கொண்டார்.

ஆளுநரின் உறவினரான கேட்டலினா சுவாரெக்சுடன் கார்டெசு காதல் கொண்டர். ஆளுநருடன் ஏற்பட்ட அவநம்பிக்கைகள் இதற்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கேட்டலினாவின் சகோதரி ஒருவரால் கார்டெசு தற்காலிகமாக திசைதிருப்பப்பட்டார் என்றாலும் இறுதியாக அவர் கேடலினாவை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் கேட்டலினாவின் குடும்பத்தினர் மற்றும் ஆளுநரிடம் நல்ல ஒரு திருப்பம் ஏற்படும் என கார்டெசு நம்பினார் [7].

கியூபாவின் தலைநகருக்கு மேயராகவும், வளர்ந்து வரும் காலனிகளில் ஒரு புகழ் பெற்ற மனிதராகவும் கார்டெசு தனது கணிசமான நிலைக்கு அப்பால் வளர்ச்சியடையத் தொடங்கினார். 1518 இல் ஆளுநரால் மெக்சிகோவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரான்சிசு எர்னாண்டசு டி கோர்டோபா மற்றும் யுவான் டி கிரியால்வா ஆகியோரின் உத்தரவின் பேரில் கார்டெசு முதல் இரண்டு பயணங்களை தவறவிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Machado, J. T. Montalvão, Dos Pizarros de Espanha aos de Portugal e Brasil, Author's Edition, 1st Edition, Lisbon, 1970.
  2. David A. Boruchoff, "Hernán Cortés," International Encyclopedia of the Social Sciences, 2nd. ed. (2008), vol. 2, pp. 146-149 Hernán Cortés
  3. Boruchoff, "Hernán Cortés," Hernán Cortés
  4. Hernan Cortés
  5. "Famous Hispanics: Hernán Cortés". Coloquio.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-23.
  6. 6.0 6.1 Hassig, Ross. Mexico and the Spanish Conquest. Longman Group UK Limited, 1994, pp. 45–46
  7. Sanderson Beck, "Cortès in Mexico"

புற இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்னான்_கோட்டெஸ்&oldid=3903688" இலிருந்து மீள்விக்கப்பட்டது