ஆளுடையப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆளுடையப் பிள்ளை (பிறப்பு: 1934 ஜூன் 23) கல்வியாளராகவும், [1] மாவட்ட ஆட்சியாளராகவும், இலங்கைத் தூதரக மூத்த அதிகாரியாகவும் பல்வேறு பதவிகளை வகித்துப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

பிறப்பு[தொகு]

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் மகள் வழி பெயரன் ஆவார். நீலகிரி மாவட்டத்தில் அருவங்காடு என்னும் ஊரில் பிறந்தார். 1935 முதல் 1941 வரை மறைமலை அடிகளின் பல்லாவரம் வீட்டில் வளர்ந்த காரணத்தால் தமிழ் உணர்வு கொண்டார். பள்ளிப் படிப்பு 1948இல் நிறைவுற்றது. பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் வணிகவியல்(ஆனர்சு) பயின்றார். சட்டக்கல்லூரியில் மாணவராகப் தம்மைப் பதிவு செய்து கொண்டார். 1959-60 இல் முதுவணிகவியல் படிப்பில் சேர்ந்தார்.

பணிகள், பதவிகள்[தொகு]

  • கோவை அரசுக் கல்லூரியில் பேராசிரியர் (1955–1964).
  • பொன்னேரி அரசுக் கல்லூரி முதல்வர் (1965).
  • திருச்சி பெரியார் ஈ. வெ. இரா. கல்லூரி முதல்வர் (1973).
  • ஐ. ஏ. எஸ். வாய்மொழித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1979).
  • மதுரை மாவட்ட ஆட்சியராக 1981 இல் பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்ட மக்கள், ஆளுடைய பிள்ளை நிருவாகத்தில் பெரிதும் நன்மை அடைந்தார்கள்.
  • அறநிலையத் துறை ஆணையராகவும், சமூக நலத்துறைச் செயலராகவும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராகவும் பணி செய்தார் (1988-90). அறநிலையத் துறையில் இருந்தபோது, திருக்கோவில்களின் நிர்வாகத்தில் பல நல்ல மாற்றங்களை ஆளுடையபிள்ளை செய்தார். ஓதுவார்களுக்கு ஒய்வூதியம் இவருடைய பதவிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.
  • 1992 சூன் 30 இல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பின் வகித்த பதவிகளும், சாதனைகளும்[தொகு]

  • 1992 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் வரை தான் ஓய்வில் இருந்தார். அதன் பின்னர், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலாளராக அமர்த்தப்பட்டார்.
  • 1995மே மாதம் 19ஆம் தேதியில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவியேற்றார். அவர் பதவிக்காலத்தில் 50 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கல்வி முடித்து வெளியே வருகிற மாணவர்களுக்கு வேலைகிடைக்க பல நிறுவனங்களுடன் பல்கலைக் கழகம் ஒப்பந்தம் செய்துகொண்டது.
  • ஆங்கில இலக்கிய வகுப்பு பாடத்தை மாற்றி அமைத்தார்
  • தேர்வுமுறைகள் ஆளுடையபிள்ளையின் காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டன.
  • தொலைதூரக் கல்வித்திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. துபாய் குவைத்து அபுதாபி ஆகிய பிற நாடுகளுக்கும் பரவியது.
  • பல்கலைக்கழகப் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள் புதிப்பிக்கபட்டு சீரமைக்கபட்டன.
  • சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஆய்வேடுகள் மதிப்பீடு செய்யப் பட்டு முனைவர் பட்டங்கள் வழங்கப் பட்டன. இதனால் ஆய்வு மாணவர்கள் பலன் அடைந்தனர்.
  • 1995 இல் ஆளுடைய பிள்ளை துணைவேந்தராகப் பதவியேற்றபோது பல்கலைக்கழகத்தின் நிதிநிலை ஐந்தே முக்கால் கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருந்தது. 18-05-1998 இல் அவர் ஓய்வு பெற்றபோது, 5 கோடி ரூபாய் உபரியாக நிதி நிலைமை உயர்ந்தது.
  • அனைத்திந்திய அளவில் செயல்படும் தேசிய மதிப்பீட்டு மற்றும் தர நிர்ணய மன்றம் இவருடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொண்டது. பல மாநிலங்களில் உயர்கல்வியின் செயல்பாடுகளை மதிப்பிடும் பணியை மேற்கொண்டார்.
  • தமிழ் நாட்டில் உள்ள தொழில் முனைவோர் பயிற்சி மையம், சென்னையில் உள்ள சின்மயா கல்வி நிலையங்கள், மூத்தகுடிமக்கள் சங்கம் போன்ற பல அமைப்புகளில் தலைமையேற்று வழிநடத்திச் செல்கிறார்.

கருத்துகளும் எண்ணங்களும்[தொகு]

  • தமிழ்நாட்டுக் கோவில்களில், தமிழில் வழிபாடு செய்ய வழிவகைகள் செய்ய வேண்டும்.
  • உயர்கல்வி, தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும். உயர்கல்வியை வணிகப் பொருளாக, சமூகத்தைச் சுரண்டும் துறையாக ஆக்குவது கண்டனத்துக்குரியது.
  • தற்போது நடைமுறையில் உள்ள தேர்வு முறை மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்கள் தம் மாணவர்களின் தேர்ச்சியை விருப்பு, வெறுப்பு இன்றி மதிப்பீடு செய்யும் முறையை உருவாக்க வேண்டும்.
  • தமிழிசை இயக்கம் மீண்டும் மலர வேண்டும்.
  • பல்வேறு பயிற்சி வகுப்புகள், மொழிப் புலமை, கடும் உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றின் உதவியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் மாணவர்கள் வெற்றிபெறமுடியும்.
  • தொன்மையான திருக்கோவில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், சுதை வேலைப்பாடுகள், சிலைகள் ஆகியனவற்றைச் சிதைந்து போகாமல் பாதுகாக்க வேண்டும்.

கருவி நூல்[தொகு]

ஆளுடையபிள்ளை ஐ. ஏ. எஸ்; (ஆசிரியர்: ராணிமைந்தன்) கலைஞன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, தி.நகர் சென்னை-17 [2]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. தேர்வு முறைகேடு: பல்கலை கழக அதிகாரிகள்மீது நடவடிக்கை இந்நேரம்.காம்[தொடர்பிழந்த இணைப்பு] பார்த்த நாள் 11 பிப்ரவரி, 2014
  2. 24091 ஆளுடையபிள்ளை ஐ ஏ எஸ் காந்தக்களம்[தொடர்பிழந்த இணைப்பு] பிப்ரவரி 11, 2014

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுடையப்_பிள்ளை&oldid=3233293" இலிருந்து மீள்விக்கப்பட்டது