அருள்மொழி நங்கை (வேங்கையின் மைந்தன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மொழி நங்கை, அகிலனின் வேங்கையின் மைந்தன் புதினத்தில் வரும் இரு கதாநாயகிகளில் ஒருத்தி. இக்கதையில் இவள், இராஜேந்திர சோழரின் மூத்தமகளாக வருபவள். கதையின் நாயகனான இளங்கோவிற்கு உறவுமுறைப்படி முறைப்பெண். அவளது மனம் இயல்பாகவே இளங்கோவின் பால் ஈர்க்கப்பட்டாலும், பெரியவர்களின் எண்ணம் எதுவென்று தெரியுமுன் அதைப் வெளிப்படையாகக் காட்டாமல் கட்டிக் காக்கும் பண்பு கொண்டவள். தனது சோழ நாட்டின் மீதும் தந்தையின் மீதும் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவள்.

ஆழமான கடல் போன்று, இவள் இளங்கோவிடம் கொண்ட காதல் ஆழமான, அமைதியான, விவேகமானதாக ஆசிரியரால் சித்தரிக்கப்படுகிறது. தன் நாயகனுக்காக எதையும் செய்யத் துணியும் இவள் இளங்கோ மற்றொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்ததும் தனது துயரை அப்படியே மனதுக்குள் போட்டுப் பூட்டிவிட்டு, அவன் விரும்பிய பெண்ணைத் தன் சொந்தத் தங்கையாக சுவீகரித்துக் கொள்கிறாள்.

தனது தலைவனின் நல்வாழ்வும் வெற்றியுமே தனது குறிக்கோளாகக் கொண்டு வாழும் அடக்கமும் அறிவும் விவேகமும் நாட்டுப்பற்றும் கொண்ட கதாபாத்திரமாக அருள்மொழி நங்கை புதினத்தின் மூன்று பாகங்களிலும் வலம் வருகிறாள்.