அப்துல் ஜப்பார் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் ஜப்பார் கான்
பிறப்பு(1957-06-01)1 சூன் 1957
இறப்பு14 நவம்பர் 2019(2019-11-14) (அகவை 62)
மத்தியப்பிரமேசம், போபால்
அறியப்படுவதுபோபால் பேரழிவால் பாதிக்கப்படவர்களுக்கான செயல்பாடுகள் victims
விருதுகள்பத்மசிறீ

அப்துல் ஜப்பார் கான் (Abdul Jabbar Khan, 1 சூன் 1957 - 14 நவம்பர் 2019) [1] என்பவர் போபால் நச்சு வாயு பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடிய ஒரு செயற்பாட்டாளர் ஆவார். நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்ட இவர், தனது வாழ்நாளின் பல தசாப்தங்கள், இறக்கும் வரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான சிகிச்சை, மறுவாழ்வு போன்வற்றிற்காக போராடுவதன் மூலம் அவர்களின் நீதிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார்.

தி கார்டியனின் ஒரு தலையங்கம் இவரை "உலக வரலாற்றில் மிக மோசமான தொழில்துறை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பாடுபட பரப்புரையாளர்" என்று அழைத்தது.[2] சித்தார்த்த டெப் இவரது செயல்பாடு மெதுவாகவும் பிடிவாதமாகவும் இருப்பதாக விவரித்தார். ஜப்பாரின் கவர்ச்சி, அணுகக்கூடிய தன்மை, எளிய மக்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றின் காரணமாக, இவர் மக்கள் ஆதரவைப் பெற்றார்.[3]

இந்திய ஒன்றிய அரசாங்கம் இவருக்கு 2020 இல் மரணத்திற்குப் பின் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கியது[4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜப்பார் ஒரு ஏழை முஸ்லீம் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருக்கு ஒரு வயதாக இருந்தபோது போபாலுக்கு குடிபெயர்ந்தார்.[5] ஆழ்துளை கிணறு தோண்டும் ஒப்பந்ததாரராகவும், கட்டிட தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.[6][7][8][9]

செயல்பாட்டடாளராக[தொகு]

1984 திசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில், போபாலில் உள்ள இராசேந்திர நகரில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து வெளிவந்த கொடிய மீதைல் ஐசோசயனேட் வாயுவின் வாசனையால் ஜப்பார் விழித்துக் கொண்டார். இவர் தன் தாயை 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு தனது இருசக்கர ஊர்தியில் அழைத்துக்கொண்டு விரைந்தார். ஊருக்குத் திரும்பியபோது, சாலையோரம் வரிசையாகக் கிடந்த சடலங்களைப் பார்த்தார். இவர் தானாக முன்வந்து பாதிக்கப்பட்டவர்களிடையே பணியாற்றத் தொடங்கினார். அரசு மருத்துவமனையில் மக்கள் சிகிச்சை பெறவும், பிணக் கூறாய்வுக்கு உடல்களை எடுத்துச் செல்லவும் உதவினார்.[7] இவர் தனது வணிகத்தை நிறுத்திவிட்டு, தன் முழு கவனத்தையும் செயல்பாட்டின் பக்கம் திருப்பினார்.[8] வாயு கசிவின் பாதிப்பால், இவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. மேலும் இவரது பார்வையும் குறைந்தது. இவரது குடும்ப உறுப்பினர்களில் பலர் வாயுக் கசிவினாலும், அதன் பின் விளைவுகளால் இறந்தனர்.[1][7]

1987 இல், ஜப்பார் போபால் வாயுவால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பு (பிஜிபிஎம்யுஎஸ்) அல்லது போபால் காஸ் பீடித் மஹிலா உத்யோக் சங்காதன் என்ற அமைப்பை நிறுவினார். இது சங்கதானா என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலும் அடிப்படையில் பெண்களை உள்ளடக்கிய அமைப்பாகும். இது வாயுக் கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் உள்ளது. வாதாடும் குழுவில் வாயுக் கசிவில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பேரிழப்பால் ஆதரவற்றுப்போன விதவை பெண்கள் உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு சட்டப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கபட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு, மருத்துவ மறுவாழ்வு, யூனியன் கார்பைடு கர்ப்பரேசன் நிறுவன அதிகாரிகள் மீது வழக்குத் தொடருதல் போன்றவற்றிற்காக போராடி வருகின்றனர். குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஜப்பார், பொது அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், குழுவின் உத்திகள் குறித்து முடிவுகளை எடுப்பதற்கும் பொறுப்பாளராக இருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மிகக் குறைவான உணவுக்கான உதவித் தொகையைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜப்பார், "கைரத் நஹி, ரோஸ்கர் சாஹியே" (எங்களுக்குத் தொண்டு தேவையில்லை, வேலை வேண்டும்)" என்ற முழக்கத்துடன் அவர்களுக்கு வேலை தேடும் தனது முதல் பரப்புரையைத் தொடங்கினார்.[5][9] தையல் பணிகள், பைகள் தைப்பது போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கும் ஸ்வாபிமான் கேந்திரா (சுயமரியாதை மையம்) என்ற பொருளாதார மறுவாழ்வு மையத்தை நிறுவும் முயற்சியில் வெற்றியடைந்தனர்.[7][9]

1988 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு கிடைக்கும் வரை இடைக்கால நிவாரணம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜப்பார் மனு தாக்கல் செய்தார்.[9] 1989 இல், உச்ச நீதிமன்றம் ஒரு இறுதி தீர்வுத் திட்டத்தை அறிவித்தது. ஆரம்பக் கோரிக்கையான $3 பில்லியன் என்ற கோரிக்கைக்கு மாறாக, யூனியன் கார்பைடு நிறுவனம் $470 மில்லியனை அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டும். மேலும் அனைத்து சமுக மற்றும் குற்றப் பொறுப்புகளிலிருந்தும் அது விடுவிக்கப்படும். அற்ப தொகையால் அதிருப்தி அடைந்த இவர் 3500 பிஜிபிஎம்யுஎஸ் உறுப்பினர்களுடன் தில்லிக்கு சென்று அங்கு பல மாதங்களாக போராட்டங்களை நடத்தினர். மேலும், பெண்கள் மீது காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பரவலாக எதிர்ப்புக்கள் எழுந்து பொது சமூகத்தின் ஆதரவைப் பெற்றது. மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசாங்கம் பிஜிபிஎம்யுஎஸ் தாக்கல் செய்த மறு ஆய்வு அடிப்படையில் தீர்வுக்கான ஒத்திகையை தொடங்கியது. உயிர் பிழைத்த 5,00,000 பேருக்கு மாதந்தோறும் 200 ரூபாயை மூன்றாண்டுகளுக்கு வழங்க மத்தியப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பல ஆண்டுகளாக, இந்த அமைப்பு தவறான நிவாரண உதவி விநியோகம் மற்றும் போதுமான மருத்துவ பராமரிப்பு இன்மை போன்றவற்றிற்கு எதிராக பெரிய அளவிலான பல ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை ஈர்த்தது.[5] ஒரு தசாப்த கால போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட 5,70,000 பேருக்கு 1,503 கோடியை வழங்குமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.[9]

பா.ஜ.க அரசினால் 1990 ஆம் ஆண்டு போபாலில் வாயுக் கசிவினால் பாதிக்கப்படவர்கள் வாழும் சேரிகளை இடித்தது அப்புரப்படுத்தியது. இது அந்த மக்களை பாதித்தது. இந்த நடவடிக்கை பரவலான எதிர்ப்புகளை உருவாக்கியது.[5] ஜப்பரின் கூற்றுப்படி, பிஜிபிஎம்யுஎஸ்-இன் சட்டரீதியான தலையீடு வாயுவால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களை அவர்கள் இருந்த இடத்தில் தங்க அனுமதித்தது.[10]

ஜப்பார் ஆங்கிலத்தில் நேர்காணல்களை வழங்க மறுத்துவிட்டார். இது அவர் குறித்த பத்திரிகை செய்திகளை மட்டுப்படுத்தியது. மேலும் இவர் வெளிநாட்டு நன்கொடைகள் எதையும் கேட்கவில்லை. தன்னார்வ பங்களிப்புகளை மட்டுமே நம்பியிருந்தார்.[11][12][13] ஜப்பருக்குப் பணப் பற்றாக்குறை இருந்தது, சில சமயங்களில் அவருக்கான செலவுகளை அவரது நண்பர்களே ஏற்றனர்.[3][12] பாதிக்கப்பட்டவர்களை ஒழுங்கமைக்க போபாலில் உள்ள யாத்கர் இ ஷாஜகானி பூங்காவில் வாராந்திர கூட்டங்களை கூட்டினார். இந்த அமைப்பு முதன்மையாக அதன் உறுப்பினர்களின் மாதாந்திர 5 ரூபாய் சந்தா மற்றும் பெண்களால் செய்யப்பட்ட கைவேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள் மற்றும் துணி பொம்மைகளை விற்பனை செய்வதன் மூலம் நிதிதிரட்டியது.[5][11]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

இந்திய ஒன்றிய அரசு இவருக்கு 2020 இல் இவரது மரணத்திற்குப் பின் இவரது சமூகப் பணிக்காக பத்மசிறீ விருதை அளித்தது.[4] மத்தியப் பிரதேச அரசு இவருக்கு 2019 ஆம் ஆண்டு சமூக சேவைக்கான மாநிலத்தின் உயரிய விருதான இந்திரா காந்தி விருதை வழங்கியது.[14]

குறிப்புகள்[தொகு]

 

  1. 1.0 1.1 Anees, Javed (2019-12-01). "अब्दुल जब्बार: भोपाल गैस पीड़ितों के संघर्ष को समर्पित जीवन". The Wire - Hindi (in Hindi). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "In praise of… Abdul Jabbar". The Guardian (in ஆங்கிலம்). 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  3. 3.0 3.1 Deb (2011). The Beautiful and the Damned: Life in the New India.
  4. 4.0 4.1 "Bhopal Gas tragedy activist Abdul Jabbar awarded Padma Shri posthumously". ANI News (in ஆங்கிலம்). 2020-01-25. Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Basu, Amrita (1994-06-01). "Bhopal revisited: The view from below". Bulletin of Concerned Asian Scholars 26 (1-2): 3–20. doi:10.1080/14672715.1994.10416147. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-4810. https://doi.org/10.1080/14672715.1994.10416147. 
  6. Krishnan, Vidya (2009-11-29). "Bhopal,25 years on". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  7. 7.0 7.1 7.2 7.3 Mehta, Nikita (2014-12-02). "From gas tragedy survivor to activist". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  8. 8.0 8.1 Rehman Alavi, Shams Ur. "Crusader for Victims: The Truth of Bhopal Gas Tragedy and its Aftermath-Part III". பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 Dixit, Rakesh (2019-11-17). "Abdul Jabbar's Struggle for Bhopal Gas Tragedy Victims Has Lessons for Us All". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  10. "Interview with Jabbar Khan". Bulletin of Concerned Asian Scholars 26 (1-2): 14–17. 1994-06-01. doi:10.1080/14672715.1994.10416148. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-4810. https://doi.org/10.1080/14672715.1994.10416148. பார்த்த நாள்: 2021-11-13. 
  11. 11.0 11.1 Munsi, Pallabi (August 2011). "Abdul Jabbar: That Unblinking Eye". Kindle (India: Ink Publications) 2 (5): 26–27. http://site.nitashakaul.com/uploads/kindle_magazine_august_2011_book_1.pdf. பார்த்த நாள்: 2021-06-16. 
  12. 12.0 12.1 "Bhopal: The Other Story". Open Magazine. 2009-11-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.
  13. Khan, Mohd Ismail (2014-11-30). "Bhopal – Three decades of struggle: Abdul Jabbar: an underrated champion". TwoCircles (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  14. Sharma, N D (2019-12-22). "MP's State Award presented to Abdul Jabbar posthumously with little grace". eNewsroom India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ஜப்பார்_கான்&oldid=3849680" இலிருந்து மீள்விக்கப்பட்டது