கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்லாம் வலைவாசல்
.
அறிமுகம்
இஸ்லாம் என்பது ஒரிறைக் கொள்கையை கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்டதாக கூறப்படும் செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. மனிதனின் மரணத்துக்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாமின் கட்டாயக் கடமைகளாகும்.ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபியவர்கள் இந்த மார்க்கத்தை மக்கா நகரில் பரப்பத்தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்.
திருக்குர்ஆன் அல்லது குரான் (குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன.
இப்னு கல்தூன் என அழைக்கப்பட்ட அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ (அரபு மொழி: أبو زيد عبد الرحمن بن محمد بن خلدون الحضرمي , , (மே 27, கிபி 1332 /732 AH – மார்ச் 19, கிபி 1406 /808 AH)), ஒரு வட ஆப்பிரிக்கப் பல்துறையாளர் ஆவார். வட ஆபிரிக்காவிலுள்ள இன்றைய தூனிசியப் பகுதியில் பிறந்த இவர் வானியல், பொருளியல், வரலாறு, இசுலாம், இசுலாமிய இறையியல், நீதித்துறை, சட்டம், கணிதம், படைத்துறை உத்திகள், மெய்யியல், சமூக அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். இவர் ஒரு அராபிய அல்லது பர்பர் இனத்தைச் சேர்ந்தவர். இவர், மக்கட் பரம்பலியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்றுவரைவியல், வரலாற்று மெய்யியல், சமூகவியல் போன்ற பல சமூக அறிவியல் துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அறிஞரும், மெய்யியலாளருமான சாணக்கியருடன் இவரும் தற்காலப் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகின்றனர்.பலர் இவரை இத்தகைய பல சமூக அறிவியல் துறைகளினதும், பொதுவாகச் சமூக அறிவியலினது தந்தையாகவும், மனித வரலாற்றை அறிவியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்த வரலாற்று மேதையாகவும், வரலாற்றுத் தத்துவத்தை தோற்றுவித்த மாபெரும் அறிஞராகவும் கருதுகிறார்கள்.