வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மே 2007
- மே 1 - மெல்பேர்னில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரை அவ்வமைப்புக்கு நிதி சேகரித்து அனுப்பியமைக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- மே 6 - இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற பெரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் 16 பேர் கொல்லப்பட்டும் 125,000 பேர் வீடிழந்தும் உள்ளனர். (ஏஎஃப்பி)
- மே 7 - மன்னார் வவுனியா வீதியை அண்டிய எல்லைப் புறக்கிராமங்களான பெரியதம்பனை மற்றும் பண்டிவிரிச்சான் பகுதிகளில் மே 6 நடந்த மோதல்களின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஐந்து இராணுவத்தினரின் சடலங்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக இராணுவத் தரப்பிடம் கையளிக்கப்பட்டன. (உதயன்)
- மே 10 - தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். (வீரகேசரி)
- மே 12 - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கையின் மூன்று விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் வீடுகள் பல சேதமுற்றன. (தமிழ்நெட்)
- மே 13 - திருகோணமலையில் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் உட்படப் பலநிகழ்வுகளில் கலந்துகொண்ட மொறவேவாப் பகுதியில் தமிழில் சரளமாக உரையாடும் திறமையுள்ள வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ என்னும் புத்த மதகுரு இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (புதினம்)
- மே 18 - கன்னியாகுமரியிலிருந்து மார்ச் 2007இல் காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்களில் 11 பேர் கரை திரும்பியுள்ளனர்.
- மே 24 - கொழும்பில் இராணுவத்தினரின் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு நால்வர் காயமடைந்துள்ளனர். (பிபிசி)
- மே 24 - யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவின் தென்பகுதியில் உள்ள இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்துள்ளனர். 35 கடற்படையினர் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். (பிபிசி)
- மே 28 - கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- மே 29 - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. (புதினம்)