பாரி வான் தாக்குதல்

ஆள்கூறுகள்: 41°07′N 16°52′E / 41.117°N 16.867°E / 41.117; 16.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரி வான் தாக்குதல்
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட யங்கர்சு யு-88 ரக குண்டுவீசி வானூர்தி
நாள் டிசம்பர் 2, 1943
இடம் பாரி, இத்தாலி
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஜெர்மனி  ஐக்கிய இராச்சியம்


 ஐக்கிய அமெரிக்கா

தளபதிகள், தலைவர்கள்
ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்
வொல்ஃபிராம் வோன் ரிக்தோஃபன்
மார்க் வெய்ன் கிளார்க்
ஆர்த்தர் கோனிங்காம்
இழப்புகள்
ஒரு வானூர்தி அழிப்பு 17 கப்பல்கள் மூழ்கடிப்பு,
துறைமுகத்துக்கு பெரும் சேதம்,
1,000 படைத்துறையினர் மற்றும் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[1]

பாரி வான் தாக்குதல் (Air Raid on Bari) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு பெரும் வான்படைத் தாக்குதல். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே நேச நாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த இத்தாலி நாட்டு பாரி துறைமுகத்தைத் தாக்கி பெரும் சேதம் விளைவித்தன.

செப்டம்பர் 1943ல் அச்சு நாடுகளில் ஒன்றான் இத்தாலி மீது நேச நாடுகள் படையெடுத்தன. அடுத்த சில மாதங்களில் தெற்கு மற்றும் மத்திய இத்தாலியின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றின. இத்தாலியில் போரிட்டு வந்த நேச நாட்டுப் படைகளுக்குத் தேவையான தளவாட இறக்குமதி கடல்வழியாக நடைபெற்று வந்தது. அதற்கு பயன்பட்ட துறைமுகங்களுள் பாரியும் ஒன்று. இத்தாலி போர்முனைக்கான ஜெர்மானியத் தலைமைத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் பாரி துறைமுகத்தைத் தாக்க தன் வான்படைகளுக்கு உத்தரவிட்டார். தளவாட வழங்கலுக்குத் தடை ஏற்படுத்துவதன் மூலம் நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தத் திட்டமிட்டார். டிசம்பர் 3, 1943 அன்று இரவு 7.25 மணியளவில் லுஃப்ட்வாஃபேயின் 105 யங்கர்சு யு-88 ரக குண்டுவீசிகள் பாரி துறைமுகத்தைத் தாக்கின. லுஃப்ட்வாஃபே பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையில் நேச நாட்டு வான்படைகள் பாரி துறைமுகத்தில் பலமான வான்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறிவிட்டன. இது ஜெர்மானியர்களுக்கு சாதகமாக அமைந்தது. குண்டுவீச்சால் துறைமுகத்தில் நின்றிருந்த 17 சரக்குக் கப்பல்கள் அடியோடு நாசமாகின. எரிபொருள் கிடங்குகளும், துப்பாக்கி, பீரங்கி குண்டுகளை ஏற்றி வந்த சரக்குக் கப்பல்களும் வெடித்து சிதறியதால், பாரி துறைமுகத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. துறைமுகத்தில் எரிபொருள் பரவி பெருந்தீ உருவானது. மேலும் அமெரிக்க சரக்குக் கப்பல் ஜான் ஹார்வேயில் வைக்கப்பட்டிருந்த கடுகுப் புகை கசியத் தொடங்கியது. இந்த நச்சுப் புகைத் தாக்குதலால் பல நேச நாட்டு வீரர்களும் மாலுமிகளும் உயிரிழந்தனர். மொத்தம் 1000 படைவீரர்களும் 1,000 பாரி நகர மக்களும் இத்தாக்குதலில் கொல்லபப்ட்டனர். ஜெர்மானியத் தரப்பில் ஒரே ஒரு வானூர்தி மட்டும் அழிந்தது.

இத்தாக்குதலால் பாரி துறைமுகம் சில மாதங்களுக்கு செயலற்றுப் போனது. செப்பனிடுதலுக்குப் பின் பெப்ரவரி 1944ல் மீண்டும் சரக்குப் போக்குவரத்து துவங்கியது. தங்கள் கப்பல்களில் நச்சுப் புகை வைக்கப்பட்டிருருந்தது வெளியுலகுக்குக் தெரியக் கூடாது என்று முடிவு செய்த நேச நாட்டுத் தலைவர்கள் அச்செய்தியை முழுமையாக மறைத்து விட்டனர். இரண்டாம் உலகப் போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே பிரித்தானிய அரசு நச்சுப் புகை இருந்ததை ஒப்புக் கொண்டது. போரில் நாசி வதை முகாம்களைத் தவிர்த்து நச்சுப் புகையால் மரணங்கள் ஏற்பட்ட நிகழ்வு பாரி வான் தாக்குதல் மட்டுமே.

குறிப்புகள்[தொகு]

  1. Atkinson, pp. 275-276.

மேற்கோள்கள்[தொகு]

Web[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரி_வான்_தாக்குதல்&oldid=3580983" இலிருந்து மீள்விக்கப்பட்டது