கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.
கருநாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருதினை சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிச் சிறப்பிக்கிறது. சங்கீத என்பதற்கு இசை எனவும், கலாநிதி என்பதற்கு கலையின் பெருஞ்செல்வம் (புதையல்) எனவும் பொருள். ஆக, சங்கீத கலாநிதி என்பதற்கு 'கருநாடக இசைக் கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள். கருநாடக இசையுலகில் மிக உயர்ந்த விருதாக இவ்விருது அனைவராலும் கருதப்படுகிறது.
வீரமணி ஐயர் (அக்டோபர் 15, 1931 - அக்டோபர் 8, 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர். யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தானம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை, தானம், நிரவல் மற்றும் கல்பனஸ்வரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்
சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.
தண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.