மானாமதுரை

ஆள்கூறுகள்: 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°E / 9.689000; 78.458100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானாமதுரை நகராட்சி
மானாமதுரை நகராட்சி
இருப்பிடம்: மானாமதுரை நகராட்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°41′20″N 78°27′29″E / 9.689000°N 78.458100°E / 9.689000; 78.458100
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் மானாமதுரை வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

50,257 (2021)

3,723/km2 (9,643/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi)

90 மீட்டர்கள் (300 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.tnmunicipality.in/manamadurai


மானாமதுரை (Manamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

இது சிவகங்கைக்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், பரமக்குடிக்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது.[4]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 12,032 வீடுகளும், 50,257 மக்கள்தொகையும் கொண்டது.[5]

இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

பெயர் காரணம்[தொகு]

இராமன் சீதையை தேடி இலங்கை நோக்கி செல்லும் பொழுது வானரங்களின் உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் பாண்டியர்களின் தலைநகரமான மதுரைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "வானரவீரன்மதுரை" என்று பெயர் வந்தது. அதுவே ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்கள் ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்துள்ளது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.[7]

2021-இல் மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்[தொகு]

மானாமதுரை பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று மானாமதுரை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[8][9]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E / 9.7; 78.48 ஆகும்.[10] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 மீட்டர் (229 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

இப்பகுதியிலுள்ள களிமண் வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.[11][12][13] சித்திரை திருவிழா இங்கு முக்கியமான திருவிழாவாகும். உள்ளுர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கம் அதிகமாக கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) இங்குள்ளது.

மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.[14]

சித்திரை திருவிழா[தொகு]

சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான சித்திரையில் 13 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கோயிலின் புனித கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும், இந்த சடங்கு கொடியேற்றம் என்று அழைக்கப்படுகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஒரே திருவிழா இதுவே. திருவிழா தொடங்கும் போது, ​​ஆனந்தவல்லி மானாமதுரை அரசியாக "பட்டாபிஷேகம்" என்ற சடங்கில் அரியணை ஏறுகிறாள். பட்டாபிஷேகத்திற்குப் பிறகு, அவர் தனது துணைவனார் சோமநாதருடன் சிம்ம வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், கருட வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் 8 நாட்கள் ஊர் வலம் வருகிறார். பின்னர் அவர்கள் இருவரும் ஆனந்தவல்லி திருக்கல்யாணம் என்ற நிகழ்வில் திருமணம் செய்துவிக்கப்பட்டு, மறுநாள் மக்கள் வடம் பிடித்து இழுக்கும் பெரிய தேரில் தேரோடும் வீதிகளை வலம் வருகிறார்கள். இந்த சடங்கு திருத்தேரோட்டம் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை 13ம் தேதி வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் போது திருவிழா கூட்டம் உச்சத்தை அடைகிறது. வீர அழகரின் சகோதரி ஆனந்தவல்லி தனது சகோதரருக்குத் தெரிவிக்காமல் சோமநாதரை மணந்ததை நினைவுகூரும் வகையில் இது நிகழ்கிறது. எனவே, அவர் தனது சகோதரியுடன் வாதிடுகிறார் மற்றும் கோபத்துடன் தனது தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். சித்திரை பௌர்ணமி அன்று, மானாமதுரை மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் இரவில் கூடி "நிலா சோறு" என்னும் நிலவொளி விருந்தை கொண்டாடுகிறார்கள். சிலர் அதை தங்கள் வீட்டு மாடியில் கொண்டாடுகிறார்கள். மானாமதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருவோர உணவு விற்பனையாளர்கள் இங்கு கூடி தங்கள் கடைகளை அமைக்கிறார்கள். கேளிக்கை சவாரிகள், சர்க்கஸ், குடும்ப விளையாட்டுகள், பைக் ஸ்டண்ட் கேளிக்கைகள், வான வேடிக்கைகள் இந்த திருவிழாவை மறக்க முடியாததாக ஆக்குகிறது.

போக்குவரத்து[தொகு]

பேருந்து[தொகு]

மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து பரமக்குடி, கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகளத்துர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்வது வழக்கம், மேலும் இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, இளையான்குடி, பரமக்குடி, தாயமங்களம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


ரயில்கள்[தொகு]

மானாமதுரை சந்திப்பு

மானாமதுரை சந்திப்பு ரயில் நிலையம் நகரின் மேற்குக் கரையில் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ராமேஸ்வரம் - மதுரை, ராமேஸ்வரம் - சென்னை மற்றும் விருதுநகர் - காரைக்குடி இடையே இயங்கும் அனைத்து ரயில்களுக்கும் இங்கு கட்டாயம் நின்று செல்லும் முக்கிய நிறுத்தமாகும். மானாமதுரையில் உள்ள தொடருந்து சந்திப்பு தென்மேற்கில் விருதுநகர் தொடருந்து சந்திப்பு , வடமேற்கில் மதுரை தொடருந்து சந்திப்பு மற்றும் தென்கிழக்கில் "புனித கோவில் நகரம்" ராமேஸ்வரம் தொடருந்து நிலையம் மற்றும் வடகிழக்கில் காரைக்குடி தொடருந்து சந்திப்பு ஆகியவற்றுடன் இணைக்கிறது. மானாமதுரை வழியாக தினமும் மூன்று முறை இயக்கப்படும் பயணிகள் ரயில் விருதுநகர் மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற முக்கிய நகரங்களை சிவகங்கை, கல்லல், காரைக்குடி, செட்டிநாடு, தேவக்கோட்டை சாலை, திருமயம், புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர் வழியாக இணைக்கிறது. திருப்புவனம், திருப்பச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் வழியாக மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வரை தினமும் மூன்று முறை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. நமது நாட்டின் மிகப் பெரிய பாரம்பரியச் சின்னமான பாம்பன் ரயில் பாலத்தின் மீதும் செல்கிறது . மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே உள்ள ரயில் பாதை நாட்டின் முதல் பசுமை ரயில் வழித்தடமாக மாற்றப்பட்டது

ராமேஸ்வரம் - மானாமதுரை - மதுரை மற்றும் விருதுநகர் - மானாமதுரை - திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் மின்மயமாக்கல் பணிகள் சுமூகமாக முடிக்கப்பட்டு, ரயில்கள் சராசரியாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் மின்சார இன்ஜின்கள் மூலம் இயக்கப்படுகின்றன.

விமானங்கள்[தொகு]

மானாமதுரைக்கென்று தனி விமான நிலையங்கள் கிடையாது. எனினும் விமானம் மூலம் இங்கு வர விரும்புவோர் கீழ்கண்ட விமான நிலையங்களில் இறங்கி பெருந்தில்லோ, மகிழுந்திலோ அல்லது ரயிலிலோ வரலாம்.

  • மதுரை பன்னாட்டு விமான நிலையம்(57 கி.மீ)
  • திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்(143 கி.மீ)
  • தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம்(160 கி.மீ)
  • சேலம் உள்நாட்டு விமான நிலையம்(302 கி.மீ)
  • கோவை பன்னாட்டு விமான நிலையம்(215 கி.மீ)

மருத்துவமனைகள்[தொகு]

  • தொழுநோய் சுகாதார மருத்துவமனை, தயாபுரம்
  • அரசு மருத்துவமனை

கல்வி நிறுவனங்கள்[தொகு]

பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. மானாமதுரை சந்திப்பு
  5. Manamadurai city Population Census 2011
  6. மானாமதுரை நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
  8. kumbakonam corporaon and 19 muniicipalites
  9. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  10. "Manamadurai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  11. "மானாமதுரை மட்பாண்டம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-06-21.
  12. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece
  13. http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print
  14. மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானாமதுரை&oldid=3980693" இலிருந்து மீள்விக்கப்பட்டது