ஜாதி மல்லி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாதி மல்லி (திரைப்படம்)
கதைகே.பாலச்சந்தர்
அனந்து
இசைமரகத மணி
நடிப்புமுகேஷ்
குஷ்பூ
நாசர்
வினீத்
யுவராணி
ஒளிப்பதிவுஆர். ரகுநாதரெட்டி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜாதி மல்லி (Jaathi malli)[1] 1993 ஆண்டில் வெளியான தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இதனை கே. பாலச்சந்தர் இயக்கினார். முகேஷ், குஷ்பூ, நாசர்,வினீத், யுவராணி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். "பிரணாயதீரம்" என்ற பெயரில் இத்திரைப்படம் மலையாள மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. மரகதமணியின் இசையமைப்பில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.[2]


கதைச்சுருக்கம்[தொகு]

கசல் (இசை) பாடகியான சிறீரஞ்சனி (குஷ்பு) ஒரு மலைவாசஸ்தலத்திற்கு செல்வதாக இக்கதை ஆரம்பிக்கிறது. தனது மனதிற்கு நெருக்கமான உறவான தனது தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சோகத்தை மறக்க அவ்விடத்திற்கு வரும் நாயகி அங்கே முகேஷ் (கதாநாயகன்) என்ற வாகன ஒட்டுனரைச் சந்திக்கிறாள். அவரது தாயாரும் உடன்பிறந்தோரும் அவரது தந்தையாலேயே கொல்லப்பட்ட சோகத்தை முகேஷ், சிறீரஞ்சனியிடம் பகிர்ந்து கொள்கிறார். இதைக்கேட்ட நாயகி தனது வாழ்க்கையை விட மற்றவர்களின் வாழ்க்கை பல்வேறு சோகங்களைக் கொன்டது என எண்ணி தனது துயரத்தை மறக்க ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் முகேஷும் சிறீரஞ்சனியும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழக்கூடிய சூழ்நிலை அமைகிறது.

அதேசமயம் மாஸ்கோ மற்றும் பெர்லின் என்று புனைப்பெயரைக்கொன்ட (வினீத் மற்றும் யுவராணி) இரு காதலர்களை அவர்கள் சந்திக்கின்றனர். வெவ்வேறு மதத்தை சார்ந்த இவர்களின் காதலை அவர்களின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறும் அவர்கள் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்கள் என்று குறிப்பால் உணர்த்தும் இயக்குனர் யார் இந்து யார் முஸ்லிம் எனக் கடைசிவரை வெளிப்படுத்துவதில்லை.

இளம் காதலர்களும் சிறீரஞ்சனி மற்றும் முகேஷ் உடன் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்குகின்றனர். மேலும் அக்காதலர்கள் இவ்விருவரையும் சேர்த்துவைக்க நினைக்கின்றனர். இவர்கள் அனைவரின் துணையோடு சிறீரஞ்சனி தனது சோகத்தில. இருந்து மீள்கிறார்.

ஒருசமயம் சிறீரஞ்சனி முகேஷ் அவரது குடும்பம் பற்றி தன்னிடம் கூறிய அனைத்தும் பொய் என கண்டறிகிறார். பின்பு முகேஷ் தனது குடும்பத்தைப் பற்றிய உண்மையை கூறுகிறார். பரம்பரைச் சொத்துக்களும் பாரம்பரிய மரியாதையும் கொண்ட ஊரின் பெரிய குடும்பமாக இருந்தாலும் சொத்துச்சண்டை காரணமாக நிம்மதியான வாழ்க்கை இல்லாத முகேஷ் அந்த குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு விட்டு ஒரு வாகன ஒட்டுனராக நிம்மதியான அளவான வாழ்க்கை வாழ்வதாகக் கூறுகிறார். இதைக்கேட்ட கதாநாயகி வாழ்க்கையின் மறுபக்கத்தை புரிந்து கொள்கிறார். ஆனால் முகேஷ் மீது வருத்தமும் கொள்கிறார்.

வடநாட்டைச் சார்ந்த ஒரு தொழிலதிபர் சிறீரஞ்சனியின் கசல் பாடல்களால் கவரப்பட்டு அவர் மீது அன்பு காட்டவும் நேரம் செலவிடவும் தொடங்குகிறார். இந்தியில் கசல் பற்றியும் சாதாரணமாகவும் அவர்கள் பேசிக்கொள்வதைத் தவறாக எண்ணி மனதில் பொறாமை கொள்ளும் முகேஷின் நடவடிக்கையால் சிறீரஞ்சனி அவரது வீட்டை விட்டு வெளியேறி அந்த வடநாட்டவரோடு செல்கிறாள். ஆனால் சிறிதுகாலத்திலேயே அவளுக்கு அந்த நபர் அவளை அவரது வீட்டிலேயே அவருக்காக மட்டுமே பாட வைத்திருக்கிறார் எனவும் அவரது வீட்டில் தான் ஒரு சிறைக்கைதி போலவும் இருப்பதைப் புரிந்து கொண்ட சிறீரஞ்சனி, முகேஷின் அன்பை எண்ணி மறுபடியும் முகேஷோடு வாழ விரும்புகிறாள். இளம் காதலர்களும் இவர்களைச் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார்கள். இறுதியில் ஊரில் மதக்கலவரம் நடக்கிறது. அதில் குண்டடி படும் இளம் காதலர்கள் தங்களது உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தில் இருந்து தங்களின் மதத்தைக் கண்டறியுமாறு கலவரக்காரர்களிடம் சவால் விடுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் தங்கள் சாவிற்கு முன்பாக சிறீரஞ்சனி மற்றும் முகேஷை சேர்த்து விடவும் ஆசைப்பட்டு இறுதியில் அவர்களது மடியிலேயே இறக்கின்றனர். அதன்மூலம் சிறீரஞ்சனி மற்றும் முகேஷ் ஒன்றுசேர்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

கதை மாந்தர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இயக்குனர் பாலச்சந்தர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க டி. ராஜேந்தரை கேட்டுக்கொண்டும் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.[3] இப்படத்தில் கதாநாயகி குஷ்புவின் பெயரானது கருநாடக இசையின் இராகம் ஒன்றின் பெயரான சிறீரஞ்சனியைப் பின்பற்றி வைக்கப்பட்டுள்ளது.[4]

சான்றுகள்[தொகு]

  1. http://tamilcube.com/glossaries/indian-flowers.aspx
  2. "Jaadi Malli". JioSaavn. 31 August 2014. Archived from the original on 28 May 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
  3. http://www.thehindu.com/entertainment/movies/i-am-the-pioneer-of-kuthu/article17676587.ece
  4. Sundaram, Lakshmi (12 March 2003). "From Sindhu Bhairavi to Sahana". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030821151935/http://www.thehindu.com/thehindu/mp/2003/03/12/stories/2003031200080200.htm. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாதி_மல்லி_(திரைப்படம்)&oldid=3980703" இலிருந்து மீள்விக்கப்பட்டது