ருக்மாபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர் ருக்மாபாய்

ருக்மாபாய் (அல்லது ரக்மாபாய்) (நவம்பர் 22, 1864 - செப்டம்பர் 25, 1955) என்பவர் பிரித்தானிய இந்தியாவில் பயிற்சி பெற்ற முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர் ஆவார். 1891 ஆம் ஆண்டின் வயது இசைவு சட்டம் உருவாக வழிவகுத்த ஒரு மைல்கல் சட்ட வழக்கின் முக்கிய நபராக இவர் இருந்தார்.

இளமை[தொகு]

ருக்மாபாய், ஜனார்தனன் - ஜெயந்திபாய் தம்பதியரின் ஒரே மகளாக 22 நவம்பர் 1864 அன்று மும்பையில் பிறந்தார். தனது எட்டாம் அகவையில் தந்தையை பறிகொடுத்தார். தனது 11ம் அகவையில், 19 வயதான தாதாஜி பிகாஜி என்பவரை மணந்தார். பின்பு இவரது விதவைத் தாயார் ஜெயந்திபாய், மருத்துவரான சகாராம் அருச்சுனன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

தாதாஜி பிகாஜி மற்றும் அவரது குடும்பத்தினர், ருக்மபாயை தாதாஜியின் வீட்டில் வாழும்படிக் கேட்டபோது, இவர் மறுத்துவிட்டார். இவரது விருப்பம் இவரது தத்து-தந்தையாலும் ஆதரிக்கப்பட்டது.

இது 1884 ஆம் ஆண்டின் ஒரு நீண்ட தொடர் நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுத்தது. குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களின் உரிமைகள் மீது ஒரு பெரிய பொது விவாதம் நடைபெற்றது.[1]

மருத்துவப் பணி[தொகு]

ருக்மபாய் ஒரு இந்துப் பெண் என்ற புனைப் பெயரில் செய்தித்தாள்களில் பல கடிதங்களை எழுதினார். இது பலரது ஆதரவை வென்றது. இவர் மருத்துவம் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தபோது, இவரது பயணத்தை ஆதரிக்க மற்றும் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப் மெடிசினில் படிக்க ஒரு நிதி உருவாக்கப்பட்டது. பின்னர் இவர் இங்கிலாந்திற்குச் சென்று தகுதி வாய்ந்த மருத்துவராக இந்தியா திரும்பினார். ராஜ்கோட்டில் ஒரு மகளிர் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்தார்.

சிறப்புகள்[தொகு]

ருக்மாபாயின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனத்தின் தமிழ் பதிப்பில், 22 நவம்பர் 2017 அன்று கூகுள் டூடுல் வெளியிட்டு, ருக்மாபாயின் பெருமையை வெளிப்படுத்தியுள்ளது.[2]

உசாத்துணை[தொகு]

  1. Chandra, Sudhir (1996). "Rukhmabai: Debate over Woman's Right to Her Person". Economic and Political Weekly 31 (44): 2937–2947. 
  2. Rukhmabai, one of the first Indian women physicians, gets Google Doodle
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மாபாய்&oldid=2707480" இலிருந்து மீள்விக்கப்பட்டது