பியேர் அபேலார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் அபேலார்டு
பிறப்பு1079
லே பல்லெட்டு (நான்தெசுக்கு அருகில்)
இறப்பு21 ஏப்ரல் 1142 (அகவை 62–63)
சாலன்-சூர்-சோன் அருகே (கிழக்கு பிரான்சு)
காலம்இடைக்காலத்து மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியலார்
பள்ளிபுலமைவாத மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்
நிலவலியல்/இருப்பியல், அளவையியல், மொழி மெய்யியல், இறையியல், உள மெய்யியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கருத்துரு வாதம், புலமைவாத மெய்யியல்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • சாலிஸ்புரியின் ஜான், ஓக்கமின் வில்லியம்

பியேர் அபேலார்டு (பிரெஞ்சு மொழி: Pierre Abélard, அல்லது பீட்டர் அபெலார்டு, 1079 – 21 ஏப்ரல் 1142) இடைக்காலப் பிரெஞ்சுப் புலமைசார் மெய்யியலார். மொழி, மனம்சார் மெய்யியல் பிரிவுகளை உருவாக்கியவர். பகுத்தறிவுசார் இறையியலார். பெயர்பெற்ற இடைக்கால அளவையியலார்.[1] மேலும் இவர் கவிஞரும் இசைக்கலைஞருமாவார். பலரும் போற்றிய மெய்யியல் பேராசானும் பெயருருவாதத்தின் (Nominalism) தந்தையுமாவார்.[2]

வாழ்வும் பணியும்[தொகு]

பியேர் 1079 இல் பிரித்தானியின் நாந்து அருகில் உள்ள லெ பெல்லெட்டில் பிறந்தார்.[3] இவர் சிறுவயதிலேயே ஆர்வத்தோடு விரைவாகக் கல்வி பயின்றார். செல்வந்தரான இவரது தந்தையார் பல கலைகளும் கற்றுத் தேர ஏற்பாடு செய்தார். அங்கு அவர் மெய்யியல் பிரிவான இணைமுரணியலில் மிகவிஞ்சிய திறமை பெற்றுள்ளார். இம்மெய்யியல் பிரிவு இலத்தீன் வழியாகப் பரவிய அரிசுட்டாட்டிலின் அளவையியலின் தொடர்ச்சியாகும். அவர் தந்தையைப் போல படைத் துறையில் சேராமல் கல்வித் துறையில் கருத்தைச் செலுத்தலானார். தொடக்கநிலைக் கல்விப்பணியாக அவர் பிரான்சு முழுவதும் சுற்றிக் கற்பதும் பலரோடு வாதிடுவதுமாக்க் காலம்கழித்தார். அவர் முதன்முதலாக பெயருருவாத உரோசெல்லினசு (Roscellinus) வாழ்ந்த இலாயிர் (Loire) பகுதியில்"[4] அவரிடம் மாணவராகச் சேர்ந்து தனது கல்வியைத் தொடங்கினார்.[2]

புகழின் உச்சி[தொகு]

அவர் பலவிடங்களைச் சுற்றிவிட்டு 1100 ஆம் ஆண்டளவில் பாரிசு நகர் வந்தடைந்தார். அங்கு நோத்ரெ தோம் பேராலயப் பள்ளிகூடத்தில் வில்லியம் என்பவரிடம் கல்வி பயின்றார். அப்போது இவர் தனது இயற்பெயரான ’பியேர் லா பல்லெட்’ என்பதை ’பியேர் அபேலார்டு’ என மாற்றிக் கொண்டார். தனது ஆசிரியரான வில்லியமை இவர் வாதத்தில் வென்றதால், வில்லியம் இவரை எதிர்க்கத் தொடங்கியுள்ளார்.[5][6] இவரது சிந்தனை வில்லியம் போக்குக்கு நெருக்கமாக இருந்தும் இவர் உரோசெல்லினசு, வில்லியம் இருவரையுமே எதிர்த்துத் தொடர்ந்து வாதிடலானார்.[3] மேலும் தனது ஆசிரியருக்கு எதிராக மேலூனில் முதன்முதலாகத் தனிச்சிந்தனைப் பள்ளியொன்றையும் உருவாக்கினார். பிறகு அதைத் பாரீசுக்கருகில் இருந்த கார்பெல் நகருக்கு மாற்றினார்.[4]

அவரது மெய்யியல் போக்கு வெற்றிபெற்றாலும் அவர் உடல்நலம் ஏற்காததால் சிலகாலம் பிரித்தானியில் வாழ்ந்து வந்துள்ளார்ர். 1108இல் மீளப் பாரீசு திரும்பியதும், புனித விக்டர் மடத்தில் வில்லியம் சொற்பொழிவாற்றுவதைக் கண்டார். வில்லியம் பின்பற்றிய பொதுமைகள் கருத்தினக் கோட்பாட்டினை (Theory of Universals) அபேலார்டு எதிர்க்கவே, அங்கு மீண்டும் இருவரும் எதிரிகளாயினர். மீண்டும் அபேலார்டு அவரை வாதத்தில் வெல்லவே நொத்ரே தோமின் ஆசிரியரானார். என்றாலும் வில்லியம் கொஞ்சகாலம் பாரீசு நகரில் அவரைச் சொற்பொழிவாற்றவிடாமல் தடுத்தார். எனவே அபேலார்டு மீண்டும் மேலூன் பள்ளியைத் தொடங்க வேண்டியதாயிற்று. பிறகு அவர் 1110-12களில் அதைப் பாரீசுக்கு இடமாற்றினாலும் நோத்ரே தோமைத் தவிர்த்து மாண்டேன் புனித ஜெனிவீவேயிலேயே நடாத்தினார்.[7]

இணைமுரண் மெய்யியல் வாதங்களில் வெற்றிகண்டதும், அவர் இறையியலில் கருத்தைச் செலுத்தலானார். 1113இல் இலாவோன் சென்று அங்கு அன்செல்மிடம் கிறித்துவ நெறிமுறையிலும் விவிலியத்தின் exegesis பிரிவிலும் அவராற்றிய சொற்பொழிவுகளைக் கேட்டார்.[3] அவரது மனம் அதில் நிறைவு காணாததால் எசேக்கியேல் நூலைப் பற்றி தானே புதுமையாக சொற்பொழிவாற்றத் தொடங்கினார். அன்செல்ம் அதைத் தடுக்கவே மீண்டும் அவர் பாரீசுக்குத் திரும்பி, 1115இல் நோத்ரேதோமின் ஆசிரியரானார். அப்போது அவர் பாரீசு தழுவியிருந்த சென்சு கட்டளைக்கும் (Canon of Sens) தலைமையேற்றார்.[4]

எலாயிசு/காதல் வாழ்க்கை[தொகு]

"அபேலார்டும் எலாயிசும்", ரொமான் டி லா ரோசின் கையெழுத்துப்படி, 14ஆம் நூற்றாண்டு

எலாயிசு தனது மாமாவான புல்பெர்ட்டின் காப்பில் நோத்ரே தாமில் வாழ்ந்துவரும்போது அவருக்கும் அபேலார்டுக்கும் காதல் தொடர்பு 1115-16 களில் அரும்பியுள்ளது. எலாயிசு அப்போது கிரேக்க, இலத்தீன, எபிரேயச் செவ்வியல் இலக்கியங்களில் உயர்ந்த புலமை பெற்றிருந்தார். அந்நாட்களில் அபேலார்டுங்கூட எப்போதும் மாணவர்குழாம் சூழ ஈடும் இணையுமற்ற புகழ்மிக்க மெய்யியலளராகப் பெயர்பெற்றிருந்தார். அபேலார்டின் வெற்றிச் செருக்கை அறிந்த புல்பெர்ட் அவர்களது காதலில் குறுக்கிட்டுத் தடுத்தார்.[4]

"அபேலார்டும் எலாயிசும், ஆசிரியர் புல்பர்ட் வியப்பில்", 1819 ஓவியம்

இருந்தாலும் இருவரும் மறைமுகமாக அடிக்கடி சந்தித்தனர். இடையில் எலாயிசு கருவுறவே அபேலார்டு பிரித்தானியில் இருந்த தன் வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்தார். அங்கு அவர் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அதற்கு "ஆஸ்ட்ரோலேப்" (Astrolab, விண்ணாய்வகன்) என்று பெயரிட்டார்.]].[3][4]

புல்பெர்ட்டைப் பழிவாங்க இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமென அபேலார்டு கூற, அதை எலாயிசு முதலில் எதிர்த்தாலும், பிறகு இருவரும் மணம்புரிந்து கொண்டனர். புல்பெர்ட் அவர்களது திருமணச் செய்தியை அம்பலப்படுத்தியதும் அவரிடமிருந்து எலாயிசைக் காப்பாற்றிட, எலாயிசு பிறந்து வளர்ந்த அர்கனேத்துல் கன்னிமாடத்துக்கு அனுப்பிவைத்தார். அங்கு நாத்திகரான அவர் விரும்பாதபோதும், கன்னிமாடப்பெண் உடையணிந்து, வாழ நேர்ந்துள்ளது.

அபேலார்டு எலாயிசைத் தவிர்ப்பதற்காகவே கன்னிமடத்துக்கு அனுப்பியதாக்க் கருதிய புல்பெர்ட் முரடர்களை அனுப்பி அபேலார்டின் வீட்டையுடைத்து அவரைத் தாக்கச் செய்தார். அதுகண்டு வெகுண்ட அபேலார்டு மடத் துறவியானார். எலாயிசையும் கன்னிமாடத்தில் கன்னிகையாகச் சேரச் சொன்னார். எலாயிசு சமயம் எதையும் தான் விரும்பாததால் சேரவியலாதென மறுத்துள்ளார்.[4]

பிற்கால வாழ்க்கை[தொகு]

புனிதர் டெனீசு அபேயில் 40 அகவையான அபேலார்டு அவரது கண்ணோட்டங்கள் எடுபடாமல் போகவே முனிவராகத் தன்னைப் புதைத்து அடக்கம் செய்துகொள்ள முயன்றுள்ளார்.[8] பிறகு, கிலாயிசுட்டரிலும் மதிப்பிழக்கவே, மெல்ல மெல்ல ஆய்வில் மீண்டும் இறங்கலானார். உடனடித் தேவையான நூல்களை வெளியிட்டு பேராட்சியின் அறியப்படாதவொரு மடவளாகத்தில் தனது சிந்தனைப் பள்ளியை மீண்டும் தொடங்கினார். இப்போது அவரது விரிவுரைகள் இறையுணர்வில் திளைத்தன. இந்த இறையியல் விரிவுரைகளையும் ஏரணவியல் உரைகளையும் மீண்டும் மக்களும் மாணவரும் கேட்கலாயினர். அவரது பழைய செல்வாக்கும் மாணவர் குழாமும் புத்துயிர்ப்பு பெற்றன, என்றாலும் அவருக்குப் பல பகைவர்களும் இருந்தனர். அவர்களை முனைப்போடு எதிர்க்க அவரால் முடியவில்லை. விவிலியத்தையும் சமய நிறுவனமான திருச்சபையின் தலைவர்களையும் பற்றிய ஆய்வுகளைப் பயன்படுத்தி அப்போது நிலவிய ஒருங்கியைபின்மைகளைத் தொகுத்து நூலாக்கினார். மேலும் அந்த நூலுக்கு "ஆம் ஆனால் இல்லை" என்று தலைப்பிட்டார்.[3]

Theologia Summi Boni எனும் இறையியல் விரிவுரைகளை வெளியிட்டதுமே அவரது எதிரிகள் மும்மைசார் வறட்டுவாதம் குறித்த அவரது பகுத்தறிவுவாத விளக்கங்களைக் கண்டிக்கலாயினர். இலாவோன் நகர அன்செல்மின் மாணவர்களும் இரீம்சு நகர அல்பெரிக்கும் உலோம்பார்டி நகர உலோதுஃபும் அபேலார்டின் மீது 1121இல் சோயிசான்சில் ஏற்பாடு செய்திருந்த ஆட்சிக் கூட்டத்தில் சபால்லியசுவை பழித்ததாகக் கண்டித்து நடவடிக்கை எடுக்கலாயினர். அவர்கள் தவறான வழிமுறைகளைக் கடைப்பிடித்து அவரது பயிற்றுதலுக்கு அலுவல் சார்ந்த கண்டனத்தை உருவாக்கி அவரது Theologia நூலையும் அவரைக்கொண்டே எரிக்கவைத்தனர். அவரது மட வளாகம் தவிர்த்த மற்ற மட வளாகங்களில் தொடர்ந்து நுழையவொட்டமல் தண்டித்தனர். என்றாலும் இந்த ஒறுப்பை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததாம், ஏனெனில் சோயிசான்சில் உள்ள புனித மெடார்டு மட்த்தில் சில நாட்களே தங்கிவிட்டு, மீண்டும் அபேலார்டு புனித டெனீசு மடத்துக்கு மீண்டும் திரும்பிவிட்டார்.[5]

என்றாலும் தனது டெனீசு மட வளாகத்துக்குள்ளேயே முன்புபோல அவரது வாழ்க்கை அமைதியாக அமையவில்லை. இதற்கு ஒருவகையில் அவரேதான் காரணம். இவர் மடத் துறவிகளைப் போல பாவனை செய்து அதில் ஒரு குரூர இன்பம் காணத் தொடங்கியுள்ளார். காட்டாக பேடை (ஒரு துறவி) விளையாட்டுபோல புனித டெனீசு மடத்தை ஏற்படுத்தியதாக நம்பப்பட்ட நிறுவனரை, அவர்தான் நிறுவினார் என்பதை, மெய்ப்பித்துக் காட்டச் சொன்னார். இது அவருக்குப் பெரும் சிக்கலை வரவழைத்து விட்டது. அரியொபகைட் டயொனீசியசு கோரிந்தின் ஆயராக இருந்தவர். ஆனால் மற்ற துறவிகள் அபாட் இதூயின் கூற்றை நம்பி அவர் ஏதென்சின் ஆயராக இருந்தவர் என்றனர். இந்த வரலாற்றுப் புரளி பற்றிய அலர் அவரைத் தவிர்க்க இயலாதபடி அரசுக் கண்டனத்துக்கு உள்ளாக்கியது. அபேல்லர்டு அபாட் ஆடமுக்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதினார். அதில் அவர் பேடு சார்பில் Eusebius of Caesarea's Historia Ecclesiastica கூறும் செய்திக்காக வாதிட்டார். மேலும் புனித ஜெரோமின் கூற்றின்படி கோரிந்தின் ஆயரான டயோனிசியசு, அபேயை நிறுவிய ஏதெசின் பிஷப்பான அரோபகைட் டயோனிசியசும் வேறு வேறு என வாதிட்டார். என்றாலும் பேடு சார்பில் அரோபகைட் கொரிந்தின் ஆயராக ஒருவேளை இருந்திருக்கலாம் என்றார். டெனீசு பிரான்சு நாட்டரசின் புரவலோம்பு முனிவராக விளங்கியவர். எனவே, அரசர் ஆடம் டெனீசு மடத்தையும் பிரெஞ்சு அரசையும் அபேலார்டு கேவலப்படுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எனவே அவரது மடவாழ்க்கை பொறுமையின் எல்லையைத் தாண்டவே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.[7]

பாரிசில் உள்ள அபேலார்டுவின் சிலை

அபேலார்டு தன் நண்பரான புனித ஆயவுல் மடவளாகத்தில் தங்கினார். பிறகு 1122 மார்ச்சில் பெற்று ஆடம் அபாட் இறந்ததும் சுகர் என்ற புதிய அபாட்டிடம் அவர் விரும்பும் தனி இடத்தில் வாழ இசைவு பெற்றுள்ளார். அதன்படி சாபகினேவில் நோகென்-சுர்-சைனில் சுள்ளி, மிலாறுகளால் வேய்ந்த குடிலைக் கட்டித் துறவியாக சொற்பொழிவாற்றி வாழலானார். அவரது பின்னடைவை அறிந்த மாணவர்கள் அதைச் சுற்றிலும் கூடாரங்களும் குடிசைகளும் எழுப்பி அந்தக் கடுஞ்சூழலை அழகாக்க முயன்றனர். அங்கு அவர் தன் கல்விப்பணியைத் தொடரலானார். பிறகு அது கல்லாலும் மரத்தாலும் மீளக் கட்டி எழுப்பப்பட்டது. அவரிடம் பராக்கிளீட் சொற்பொழிவகமாக அளிக்கப்பட்டது.[7]

அவர் அங்கு 5 ஆண்டுகள் தங்கி இருந்தார். மடத் துறவியாக அவர் சமயம்சாரா கலைகளைப் பாடம் எடுக்கவே, சமயஞ்சார்ந்த மற்றவரால் வெறுத்து எதிர்க்கப்படலானார். அதனால் அவர் அப்போது ஒட்டுமொத்தமாகக் கிறித்துவத்தில் இருந்தே வெளியேறி விடுவதாகக் கூறியுள்ளார்.[9] எனவே அபேலார்டு அங்கிருந்து வெளியேறி வேறு புகலிடம் காண விரும்பினார். 1126-1128 இடைக்காலத்தில் நெடுந்தொலைவுக்கப்பால் தாழ்பிரித்தானிக் கடற்கரையில் இருந்த புனித கில்டாசு-தெ-உரூயிசு அபேயினைத் தலைமை தாங்க அழைக்கப்படவே அங்கு சென்றார். அந்த இடம் மிகவும் கடுமையான இடமாகவும் குற்றவாளிகளின் தாக்குதலுள்ள இடமாகவும் விளங்கியது. தங்கிய வீடோ காட்டுத்தனமானதாகவும் ஒழுங்கு குலைந்த்தாகவும் இருந்த்து.[7] அங்கும் கூட சமூகத்துடனான உறவு சீராக அமையவில்லை.[9]

இதற்குள் மீண்டும் ஃஎலாயிசுடன் தொடர்பு ஏற்பட்டது. 1129 ஏப்பிரலில் புனித டெனீசின் அபாட் சுகர் தன் வளாகத்தில் கன்னிகைத் துரவிகளையும் சேர்த்துக்கொள்ளும் திட்டத்தில் வெற்றிகண்டார். டெனீசு சொத்துகளைக் கைப்பற்ற, அர்கண்ட்யூலில் வெளியேற்றப்பட்ட ஃஎலாயிசை அங்கு சேரவைத்தார்.ஃஎலாயிசு கன்னிகைத் துறவிகளுக்காக உருவாக்கப்பட்ட புது அமைப்பான பராக்கிளீட்டின் தலைமையை ஏற்றார். அந்தப் புது குழுமத்தின் அபாட்டாக அபேலார்டு பதவி ஏற்றார். அப்போது அவர்களுக்கான வாழ்க்கை ஏற்பு வழிமுறைகளைத் தக்க விதிமுறைகளுடன் உருவாக்கினார்.; இதி அவர் இலக்கியக் கல்வியை வலியுறுத்தினார். அவரே இயற்றிய இறைப்பாடல்களையும் வழங்கினார்.1130களின் தொடக்கத்தில் அவரும் ஃஎலாயிசு தம் காதல் கடிதங்களையும் சமயப் பகிர்வுக் கடிதங்களையும் திரட்டிஅச்சேற்றினர்.[9]

Abelard receives the monastery of the Paraclete Héloïse (1129)

புனித கிலைடாசில் வெற்றிபெற முடியாமையால், மீண்டும் அவர் பொது சொற்பொழிவற்றலானார் (பிறகு சில ஆண்டுகள் அலுவலுக்காகப் புனித கிலைடாசிலேயே தஙியிருந்தாலும்). அப்போது அவர் என்ன செய்தார் என்று தெரியாது. ஆனால் 1136இல் இணைமுரணியல் குறித்து உரையாற்றியதைப் பற்றி சாலிசுபரி நகர ஜான் கேள்விப்பட்டுள்ளார்.அவர் ஒருவேளை பாரீசுக்குத் திரும்பிவந்து மாண்டெகு புனித ஜெனீவிவே இல் தன் கல்விப்பணியைத் தொடர்ந்திருக்கலாம்.வார்ப்புரு:சாலிசுபரி ஜானின் சான்றுப்படி ஒருவேளை அவர் விவிலியம், கிறித்துவ நெறிகள், அறவியல் மட்டும் பயிற்றுவித்திருக்கலாம். பிறகு அவர், Theologia நூலின் அடுத்த பகுதிகளை எழுதலானார். அதில் மும்மை குறித்த நம்பிக்கை வாயில்களைப் பற்றி ஆய்வு செய்து விவரித்தார். பண்டைய செவ்வியல் பேகனிய மெய்யியலாளரைக் கிறித்துவ இறைவெளிப்பாட்டை பகுத்தறிவு முறையில் அணுகி விளக்கியதற்காகப் பெரிதும் பாராட்டலானார்.[9]

இதற்கிடையில் அபேலார்டு மற்றபிற நூல்களோடு Historia Calamitatum என்ற நூலையும் எழுதினார். இது ஃஎலாயிசைப் பெரிது அதிர்த்துள்ளது. அவர் முதல் கடிதமொன்றை அபேலார்டுக்கு எழுதினார். அதில் கனிந்த ஃஎலாயிசின் மாந்த உணர்ச்சிப் பெருக்கும் பெண்மையின் மென்காதலும் இன்றும் நினைக்கப்படுகின்றன;[10] முதல் கடித்த்திற்குப் பிறகு மேலும் இரண்டு கடிதங்களையும் ஃஎலாயிசு வரைந்துள்ளார். அதில் அவர் ஓர் உடன்பிறப்பாக (அண்ணணும் தங்கையும் போல) வேலையை விட்டுவிட இசைந்துள்ளார்.அதற்காக அவரை அபேலார்டு பாராட்டியுள்ளார். 1140இற்கு முன் அவர் தன் Ethica or Scito te ipsum (உன்னை உணர்) என்ற அரிய நூலை வெளியிட்டுள்ளார். இதில் அவர் பாவம் குறித்து ஆய்வு செய்கிறார். மாந்தர் செயல்களுக்காக அல்லாமல் உள்ளெண்ணங்களுக்காகவே தீர்ப்பளிக்கப்படுகின்றனர் என வாதிடுகிறார்..[3] இக்கால கட்டத்தில் Dialogus inter Philosophum, Judaeum et Christianum (Dialogue between a Philosopher, a Jew, and a Christian), Expositio in Epistolam ad Romanos நூல்களையும், ”உரோமர்களுக்கான புனித பவுலின் மடல்” என்ற பனுவலுக்கு உரையும் எழுதினார். இவற்றில் கிறித்துவின் வாழ்க்கைக்கான பொருள் பற்றி மேலும் விரிவாகப் புலப்படுத்தியுள்ளார்.[3]

புனித பெர்னார்டுடனான முரண்பாடுகள்[தொகு]

அபேலார்டு இறுதியாகத் தனது ஆசிரியத் தொழிலையும் கைவிட வேண்டிய மற்றொரு அறைகூவலையும் சந்திக்க நேர்ந்தது. பிறகு 1136 முதல் 1141 வரை அவர் அனைத்து விரிவுரைகளையும் கற்பித்தாரா அல்லது ஏரணவியலைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை மட்டும் பயிற்றுவித்தாரா என்பது புலப்படவில்லை. அபேலார்டின் கல்வியில் உள்ள நிந்திப்புகளாகத் தான் கருதுவதாகத் தான் கண்டுபிடித்தவற்றைக் காட்டி புனித திஎர்ய் சார்ந்த வில்லியம் இவர்பேரில் நடவடிக்கை எடுக்கலானார். அவற்றை மறுத்து அபேலார்டு 1140 கோடையில் சார்த்ரே பஷப்புக்கும் கிலேர்வாக்சின் பெர்னார்டுக்கும் எழுதியுள்ளார். ஆனால் அதே நேரத்தில், பெர்னார்டின் தூண்டுதலின் பேரில், மற்றொரு இறையியலாரான மாரிக்னி நகரத் தாமசும் அபேலார்டு செய்ததாகக் கூறப்படும் நிந்திப்புகளின் பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார். பெர்னார்டின் முதன்மையான தாக்கீது இது தான். அபேலார்டு எங்கு ஏரணவியலைப் பயன்படுத்தக் கூடாதோ அங்கே பயன்படுத்தினார், அப்படி செய்தது தவறு என்பது தான்.[11] பெர்னார்டின் கடும்நெருக்கடிக்குப் பிறகும் அபேலார்டு தன்மிதானக் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறும்படிக் கோரினார். அல்லாவிட்டால், அவற்றை 1141 ஜூன் 2இல் நிகழவுள்ள சர்ச்சுகளின் மன்றக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவிக்கச் சொன்னார். இதனால் அபேலார்டு தன்னைக் குற்றத் தரப்பாக ஏற்று பழிக்கான குற்றச்சாட்டுகளை மருத்து பதில் அளிக்கவேண்டிய நிலைக்குத் தன்னைத்தானே ஆளாக்கிக்கொண்டார். பெர்னார்டு இவ்வகை நெருக்கடியை நயமாகத் தவிர்த்துவிட்டார். என்றாலும் மன்றம் கூடுவதற்கு முன்நாளே அங்குவந்து குழுமியிருந்த பிஷப்புகளை அழைத்து ஒவ்வொருவராக அபேலார்டை, அவரது பேரிலான ஒவ்வொரு நிந்திப்பையும் சொல்லிக் கண்டிக்கும்படி ஒப்பவைத்துவிட்டார். மறுநாள் அபேலார்டு மன்றத்தில் தோன்றியபோது அவர் பேரிலான இறைநிந்திப்புகளுக்கான கண்டன முற்கோள்கள் தரப்பட்டன.[12]

இந்தக் கண்டனங்களுக்கு விடையிறுக்காமல் அபேலார்டு மன்றத்தை விட்டகன்று, திருத்தந்தை தனக்கு ஆதரவாக இருப்பார் என நம்பி, திருத்தந்தையிடம் முறையிட உரோமைக்குச் சென்றார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துவிட்டது. 1141 ஜூலை 16இல் திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட் இவரையும் இவரது மாணாக்கர்களயும் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கினார். அபேலார்டும் அவரைப் பின்பற்றுபவர்களும் இனி தம் மடத்துக்குள்ளேயே எப்போதும் இருக்கவும் அமைதிகாக்கவும் ஆணையிட்டார். திருத்தந்தையின் கண்டனம் ஃபிரான்சை அடையும் முன்பே அபேலார்டு இடையில் குளூனிக்குச் சென்றார். இந்தத் தண்டனையில் இருந்து குலூனி ஆதீனத்தலைவரான வணக்கத்திற்குறிய பீட்டரால் அபேலார்டு காப்பாற்றப்பட்டார். பீட்டர் அபேலார்டின் முதிர் அகவையைச் சுட்டிக்காட்டி தன் குளூனி மட எல்லைக்குள்ளேயே அவர் தங்க ஒப்புதல் அளித்ததால் அவரின் தண்டனையை தள்ளுபடி செய்யும்படி திருத்தந்தையிடம் கோரிப்பெற்றார். பெர்னார்டிடமும் பேசி உடன்பாடு ஏற்படச்செய்தார். இதன் பின்னர் அபேலார்டு தண்டனைபெற்ற திரிபுக் கொள்கைகளையாளராகக் கருதப்படாமல் மதிப்புள்ள மதிநுட்பப் புலமையாளராக நடத்தப்பட்ட்டார். பிறகு இறப்புவரை தன் இறுதி வாழ்நாட்களைச் சலான்-சுர்-சவோனில் உள்ள புனித மார்சல் மட வளாகத்தில் கழித்தார். இறப்பதற்கு முன்பு இவரின் கடைசியாக "எனக்குத் தெரியாது" என்று கூறினார் என்பர்.[13] இறுதியில் காய்ச்சலும், தோல்நோயும் (ஸ்கர்வியாக இருக்கலாம்) கடுமையாகத் தாக்கவே 1142 ஏப்பிரல் 21இல் இயற்கை எய்தினார்.[12][14]

இசை[தொகு]

அபேலார்டு சிறந்த கவிஞரும் இசையமைப்பாளரும் ஆவார். ஃஎலாயிசுக்காக கொண்டாட்டம் மிக்க காதல்கவிதைகளுக்கு இசை மைத்துள்ளார். அவை இப்போது கிடைக்கவில்லை.பெயரற்ற தொகுப்பில் இருந்து அப்பாடல்களை இன்ங்காணமுடியவில்லை. ஃஎலாயிசு தன் கடிதங்களில் இப்பாடல்களைப் பெரிதும் பாராட்டியுள்ளார்: "மொழியும் இசையும் வனப்பும் இனிமையும் கனிந்தவை. படிக்காத பாமரரையும் இசையின் மென்மையும் கவர்ச்சியும் ஈர்க்கவல்லவை".[15]

சமயக் குழுமலூக்கான வழிபாட்டுப் பாடநூலை இயற்றியுள்ளார். இதில் ஃஎலாயிசு பங்குபற்றியுள்ளார். இது 1130ஆம் ஆண்டுக்குப் பிறகு இயற்றப்பட்டுள்ளது. இவை அக்காலப் பாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. இதைப் கிளேரிவாக்சின் பெர்னார்டு அவற்றிலஃ அபேலார்டு புத்தம்புதிய சீரிசைவான பண்களைப் பயன்படுத்தியுள்ளதaக்க் கூறுகிறார். இப்பாடல்கள் யாப்பால் தொகுக்கப்பட்டிருந்தன. எனவெ இவற்றில் இருந்து சிலவற்றை மட்டுமே பயன்படுத்தமுடியும். O quanta qualia என்ற மெல்லிசைப் பாடல் மட்டுமே இவ்வழிபாட்டுப் பாடல்களீல் இருந்து எஞ்சியுள்ளது.[15]

அபேலார்டு பின்வரும் ஆறு விவிலிய (இரங்கல்களை) planctus யாப்பில் இயற்றியுள்ளார்.:

  • Planctus Dinae filiae Iacob; inc.: Abrahae proles Israel nata (Planctus I)
  • Planctus Iacob super filios suos; inc.: Infelices filii, patri nati misero (Planctus II)
  • Planctus virginum Israel super filia Jepte Galadite; inc.: Ad festas choreas celibes (Planctus III)
  • Planctus Israel super Samson; inc.: Abissus vere multa (Planctus IV)
  • Planctus David super Abner, filio Neronis, quem Ioab occidit; inc.: Abner fidelissime (Planctus V)
  • Planctus David super Saul et Jonatha; inc.: Dolorum solatium (Planctus VI).

கிடைக்கும் கையெழுத்துப் படிகளில் உள்ளவை diastematic பண்ணில் அமைந்த பதிகங்களாக உள்ளன. எனவே இவற்றை ஒலிபெயர்ப்பது அரிதாக உள்ளது. Planctus VI இன் யாப்பு மட்டுமே சதுரப் பண்ணில் இந்நாட்களில் குறிக்க முடிகிறது. Planctus யாப்பு வடிவம் பின்னர் தோன்றிய இலாயி வடிவத்தை வளர்த்தது. இந்தப் பாடல் வடிவம் 13, 14ஆம் நூற்றாண்டுகளில் பரவலாக வழக்கில் இருந்தது.

இன்று கிடைக்கும் மெல்லிசைப் பாடல்கள் நெகிழ்வும் உணர்ச்சியும் ததும்ப, நயமும் புனைவுநுட்பமும் பொருந்தி அவரது கவிதைகளைப் போலவே பாராட்டப் படுகின்றன."[16]

மெய்யியல் சிந்தனை[தொகு]

அபேலார்டின் தனிச்சிறப்பே முன்னெவரும் செய்திராத அளவுக்குப் புலமைவாத மரபை முன்னெடுத்ததே என்பர்.குறிப்பாக அதற்கு முன்பு நிலவிய தாந்தோன்றிப்போக்குள்ள குறுக்குமறுக்கான வாத நெறிமுறைக்கெதிராக தெளிவான உருவம் வாய்ந்த பகுத்தறிவார்ந்த விளக்க நெறிமுறையை வளர்த்தெடுத்ததே அவரது அரிய பணியாகும். அவரது தனித்தனியான விளக்கங்கள் அப்போதைக்கு கண்டனத்துக்குள்ளானாலும் 13ஆம் நூற்றாண்டு தேவாலயத் தலைமையின் ஒப்புதலுடன் பிற்காலத்தில் விரிவிபடுத்திய சிந்தனையின் பொதுத் திட்டத்தின் நோக்கில் இருந்து சற்றும் மாறுபடாத தன்மையிலேயே அவரது சிந்தனைப் போக்கு உருவாகியது. அவர் அரிசுட்ட்டாட்டிலின் மெய்யியலை வளர்த்தெடுத்து நிலைநிறுத்த பெருமுயற்சி எடுத்தார். அவருக்குப் பிறகான அரைநூற்றாண்டிற்குள் அரிசுட்டாட்டிலின் சிந்தனைப் போக்கு ஐரோப்பாவில் ஆழமாகக் காலூன்றியது. அந்தக் காலகட்டத்தில் தான் அந்தக் கிரேக்கச் சிந்தனையாளரின் அனைத்து நூல்களும் ஐரோப்பாவில் எல்லாருக்கும் கிடைக்கத் தொடங்கியது. அபேலார்டுக்கு முன்பு பிளாட்டோவின் சிந்தனைப் போக்கே நடப்பில் பரவலாக நிலவியது.

புலமைவாதம் ஐரோப்பியாவில் இருந்த இடைக்காலப் பல்கலைக்கழகங்களில் கல்வியாளர்களால் 1100 முதல் 1700 வரை பின்பற்றப்பட்ட உய்யச் சிந்தனை (Critical thought) முறையாகும் அக்காலத்தே நிலவிய பன்முகச் சூழலில் வறட்டுவாதத்தை தெளிவாக்கவும் காப்பாற்றவும் பயன்படுத்திய திட்ட வழிமுறையாகும். தொடக்க கால ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் கிறித்தவ ஓர்மைப் பள்ளிச் சிந்தனைகளுக்கு விலகியபடி கிளைத்தெழுந்தது..[1] மேலைஉலகில் பல்கலைக்கழகங்கள் எனக் கருதத் தக்க நிறுவனங்கள் கலை, சட்டம், மருத்துவம், இறையியல் ஆகிய புலங்களைப் பயிற்றுவிக்க பிந்தைய 11ஆம் நூற்றாண்டிலும் 12ஆம் நூற்றாண்டிலும் இத்தாலி, ஃபிரான்சு, இசுபெயின் ஆகிய நாடுகளில் தோன்றின.[2] இவை சலேமிதானா மருத்துவப் பள்ளி, பொலோகுனா பல்கலைக்கழகம், பாரிசுப் பல்கலைக்கழகம் என்பவையாகும். அவை எந்நாளில் இருந்து பல்கலைக்கழகங்களாகச் செயலாற்றின எனத் தெரியாது. என்றாலும் கத்தோலிக்கக் கோயில்களாலும் பிற சமய நெறிகளாலும் கடைபிடிக்கப்பட்ட உயர்கல்வி சார்ந்த பொதுப்பாட்த் திட்டங்கள் பயனுள்ள வழிகாட்டிகளாகும்.

இணைமுரணியலுக்கப்பால் அபேலார்டின் மெய்யியல் சிந்தனை அறவியலில் செயல்முனைவோடு அமைந்தது. மாந்தச் செயல்பாட்டின் அற மதிப்பு தனிமாந்தனின் அக எண்ண விருப்பத்தை அல்லது உள்நோக்கைச் சார்ந்தது என்பதை வலியுறுத்தினார். இந்தப் போக்கிலான அவரது சிந்தனை இக்காலக் கணிப்பை நிகர்த்த்தாய் இருந்த்து. ஏனெனில், இவருக்குப் பிந்திய புலமைவாதப் பின்னோடிகள எவருமே அரிசுட்டாட்டிலின் அறவியல் புலத்தின் உசாவல்களைக் கற்றிருந்த போதிலும், தூய மெய்யியல் வாதத்தைப் பயன்படுத்தி, அறவியல் நெறிமுறைகளையும் விதிகளையும் உருவாக்குவதில் சற்றும் கூட முன்னேறவில்லை.

ஃஇப்போ நகர அகசுட்டினின் முதற்பாவ நெறிமுறைக்கு மாறாக, போப்பு பேதை-III அவர்கள் அபேலார்டின் இடைநிலைத் துறக்க நெறிமுறையை ஏற்றுக்கொண்டார். வாத்திகனுங்கூட பாவசுநானம் பெறாத குழந்தைகள் நேரடியாக நரகத்துக்குச் செல்லாமல் இடைநிலைத் துறக்கத்துக்குச் (Limbus Infinitum) செல்லும் நெறிமுறையை ஏற்றது. அங்கே அவர்கள் வலியேதும் உறாமல் இயற்கையான மகிழ்ச்சியோடு இருப்பர் என்பதை ஒப்புக்கொண்டது.. என்றாலும் அவர்கட்கு உயரியற்கை அருட்களிப்பேதும் கிடைக்காது.[17]

மேலும் அவர் அறத் தாக்கக் கழுவாய்த் தேடல் கோட்பாட்டினை ஏற்று அதைத் தழுவியிருந்தார்.

இவர் பொதுமைகள் கோட்பாட்டினை எதிர்த்து,பொருள்முதல் வாதத்துக்கு நெருக்கமான கருத்துரு வாதத்தை உருவாக்கியவர். இவர் சமய நம்பிக்கை பகுத்தறிவு சார்ந்த முற்கூற்றுகளுக்குள் அமையவேண்டும் என்றார்.எனவே தேவாலய நடைமுறையுடன் முரண்பட்டார்.இவரது முற்போக்கான கண்ணோட்டங்களைக் கத்தோலிக்கச் சமயமும் தேவாலயமும் கண்டித்தன.

மெய்யியல் நூல்கள்[தொகு]

Logica ingredientibus ("தொடக்கநிலைப் பயில்பவருக்கான அளவையியல்") 1121க்குள்ளேயே முற்றுபெற்றது (மிக முதன்மையான அளவையியல் நூல்)

• Petri Abaelardi Glossae in Porphyrium ("The Glosses of Peter Abailard on Porphyry"), 1120இல் இயற்றியது.

• Dialectica, 1115-16இல் இயற்றியது. . • Logica nostrorum petitioni sociorum ("Logic in response to the request of our comrades"), 1124-1125 கால இடைவெளியில் இயற்றியவை.

• Tractatus de intellectibus ("புரிதல் குறித்த ஆய்வு"), 1128க்கு முன்பு எழுதியது.

• Sic et Non ("ஆம்,இல்லையுந்தான்") (மெய்யியல், இறையியல் பற்றிய கிறித்தவ நூலாசிரியர்களின் மேற்கோள்கள்)

• Theologia 'Summi Boni', Theologia christiana, and Theologia 'scholarium'.(இறையியல் பற்றிய அவரது முதன்மையான நூல்கள்,1120-1149 கால இடைவெளியில் வெளியிடப்பட்டவை)

• Dialogus inter philosophum, Judaeum, et Christianum, (ஒரு யூதரிடமும் கிறித்தவரிடமும் நிகழ்த்திய உரையாடல்) 1136–1140

• Ethica or Scito Te Ipsum ("அறவியல்" அல்லது "ஒழுக்கம் அறிந்து கொள்ளுங்கள்”

பிற்காலத் தாக்கம்[தொகு]

சமகாலத்திலும் இடைக்கால மெய்யியல் சிந்தனைப் போக்கிலும் அபேலார்டு பெருஞ்செல்வாக்கு செலுத்தினார். ஆனால் இக்காலத்தில் அபேலார்டு அவரது ஃஎலாயிசுடனான காதல் உறவுக்காக மட்டுமே நினைவுகூரப் படுகிறார். 19ஆம் நூற்றாண்டுக்கு முன் 1721இல் அவரது சிறந்த நூலான Scito te ipsum மட்டுமே வெளியிடப்பட்டது. Ouvrages inedits d'Abelard என்ற நூல்திரட்டு அவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பால் 1836இல் வெளியிடப்பட்ட பிறகே ஆழமாக அபேலார்டின் மெய்யியல் நூல்கள் வாசிக்கப்பட்டன. நூல்திரட்டில் Sic et Non ("Yes and No") ஆகிய இறையியல் நூல்களில் இருந்து பல உள்ளடக்கக் குறிப்புகள் மேற்கோள்களாகத் தரப்பட்டிருந்தன. இவை விவாதத்துக்காக, பல பாதிரியார்களின் இறைநெறிமுறைகள் பற்றிய எதிரெதிர் கருத்துரைகளின் தொகுப்பாகும். இந்த வேறுபட்ட கருத்துரைகள் மீள்நோக்கீட்டுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் அவற்றைச் சரிகட்டுவதற்கான எவ்வகை முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதும் ஆர்வம் ஊட்டும் செய்தியாகும். இவற்றில் Dialectica, என்ற நூலும் அரிசுடாட்டிலின் ஏரணவியலுக்கான திறனாய்வுரைகளும் போர்பிரியும் அனிசிலசு மேனிலசு செவெரினசு போத்தியசுவும் கூட உள்ளடங்கும். நூல்திரட்டில் அடங்கிய De Generibus et Speciebus துணுக்குகளும் உளவியல் நூலான De Intellectibus (தனியாக Fragmens Philosophiques, vol. ii இல் வெளியிடப்பட்டது.) ஆகிய இரண்டும் இப்போது அபேலார்டினதல்ல எனவும் அவரது சிந்தனைப்பள்ளியால் பின்னர் உருவாக்கப்பட்டவை எனவும் கருதப்படுகின்றன. அவரது உண்மையான நூலான Glossulae super Porphyrium, 1930இல் தான் வெளியிடப்பட்டது. இதில் இருந்து பல உள்ளடக்கப் பகுதிகளை தனது Abelard என்ற வாழ்க்கை வரைவில் மேற்கோள்களாக சார்ள்ஸ் தெ இரேமுசத் தருகிறார்.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Peter Abelard".
  2. 2.0 2.1 Chambers Biographical Dictionary, ISBN 0-550-18022-2, ப. 3; Marenbon 2004, ப. 14.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Abelard, Peter". Encyclopedia Britannica (15th) I: A-ak Bayes. (2010). Chicago, IL: Encyclopedia Britannica Inc.. 25–26. ISBN 978-1-59339-837-8. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Abelard, Peter. Historia Calamitatum. http://www.fordham.edu/halsall/basis/abelard-histcal.html. பார்த்த நாள்: 7 December 2008. 
  5. 5.0 5.1 Marenbon 2004, ப. 15.
  6. Edward Cletus Sellner (2008). Finding the Monk Within: Great Monastic Values for Today. Paulist Press. பக். 238–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58768-048-9. http://books.google.com/books?id=xR7cxJ6mnboC&pg=PA238. 
  7. 7.0 7.1 7.2 7.3 Chisholm 1911.
  8. Kevin Guilfoy, Jeffrey E. Brower (2004). The Cambridge Companion To Abelard. Abelard and monastic reform: Cambridge University Press. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-77596-5. http://books.google.com/?id=jaj-JMThB4MC&pg=PA25&dq=abelard+became+a+monk#v=onepage&q=abelard%20became%20a%20monk&f=false. 
  9. 9.0 9.1 9.2 9.3 David Edward Luscombe. "Peter Abelard". Encyclopædia Britannica, Inc.
  10. Wheeler, Bonnie (2000). Listening to Héloïse: the voice of a twelfth-century woman. Palgrave Macmillan. பக். 150–151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-312-21354-1. http://books.google.com/?id=f4ETQPKFVwoC&pg=PA150&dq=Héloïse+first+letter+passion#v=onepage&q=Héloïse%20first%20letter%20passion&f=false. 
  11. John R. Sommerfeldt (2004). Bernard of Clairvaux on the Life of the Mind. Paulist Press. பக். 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780809142033. https://books.google.co.id/books?id=lj_CNqojMV8C. 
  12. 12.0 12.1 Marenbon 2004, ப. 17.
  13. Norman Davies (1996). Europe: A history. Oxford University Press. பக். 687. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-820171-7. http://books.google.com/books?id=jrVW9W9eiYMC. பார்த்த நாள்: 7 December 2008. 
  14. Donaldson, Norman and Betty (1980). How Did They Die?. Greenwich House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-517-40302-1. 
  15. 15.0 15.1 வார்ப்புரு:GroveOnline
  16. Oliver, Michael (1995). "Review: a CD of Abelard's music". Gramophone. Archived from the original on 9 டிசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 7 December 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |registration= ignored (help)
  17. வார்ப்புரு:Cite web url=http://www.vatican.va/roman curia/congregations/cfaith/cti documents/rc con cfaith doc 20070419 un-baptised-infants en.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியேர்_அபேலார்டு&oldid=3563405" இலிருந்து மீள்விக்கப்பட்டது