பாபிலோனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பபிலோனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாபிலோன் இராச்சியம் என்பது இன்றைய ஈராக் நாட்டுப் பகுதியில் பழைய காலத்தில் செழித்திருந்த மெசொப்பொத்தேமியாவின் மையத்தெற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பண்பாட்டுப் பகுதியைக் குறிக்கும். இதன் தலைநகரம் பாபிலோன் ஆகும். சுதந்திரமான பாபிலோனை நிறுவி அதன் முதல் மன்னனாக இருந்தவர் சுமுவாபும் என்னும் அமோரைட் மக்களின் தலைவர் ஆவார். பழைய அசிரியப் பேரரசின் முதலாம் எரிசம் மன்னரின் சமகாலத்தவரான இவர், கி.மு. 1894 ஆம் ஆண்டில், அயலில் இருந்த கசால்லு என்னும் நகர அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பாபிலோனைப் பிரித்துத் தனி அரசாக அறிவித்தார். அமோரைட்டுகளின் அரசரான அம்முராபி (கி.மு 1792 - 1750) என்பவர் அக்காத் பேரரசின் சில பகுதிகளையும் உள்ளடக்கிப் பேரரசொன்றை அமைத்தபோது பபிலோனியா ஒரு பலம் வாய்ந்த நாடாக உருவானது.[1]

இப்பேரரசு குறுகிய காலமே நிலைத்திருந்தது. பபிலோனியாவில், நிர்வாகத் தேவைகளுக்கு அக்காடிய மொழியையும், மதத் தேவைகளுக்கு அக்காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாது போய்விட்ட சுமேரிய மொழியையும் பயன்படுத்தினர். அக்காடிய, சுமேரிய மரபுகள் பபிலோனியப் பண்பாட்டுக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளன. வெளியார் ஆட்சி நிலவிய வேளைகளிற்கூட வெண்கலக் காலம் முழுவதிலும் தொடக்க இரும்புக் காலத்திலும் இந்தப் பகுதி ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்கியது. பாபிலோனியாவை ஒரு தனி அரசாக நிறுவி அதை முன்னிலைக்குக் கொண்டுவந்த அமோரைட்டுக்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அத்துடன், பாபிலோனியாவின் வரலாற்றில் பெரும் பகுதி, இன்னொரு மெசொப்பொத்தேமிய இனத்தவரான அசிரியர்கள் அல்லது காசிட்டுகள், ஈலத்தவர்கள் மற்றும் இட்டைட்டுகள், அரமேயர்கள், சால்டியர்கள் பாரசீகர்கள், கிரேக்கர்கள், பார்த்தியர்கள் போன்ற பாபிலோனுக்கு வெளி வம்சங்களைச் சேர்ந்தவர்களாலேயே ஆளப்பட்டது.

பாபிலோனியாவின் முக்கிய நகரங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Babylon
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபிலோனியா&oldid=3714945" இலிருந்து மீள்விக்கப்பட்டது