தனித்தமிழ் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால் தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும். தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும்.

சமற்கிருத சொற்களும் மணிப்பிரவாள அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள்[1], பாரதிதாசன், பெருஞ்சித்திரனார்[2], பரிதிமாற் கலைஞர், கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தனித்தமிழ் இயக்க வளர்ச்சி[தொகு]

தமிழ், மிகுந்த சொல்வளம் கொண்ட மொழி ஆகும். எந்தக் கருத்தையும் தன் வளத்தைக் கொண்டே சொல்லக்கூடிய ஆற்றல் இம்மொழிக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவது தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கமாகும். காலந்தோறும் தமிழ், புதுச் சொற்களை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது. வேர்ச்சொல் வளம் இம்மொழியில் மிகுந்துள்ளது. புதிய சொற்களைப் பொதுமக்களே ஆக்கும் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருப்பதால் கடந்த காலங்களில் பிறசொற்களின் துணையில்லாமலே இயங்கி வந்தது தனித்தமிழ். பொது மக்களின் மரபு அறிஞர்க்குள்ளும் இருப்பதால் அவர்கள் செவ்விய ஆக்கங்களைத் தங்கள் இலக்கியங்களில் பயன்படுத்தி, தமிழ் தனித்து இயங்குவதற்குப் பாதை அமைத்தனர்.

தனித்தமிழ்க் கொள்கை தோன்றியது ஏன்?[தொகு]

இடைக்காலத்தில் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு தோன்றியது. அது மணிப்பவளம் எனப்படும் மணிப்பிரவாளம் என்னும் பெயருடன் தோன்றியது. மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்று வடசொல் ஒன்றென அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்பவளம் என்னும் கலப்படத்தமிழ் நடையாகும்.

இத்தகைய நடையால் தமிழுக்குக் கேடுவிளையும் என்பதை உணர்ந்த அறிஞர் மறைமலை அடிகள் அதைத்தடுக்க முயன்றார். அதனால் தோன்றியது தனித்தமிழ்க் கொள்கையாகும். தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது பிறமொழிச்சொற்கள் தேவையில்லை என்பதை அவர் வலிமையாகச் சொன்னார்.

கால்டுவெல்லின் கண்டுபிடிப்பு[தொகு]

மறைமலையடிகளுக்கு முன் தனித்தமிழ்க் கொள்கைக்கு அரண் சேர்க்கும், மொழியியல் ஆராய்ச்சி இராபர்ட் கால்டுவெல் என்னும் வெளிநாட்டாரால் செய்யப்பட்டிருந்தது. கிபி 1838 இல் திருநெல்வேலிக்கு வந்த அவர் 50 ஆண்டுக்காலம் அங்குத்தங்கிக் கிறித்தவச் சமயப்பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியை வட மொழியுடனும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திராவிட மொழிகளுடனும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தார். அவருடைய ஆய்வு அதுவரை இருந்த மொழியியல் நம்பிக்கைகளை உடைத்தெறிந்தது.

"வடமொழியே பிறமொழிகளுக்குத் தாய், அதிலிருந்தே மற்றமொழிகள் தோன்றின, அது தேவமொழி" என்னும் கருத்துகளும் நம்பிக்கைகளும் வலிமையாகப் பரப்பப்பட்டிருந்தன. தமிழ் மொழி, வடமொழியின் துணை இல்லாமல் இயங்க இயலாது என்ற நம்பிக்கை வேர் ஊன்றியிருந்தது. ஆனால், கால்டுவெல்லின் ஆராய்ச்சி பல உண்மைகளை வெளிப்படுத்தியது.

வடமொழிக் குடும்பத்திலிருந்து தமிழ் வேறுபட்டது. அது, திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி. அதிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகள் தோன்றின. தமிழ் வடமொழியின் துணை இல்லாமல் தனித்தியங்கும் தன்மை வாய்ந்தது என்றும், தமிழ், வடமொழியின் கலப்பை எந்த அளவுக்கு நீக்குகிறதோ அந்த அளவுக்குத் தூய்மை அடைந்து சிறந்து விளங்கும் என்றும் அவர் கண்டுபிடித்து 1856 இல் ஒரு நூல் எழுதினார். அது, திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலாகும்[3]. "சிறந்தது எதற்கும் பார்ப்பன மூலங் கற்பிக்கும் தன்மை வடமொழிப்புலவர்களின் இயற்கை", என்னும் உண்மையையும் அவர் வெளியிட்டிருந்தார்.

மனோன்மணியம் சுந்தரனாரும் அத்தகையதொரு மொழியியல் கருத்தைத் தாம் இயற்றிய மனோன்மணியம் நாடகநூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலில் கூறியிருந்தார். அதில் "கன்னடம், களிதெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் என்னும் ஒரே வயிற்றில் தோன்றிய மொழிகள்" என்று கூறினார். "வடமொழி அழிந்து போன மொழி என்றும் தமிழ் என்றும் இளமையாக வாழும்மொழி" என்றும் பாடிய அவர் கருத்தும் மறைமலையடிகளுக்கு முன்னோடிக் கருத்துகளாக இருந்தன.

சென்னை ஒற்றுமைக்கழகம்[தொகு]

மனோன்மணியனாரின் காலத்தில் தமிழ்நாட்டில் தென்னாட்டு உணர்வு தோன்றிக் கொண்டிருந்தது. அது திராவிடம் என்னும் பெயரில் அரும்பத் தொடங்கியிருந்தது. அதற்குக் கரணியம் வடநாட்டுப் பேராயத்தின் (காங்கிரசு) நிலைப்பாடேயாகும். அப்போது அக்கட்சி அய்யர்கள், அய்யங்கார்கள் பிடியில் இருந்தது. அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பார்ப்பனர்கள். அரசுப் பதவிகள், பணிகள் அவர்களுக்கே சென்று சேர்ந்தன. பார்ப்பனர் அல்லாதவர்க்கு மிகச்சிறிய அளவில் மட்டுமே கிடைத்தது. ஆங்கில அரசு நிலவிய அக்காலத்தில் அரசுடன் உடன்பட்டுப்போய்த் தங்கள் ஆங்கில அறிவால் பல பெருநன்மைகளை அவர்களே அடைந்தார்கள். பார்ப்பனர் அல்லாதவர்க்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று எண்ணிய சில பெரியோர்கள் அதுபற்றித் திட்டமிட்டனர்.

அப்போது சென்னை ஒற்றுமைக் கழகம் என்னும் அமைப்பை முனைவர் நடேசன் (முதலியார்)ஏற்படுத்தினார். திராவிடர் சங்கம் என்ற ஓர் அமைப்பையும் அவர் நிறுவினார். அவர் நோக்கம் திராவிடர் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. அவருடைய முயற்சியில் சர்.பி.டி. தியாகராய(செட்டியா)ர், தாரவாத் நாராயண் நாயர் போன்றோர் ஒத்துழைப்பை அளித்தனர்.

1916 ஆம் ஆண்டில் "தென்னிந்திய மக்கள்மன்றம்" அமைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் "தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்" என்றானது. அவ்வாண்டில் சென்னைச் சட்டமன்றத்திலிருந்து தில்லிச் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் பி.என்.சர்மா,வி.எசு.சீனிவாச சாத்திரி ஆகிய பார்ப்பனர் இருவர் வெற்றி பெற்றனர். ஆனால் அதில்போட்டியிட்ட பார்ப்பனர் அல்லாத டாக்டர் டி.என். நாயர் தோல்வியடைந்தார். அவருடைய தோல்வியே புதிய இயக்கம் தோன்றவும் வழி வகுத்தது.

1920 இல் பார்ப்பனரல்லாதார்க்குத் தனியே அரசு வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாயிற்று. இவ்வாறு தோன்றிய உணர்வில் பதவி எண்ணம் பெரிதாக இருந்ததே ஒழிய மொழி உணர்வும் வரலாற்று உணர்வும் நாட்டு உணர்வும் பெரிதாக இடம் பெறவில்லை. மதச்சடங்கோ வடமொழியோ நால்வர்ணக் கொள்கையோ முற்றாக எதிர்க்கப் படவில்லை.

இந்நிலையில்தான் மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழிகளில் புலமை வாய்ந்தவர், ஆதலால்; ஆரியர்களின் மறை, உடன்கீழிருக்கை முதலியவற்றை நன்கு ஆய்ந்து உணர்ந்திருந்தார். அத்துடன் நில்லாது, இதழ்களில் எழுதியும், சொற்பொழிவுகள் செய்தும், அறிஞர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் அக்கருத்துகளைப் பரப்பிவந்தார்.

1905 ஆம்ஆண்டுக்கு முன்பிருந்தே தமிழர், ஆரியர்பற்றிய ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டு உழைத்து வந்தார். அவ்வாண்டு பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த 4 ஆம் தமிழ்க்கழக(சங்க)விழாவில் பேசிய அவர், தனது வலிமையான சொற்பொழிவு வாயிலாகவும் தனித்தமிழ் இயக்கக் கருத்துகளை வெளிப்படுத்தினார். ஆரியர்க்குத் தமிழர் கடமைப்பட்டிருக்கவில்லை, அவர்களுக்கு முற்பட்ட சிறந்த நாகரிகம் தமிழ்மக்கள் நாகரிகம் என்ற உண்மையை அவருடைய உரையில் நன்கு வெளிப்படுத்தினார். அங்கு வந்திருந்த அப்போதைய அரசவைப் புலவர் இரா.இராகவ அய்யங்கார்க்கு அவரின் கருத்துகள் பிடிக்காமல் போயின என்பதும் வரலாறு. வேதம் பலவற்றைத் தமிழர்களே உருவாக்கினர் என்னும் கருத்தையும் மறைமலையடிகள் வெளிப்படுத்தி வந்தார்.

மறைமலையடிகளுக்குத் தனித்தமிழ் எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது?[தொகு]

அவர் சிவனிய சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். முறையான வழிபாடும் அச்சிவனியக்கொள்கையைப் பரப்பும் பணியும் அவருடையதாக இருந்தன. அவர் பல்லவபுரத்தில் தம் மகளாருடன் ஒருநாள் உலவிக்கொண்டிருந்தார். பின்னர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய மகளார் நீலாம்பிகை அம்மையார் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து ஒரு பாடலை இனிமையாகப் பாடினார். மனமுருகிப் பாடிய அவர் பாட்டின் இடையே “தேகம்“ என்னும் ஒரு வடசொல் வருவதைக் கண்டு அதுபற்றித் தந்தையிடம் பேசினார். இப்பாட்டில் எல்லாச் சொற்களும் தமிழாய் இருக்கின்றன. ‘தேகம்’ என்னும் ஒருவடசொல் மட்டும் இருக்கிறது. அதையும் மாற்றினால் நன்றாக இருக்குமே என்று அவர்கள் உரையாடல் அமைந்தது. ‘தேகம்’ என்பதற்கு மாற்றாக "யாக்கை" என்னும் தனித்தமிழ்ச் சொல் இருந்தால் இனிமையாய் இருக்கும் என்று அடிகள் கூறினார். அவரின் மகளார், ‘தந்தையே இனிமேல் நாம் ஏன் வடசொற்களை நீக்கி முற்றிலும் தனித்தமிழைப் பயன்படுத்தக் கூடாது?’ என்று கேட்டார். இது 1916 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அது முதல் அப்படியே செய்ய எண்ணிப் பல மாற்றங்களை மறைமலையடிகள் செய்யத் தொடங்கினார்.

மறைமலையடிகளார் செய்த மாற்றங்கள் எவை?[தொகு]

அப்போது அவர் பெயரும் அவரின் பிள்ளைகளின் பெயர்களும் வடமொழியில் அமைந்திருந்தன. அவற்றை மாற்றும் செயலை முதலில் செய்தார். அவருடைய இயற்பெயர் வேதாசலம். துறவறத்துக்குப் பின் வேதாசல சுவாமிகள் என்று வழங்கப் பெற்றார். அதை மறைமலையடிகள் என்று மாற்றினார். அவருடைய பிள்ளைகள் பெயர்களும் அவ்வாறே அவர் மகள் நீலாவால் மாற்றப்பட்டன.

வடமொழிப்பெயர்கள் எவ்வாறு மாற்றப்பட்டன?[தொகு]

  • திருஞான சம்பந்தன் - அறிவுத் தொடர்பன்
  • மாணிக்கவாசகம் - மணிமொழி
  • சுந்தரமூர்த்தி - அழகுரு

என்று மாற்றப்பட்டன.

அவருடைய தங்கை பெயர் திரிபுர சுந்தரி - முந்நகரழகி என்று மாற்றப்பட்டது. மருமகன் பெயர் குஞ்சிதபாதம் - அது தூக்கிய திருவடியாயிற்று.

இத்தகைய மாற்றத்தை நிகழ்த்திய பாடல் எது?

பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான்மற வேனே.
               - திருவருட்பா 820 (2ஆம் திருமுறை, நமச்சிவாயப் பதிகம் அல்லது நமச்சிவாய சங்கீர்த்தன லகரி)

என்பதுதான் அந்தப் பாட்டு.

அவரின் முயற்சிகள் தொடர்ந்து பல மாற்றங்களை நிகழ்த்தின. அவர் நடத்திய மாத இதழ் ஞான சாகரம் - அறிவுக்கடல் என்றாயிற்று; அவர் நடத்திய சன்மார்க்கசங்கம் - பொதுநிலைக்கழகம் என்றாயிற்று;

ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் முதன்முறையாகத் தமிழ் நிலத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டன.அவற்றைத் தம் குடும்பத்தில் பயன்படுத்தி எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். அவருடைய கருத்துகள் மத மூடநம்பிக்கைகளையும் வேள்வி நிகழ்த்தல், ஆரியவழிபாடு முதலியவற்றையும் எதிர்த்தன. மரக்கறிஉணவுமுறையை அடிகள் வலியுறுத்தினார்.ஆரியர்களின் தவறான போக்குகளை அவர் சான்றுகளுடன் எடுத்துக்காட்டினார்.

தனித்தமிழ்க்கொள்கையை உருவாக்கிய மறைமலையடிகளுக்கு அவர்காலத்தில் சிறிது எதிர்ப்பும் இருந்தது. புலவர்கள் சிலரும் மொழியியலாளர் சிலரும் அந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எனினும் அவர் அக்கொள்கையைச் செழுமைப்படுத்த ஆர்வத்துடன் உழைத்து வந்தார். பல துறைகளில் நூல்கள் இயற்றி வெளியிட்டார். புதினம், நாடகம், பாடல், ஆராய்ச்சி அறிவியல், சமயம், மெய்ப்பொருள் என்னும் பலதுறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்தன. அவை சரியான தொடக்கத்தைத் தந்தன. அவர் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் அடிப்படைப் புரட்சியைத் தரவல்லது. எல்லாத்துறைகளிலும் ஊடுருவி அயன்மையை நீக்கக் கூடியது. ஆரியர் மட்டுமன்றிப் பிற அயலாரும் அவ்வியக்கத்தால் விலக்கப்பட்டனர்.

இனக்கலப்புக்குழப்பம்[தொகு]

ஆனால் தமிழ் நாட்டின் நிலை புதுமையானதாகவும் புதிரானதாகவும் அமைந்திருந்தது. இங்கே பிற்காலச்சோழர் காலத்திலிருந்தே இனக்கலப்பு நிகழ்ந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இனக்கலப்பாளர் பலர் தங்களைத் தூயதமிழராகக் காட்டிக்கொண்டனர். தமிழை ஆர்வத்துடன் கற்றனர். தமிழின் பெயரால் அதன் வாழ்வையும் வளர்ச்சியையும் முடிவுசெய்யும் ஆற்றல் நடுவங்களில் அவர்களின் வல்லமை மிகுதியாய் அமைந்து போய்விட்டது. உண்மையான தமிழர்கள் கல்வியிற் சிறந்து விளங்காமையாலும் தமிழைக்கல்லாமையாலும் அதை மேம்படுத்தும் திறமற்றவராய்த் தாழ்ந்து விட்டனர். இனக்கலப்பாளர் ஆளும் இனமாகித் தமிழாட்சி என்னும் பெயரில் எல்லா நன்மைகளையும் அடைந்து வருவாராயினர்.

மறைமலையடிகள் இயக்கம் தொடங்கியபோது இக்கருத்துகளில் நயன்மைக் கட்சி சிறிது கவனம் செலுத்தியது. எனினும் இயக்கம் நடத்தவில்லை. பார்ப்பன வல்லாண்மை குருகுலத்தில் வெளிப்பட்டபோதுதான் ஆரியம் எதிர்க்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் பேராய(காங்கிரசு)க் கட்சியில் இருந்தவர்களும் உணர்ந்தனர். சேரன்மாதேவியில் வ.வே.சு அய்யர் நால்வண்ணவெறியுடன் நடந்துகொண்டதும் வரதராசுலு நாயுடு அதை எதிர்த்ததும் 1925 அளவில் நிகழ்ந்தன.

பெரியாரின் விலகல்[தொகு]

அதைத்தொடர்ந்து ஈ.வே.ரா. பெரியார் அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னரே திராவிட இயக்கம் முகிழ்க்கத் தொடங்கியது.

பார்ப்பனர்களுக்கு அவர் எதிர்ப்புத்தெரிவிக்க மறைமலையடிகளின் ஆராய்ச்சியே பயன்பட்டது. அக்காலத்தில் மேடையில் பேசும்போது “பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்“ என்னும் மறைமலையடிகளில் நூலைக் கையில் வைத்துக் கொண்டு பேசுவது அவர் வழக்கம். அவருடைய இயக்கத்தாரும் அவருடைய கருத்துகளையே எடுத்துப் பரப்பி வந்தனர்.

மறைமலையடிகளைப் பின்பற்றியே தமிழ்த்திருமணம், தமிழர் மதம் ஆகிய கொள்கைகளைப் பெரியார் பரப்பினார். ஆரிய ஏமாற்று, மூடநம்பிக்கைகள், மதச்சடங்குகள், முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார்.

தி.மு.க[தொகு]

அவரிடமிருந்து பிரிந்து உருவான தி.மு.க. அதே கருத்துகளைப் பெரிய அளவில் மக்களிடத்தில் பரப்பியது. மக்களிடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தி.மு.க வினர் வடமொழியிலிருந்த தம் பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டனர். தமிழ்த் திருமண நிகழ்ச்சிகளை நடத்தினர்.

ஆரியர்க்கும் அவர்க்குத் துணைபோகும் பேராயத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போக்கு மக்களிடத்தில் நன்றாகப் பரவியது. பண்பாட்டு மீட்பும் தமிழ்க் காப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கின. தமிழறிஞர் மறைமலையடிகளின் எண்ணத்தைப் பொதுமக்களின் எண்ணங்களாக மாற்றி வாழ்க்கை முறை அடியோடு மாறுவதற்குத் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும், தி.க. வும் திமு.க.வும் கரணியராய் அமைந்தனர்.

தி.மு.க. ஆட்சியைக்கைப்பற்றும் வலிமை அடைந்தபோது தனித்தமிழ் நன்கு வளர்ந்தது. புதிய சொற்கள் வழக்கத்துக்கு வந்தன. தன்மதிப்புத் தமிழ்த்திருமணங்கள் சட்டக்காப்பைப் பெற்றன. தமிழ்வழிக்கல்விக்கு ஊக்கம் தரப்பட்டது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் முழக்கம் ஓங்கி ஒலித்தது. உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் என்னும் உணர்வு பொது மக்களிடத்தில் நன்றாகப்பரவியது.

மறைமலையடிகள் காலத்தில் அவரைப் போன்ற ஆற்றலுடன் வேர்ச்சொல் ஆய்ந்த தேவநேயப் பாவாணர் மொழியியல் வளர்ச்சிப்பணியைச் செய்தார். சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழுக்குப் பலவகையான நன்மைகளும் செய்யும் என்ற எண்ணத்தை அவர் அறிஞர்களிடத்தில் உருவாக்கினார். அவர்க்கு அன்பர் பலர் தோன்றினர். அவருடைய மாணவர் துரை.மாணிக்கம் என்ற பெருஞ்சித்திரனார் தனித்தமிழ்ப்பணிகளில் ஆர்வம் கொண்டு பலவகைப்பணிகளை ஆற்றினார். “தென்மொழி“ என்னும் மாத இதழ் குறிப்பிடத் தக்க தனித்தமிழ்ப் பணிகளைச் செய்தது. பாவாணரைத் தலைவராய்க் கொண்டு உலகத்தமிழ்க்கழகம் என்னும் அமைப்பைப் பெருஞ்சித்திரனார் பரவலாக்கினார். தனித்தமிழ் உணர்ச்சி தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படும் அளவில் பணிகள் சில நடைபெற்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்க பணி பெயர்ப்பலகைத் தமிழாக்கப்பணியாகும். இப்பணியைக் கோவையில் நித்தலின்பனார் சேரர் கொற்றத்தால் செய்தார். புதுச்சேரியில் (க.தமிழமல்லன்) தனித்தமிழ்க்கழகம், தமிழ்க்காவற்குழு ஆகியவற்றை அமைத்து அவற்றின் வாயிலாக நண்பர்கள் துணையுடன் செய்தார்.

மு.தமிழ்க்குடிமகன்[தொகு]

தி.மு.க ஆட்சியில் தனித்தமிழ்க் கொள்கைச்சார்பான தமிழியக்கம் நடத்திய மு. தமிழ்க்குடிமகன் இணைந்து அமைச்சரானார். அவர் பெயர்ப்பலகைத் தமிழாக்கப்பணியில் அன்பர்களைக் கொண்டு திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகளில் செய்யச் செய்தார். அது மிகப்பரவலாகப் பேசப்பட்டது. அதற்குத் தினமணியின் எதிர்ப்புப்பயன்பட்டது.[சான்று தேவை] த.நா.அரசில் தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தை முனைப்பாகச் செயற்படுத்த தமிழ்க்குடிமகன் பெரிதும் முயன்றார்.

தனித்தமிழ் வளர்ச்சி[தொகு]

“தனித்தமிழ்” என்ற எண்ணம் ஒரு புதிய வடிவை எட்டியது[4]. தனித்தமிழ்க் கொள்கையாளர்கள் பலதுறைநூல்களை உருவாக்கினர். பல விழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. இன்று சிறுகதை புதினம், பாவியம், இதழியல் நாடகம், பாவியம், உரை, ஆராய்ச்சி எனும் பலதுறைகளிலும் படைப்புகள் பெருகியுள்ளன. பல்கலைக்கழகங்களில் தனித்தமிழ் இயக்கம், இலக்கியம்பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. பல ஆய்வேடுகள் வெளிப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் தனித்தமிழ்க் கொள்கை விரும்பப்படும் கொள்கையாக விளங்கி வருகிறது. பற்பல புதிய ஏடுகள் வருகின்றன.

வலைத்தளங்களில் தனித்தமிழ் மணம் பரப்பி வருகிறது. வானொலி தொலைக்காட்சிகளும் தனித்தமிழை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. இன்று மக்கள் தொலைக்காட்சியும், தமிழோசை நாளிதழும் தனித்தமிழ் வளர்க்கவும் பரவவும் குறிப்பிடத் தக்க பெரும்பணிகளைச் செய்து வருகின்றன.

தனித்தமிழ் மாநாடு[தொகு]

புதுச்சேரியில் தனித்தமிழ்மாநாடு க.தமிழமல்லன் முயற்சியால் 1984இல் நடத்தப்பட்டது அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கதாகும். புதுச்சேரியில் கடைப் பெயர்ப்பலகைகளைத் தமிழில் வைக்கும் உத்தரவைச் செயல்படுத்த வேண்டுமென 2010 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் கோரிக்கை விடுத்தது[5].

தனித்தமிழ்க் கழகத் தொடக்கப்பள்ளி[தொகு]

தனித்தமிழ்க் கழகத் தொடக்கப்பள்ளி ஒன்றும் அங்குத் தொடங்கப் பட்டது. தமிழ்நாட்டில் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னோடியாக விளங்கியது இந்தத் தனித்தமிழ்க் கழகத் தொடக்கப்பள்ளி என்ற உண்மை அறிஞர்கள் கட்டாயம் உணர வேண்டியதாகும்.

நாட்காட்டி[தொகு]

இப்பணிகளில் நாட்காட்டி வெளியீடு ஒரு குறிப்பிடத் தக்க பணியாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இப்பணி தொடர்ந்து வந்து சித்திரை புத்தாண்டு என்னும் வழக்காற்றை மாற்றியிருப்பது தனித்தமிழ் இயக்கத்தின் பெருவெற்றியாகும்.

தமிழ் நாட்காட்டி (விண்டோசு)[தொகு]

கணிணியில் இதுவரை தமிழ் நாட்காட்டி இல்லை அதனை ஈடுசெய்ய உருவான விண்டாேசு மென்பாெருள் தமிழ் நாட்காட்டி ஆகும்.[சான்று தேவை]

மேலும் படிக்க[தொகு]

நூல்கள்[தொகு]

  1. தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் வளர்ச்சி வரலாறும் - பெருஞ்சித்திரனார்
  2. தனித்தமிழ் இயக்கம் - இரா.இளங்குமரனர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "நீண்ட இலக்கிய மரபை கொண்ட தமிழ்மொழி". தினகரன் (இலங்கை). ஆவணி 2011. http://www.thinakaran.lk/2011/08/26/?fn=f1108261&p=1. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. பி.தயாளன் (அக்டோபர் 2013). "பாவலரேறு பெருஞ்சித்திரனார்". கீற்று. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25155:2013-10-11-07-36-54&catid=25:tamilnadu&Itemid=137. 
  3. "5.3 தனித்தமிழ் இயக்க உரைநடை". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2014.
  4. தனிக்கோடி (பிப்ரவரி 2014). "பகுத்தறிவுவாதிகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். தனித்தமிழ் பாவலர் தரங்கை பன்னீர்ச்செல்வன் நேர்காணல்.". நக்கீரன். http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=19037. பார்த்த நாள்: 2014-06-01. 
  5. "இந்தியா கடைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க முதல்வருக்கு தனித்தமிழ் இயக்கம் கோரிக்கை". தினமலர். சூன் 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனித்தமிழ்_இயக்கம்&oldid=3916599" இலிருந்து மீள்விக்கப்பட்டது