விஷூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷு
அதிகாரப்பூர்வ பெயர்விஷு
கடைபிடிப்போர்மலையாளிகள் மற்றும் பாலக்காடு தமிழர்கள்
அனுசரிப்புகள்விஷூ கனி & விஷூக்கை நீட்டம்
நாள்மேடம் முதல் நாள் (மலையாள நாள்காட்டி)

விஷு (Vishu, மலையாளம்: വിഷു) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது வருட பிறப்பு என்ற பெயரில் கர்நாடகாவின் துளுப்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். இது மேடம் (ஏப்ரல் - மே) மாதத்தின் வரும் சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது.

விஷு\ (மேடத்தின் முதல் நாள் ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்படினும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்நாளே மலையாள புத்தாண்டு தினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய விஷுக்கணி க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது பூஜை அறையில் புனிதமாக, அரிசி, புதிய துணி, வெள்ளரிக்காய், வெற்றிலை, பாக்கு, உலோகக் கண்ணாடி, மஞ்சள் நிற கொன்றை மலர் (காசியா பிஸ்டுலா ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் காசுகளை வெங்கல உருளி யில் வைத்துப் படைக்கின்றனர். வெண்கல நிலா விளக்கை யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்குச் சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய இராமாயணத்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் இராமாயணத்தின் எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் சபரிமலை ஐயப்பன், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய கோயில்களை அடைந்து "விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.

கணிக் கொன்றை (காசியா பிஸ்டுலா), விஷூக்கனியின் போது பயன்படுத்தும் மிகப் பிரபலமான கேரள மாநில பூ

விஷூ மிகவும் விமர்சையாகவும் பெரிய அளவிலும் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வட கேரளாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[மேற்கோள் தேவை] இந்நாளில் குறிப்பாக சிறார்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பெரியவர்கள் பட்டாசுகளை சிறார்களுக்கு பரிசாக வழங்குவர். இந்நாளில் மக்கள் புத்தாடைகளை (புதுக்கொடி ) அணிந்து மகிழ்கின்றனர். மேலும், வீட்டுப் பெரியவர்கள் சிறுவர்களுக்கும் தன்னிடம் வேலை செய்வோருக்கும் மற்றும் தன்னுடன் குடியிருப்போருக்கும் அன்பளிப்பாக விஷூக்கை நீட்டம் என்ற பணத்தை வழங்கி மகிழ்வர்.

விஷு அன்று விருந்தும் அளிக்கப்படுகின்றது, இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர். விருந்தில் வேப்பம்பூ ரசமும் (கசப்பான வேப்பமரப் பூ) மாம்பழ பச்சடி யும் (புளிப்பான மாம்பழச் சாறு) பரிமாறப்படுகின்றன.

பாரம்பரியம்[தொகு]

மலையாளத்தில் "கணி" என்பதற்கு "முதலில் காண்பது" என்ற பொருளாகும், "விஷுக்கணி" என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்.

விஷூவின் முன் தினமே அந்த இல்லத்தரசி உன்னதமான பொருட்களாகிய பூ, பழம், காய், துணி மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து விடுவார்.

இந்திய சோதிட சாத்திரத்தின் படி காலத்தின் கடவுளாக கால தேவர்களின் தலைவனாக விஷ்ணு கருதப்படுகிறார். விஷூ இக்காலங்களின் ஆரம்பமாக விளங்குவதால் இத்தேவர்களுக்கு பூஜை செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.

சூரியப் புத்தாண்டு[தொகு]

பாரம்பரியமாக கேரளாவின் மத்திய மற்றும் வட பகுதியில் விஷூ மலையாளிகள் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் மலையாளிகளின் வருட கணக்கின்படி, கொல்ல வருடத்தின்படி அதிகாரப்பூர்வமாக சிங்க மாதமே (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்மாதமாக கொள்ளப்பட்டுள்ளது. சோதிட சாத்திரத்தின்படி சிங்க மாதத்தின் முதல் நாளுக்கு எவ்வித சிறப்பும் குறிக்கப்படவில்லை.

விஷுக்கணி (அல்) கணிக்காணல்[தொகு]

விஷுக்கணி அல்லது கணிக்காணல் விஷூவை விட்டு பிரிக்க இயலாததாகும். மரபுவழி மலையாளிகள் விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். ஆகையினால் விஷுக்கணி' யின் போது பூஜை அறை ஏற்பாட்டில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர். நல்ல பொருட்களை வைக்கின்றனர். இதனால் அவர்களின் புதுவருடம் செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும், சிறப்பானதாகவும் அமையுமென நம்புகின்றனர்!

பொதுவாக இந்த 'கணி ' என்கிற முதற்பார்வைக்கான ஏற்பாடுகள் செய்வது குடும்பத்தின் முதிய பெண்மணி மேல் விழுகின்றது. பாரம்பரிய கணி ஏற்பாடுகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. இது இடத்திற்கேற்றாற் போல் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்றது.

இந்த விஷுக்கணி யை சரியாகப் பெறாவிட்டாலோ அல்லது குறைவாகப் பெற்றாலோ அதற்கேற்றாற் போல் துரதிர்ஷ்டமோ அல்லது அவரின் வாழ்நாளில் ஒரு வருடத்தையே இழக்குமாறு அமையுமென சிலர் நம்புகின்றனர்.

விஷூக்கனியின் ஏற்பாடுகள்[தொகு]

"கனி" பார்வைக்காக சராசரி அளவுள்ள உருளி உபயோகப்படுத்தப்படுகின்றது. உருளி பாத்திரம் வட்டமாகவும் வாய் திறந்தும் இருக்கும். பொதுவாக வெண்கலத்தினால் ஆன உருளியையே இதற்குப் பயன்படுத்துகின்றனர். இது எல்லா அளவுகளிலும் கிடைக்கின்றது. இதன் விட்டம் சில அங்குலங்களிலிருந்து 10-12 அடி வரை இருக்கும்! இதன் பெரிய வடிவம் சரக்கு, ஓடு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.


கொல்லம் சார்ந்த பகுதிகளில் அட்சதம் எனப்படும் அரிசி, மஞ்சள் கலவை உபயோகப்படுத்தப்படுகின்றது. இது நெல்லாகவும் அரிசியாகவும் கலக்கப்பட்டு உருளியில் வைக்கப்படுகின்றது. ஆனால் கேரளாவின் மற்ற பகுதிகளில் உனக்கலரியை (அரிசி) உருளிக்குள் செல்லும் முதற்பொருளாக உபயோகப்படுத்துகின்றனர். இது உருளிக்குள் மற்ற பொருட்களை வைப்பதற்கு அடித்தளமாக அமைகின்றது.

அரிசிக்கு மேல் புதிதாக சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை கசவு புடவையை (கேரளப்பாணி தங்க சரிகை கொண்ட புடவை) வைத்து அதன் மேல் உன்னதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனி வெள்ளரியை (தங்க நிறத்திலான வடிவுள்ள வெள்ளரிக்காய்) வைப்பர். பிறகு வெட்டிலா (வெற்றிலை), பழுக்கப்பாக்கு (கனிந்த மஞ்சள் கலந்த சிவப்பு நிறமுள்ள பாக்கு), தங்க நிறத்திலான மாம்பழம், கனிந்த மஞ்சள் பலாப்பழம் (இரண்டாக வெட்டியும்) மற்றும் பளபளப்பான பித்தளையிலான வால்கண்ணாடி (கைக் கண்ணாடி) ஆகியவற்றையும் வைப்பர்.

நன்கு கஞ்சி போடப்பட்ட ஓர் துணியை விசிறி போல் மடித்து நன்றாக ஒளிரும் பித்தளை கிண்டிக்குள் (பூஜையில் புனித நீர் விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட) வைக்கின்றனர். நீண்டு, ஒல்லியான கைப்பிடியுடன் கூடிய தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட வால் கண்ணாடியையும் கிண்டிக்குள் வைக்கின்றனர். பிறகு இந்த கிண்டியை உருளிக்குள் அரிசி மேல் வைக்கின்றனர்.

பல இடங்களில் இராமாயணம் போன்ற புனித படைப்புகள் கொண்ட பனை ஓலைகள் (தலியோலா என அழைக்கப்படும்) கூட "கனி" பார்வைக்காக உருளியில் வைக்கப்படுகின்றது. இதைப் போல் அஷ்டமாங்கல்யமும் கனி உருளிக்குள் வைக்கப்படுகின்றது. இதற்குப் பிறகு ஒரு தங்க நாணயமோ அல்லது தங்க அணிகலனோ எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கப்படுகின்றது. பிறகு உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் எண்ணெய் நிரப்பி, திரியுடன் கனி உருளியின் மேல் வைக்கின்றனர்.

பிறகு ஒரு தட்டில் சிறிது அரிசி மற்றும் மலர்களுடன் வெள்ளி நாணயத்தை வைக்கின்றனர். கனி காணலுக்குப் பிறகு வேண்டியவாறு இந்த வெள்ளி நாணயத்தை எடுத்து பூ அல்லது தலை உள்ளதா என்பதைக் காண்கின்றனர். எப்பகுதி வருகிறதோ அதைக் கொண்டு ஒருவருடைய வேண்டுதல் நிறைவேறும் நிலையை அறிகின்றனர்.

பிறகு கனி உருளியை ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சிலைக்கெதிராகவோ அல்லது படத்திற்கு முன்னரோ (வட கேரளாவில் வால் கண்ணாடி உலக மாதா ஸ்ரீபகவதியைக் குறிக்கின்றது) வைக்கின்றனர். பிறகு கொன்னைப் பூ கொண்டு கனி உருளி, படம் மற்றும் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கின்றனர். ஏற்றப்பட்ட நில விளக்கை (பித்தளை விளக்கு) இதற்கு அருகே வைத்து அதன் தங்க நிற ஒளிர்வை கனி பார்வைக்காக கூட்டுகின்றனர்.

இரண்டு தேங்காய் மூடிகளால் செய்யப்பட்ட தீபங்களும் உருளிக்குள் வைக்கப்படுகிறது. இதற்கான திரி கஞ்சி போடப்பட்ட துணியால் செய்யப்படுகின்றது. இது மேல் பாகம் நீளமாகவும் அடிப்பாகம் தடித்தும் வடிவமைக்கப்படுகின்றது. இதன் அடிப்பாகம் தீபமாகிய தேங்காய் மூடிக்குள் உள்ள தேங்காய் எண்ணெயில் வைக்கப்படுகின்றது. திரியின் மேல்பாகம் நேராக நின்று எரிகின்றது. இந்தத் தீபங்களை ஏற்றுவதன் மூலம் இறைவனை நம் வாழ்வில் அழைப்பதாகவும் ஆன்மீக ஞானத்திற்கு அதாவது அறியாமை இருட்டிலிருந்து நீங்கி வருவதற்கு ஏதுவாகவும் உள்ளதாக நம்புகின்றனர்.

இப்பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த கிருஷ்ண பரமாத்மாவை நினைவுபடுத்துவதாக இருக்கும்.

தங்கம் விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தங்க மஞ்சள் நிறமுடைய கனிக்கொன்னை மலர்களைக் கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். இப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது. பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது. தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாச்சார ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது. மேலும் இல்லத்துப் பெரியவர்கள் இளைய சமுதாயத்தினரோடு இதனை பகிர்ந்து கொள்ளும் தன்மையையும் குறிக்கின்றது. இப்பண்டிகையின் மற்றொரு அம்சம் விஷூக்கை நீட்டம் எனப்படும் செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கமாகும். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுப்பர். பெறுபவர்கள் மிக்க மரியாதையுடன் அதனைப் பெறுவர். விஷூ தினத்தன்று செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி சுற்றத்தாருக்கும், சிலர் அவர் வாழும் கிராமம் முழுமைக்குமே தானமளித்து மகிழ்வர்.

விஷூக்கனியை ஏற்பாடு செய்யும் தாயோ அல்லது பாட்டியோ அந்த பூஜை அறையிலேயே படுத்து உறங்குவர். பிறகு மகோன்னதமான பிரம்ம முகூர்த்த காலத்தில் (காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) எழுந்து எண்ணெய் விளக்குகளை ஏற்றி அந்த கண் கொள்ளாக் காட்சியைக் காண்பர். பிறகு மற்ற குடும்பத்தவர்கள் உறங்கும் அறைக்குச் சென்று ஒவ்வொருவராய் எழுப்புவர். அவர்கள் கண்களை தன் கையால் மூடி பூஜை அறைக்கு அழைத்து வந்து அந்த தெய்வீகக் காட்சியைக் காட்டுவர்.

கண்களைத் திறந்து காணும்போது இறைவனின் தரிசனத்தால் காண்பவர் பூரிப்படைவார். பகவதியை நினைவூட்டும் கண்ணாடி ஒளி பிரதிபலிப்பால் விஷூக்கனியை ஒளிரச் செய்வதுடன் அதில் அவரவர் முகங்களையும் காட்டுகின்றது. விஷூக்கனியில் வைக்கும் கண்ணாடி நம் மனத்தை தூய்மையாய் வைத்திருப்பதையும் குறிக்கின்றது. மேலும் அந்த தூய மனத்துடன் உண்மையான மாசற்ற பற்றுடன் கிருஷ்ணருக்குச் செய்ய வேண்டிய பக்தி சேவையையும் (நவ வித பக்தி) உணர்த்துகின்றது.

விஷூக்கனியை பூஜை அறைக்குள் மட்டுமே வைத்திருக்க மாட்டார்கள். பூஜை அறைக்கு வர முடியாதவர்களுக்காக அதை வெளியே கொண்டு வந்து காண்பிப்பர். மேலும் தன் வீட்டுப் பசுக்களுக்கும் இதைக் காண்பிப்பர். அவ்வாறு காண்பிக்க மாட்டு கொட்டகைக்கு கொண்டு வரும் போது அங்கே உள்ள மரம், செடி, பறவை மற்றும் இயற்கை அனைத்தும் காணும் வாய்ப்பு பெறும்.

விஷூக்கனி வரப் போகும் வருடத்தின் செழுமையைக் குறிக்கின்றது - ஆன்மீகமாகவும், செல்வங்களாகவும், உணவு, விளக்கு, பணம், அறிவு - இவையாவும் நம் வாழ்வை நிறைக்க வேண்டும். விஷூக்கனியை தன்னுள் ஈர்த்துக் கொண்டு இவையாவும் வருடம் முழுதும் நமக்குக் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர். விஷூக்கனி பார்வைக்கான விருந்து மட்டுமன்று. இக்காட்சி அவரவர் மனது மற்றும் செயல்களில் பிரதிபலிக்க வேண்டும். இறைவனின் ஆசியுடன் காட்சியுடனான இப்படிப்பட்ட சிறப்பான வருட ஆரம்பம் அவரவருக்கு மட்டுமே உரியது அல்ல. இதனை அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் சமூகத்தில் பரப்புவது அவரவர் கடமையாகும்.

கனிக்காணல்[தொகு]

விஷூ அன்று மாலையில் கனிக்கான ஏற்பாடுகளை செய்த பிறகு, வீட்டின் வயதான பெண்மணி (பாட்டி, தாயார் அல்லது மூத்த சகோதரி) தனக்கு அருகில் தீப்பெட்டியை வைத்துக் கொண்டு, கனிக்கு அருகில் படுத்து உறங்குவர். கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு வெகு நேரம் முன்னரே அவர் எழுந்திருப்பார். அவர் கனிக்காணலைப் பார்த்த பிறகு, மற்ற குடும்ப உறுப்பினர்களை எழுப்பி பூஜை அறையில் கனியைக் காணச் செய்வார். தெய்வத்தைக் காண்பதற்கு முன் தினசரிப் பணிகளைக் காண்பதை தவிர்க்க, குழந்தைகளின் கண்களை தனது கைகளினாலோ அல்லது ஒரு துணியினாலோ கட்டி அழைத்து வருவார்.

மனிதர்கள் இறைவனை தரிசித்த பிறகு, செடிகொடிகள், விலங்குகள், நகரும் நகராத பொருட்களுக்கு இறைவனை காட்டுவர். கனி உருளியை வெளியே எடுத்துச் சென்று காட்டுவர். மாட்டுக் கொட்டகை, குளக்கரைக்கு கொண்டு சென்ற பிறகு, வீட்டை மூன்று முறை சுற்றி வருவர்.

சில இடங்களில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கனியை தயார் செய்த பின் அதனை தனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களுக்கு கொண்டு செல்வர். அவ்வாறு கொண்டு செல்லும் போது இசைக்கருவிகளை இசைத்தபடி கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே செல்வர். அவர்கள் செல்லும் வீடுகளில் அவர்களுக்கு கைநீட்டம் கிடைக்கும்.

விஷூக்கனி அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், குருவாயூர் கோயில் மற்றும் சபரிமலை போன்ற சில பிரபலமான கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

விஷூ கைநீட்டம்[தொகு]

குழந்தைகள் இந்தச் சடங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பர். வீட்டில் உள்ள பெரியவர்கள், தாத்தா அல்லது தந்தை வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கைநீட்டம் வழங்குவர். கைநீட்டத்தில் உருளியிலிருந்து நாணயங்கள் (தற்போது ரூபாய் நோட்டுகள்), கொன்னை மலர்கள், அரிசி மற்றும் தங்கம் ஆகியவற்றை வழங்குவர். தங்கம் மற்றும் அரிசியை மீண்டும் உருளியில் வைத்து விடுவர். மலர்களை கண்களில் ஒத்திக் கொள்வர். முன்பெல்லாம், வீட்டிலுள்ள பணியாளர்கள், வயலில் வேலை செய்பவர்கள், வீட்டில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் கை நீட்டம் வழங்குவது வழக்கமாக இருந்தது. இதன் குறிக்கோள் தன் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளுவதும், எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுவதுமே ஆகும்.

விஷூக் கஞ்சி[தொகு]

சத்யா கேரள பண்டிகைகளில் மிகப் பெரிய பகுதியாகும். விஷூவின் போது, விஷூ கஞ்சி மற்றும் தோரன் மிக முக்கியமானதாகும். கஞ்சி, அரிசி, தேங்காய்ப் பால் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு செய்வதாகும். தொட்டுக் கொள்ள, தோரன் என்பதையும் குறிப்பிட்ட செய்பொருட்கள் கொண்டு செய்வர்.

விஷூ படக்கம்[தொகு]

வட கேரளாவின் பல பகுதிகளில் பட்டாசு வெடிப்பது விஷு கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாகும். விஷூ அன்று காலையிலும் அதற்கு முந்தைய தின மாலையிலும் குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.

மலையாள நாட்குறிப்பு மற்றும் விஷு[தொகு]

மலையாள நாட்குறிப்பின் படி, மலையாள புது வருடம் சிங்கமின் (ஆகஸ்டில் வரும்) முதல் மாதத்தில் வரும். மலபார் மற்றும் கொச்சினைச் சேர்ந்த மக்கள் (திரிசூர் மற்று வட மேற்கு எர்ணாகுளம்) விஷூவினை ஆருட புது வருடமாக கருதுகின்றனர். மேலும் விஷூக் கனி மேதம் 1 விஷூ நாளில் துவங்கி வருடம் முழுவதும் தமக்கு அதிர்ஷ்டத்தையும் செழுமையும் அளிக்கும் தினமாகக் கருதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் புது வருடத்தை அதே நாளில் கொண்டாடுகின்றனர்.

மற்ற இந்திய கொண்டாட்டங்கள்[தொகு]

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் விஷூ போன்ற பண்டிகையை அதே நாளில் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாமில் பிஹூ என்றும், பஞ்சாபில் பைசாகி (ஆதியில் வைஷாகி) என்றும் தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு அல்லது விஷூ புன்யாகாலம் என்று அழைக்கப்படுகிறது. துளுவர்களும் பிசு என்ற பண்டிகையை அதே நாளில் கொண்டாடுகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷூ&oldid=3352486" இலிருந்து மீள்விக்கப்பட்டது