மோங்கே கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோங்கே கான்
மங்கோலியப் பேரரசின் 4வது ககான்
மங்கோலியர்களின் உயர்ந்த கான்
மன்னர்களின் மன்னர்
மங்கோலியப் பேரரசின் 4வது பெரிய கான்
ஆட்சிக்காலம்1 சூலை 1251 – 11 ஆகத்து 1259
முடிசூட்டுதல்1 சூலை 1251
முன்னையவர்குயுக் கான்
பின்னையவர்குப்லாய் கான்
பிறப்பு11 சனவரி 1209
இறப்பு11 ஆகத்து 1259 (அகவை 50)
தியாவோயு கோட்டை, சோங்கிங்
புதைத்த இடம்
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் ஹுவான்சு (桓肃皇帝, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
கோயில் பெயர்
ஜியான்சோங் (宪宗, இறப்பிற்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
மரபுபோர்ஜிஜின்
தந்தைடொலுய்
தாய்சோர்காக்டனி பெகி
மதம்தெங்கிரி மதம்

மோங்கே[1] என்பவர் மங்கோலியப் பேரரசின் 4வது பெரிய கான் ஆவார். இவர் டொலுயின் வம்சத்தில் முதல் ககான் ஆவார். தனது ஆட்சியின் போது பேரரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்குக் கணிசமான சீர்திருத்தங்களைச் செய்தார். மோங்கேயின் ஆட்சியில் மங்கோலியர்கள் ஈராக், சிரியா மற்றும் நன்சோவா அரசு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.[2]

உருவ அமைப்பு[தொகு]

உரூப்ரக்கின் வில்லியமின் கூற்றுப்படி, மோங்கே கான் நடுத்தர அளவு உயரமுடைய ஒரு மனிதன் ஆவார்.[3]

இளமைக் காலம்[தொகு]

மோங்கே 11 சனவரி 1209ஆம் ஆண்டு பிறந்தார். செங்கிஸ் கானின் இள வயது மகன் டொலுய் மற்றும் சோர்காக்டனி பெகிக்கு முதல் மகனாகப் பிறந்தார். ஷாமனாகிய தெப் தெங்கிரி கொகோச்சு விண்மீன்களில் இக்குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக் கண்டதாகக் கூறினார். இக்குழந்தைக்கு மோங்கே என்ற பெயரை வழங்கினார். மங்கோலிய மொழியில் மோங்கே என்ற சொல்லுக்கு "ஆதியும் அந்தமும் இல்லாத" என்று பொருள். இவரது பெரியப்பா ஒக்தாயி கானின் குழந்தையற்ற அரசியாகிய அங்குயி தனது ஓர்டாவில் (நாடோடி அரண்மனை) இவரை வளர்த்தார்[4]. மோங்கேவுக்கு எழுதக் கற்றுக் கொடுக்குமாறு பாரசீக அறிஞர் இதிதன் முகம்மதுவுக்கு ஒக்தாயி அறிவுரை வழங்கினார்.

மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்புக்குப் பிறகு, மங்கோலியாவிற்குத் திரும்பி வந்த செங்கிஸ் கான் இலி ஆற்றுக்கு அருகில் 1224ஆம் ஆண்டு தன் பேரன்கள் மோங்கே மற்றும் குப்லாயின் முதல் வேட்டைக்குப் பிறகு ஒரு சடங்கு நடத்தினார்.[5] அப்போது மொங்கேவுக்கு 15 வயதாகி இருந்தது. தன் தம்பி குப்லாயுடன் அவர் ஒரு குழி முயல் மற்றும் மறிமானை வேட்டையாடி இருந்தார். இவர்களது தாத்தா வேட்டையாடப்பட்ட விலங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பை மங்கோலியப் பாரம்பரியப்படி அவர்களது நடு விரலில் தடவினர்.

1230ஆம் ஆண்டு மோங்கே முதல் முதலாகப் போருக்குச் சென்றார். சின் அரசமரபுக்கு எதிராகத் தன் பெரியப்பா ஒக்தாயி கான் மற்றும் தன் தந்தை டொலுயைப் பின்பற்றிப் போருக்குச் சென்றார். டொலுய் 1232ஆம் ஆண்டு இறந்தார். டொலுயின் ஒட்டுநிலங்களுக்குத் தலைமையாளராகச் சோர்காக்டனி பெகியை ஒக்தாயி நியமித்தார். மங்கோலியப் பாரம்பரியப்படி, தன் தந்தையின் மனைவிகளில் குறைந்தது ஒருவரையாவது மோங்கே பெற்றார். அவர் ஒயிரட் இனத்தைச் சேர்ந்த ஒகுல் கோயிமிசு ஆவார். மோங்கே அவரை மிகவும் விரும்பினார். அவரது மூத்த மகள் சிரினுக்குத் தனித்துவமான சிறப்பு ஆதரவைக் கொடுத்தார்.[6]

மொகி போர் (11 ஏப்ரல் 1241). இதில் மோங்கே பங்கெடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[7]

ஒக்தாயி மோங்கேயை அவரது உறவினர்களுடன் கிப்சாக்குகள், உருசியர்கள் மற்றும் பல்கர்களை மேற்கில் தாக்குவதற்காக 1235ஆம் ஆண்டு அனுப்பினார். அறைகூவல் விடுக்கக்கூடிய மிகக் கடினமான கிப்சாக் தலைவராகிய பச்மன் வோல்கா ஆற்றின் வடிநிலத்தில் உள்ள ஒரு தீவிற்குத் தப்பிச் சென்ற போது, மோங்கே ஆற்றைக் கடந்து அவரைப் பிடித்தார். பச்மனை முட்டியிடுமாறு மோங்கே ஆணையிட்டார். பச்மன் மறுக்க மோங்கேயின் தம்பி புசேக் அவரை மரண தண்டனைக்கு உட்படுத்தினார். மங்கோலியர்களின் கீவ் மீதான படையெடுப்பின் போது, மோங்கே வாள் சண்டையில் பங்கெடுத்தார். இவர் தன்னுடைய உறவினர்கள் சிபன் மற்றும் புரியுடன் கிரிமியா மூவலந்தீவுக்குச் சென்றார். மோங்கேயும், ஒக்தாயியின் மகனாகிய கதானும் காக்கேசியாவில் இருந்த பழங்குடியினங்களை ஒடுக்குமாறு ஆணையிடப்பட்டனர்.[8] மங்கோலியர்கள் ஆலன்களின் தலைநகரமான மகாசுவைக் கைப்பற்றினர். அதன் குடிமக்களைப் படுகொலை செய்தனர். ஆலன்கள் மற்றும் சிர்காசியர்களின் பல தலைவர்கள் மோங்கேயிடம் சரணடைந்தனர். கிழக்கு ஐரோப்பா மீதான படையெடுப்புக்குப் பிறகு அவர்களை மோங்கே மங்கோலியாவுக்குக் கூட்டி வந்தார். 1240ஆம் ஆண்டு நடைபெற்ற கீவ் முற்றுகையிலும் மோங்கே பங்கெடுத்தார். கீவின் அழகைக் கண்டு மோங்கே பாராட்டினார் எனத் தெரிகிறது. அந்த நகரத்திற்குச் சரணடைவதற்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் இவரது தூதர்கள் கொல்லப்பட்டனர்[9]. மோங்கேயின் வீரர்களுடன் படுவின் இராணுவம் இணைந்த பிறகு, அவர்கள் நகரத்தைச் சூறையாடினர். மொகி யுத்தத்திலும் படுவுடன்ம் மோங்கே இணைந்து சண்டையிட்டார். 1241ஆம் ஆண்டின் கோடை காலத்தில், இந்தப் படையெடுப்பு முன்னதாகவே நிறுத்தப்படுவதற்கு முன்னர், 1240-41ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், இவரது பெரியப்பா ஒக்தாயி இவரை அழைத்ததற்குப் பிறகு மோங்கே திரும்பினார். எனினும் ஒக்தாயி இறந்தார்.

1246ஆம் ஆண்டு செங்கிஸ் கானின் கடைசியாக எஞ்சியிருந்த சகோதரரான தெமுகே குறுல்த்தாயால் ஒப்புக் கொள்ளப்படாமல் அரியணையைக் கைப்பற்ற, தோல்வியடைந்த நிகழ்வாக ஒரு முயற்சியைச் செய்தார். புதிய ககான் குயுக் தெமுகேயை விசாரிக்கும் கடினமான பொறுப்பை மோங்கே மற்றும் படுவின் அண்ணன் ஓர்டா கானை நம்பி வழங்கினார். 1248ஆம் ஆண்டு மேற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டபோது குயுக் இறுதியாக இறந்தார்.

டொலுய் குடும்பப் புரட்சி[தொகு]

மோங்கே தேர்ந்தெடுக்கப்படத் தனது ஆதரவை வழங்கப் படு முடிவெடுத்தார். அலா கமக்கு என்ற இடத்தில் குறுல்த்தாய்க்கு அழைப்பு விடுத்தார். செங்கிஸ் கானின் சகோதரர்களின் குடும்பங்களின் தலைவர்கள், பல முக்கியமான தளபதிகள் குறுல்த்தாய்க்கு வந்தனர். குயுக்கின் மகன்கள் நகு மற்றும் கோசா குறுகிய நேரத்திற்கு இதில் கலந்து கொண்டனர். ஆனால் பிறகு சென்றுவிட்டனர். ஒகுல் கைமிஸின் எழுத்தரான பாலாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி குறுல்த்தாயானது மோங்கேயைத் தேர்ந்தெடுத்தது. இதில் கலந்து கொண்டவர்களின் குறைவான எண்ணிக்கை மற்றும் அமைவிடம் ஆகியவற்றின் காரணமாக இந்தக் குறுல்த்தாயின் முறைமைத் தன்மையானது கேள்விக்குரியதாக உள்ளது. படு தனது சகோதரர்கள் பெர்கே மற்றும் துகா தெமூர், மற்றும் தன் மகன் சர்தக்கின் பாதுகாப்பில் மோங்கேயே மங்கோலியாவின் கோதோவே ஆரால் என்ற இடத்தில் ஒரு அதிகாரப்பூர்வக் குறுல்த்தாயை நடத்துவதற்காக அனுப்பி வைத்தார். சோர்காக்டனி மற்றும் பெர்கே 1 சூலை 1251ஆம் ஆண்டு ஓர் இரண்டாவது குறுல்த்தாயை நடத்தினர். அங்கே கூடியிருந்தார்கள் மோங்கேயை மங்கோலியப் பேரரசின் பெரிய கானாக அறிவித்தனர். ஒக்தாயி மற்றும் சகதாயி குடும்பத்தைச் சேர்ந்த இவரது உறவினர் கதான் மற்றும் பதவியிலிருந்து இறக்கப்பட்ட காரா குலாகு போன்ற சில இளவரசர்கள், இந்த முடிவை ஒப்புக்கொண்டனர்.

பாரம்பரிய மொங்கோலிய எழுத்துமுறையில் மோங்கே ககான் என்ற பெயர்.

இதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு ஒக்தாயி குடும்பத்தினர் மோங்கேயைத் தாக்கத் திட்டமிட்டனர். மோங்கேயின் பாறு வளர்ப்பாளர் மற்றும் கெசிக் பாதுகாவலர்கள் இந்தத் தாக்குதலுக்கான திட்டமிடலைக் கண்டுபிடித்தனர். மோங்கேயிடம் இதைப்பற்றிக் கூறினர். தனது தந்தையின் விசுவாசத்துக்குரிய பணியாளராகிய மெங்கேசர் நோயனின் விசாரணையின் முடிவின் கீழ் தனது உறவினர்கள் தவறிழைப்பதை இவர் கண்டுபிடித்தார். ஆனால் மகா யசாவில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் அவர்களுக்கு முதலில் மன்னிப்பு வழங்க விரும்பினார். ஆனால் மோங்கேயின் அதிகாரிகள் இதை எதிர்த்தனர். பிறகு மோங்கே தனது உறவினர்களைத் தண்டிக்க ஆரம்பித்தார். கிழக்கில் மங்கோலியா மற்றும் சீனா முதல் மேற்கில் ஆப்கானித்தான் மற்றும் ஈராக் வரை பேரரசின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த விசாரணைகள் நடைபெற்றன. மோங்கே மற்றும் படுவின் தம்பி பெர்கே ஆகியோர் ஒகுல் மோங்கேவுக்கு எதிராகப் பில்லி சூனியம் வைத்ததாகக் குற்றம் சாட்டினர். இதற்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். சோர்காக்டனியால் விசாரிக்கப்பட்டார். ஒகுலை கைமிஸை ஒரு சாக்கில் வைத்துத் தைத்து ஆற்றில் தூக்கி எறிந்தனர். அவர் மூழ்கி இறந்தார். பில்லி சூனியம் செய்பவர்களுக்குப் பாரம்பரியமாக வழங்கப்படும் மங்கோலியத் தண்டனை இதுவாகும். உயர்குடியினர், அதிகாரிகள் மற்றும் மங்கோலியத் தளபதிகளின் இறப்பின் எண்ணிக்கையானது 77 - 300 என மதிப்பிடப்படுகிறது. இதில் எல்சிகிடை, எசு மோங்கே, புரி மற்றும் சிரேமுன் ஆகியோரும் அடங்குவர். எனினும் இத்திட்டத்தில் பங்குடைய செங்கிஸ் கானின் வழி வந்த பெரும்பாலான இளவரசர்கள் நாடுகடத்தப்பட்டனர். மோங்கேவுக்கு எதிராகத் திட்டமிட்ட உய்குர் எழுத்தரான பாலா, உய்குர்களின் மன்னனாகிய இதிகுத் சலிந்தி பற்றிக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பொதுமக்கள் நடுவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1252ஆம் ஆண்டு அரியணைக்கு வந்த பிறகு தன் மூதாதையர்களைப் பின்பற்றுவேன் என்றும், ஆனால் மற்ற நாடுகளின் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மாட்டேன் என்றும் மோங்கே அறிவித்தார்.[10] தன்னுடைய முறைமைத் தன்மையை அதிகரிப்பதற்காக 1252ஆம் ஆண்டு தனது தந்தைக்கு இக் ககான் என்ற பட்டத்தை இவர் வழங்கினார்.

ஒக்தாயி மற்றும் சகதாயி குடும்பங்களின் தோல்விக்குப் பிறகு, மோங்கே அவர்களது பண்ணைகளை நீக்கினார். தன் விருப்பத்துக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்குத் துருக்கிசுத்தான் அல்லது வடமேற்குச் சீனாவில் புதிய நிலப்பரப்புகளைக் கொடுத்தார். குருதி தோய்ந்த ஒழித்துக்கட்டலுக்குப் பிறகு, கைதிகளுக்கு ஒரு பொதுவான மன்னிப்பிற்கு மோங்கே ஆணையிட்டார். தனது சக்தியை நிலைநிறுத்துவதற்கான மற்றொரு நகர்வாக வட சீனா மற்றும் ஈரான் மீது மேற்பார்வையிடும் அதிகாரத்தைத் தனது தம்பிகள் குப்லாய் மற்றும் குலாகுவுக்கு முறையே வழங்கினார். தனது சொந்த சுதந்திரமான உளூசை (மாவட்டம்) இவரது தம்பி குப்லாய் நிறுவியதாக வதந்தி பரவ ஆரம்பித்தது. கரகோரத்திற்கு முறைப்படி வரவேண்டிய வரியின் சில பங்கைக் குப்லாய் தனக்கென எடுத்துக் கொண்டதாக வதந்திகள் பரவின. 1257ஆம் ஆண்டு, குப்லாயின் அதிகாரிகளைத் தணிக்கை செய்ய இரு வரி ஆய்வாளர்களைப் பேரரசர் அனுப்பினார். அவர்கள் தவறு நடந்திருப்பதைக் கண்டு பிடித்தனர். சட்டங்களில் 142 மீறல்கள் ஏற்பட்டிருப்பதைப் பட்டியலிட்டனர். சீன அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர். அவர்களில் சிலர் மரண தண்டனைக்குக் கூட உட்படுத்தப்பட்டனர். குப்லாயின் அலுவலகமானது நீக்கப்பட்டது. குப்லாயின் பண்ணைகளில் அனைத்து வரி வசூலிக்கும் பணியையும் மோங்கேயின் குழுவானது செய்ய ஆரம்பித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Мөнх хаан". mongoltoli.mn, mongolian state dictionary (in மங்கோலியன்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-05. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. Encyclopædia Britannica "Möngke"
  3. Rockhill 1967, ப. 172.
  4. Pratt Atwood, Christopher (2004). Encyclopedia of Mongolia and the Mongol Empire. Facts on File. பக். 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8160-4671-3. https://archive.org/details/encyclopediaofmo0000atwo. 
  5. Jack Weatherford, The Secret History of the Mongol Queens, p. 135
  6. Willem van Ruysbroeck, Peter Jackson, David Morgan, Hakluyt Society The mission of Friar William of Rubruck: his journey to the court of the Mongols, p. 168
  7. John Man-Kublai Khan, p. 32
  8. Leo de Hartog Genghis Khan, p. 168
  9. Lawrence N. Langer Historical dictionary of medieval Russia, p. 131
  10. J. Weatherford Genghis Khan and the Making of the Modern World, p. 169, ISBN 978-0609809648
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோங்கே_கான்&oldid=3842922" இலிருந்து மீள்விக்கப்பட்டது