பெரும் பூநாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும் பூநாரை
ஆண் பெரும் பூநாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பீனிகாப்டரசு
இனம்:
பீ. ரோசசு
இருசொற் பெயரீடு
பீனி காப்டரசு ரோசசு
பல்லாசு, 1811
வேறு பெயர்கள்

Phoenicopterus antiquorum

பெரும் பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.

குண நலன்கள்[தொகு]

பூநாரை

பூநாரைகள் எளிதில் நீந்தக் கூடியன. சற்று ஆழமான நீரில் இரை தேடும்போது இதன் வால் மட்டும் நீருக்கு வெளியேயும், உடல் முழுவது நீருக்குள்ளும் இருக்கும். இந்த முக்குளித்த நிலையிலேயே புழுக்களை அரித்து உண்ணும். செங்கால் நாரைகள் வாத்து பறப்பது போன்ற அமைப்பிலோ அலையலையான நீண்ட சாய்வுக் கோடுகளாகவோ வேகமாகச் சிறகுகளை அடித்துப் பறந்து செல்லும். ஒடுங்கிய கழுத்தை நீட்டிப் பறக்கும்போது சிவந்த கால்களையும் சேர்த்துப் பின்னால் நீட்டிக் கொள்ளும். இவை சபதமிடுவதில்லை. ஆனாலும் சில சமயங்களில் வாத்துகள் போன்று ஒலி எழுப்பக்கூடியவை. இரை மேயும்போது கூட்டத்தில் உள்ள அனைத்துப் பறவைகளும் தொடர்ச்சியாகப் பிதற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.

உணவு[தொகு]

பூநாரையின் அலகு

ஆழமற்ற நீரில் இறங்கி வரிசையாக நின்று, தலையை நீருக்குள் ஆழ்த்தித் தனக்கே உரிய விந்தையான மேல் அலகைத் தரையில் படும்படி கவிழ்த்து வைத்து முன்னே இழுத்துக் கொண்டு சேற்றைக் கலக்கிய வண்னம் நடக்கும். இந்நிலையில் இதன் மேல் அலகு கிண்ணம் போல் அமைந்து, சேற்று நீர் அதில் சேகரிக்கப்படுகிறது. சதைப் பற்றுள்ள நாக்கு இந்நீரினுள் ஒரு மத்துப் போல கடைந்தவாறு, புழு புச்சிகளை அலசும். இதன் சீப்பு போன்ற அலகு ஓரங்களில் உள்ள இடைவெளிகள் வழியே நீர் வெளியேறி பூச்சிகள் அலகிலேயே தங்கிவிடும். இதன் அலகு ஒரு வடிகட்டி போல செயல்படும். சிறு நண்டு, கூனிறால்கள், பூச்சிகள், புழுக்கள், நிலபுழுக்கள், நீர்த்தாவரங்களின் விதைகள், அழுகிப் படிந்த பொருட்கள் இவை பூநாரையின் முக்கிய உணவுப் பொருள்களாகும்.

வாழ்க்கை[தொகு]

பூநாரைகளின் பெருங்கூட்டம் நாக்குரு ஏரி

பூநாரைகள் சேறு படிந்த கடற்கரை மேடுகளிலும், உப்புக் க்லப்புள்ள அகன்ற நீர்த் தேக்கங்களிலும் ஆழமிலாக் குளங்களிலும் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பூநாரைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இடம்பெயராமல் வாழ்பவை. என்றாலும் சிறிதளவு உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வு செய்கின்றன. இவை சிறு சிறு கூட்டங்களாகவோ பெருங் கும்பல்களாகவோ வாழும். சில கூட்டங்களில் ஆயரத்துக்கு மேற்பட்ட பறவைகளும் இருக்கலாம்.

இந்தியாவில் குஜராத்தின் கச்சு (Rann of Kutch) வளைகுடாப் பகுதியில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன. அக்டோபரிலிருந்து மார்ச்சு மாதம் வரை ஏராளமான பறவைகள் இங்கு கூடுகின்றன. அப்பொழுது நீரின் தன்மையும் இவற்றுக்கு ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பறவைகள் இங்கு கூடுகின்றன. இக்காலங்களில் குஞ்சு பொரிக்கும் கூட்டங்களில் இது தான் மிகப் பெரியதாகும். பல்லாயிரம் பூநாரைகள் ஒன்றாக கூடி இருப்பது இவற்றின் தனித்தன்மை - இதுவே இவற்றுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது. நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் நீட்டியபடி பூநாரைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

கூடு[தொகு]

பெரிய பூநாரையின் குரல்
முதிராத்தன்மையுடைய பெரிய பூநாரை, வாசி, மகாராட்டிரம், இந்தியா

பூநாரைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது.பூநாரை ஈரமான களிமண்னால் கூடு கட்டும். ஈரமான களிமண்ணைக் உயரமாகக் கூப்பி வைக்கப்பட்ட கிண்ணம்போல் இதன் கூடு இருக்கும். சூரிய வெப்பத்தால் உலந்து கெட்டியாக இதன் கூடு அடுப்பில் வைத்து சுட்டது போலவே நேர்த்தியாக இருக்கும் இது சுமார் 30 செ.மீ உயரமிருக்கும். இனச்சேர்க்கை முடிந்து, இதன் உச்சியிலுள்ள குழிவில் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடப்படும். முட்டையிட்டபின் ஆண், பெண் பூநாரைகள் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடை காக்கும். அடைகாக்கும் நாரை இதன்மேல் காலை மடக்கிக் கொண்டு தான் உட்கார்ந்து அடைகாக்கும்.

குறைந்து வரும் பூநாரைகள்[தொகு]

பூநாரைகள் உண்ணும் கூனி போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும். பறவைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் பூநாரைகள் இந்நிறமற்று காட்சியளிப்பது நாம் அறிந்ததே. மாறிவரும் இயற்கை சமநிலை காலமாக இப்பறவையினம் குறைந்து கொண்டே வருகிறது. மகிழ்வூட்டும் இப்பறவைகளின் கோடியக்கரை வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டே வருகிறது.

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phoenicopterus roseus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2012). "Phoenicopterus roseus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_பூநாரை&oldid=3477945" இலிருந்து மீள்விக்கப்பட்டது