புளூஸ்டார் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star) என்பது சூன் 3-6, 1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் பெருமளவில் ஆயுதங்களை சீக்கியக் கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலின் காலம் மற்றும் முறைக்கு அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரணைகள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தியா டுடே பத்திரிகையால் "புளூஸ்டார் நடவடிக்கை" முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.

அரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவத்தில் 83 ஆகவும் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் கூறப்படினும் சில தன்னிச்சையான மதிப்பீடுகள் சாவு எண்ணிக்கையை 1500 வரை இருக்குமென கூறுகின்றன.

இந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மேலும் இந்தியாவிலும் பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. ராணுவத்தில் இருந்த சீக்கியர் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். இந்திய அரசு குடியாண்மை பணிகளிலும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர் பணிகளைத் துறந்தனர். மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் அரசிடம் திரும்பக் கொடுத்தனர். ராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெயக்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. தான் கொல்லப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு அரசியல் கூட்டத்தில், "இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும்", என்று இந்திரா காந்தி பேசினார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 5000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய-எதிர்ப்புக் கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சீக்கியரால் 'பெரும் படுகொலை' எனக் கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்நிகழ்வு ஒப்பு நோக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் பங்கு[தொகு]

பிரித்தானியாவின் அரச ஆவணங்கள் 30 வருடங்களின் பின்னர் பொதுவில் விடும் வழக்கு உள்ளது. அதன்படி அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு பிரித்தானிய அரசிடம் இந்தியா உதவி கேட்டதாகவும் அதற்கு மார்கரெட் தாட்சர் தலைமையிலான அரசு இராணுவத் திட்டத்தை அமைக்க சிறப்பு வான்சேவை பிரிவைச் சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியை அனுப்பி திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது[1]. பின்னர் தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து பிரித்தானியா பொற்கோவில் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கியதை ஒத்துக்கொண்டது. ஆயினும் தங்கள் அறிவுரையில் இருந்து தாக்குதல் நடவடிக்கை மாறுபட்டிருந்ததாக பிரித்தானியா தெரிவித்துள்ளது[2].

உசாத்துணை[தொகு]

  1. "பொற்கோயில் தாக்குதல் நிகழ்வில் பிரித்தானியாவின் பங்கு குறித்து விசாரணை ஆரம்பம்". தமிழ் விக்கி செய்திகள். 14 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2014.
  2. "பொற்கோவில் தாக்குதலில் பிரிட்டன் ஆலோசனை". பிபிசி தமிழ். 4 பெப்ரவாரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவாரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூஸ்டார்_நடவடிக்கை&oldid=3433080" இலிருந்து மீள்விக்கப்பட்டது