சிவப்பு அறைக் கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு அறைக் கனவு
紅樓夢
புதினத்தில் ஒரு காட்சி
நூலாசிரியர்சாவோ சுவேச்சின்
உண்மையான தலைப்பு石頭記
நாடுசீனா
மொழிசீனம்
வகைபுதினம்
வெளியிடப்பட்ட நாள்
18 ஆம் நூற்றாண்டு
ஆங்கில வெளியீடு
1973–1980 (முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு)

சிவப்பு அறைக் கனவு (Dream of the Red Chamber: எளிய சீனம்: 红楼梦; மரபுவழிச் சீனம்: 紅樓夢; பின்யின்: Hónglóu mèng) என்பது சீன நாட்டார் இலக்கியத்தில் ஒரு தலை சிறந்த புதினப் படைப்பு ஆகும். சீனாவின் பெரும் தொன்மை வாய்ந்த புதினங்கள் நான்கில் இதுவும் ஒன்றாகும். 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் சிங் வம்சக் காலத்தில் வாழ்ந்த சாவோ சுவேச்சின் என்பவர் இப்புதினத்தை எழுதியதாகக் கருதப்படுகிறது. இந்தப் புதினம் தொடக்கத்தில் கல்லின் கதை என்ற பெயராலும் அழைக்கப்பட்டது. இப் புதினம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் துறையை சிவப்பியல் என்கின்றனர். சீன இலக்கியத்தின் தலைசிறந்த நீண்ட வரலாற்றைக் கருத்தில் கொண்டு பொதுவாக சீனப் புனைகதையின் உச்சக்கட்ட புதினமாக இது அங்கீகரிக்கப்படுகிறது [1].

சிவப்பு மாளிகையின் கனவு என்ற தலைப்பிலும் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1791 ஆம் ஆண்டில் இந்தப் புதினம் அச்சுப்பிரதியாக வெளியிடப்படும் வரை பல்வேறு தலைப்புகளில் கையெழுத்துப் படியாகவே வலம் வந்தது. புதினத்தின் முதல் 80 அத்தியாயங்களை சாவோ சியாச்சின் மற்றும் கௌ இ ஆகியோர் எழுதியிருந்தனர். முதல் மற்றும் இரண்டாவது அச்சிடப்பட்ட பதிப்புகளை வெளியிட முயற்சிகள் மேற்கொண்ட இருவரும் செங் வெயுவான் துணையுடன் கூடுதலாக 40 அத்தியாயங்களைச் சேர்த்து நாவலை முடித்தனர் [2].

சாவோ சியாச்சினின் சொந்த குடும்பத்தின் எழுச்சி மற்றும் சரிவையும், கிங் வம்சத்தின் விரிவாக்கத்தையும் பிரதிபலிக்கின்ற ஓர் அரை சுயசரிதையாக சிவப்பு அறைக் கனவு கருதப்படுகிறது [3]. புதினத்தின் முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் விவரித்துள்ளது போலவே, அவரது இளமைப் பருவத்தில் அவர் அறிந்த நண்பர்கள், உறவினர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னமாகக் கருதப்படுவது போன்ற தோற்றத்தை புதினம் தருகிறது. இப்புதினத்தில் இடம்பெற்றுள்ள பெருமளவு பாத்திரங்களுக்காகவும், அதன் உளவியல் நோக்குக்காகவும் மட்டுமன்றி, 18 ஆம் நூற்றாண்டின் சீன உயர்குடியினரின் வாழ்க்கை, சமூக அமைப்பு என்பன போன்ற செய்திகளை துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கவனித்து எழுதப்பட்டுள்ளதாலும் இப்புதினம் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த புதினமாக அமைகின்றது [4].

மொழி[தொகு]

இப் புதினம் செந்நெறிச் சீன மொழியில் எழுதப்படுவதற்குப் பதிலாக நாட்டார் சீன மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. இதன் படைப்பாளி சீனக் கவிதை, பாரம்பரிய செந்நெறிச் சீன மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவராக இருந்தபோதிலும், அரை பாரம்பரிய சீனமொழியில் எழுதியுள்ளார். புதினத்தின் உரையாடல் பகுதிகளை பெய்கிங் மண்டரின் வட்டார வழக்கிலும் எழுதியுள்ளார். இதுவே பின்னர் தற்கால நவீன சீனப் பேச்சுமொழிக்கு அடிப்படையாக அமைந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மொழியியலாளர்கள் இப்புதினத்திலுள்ள சொற்களை, சொற்களஞ்சியமாகத் திரட்டி புதிய தரப்படுத்தப்பட்ட மொழியாக சீன மொழியை உருவாக்கினர். சீர்திருத்தவாதிகள் இப்புதினத்தைப் பயன்படுத்தி நாட்டார் இலக்கிய எழுத்தைப் பாதுகாக்க முயன்றது [5].

வரலாறு[தொகு]

உருவாக்கம்[தொகு]

ஒரு சிறந்த குடும்பத்தின் உறுப்பினரான சாவோ சியாச்சின் கிங் வம்சத்து மன்னருக்காக பணியாற்றினார். பேரரசின் பலம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து 1740 களில் சிவப்பு அறைக் கனவு புதினத்தை எழுதுவதற்கான பணிகளைத் துவக்கினார்[6]. 1763 அல்லது 1764 இல் சாவோ இறந்தபோது புதினத்தின் 80 அத்தியாயங்களை எழுதி முடித்திருந்தார். அநேகமாக எஞ்சிய அத்தியாயங்களுக்கான முன் வரைவை அவர் எழுதிவைத்திருக்கலாம்[6] என்று கருதப்படுகிறது.

உரை வரலாறு[தொகு]

சிவப்பு அறைக் கனவு புதினத்தின் உரை வரலாறு மிகவும் சிக்கலான நிலைக்கு உள்ளாகியுள்ளது [7]. தொடர்ந்து மிகவும் ஆழமான விமர்சன ஆய்வுகள், விவாதங்கள் மற்றும் கணிப்புகள் ஆகியவற்றிற்கு உட்பட்டுள்ளது. சாவோவின் வாழ்நாளில் புதினத்தின் முதல் 80 அத்தியாயங்கள் கையெழுத்து வடிவத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன [7]. செங் வெயுவான் மற்றும் கௌவ் இ வெளியிட்ட முதலாவது அச்சிடப்பட்ட பதிப்பில் ஆசிரியரால் அங்கீகரிக்கப்படாத திருத்தங்கள் மற்றும் திருத்தங்கள் இருந்தன [8]. நாவலின் கடைசி 30 அத்தியாயங்களை சாவோ தனிப்பட்ட முறையில் அழித்திருக்கலாம் [9] அல்லது குறைந்தபட்சம் காவோவின் அசல் முடிவின் பகுதிகள் 120 ஆவது அத்தியாயத்தில் செங்-கௌவ் பதிப்புகளில் இணைக்கப்பட்டிருக்கலாம் [10]. மேலும், கவனமான இப்பாடத் திருத்தம் கௌவ் இயின் அசல் கையெழுத்தால் எழுதப்பட்டிருக்கலாம் [11].

மாதிரி பதிப்புகள்[தொகு]

1791 ஆம் ஆண்டு வரை இந்த புதினமானது வெறும் கிறுக்கல் கையெழுத்துக்களில் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.முந்தைய கையால் எழுதப்பட்ட பதிப்புகள் 80 வது அத்தியாயத்தில் கடைசியாக திடீரென்று முடிவடைகின்றன. முந்தைய பழைய பதிப்புகளில் பார்த்துப் படியெழுதிய கருத்துரைகள், உரை விளக்கங்கள் போன்ற குறிப்புகள் சிவப்பு அல்லது கருப்பு மையால் அறியப்படாத நபர்களால் எழுதப்பட்டிருந்தன. இந்தக் கருத்துரையாளர்கள் அனைவரின் கருத்துகளும் பெரும்பாலும் புதினத்தின் ஆசிரியர் என்ற ஒருவரைப் பற்றியே அதிகம் கருத்துத் தெரிவித்தன. அவர்களில் சிலர் சாவோவின் சொந்த குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம் என இப்போது நம்பப்படுகிறது. மிகவும் பிரபலமான வர்ணனையாளரான சியான்சாய் என்பவர் புதினத்தின் உள்கட்டமைப்பு தொடர்பாகவும் அசல் கையெழுத்துப் படியின் முடிவையும் தெரிவித்திருந்தார். ஆனால் அக்குறிப்புகள் இப்போது இழக்கப்பட்டுள்ளன. இந்த கையெழுத்துப்பிரதிகள் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட பதிப்புகள் ஆகும் இவை மாதிரி பதிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. தனித்தனியாகக் கிடைத்துள்ள 12 கையெழுத்துப் படிகளில் சில பாத்திரங்கள், அமைப்புமுறைகள் போன்ரவற்றில் ஒன்றுக்கொன்று சிறிய அளவிலேயே மாறுபடுகின்றன.

செங்-கௌவ் பதிப்புகள்[தொகு]

1791 ஆம் ஆண்டில், கௌவ் இ மற்றும் செங் வெயுவான் ஆகியோர் புதினத்தின் முதல் அச்சிடப்பட்ட பதிப்பை கொண்டு வந்தனர். கல்லின் கதை என்ற தலைப்பிலான அக்கதையை இவர்கள் சிவப்பு அறை கனவு என்ற பெயரில் ஒரு முழுமையான பதிப்பாக வெளியிட்டனர். அசல் கையெழுத்துப்படிகளில் 80 அத்தியாயங்கள் மட்டுமே இருந்தன. 1791 இல் பதிப்பிக்கப்பட்ட பதிப்பில் 120 அத்தியாயங்களில் புதினம் முடிக்கப்பட்டிருந்தது. முதல் 80 அத்தியாயங்களும் கையெழுத்துப்படியின் திருத்தங்களாகவும் எஞ்சிய 40 அத்தியாயங்களும் புதியதாக சேர்க்கப்பட்டும் இருந்தன.

1792 ஆம் ஆண்டில், செங் மற்றும் கௌவ் 1791 பதிப்பில் இருந்த தவறுகளைத் திருத்தி இரண்டாவது பதிப்பை வெளியிட்டனர். ஆசிரியரின் கையெழுத்துப் படியில் இருந்த முடிவை ஒருங்கிணைத்து புதினத்தை முடித்திருந்ததாக தெரிவித்துள்ளார் [11]. கடைசி 40 அத்தியாயங்கள் மற்றும் இரண்டாவது பதிப்பின் முன்னுரை தொடர்பான விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்று நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். உ சிக் தனது 1921 ஆம் ஆண்டு கட்டுரை ஒன்றில் சிவப்பு அறை கனவின் முடிவு உண்மையில் கௌவ் இ யால் எழுதப்பட்டது என்று வாதிட்டார். இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் புதினத்தின் 120 அத்தியாயங்களுக்கான கையெழுத்துப் படிகள் கிடைக்கப்பட்டதனால் செங்,கௌவ் ஆகியோரின் ஈடுபாடு மட்டும் புரிந்தது. கடைசி 40 அத்தியாயங்களும் ஆசிரியரால் எழுதப்பட்டதுதானா என்பதில் ஐயங்கள் தொடர்கின்றன. 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நவீன ஆய்வுகளின் முடிவில், புதினத்தின் முதல் 80 அத்தியாயங்கள் ஒருவராலும், கடைசி 40 அத்தியாயங்கள் வேறு ஒருவராலும் எழுதப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது [12].

பாகங்கள்[தொகு]

இந்த பதினம் ஐந்து பாகங்களைக் கொண்டது. முதல் மூன்று பாகங்கள், 'சாவோ சுவச்சின்' என்பவரால் எழுதப்படது. கடைசி இரண்டு பாகங்கள், 'காவோ' என்பவர் 'சாவோ'வின் குறிப்புகள் கொண்டு எழுதி முடித்தார் என கருதப்படுகிறது. [13] . இந்த ஐந்து பாகங்களிடையே 120 அத்தியாயங்கள் உள்ளன. முதல் மூன்று பாகங்கள் 80 அத்தியாயங்களையும், கடைசி இரண்டு பாகங்கள் 40 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.

  • பொன்னான நாட்கள்
  • நண்டுச் சங்கம்
  • எச்சரிக்கும் குரல்
  • கண்ணீரின் கடன்
  • கனவிலிருந்து விழித்தல்

கதைச் சுருக்கம்[தொகு]

இந்த புதினம் 'சியா' பரம்பரைப் பற்றின வரலாறு ஆகும். இந்த பரம்பரையில் இரண்டு கோமகன்கள் உள்ளன - கோமகன் நிங்-கோ மற்றும் கோமகன் ஜுங்-கோ. கோமகன் நிங்-கோவின் மூத்த பேரன், சியா ப்யூ, சிறு வயதில் காலமானார். ஆதலால் அவரது இரண்டாவது பேரன், சியா சிங் அடுத்த தலைவர் ஆகிறார். அவருக்கு இறையியல் நாட்டம் உள்ளதால், தனது பட்டத்தை தன் மகன் சியா சென்னுக்கு கொடுத்துவிட்டு துறவியாகிறார். [14]

கோமகன் ஜூங்-கோவின் மகன், சியா டேய்க்கும், கோமகள் சியா சீ (லேடி டோவேகர்)கும் கல்யாணம் நடக்கிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், சியா ஷே, சியா செங் மற்றும் மகள், சியா மின். சியா ஷேக்கு ஒரு மகன் சியா லியன், மற்றும் துணை மனைவி மூலம் ஒரு மகள், யிங் சுன் . சியா செங். லேடி வேங்கை மணக்கிறார், இந்த தம்பதியருக்கு, இரண்டு மகன்கள், சியா சு மற்றும் சியா போ-யூ. துனை மனைவியுடன் பிறந்த மகளின் பெயர் டான் சுன். சியா போ-யூ, இந்த கதையின் நாயகன், பிறக்கும் போது வாயில் பச்சை மாணிக்கத்துடன் பிறந்தான் எனக் கூறப்படுகிறது. சியா லியன், லின் ஜுஹாயை மணக்கிறார். ஆனால் ஒரு மகள் லின் டா-யூவை தன் கணவரிடம் விட்டுவிட்டு இளம் பருவத்திலே காலமாகிறார். லேடி டோவேகர் அழைப்பின் பெயரில், ஜூஹாய் தன் மகளுடன் சியா வீட்டில் வாழ்கிறார்.

சியா பரம்பரை உயர்குடியிலே மிகவும் செல்வமுடையவர்கள். மிகவும் பரந்து விரிந்த குடும்பம் இவர்களுடையது தான். போ-யூவின் அத்தை சுயே மற்றும் அவள் மகள் சுயே போ-சாய் சியா குடும்பத்துடன் வாழ்கின்றனர். கள்ளங்கபடமற்ற போ-யூ இரண்டு பெண்களிடமும் நன்றாக பழகுகிறான், ஆனால் அவனுக்கு டா-யூ மீது பற்று அதிகம். இருவரும் காதல் வசப்படுகின்றனர். இதற்கிடையே போ-யூவின் தங்கை டான் சுன், அரசரின் துணை மனைவியாகிறாள். இதன் காரணமாக சியா பரம்பரையின் செல்வாக்கு மீண்டும் கூடுகிறது.

சியா குடும்பத்தின் பெரியவர்களான, லேடி டோவேகர், சியா செங் மற்றும் லேடி வேங், போ-சாயை, போ-யூவுக்கு மணமுடிக்க முடிவு செய்கிறார்கள். இவர்களை பொருட்டு, பச்சை மாணிக்கமான போ-யூவுக்கு ஏற்ற தங்க அணிகலன் போ-சாயே ஆவால். ஆனால் போ-யூ, உடல் நலம் குன்றிய தனது அத்தை மகளாகிய டா-யூவை விரும்புகிறான் என அறிகிறார்கள். ஆகையால் அந்த பெரியார்கள் ஒரு சதி திட்டம் தீட்டி, டா-யூவை போ-யூக்கு மணந்து தருவதாக பொய்யான வாக்குறுதியை போ-யூவுக்கு தருகிறார்கள். அவர்கள் தீட்டிய திட்டம், மணமகள் முகத்திரை அணியும் மரபுடைய வழக்கம் உள்ளதால், முகத்திரைக்குள் போ-சாயை மணமகளாக்கினால் போ-யூவால் அடையாளம் கண்டு கொள்ள இயலாது என்பது தான்.

திருமணச் செய்தி டா-யூவின் காதுகளுக்கு எட்டியதும், மன வருத்தத்தினாலும் வெறுப்பினாலும் உடல்நலம் குன்றி, உயிர் மாண்டாள். இதையறியாத போ-யூ தனக்கும் டா-யூவுக்கும் கல்யாணம் என்னும் நினைப்பில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தான். கல்யாணத்திற்கு பின், உண்மையை அறிய வந்த போ-யூவுக்கு பித்து பிடித்தது. இந்நிலையில், பேரசரின் துனை மனைவி டான் சுன் இறக்கிறாள். சியா சே மாகாண அதிகாரிகளுடன் சதித்திட்டம் தீட்டீயதால், அந்த குடம்பத்தின் அரசகுல மரியாதை பரிக்கப்படுகிறது. சியா சே மற்றும் சியா செங்கின் சொத்துக்கள் பரிக்கப்படுகின்றன.

போ-யூவின் உடல்நலக் குறைவு அதிகரித்து, மரணத் தருவாயில் இருந்தான். அப்போது ஒரு துறவி, தொலைந்த போ-யூவின் பச்சை மாணிக்கத்துடன் தோன்றினார். போ-யூ, திடீரென்று தெளிவுற்று பின்னர் மயங்கி விழுந்தான். கொடுங்கனவுக்குப் பின் விழித்தான். தன் மனைவி போ-சாய் கருவுற்றிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல், போ-யூ வீட்டை விட்டு வெளியேறி துறவி பூண்டான்.

கதை மாந்தர்கள்[தொகு]

இந்த புதினம் நிறைய கதைமாந்தர்கள் உள்ளன. ஏறக்குறைய 400 பாத்திரங்கள் கொண்ட இந்த புதினத்தில் முக்கிய கதைமாந்தர்கள் மட்டும் 40 ஆகும்.

சியா போயு மற்றும் ஜின்லின்கின் 12 அழகிகள்[தொகு]

  • சியா போ-யூ (அர்த்தம் - பச்சை மாணிக்கம்)
சியா செனின் மகன். பிறக்கும் போதே பச்சை மாணிக்கத்தை வாயில் கொண்டு பிறந்தான். வீட்டிலிருக்கும் பெண்களிடையே நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தான். இவனுக்கு கௌரவம், அதிகார புகழில் ஈடுபாடு இல்லை.
லின் டா-யூ, லின் ஜீஹாயின் மகள். போ-யூவின் அத்தை மகள். இவள் போ-யூவை மிகவும் காதலித்தால். ஆனால் பெரியோர் சதியால், போ-யூவை பிரிந்தாள். தன் காதலுக்காக உயிரையும் கொடுத்தாள். டா-யூ மிகச் சிறந்த பாடகி.
  • சுயே பொ சாய் (அர்த்தம் - விலைமதிப்பற்ற அணிகலன்)
சியா போ-யூவின் மற்றொரு அத்தை மகள். போ-யூ மிகவும் சாதுரியமான, விவேகமான, அழகிய பெண். அவள் புத்த போதனைகளை நன்றாக பயின்றிருந்த போதிலும், வெளியே காட்டிக் கொள்ளமாட்டாள். பொ-சாயின் சிறு வயதில், புத்த துறவி ஒருவர், அவளுக்கு தங்கத்தால் அலங்கரித்த அணிகலன் ஒன்றை தந்தார். போ-யூவின் பச்சை மாணிக்கத்திலும், போ-சாயின் தங்க அணிகலனிலும் உள்ள கல்வெட்டுகளும், ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்தன. ஆகையால் தான் இவர்கள் சரியான ஜோடி என்று 'சியா' குடும்ப பெரியோர்கள் முடிவு செய்தனர்.
  • சியா யூவான்சன் (அர்த்தம் - முதல் வசந்தம்)
சியா போ-யூவின் அக்கா. இவளது பெயரின் பொருள், வருடத்தின் முதல் நாள். இவள் பேரரசரின் துனை மனைவியாகிறாள். இவள் வருகைக்காக தான் ராஜாங்க தோட்டம் கட்டப்பட்டது. அவள் தனது 40 வயதில் இறந்தாள்.
  • சியா டான்சன் (அர்த்தம் - காத்திருக்கும் வசந்தம்)
சியா போ-யூவின் தங்கை. சியா சென் தனது துணை மனைவியுடன் பெற்ற மகள். அந்நாளில் துணைமனைவியின் மகளை பெரும்பாலும் சமமாக மதிக்க மாட்டார்கள். ஆயினும் இவளது திறமையைக் கண்ட அனைவரும் போற்றினர்.
  • ஸி சியான்ஜியன் (அர்த்தம் - சியாங் நதியின் மேகம்)
  • மியா-யூ (அர்த்தம் - புத்திசாலி மாணிக்கம்)
  • சியா யிங்சன் (அர்த்தம் - பொக்கிஷமான வசந்தம்)
  • வேங் சிபெங் (அர்த்தம் - அற்புதமான் பீனிக்ஸ்)
  • சியா கியாஜீ
  • லீ வான் (அர்த்தம் - வெள்ளை பட்டு)
  • கின் கெகிங்

மற்ற முக்கிய கதை மாந்தர்கள்[தொகு]

  • பாட்டியார் ஜியா
  • ஜியா ஸி
  • ஜியா செங்
  • ஜியா லியான்
  • சியான்கிலிங்
  • பிங்கர்
  • சு பேன்
  • பாட்டி லியூ
  • லேடி வேங்
  • அத்தை சு
  • ஹுயா சிரென்
  • கிங்வென்
  • மிங்யன்
  • ஜியாவோ

குறிப்பிடத்தக்க குறும் பாத்திரங்கள்[தொகு]

  • கின் ஜாங்
  • சியா லேன்
  • சியா சென்
  • லேடி யூ
  • ஜியா ராங்
  • லேடி சிங்
  • கியூடாங்

மேற்கோள்கள்[தொகு]

  1. Jonathan Spence, The Search for Modern China (New York: Norton, 1990), 106–110.
  2. David Hawkes, "Introduction," The Story of the Stone Volume I (Penguin Books, 1973), pp. 15–19.
  3. Jonathan D. Spence, Ts'ao Yin [Cao Yin] and the K'ang-Hsi Emperor: Bondservant and Master (New Haven,: Yale University Press, 1966) is a study of Cao's grandfather.
  4. "CliffsNotes, About the Novel: Introduction". Cliffsnotes.com. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2011-07-16.
  5. "Vale: David Hawkes, Liu Ts'un-yan, Alaistair Morrison". China Heritage Quarterly of the Australian National University.
  6. 6.0 6.1 Shang (2010), ப. 282.
  7. 7.0 7.1 Shang (2010), ப. 283.
  8. A convenient summary of this scholarship is David Hawkes, "Introduction," The Story of the Stone Volume I (Penguin Books, 1973), pp. 15–19. The pioneering discussion in English is Shih-Ch'ang Wu, On the Red Chamber Dream : A Critical Study of Two Annotated Manuscripts of the 18th Century (Oxford: The Clarendon Press, 1961).
  9. "曹雪芹自己销毁了110回《红楼梦》的后30回 (Cao Xueqin himself destroyed the 110 chapter Dream of the Red Chambers' last 30 chapters)". ifeng.com of Phoenix Television. 4 பெப்பிரவரி 2008. Archived from the original on 30 மார்ச்சு 2012.
  10. Maram Epstein, "Reflections of Desire: The Poetics of Gender in Dream of the Red Chamber," Nan Nu 1.1 (1999): 64.
  11. 11.0 11.1 Edwards (1994), ப. 11, 64.
  12. Xianfeng Hu, Yang Wang, Qiang Wu, "Multiple Authors Detection: A Quantitative Analysis Of Dream Of The Red Chamber" Advances in Adaptive Data Analysis 6.4 October 2014
  13. http://dannyreviews.com/h/Story_Stone.html
  14. https://www.cliffsnotes.com/literature/d/dream-of-the-red-chamber/book-summary

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_அறைக்_கனவு&oldid=3586949" இலிருந்து மீள்விக்கப்பட்டது