சிப்பிக்காளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்பிக்காளான்

சிப்பிக்காளான் (Pleurotus) என்பவை தாவர இனத்தில் பூஞ்சை வகைப்பாட்டைச் சேர்ந்ததாகும். இயற்கையமைப்பில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உணவுக் காளான் வகைகள் தாவரவியல் நிபுணர்களால் அறியப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 60-70 வகைகள் மனிதனால் எளிதாக உணவுக்காக பயிரிடத்தக்கவையாக உள்ளன. இந்திய சூழ்நிலைக்கும் தட்பவெப்ப மற்றும் நிலவியல் அமைப்புக்கும் ஏற்ற வகையில் பயிரிடத் தக்கவையாகத் தாவர விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட காளான் வகைகளில் ஒன்று தான் சிப்பிக் காளான்.

அமைப்பு[தொகு]

கடலிலுள்ள முத்து சிப்பியின் அமைப்பை இந்த வகைக் காளான்கள் பெற்றுள்ளதால் இவை இப்பெயர் பெற்றுள்ளன (OYSTER MUSHROOM SPECIES) . இக்காளான்கள் இயற்கையில் சாம்பல், மஞ்சள், வெண்மை, வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு , பழுப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. அந்தந்த சூழ்நிலைக்கேற்ப நிறமும் மாறுகின்றன. சிப்பிக் காளானுக்கு சதைப்பிடிப்பு அதிகம். மேலும் சிறிய தண்டுப் பகுதியும் உண்டு. சிலவகைகளில் தண்டுப் பகுதி காணாமலும் இருக்கும். சிப்பிக் காளானின் அடிப்பகுதியில் வரிவரியாக செதில் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இச்செதில் போன்ற அமைப்புகளுக்கிடையில் லட்சக்கணக்கான வித்துக்கள் காணப்படும். இவ்வித்துக்களை சாதாரண கண்களால் காண இயலாது. நுண்ணோக்கியின் மூலம் தெளிவாகக் காணலாம். இவ்வித்துக்களை காண வேண்டுமெனில் ஒரு கறுப்பு காகிதத்தின் மேல் நன்கு வளர்ந்த காளானை பறித்து செதில் பகுதி அடியில் இருக்குமாறு வைத்தால் சில மணி நேரம் கழித்து அக்காகிதத்தின் மேல் வித்துக்கள் பதிந்து ரேகை போன்ற அமைப்பு காணப்படும்.

சிப்பிக்காளானின் வகைகள்[தொகு]

  • பிளிரோட்டசு ஆசுடிரியேட்டர்சு (Pleurotus ostreatus)
  • பிளிரோட்டசு பிளாபெல் லேட்டசு (Pleurotus flabellatus)
  • பிளிரோட்டசு புளோரிடா (Pleurotus florida)
  • பிளிரோட்டசு சாபிடசு (Pleurotus sapidus)
  • பிளிரோட்டசு சசோர்காஜீ (Pleurotus sajor-caju)
  • பிளிரோட்டசு சிட்ரினோபைரியேட்டசு (Pleurotus citrinopileatus)
  • பிளிரோட்டசு எரிங்கி (Pleurotus eryngii)
  • பிளிரோட்டசு மெம்ப்ரனோசியசு (Pleurotus membranaceus)
  • பிளிரோட்டசு பாஸிலேட்டசு (Pleurotus fossulatus)
  • பிளிரோட்டசு கார்வ் (Pleurotus corve)
  • பிளிரோட்டசு ஓபன்சியே (Pleurotus opuntiae)
  • பிளிரோட்டசு பிளாடிபசு (Pleurotus platypus)

பிளிரோட்டசு ஆசுடிரியேட்டர்சு , பிளிரோட்டசு புளோரிடா,  பிளிரோட்டசு சசோர்காஜீ, பிளிரோட்டசு சிட்ரினோபைரியேட்டசு போன்றவை அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உண்ணப்படுகின்றன.[1] 

சிப்பிக்காளானின் சிறப்புகள்[தொகு]

  1. இந்திய மற்றும் தமிழக சூழ்நிலைகளுக்கு சிப்பி காளான் வளர்ப்பு மிகவும் ஏற்றது. ஏனெனில் சிப்பிக் காளான் 200 செ.கி. முதல் 300 செ.கி. வெப்ப நிலையில் காற்றில் 75 சதவீதத்திற்கு குறையாத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் நன்கு செழித்து வளரும் தன்மை உடையது.
  2. சிப்பிக் காளான் வைக்கோலில் மட்டும் அல்லாது செல்லுலோஸ் என்னும் பொருள் அதிகம் உள்ள பல்வேறு வகைப்பட்ட பண்ணை கழிவு பொருட்களிலும் நன்கு வளரச் செய்ய முடியும்.
  3. சிப்பிக் காளானின் வளர்ப்பு முறைகளும் கையாளும் தொழில் நுணுக்கங்களும் ஐரோப்பிய காளான் , வைக்கோல் காளான்களைக் காட்டிலும் மிகவும் எளிதானதாகும். 
  4. சிப்பிக் காளான் வகை மற்ற உணவு காளான்களைக் காட்டிலும் அதிக உற்பத்தி திறன் கொண்டுள்ளது. 100 கிலோ நெல் வைக்கோலிலிருந்து சராசரியாக 70 கிலோ காளான் வரையிலும் உற்பத்தி செய்ய முடியும் . அதுவம் 40 அல்லது 45 நாட்களுக்கு உள்ளாக உற்பத்தி செய்ய முடியும். வளர்ப்புக்கேற்ற சூழல் அமையுமானால் 100 கிலோ அளவு கூட உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்ளது.

சிப்பிக்காளான் வளர்ப்பின் பின்னணி[தொகு]

1917ஆம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பால்க் என்பவரால் மரத்துண்டுகளில் .பிளிரோட்டர்ஸ் ஆஸ்டிரியேட்டர்ஸ் என்ற வகை சிப்பிக் காளான் வளர்கப்பட்டது. சிப்பிக் காளான் வளர்க்கும் தொழில் நுணுக்கங்களை அமெரிக்காவைச் சார்ந்த விஞ்ஞானிகளான பிளாக,; டாஸோ,ஹாவ் ஆகியோர் ஆராய்ந்து வெளியிட்டனர். இந்தியாவில் முதல் முதலாக மத்திய உணவு மையத்தில் நெல் வைக்கோலில் பிளிரோட்டர்ஸ் ஃபிளாபெல் லேட்டஸ் வகை சிப்பிக் காளான் மைசூரைச் சார்ந்த பானோ மற்றும் ஸ்ரீவத்ஸவ் ஆகிய விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக 1962ல் வளர்க்கப்பட்டது. இந்திய சூழல் மற்றும் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற வகையில் அமைந்த சாம்பல் சிப்பிகாளானான பிளிரோட்டர்ஸ் சசோர்காஜீ என்ற வகை 1974ல் ஜாண் டைக் மற்றும் கபூர் என்பவர்களால் எம் 2 ரகமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.வெள்ளை நிறமுடைய பிளிரோட்டர்ஸ் சிட்ரினோபைரியேட்டஸ் வகையான சிப்பிக் காளான் தமிழகத்தில் முதன் முதலாக நெல் வைக்கோலில் வளாக்கப்பட்டது. பிறகு முறையாக தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகத்தால் 1986ம் ஆண்டு கோ 1 என்னும் ரகமாக வெளியிடப்பட்டது. தற்போது அகில இந்திய இளவில் ஒருங்கிணைந்த காளான் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் வழியாக சிப்பிக்காளான் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.[2] 

காளான் பயிர் செய்யும் முறை[தொகு]

  • சதுரப் படுக்கை முறை
  • வெற்றிட உருளைப் படுக்கை முறை
  • உயர்ந்த படுக்கை முறை

சதுரப் படுக்கை முறை[தொகு]

காய்ந்த வைக்கோல் சுமார் 1.5 கிலோ எடுக்க வேண்டும். வைக்கோலை சிறு சிறு துண்டுகளாக (5 செ.மீ) வெட்ட வேண்டும். பின்னர் அதை வெளியே எடுத்து கொதிக்கும் நீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதனால் வைக்கோலிலிருக்கும் நோய் கிருமிகளும் அவற்றின் முட்டைகளும் வெப்பத்தால் அழிந்து விடும். பின்னர் தண்ணீரை பிழிந்து நீக்கி விட்டு வைக்கோலை உபயோகப்படுத்த வேண்டும். 1.5 கிலோ வைக்கோலுக்கு சுமார் 300 கிராம் வித்து தேவைப்படும். இதனை வேளாண் பல்கலைகழகத்திலிருந்து வாங்கலாம். காளான் வித்துக்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அலுமினிய டிரேயில் ஒரு பாலிதீன் தாளை விரித்து வைக்க வேண்டும்.
பாலீதின் தாளின் மேல் சுமார் இரண்டு செ.மீ கனத்தில் வைக்கோல் துண்டுகளை பரப்ப வேண்டும். அதில் ஒரு அடுக்காக காளான் வித்துக்களை தூவ வேண்டும். இரண்டாவது அடுக்காக அதன் மேல் வைக்கோலை பரப்பி காளான் வித்திட வேண்டும். இது போல் மூன்றாவது அடுக்காக வைக்கோலைப் பரப்பி வித்திட வேண்டும். இதன் மேல் மீதமிருக்கும் வைக்கோல் துண்டுகளைத் தூவி ஒரு பலகையால் அழுத்த வேண்டும். பின்னர் பாலிதீன் தாழை மடித்து கயிற்றால் கட்ட வேண்டும். இதுவே வித்திட்ட சதுரப் படுக்கை ஆகும்.
ஓலை வேய்ந்த இடத்தில் தரையில் மணலை பரப்ப வேண்டும். நீர் தெளித்து தரையை குளிர்ச்சியாக்க வேண்டும். அந்த அறையில் வித்திட்ட படுக்கைகளை சமநிலையில் வரிசையாக வைக்க வேண்டும். 16 நாட்களில் காளான் வித்து முளைத்து வெள்ளை நிற நூலிழைப் போல படரும். இப்பஐவத்தில் நீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தரையில் நீர் தெளித்து அறையை குளிர்ச்சியாக வைக்க வேண்டும்.
16 நாட்களுக்கு பிறகு பாலிதீன் தாழை வெளியே எடுத்து விட்டு படுக்கையை சாய்வாக தாங்கிகளை கொண்டு நிறுத்த வேண்டும். நாள்தோறும் பூவாளியால் காலையிலும் மாலையிலும் நீர் தெளிக்க வேண்டும். படுக்கையில் சிறு சிறு வெண்மையான மொட்டுக்கள் தோன்றும். பின்னர் அவை வளர்ந்து அடுக்கடுக்காக சிற்பிகள் போல் வளர்ச்சி அடையும். இந்த காளான்களை மூன்று முறை அறுவடை செய்யலாம். முதல் அறுவடைக்கு பிறகு இரண்டாவது , மூன்றாவது அறுவடை ஒருவார இடைவெளியில் செய்யலாம். சிப்பிக் காளானை உருளை வடிவ பாலிதீன் பைகளிலும் வளா்க்கலாம்.இதனை உருளைப் படுக்கை முறை என்பா்.[3]

வெற்றிட உருளைப் படுக்கை முறை[தொகு]

குளிர்ந்த நீரிலும் பிறகு கொதிக்கும் நீரிலும் நனைக்கப்பட்ட 5 கிலோகிராம் வைக்கோலினை,ஈரம் பிழிந்தெடுத்த பின் 5 முதல் 8 சென்டிமீட்டர் பருமனுள்ள பிரிகளாகத் திரித்து அவற்றை ஒரு உருளை வடிவமுள்ள பாத்திரத்தின் மீதோ அல்லது டின் மீதோ சுற்ற வேண்டும். சுற்றப்பட்ட பிரிகளின் மீது இரண்டு அல்லது மூன்று சுற்றுகளுக்கு ஒருமுறை சுற்றுகளின் உள்விளிம்பிலும், வெளிவிளிம்பிலும் காளான் விதையினைத் தூவ வேண்டும். அதன் மேல் கொள்ளுரவை அல்லது மரவள்ளி கிழங்கு மாவை தூவ வேண்டும். பின்னர் பிரிசுற்ற உபயோகப்படுத்தப்பட்ட உருளையினை எடுத்து விடலாம். எஞ்சி நிற்பதுதான் வெற்றிட உருளைப் படுக்கை இதை 300 கேஜ் கனம்கொண்ட பாலீத்தீன் தாளினால் மூட வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாலீத்தீன் தாளினை நீக்கி, தண்ணீரை பூவாளிகொண்டு தெளித்துவிட்டு பிறகு பாலித்தீன் தாளினால் முடிவிட வேண்டும். வித்திட்ட 12 முதல் 15 நாட்களில் காளான்கள் தோன்ற ஆரம்பிக்கும். காளான் குடை மாதிரி விரிந்த உடன் அறுவடைச் செய்யலாம். தட்பெவப்ப நிலை, சுற்றுபுறச் சூழல் நன்குள்ள போது மகசூல் நன்றாக இருக்கும்.[3]

உயர்ந்த படுக்கை முறை[தொகு]

ஒரு மூங்கில் பலகையால் 25 செமீ உயரத்தில் மேடை அமைக்க வேண்டும்.வைக்கோலினை 6 முதல் 8 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கொதிக்கும் வென்னீரில் அமுக்கி வைக்கவேண்டும். வைக்கோலில் தங்கி உள்ள நீரை பிழிந்தெடுக்கவும். பின்னர் வைக்கோலினை 60 - 90 சென்டிமீட்டா் நீளமும் 18 -22 சென்டிமீட்டா் கனமும் கொண்ட கற்றைகளாகக் கட்ட வேண்டும். நான்கு வைக்கோல் கற்றைகளை மேடையில் வைக்க வேண்டும். இது முதல் அடுக்காகும். காளான் வித்துகளை 10 சென்டிமீட்டா் இடைவெளியில் வைக்க வேண்டும். விளிம்புகளிலிருந்து 3-5 சென்டிமீட்டா் இடைவெளி விட்டுவிட வேண்டும். பின்னா் கொள்ளுரவை அல்லது மரவள்ளி கிழங்கு மாவை காளான் வித்துக்களின் மீது தூவ வேண்டும். நான்கு வைக்கோல் கற்றைகளைக் கொண்டு முதல் அடுக்கிற்கு குறுக்காக இருக்குமாறு இரண்டாவது அடுக்கு அமைக்க வேண்டும்.இந்த அடுக்கிலும் காளான் வித்திடல் வேண்டும். பின்னா் கொள்ளுரவை அல்லது மரவள்ளி கிழங்கு மாவை காளான் வித்துக்களின் மீது தூவ வேண்டும். இரண்டாவது அடுக்கின் அடி விழிம்பிற்கு குறுக்காக வைக்கோல் கற்றைகளைக் கொண்டு மூன்றாவது அடுக்கு வைக்கப் படவேண்டும். மூன்றாவது அடுக்கின் மேலும் காளான் வித்திடல் வேண்டும்.கொள்ளுரவை அல்லது மரவள்ளி கிழங்கு மாவை காளான் வித்துக்களின் மீது தூவ வேண்டும். நான்காவது அடிக்கினையும் மேற்சொன்னபடி அமைக்கவேண்டும்.
நான்காவது அடுக்கினை ஒரு மரப்பலகை கொண்டு அழுத்த வேண்டும்.படுக்கையின் நான்கு பக்கங்களிலும் பூவாளிகொண்டு தண்ணீரைத் தெளிக்க வேண்டும். தண்ணீா் அதிகமாக தெளிக்கக் கூடாது. பின்னா் படுக்கையினை சுற்றி ( 300 கேஜ் கனம்கொண்ட) பாலீத்தீன் தாளினால் மூட வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாலீத்தீன் தாளினை நீக்கி, தண்ணீரை பூவாளிகொண்டு தெளித்துவிட்டு பிறகு பாலித்தீன் தாளினால் முடிவிட வேண்டும். வித்திட்ட 12 முதல் 15 நாட்களில் காளான்கள் தோன்ற ஆரம்பிக்கும். காளான் குடை மாதிரி விரிந்த உடன் அறுவடைச் செய்யலாம். மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தொடா்ந்து அறுவடை செய்யலாம். 8 முதல் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மூன்றாவது அறுவடை செய்யலாம்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜீவா (மே 2003) , "காளான் வளா்ப்பு", புத்தகப் புங்கா ,சென்னை 14
  2. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை 6 (ஆகஸ்டு 1983) " காளானும் ஒரு சத்துணேவ" உறையகம் 8.4.1
  3. 3.0 3.1 3.2 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை 6 (ஆகஸ்டு 1983) " காளானும் ஒரு சத்துணேவ" உறையகம் 8.4.2
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பிக்காளான்&oldid=3913866" இலிருந்து மீள்விக்கப்பட்டது