ஐதரேய உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐதரேய உபநிடதம் ரிக் வேதத்தில் அமைந்துள்ள ஒரே உபநிடதம். இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதி உள்ளனர். இதுவே மிகப் பழமையான உபநிடதம் ஆகும்.[1]

பெயர்க் காரணம்[தொகு]

இந்த உபநிடதம் ’ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டக் காரணத்தினால் ‘ஐதரேய உபநிடதம்’ என்று அழைக்கப்படுகிறது. ’இதரா’ எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்னின் மகனாக பிறந்த காரணத்தினால் இந்த முனிவருக்கு மகிதாசு ஐதரேயர் எனப் பெயராயிற்று. ஐதரேய பிரமாணத்தின் ரிஷியும் இவரே.

அமைப்பு[தொகு]

மற்ற உபநிடதங்கள் போல் அல்லாமல் இந்த உபநிடதம் பத்தி பத்தியாக உள்ளது. இதனால் ஆதிசங்கரர் இந்த உபநிடதத்தை மூன்று அத்தியாயங்களாக பிரித்து முதல் அத்தியாயத்தில் மூன்று பகுதிகளும், இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு பகுதியும், மூன்றாம் அத்தியாத்தில் ஒரு பகுதியுமாக பிரித்து அமைத்துள்ளார்.

சிறப்பு[தொகு]

ஆதிசங்கரர் இந்த உபநிடதத்திற்கு மட்டும் நீண்ட முகவுரை எழுதியுள்ளார். ஞான யோகம் மற்றும் சந்நியாசம் குறித்து தனது முகவுரையில் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்த உபநிடதத்தில் ”ப்ரக்ஞானம் பிரம்மம்” , ”ஆத்மாவை இதம்” எனும் இரண்டு மகா வாக்கியங்கள் அமைந்துள்ளன.

சாந்தி மந்திர விளக்கம்[தொகு]

இருக்கு வேதத்தின் சாந்தி மந்திரமே ஐதரேய உபநிடதத்திற்கும் அமைந்துள்ளது. “ஓம் வாங்மே மனஸி எனத் துவங்கி.............அவது மாமவது வக்தா மவது வக்தாரம்” என முடியும் சாந்தி மந்திரத்தின் பொருள்:

“எனது வாக்கு, மனதில் நிலைபெறட்டும். மனம், வாக்கில் நிலைபெறட்டும். ஒளிமயமான பரம்பொருளே! நீ என்னுள் ஒளிர்வாயாக. மனமே, வாக்கே நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்குக் அருள்வீர்களாக. என்னால் கேட்கப்படுகின்றவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். நான் கற்றவற்றைப் பகலும் இரவும் சிந்திப்பேனாக. நான் உலகியல் உண்மைகளைச் அறிவேனாக. பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறிவேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும். எனது குருவையும் காக்கட்டும். எனக்கும் குருவுக்கும் ஆரோக்கியத்தை தர வேண்டும். சீடனாகிய எனக்கு (வேதத்தை) நன்கு கேட்கும் சக்தியும், குருவுக்கு அதனை நன்கு கற்றுத்தரும் சக்தியும் அருள வேண்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி”.

வேதாந்த சாத்திரங்கள் கேட்கும் போது நமக்கு வரும் தடைகளான சூழ்நிலைகளிலிருந்து வரும் தடை, இயற்கையிலிருந்து வரும் தடை, நம்மிடருந்து நமக்கே வரும் தடை ஆகிய மூன்று தடைகளை அமைதிப் படுத்துவதின் மூலம் நம்மை நாம் காத்துக்கொள்வதற்கு இறைவனிடம் வேண்டுவதே சாந்தி மந்திரம சொல்வதின் உட்பொருள்.

மையக்கருத்து[தொகு]

இறைவன் எந்த ஒரு உதவியும் இன்றி தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார்.

உடல், உயிர் மனம், பிராணன், ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே மனிதன்; அவன் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களுக்கேற்ப உடல்களை மாற்றிச் செல்வது ஒரு உயிரின் பயணம்; உயிர் பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு; உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது; உயிர் தந்தையின் வழியாக வருகிறது; இதன் பிறகு ஆன்மா கருவுக்குள் புகுந்து கொள்கிறது; ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் விரிவாக இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளன.

பின்பு ஆத்ம தத்துவம் விளக்கப்படுகிறது:

நாம் யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, இனிப்பு-கசப்பு என்று எதை என்று எதை உணர்கின்றோமோ அவரே ஆத்மா. உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகிறது. ஆனால் கதிரவன் எதிலும் நேரிடையாக ஈடுபடுவதில்லை. அவனுடைய முன்னிலையில் தான் எல்லாம் நடைபெறுகிறது. அது போல ஆத்மா என்பது ஒரு சாட்சியே. ஆத்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், எல்லாமாக விளங்குவதும் அதுவே. அந்த ஆத்மாவே புத்தியாகவும், மனமாகவும் விளங்குகிறது. உணர்வு, ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக்கூர்மை, மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத்தெளிவு, மனக்கலக்கம், நினைவு, உறுதியான புத்தி, தீர்மானம், பிராண சக்தி, ஆசை, இன்ப நுகர்ச்சி என்பவை ஆத்மாவின் பல பெயர்கள். உடல் இயக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே.

இறுதியாக பிரக்ஞானம் பிரம்ம என்ற மகா வாக்கியத்தின் மூலம், இந்த பிரக்ஞானமே உண்மையில் ஆத்மா அல்லது பிரம்மம், அதனை உண்ர்ந்தே வாமதேவர் முக்தி அடைந்தார்.

ஆத்மா, சீவன் இரண்டும் பிரம்மமாக உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து பஞ்ச பூதங்களும் ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. பிரபஞ்சமே ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன்.

சந்தியாவந்தன மந்திரம்[தொகு]

சந்தியாவந்தன மந்திரம் இந்த உபநிடதத்தில் வருகின்றது. ஞாயிற்றை தினமும் போற்றி வழிபடும் கௌஷீதகி முனிவர் பகலில் ஒளிரும் ஞாயிறை, மாலையில் விழும் ஞாயிறைத் தினமும் தோத்திரம் செய்பவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://archive.org/details/AitareyaUpanishad
  2. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; நவம்பர் 2011; ஐதரேய உபநிடதத்தின் சாரம்; பக்கம் 39,40

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரேய_உபநிடதம்&oldid=3848010" இலிருந்து மீள்விக்கப்பட்டது