சி. கணேசையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 110: வரிசை 110:
===வித்துவ சிரோமணிப் பட்டம்===
===வித்துவ சிரோமணிப் பட்டம்===


ஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் மகாவித்துவான் கணேசையரவர்களுக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐயரவர்கள் பட்டமளிப்பிற்கு செல்லாவிடினும் சங்கம் அவரது இடம் தேடிப் பட்டத்தை வழங்கித் தனக்கும் தமிழுக்கும் பெருமை தேடிக்கொண்டது.
ஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் கணேசையருக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது.


== இறுதிக் காலம்==
== இறுதிக் காலம்==

07:38, 1 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

சி. கணேசையர்
சி. கணேசையர்
பிறப்பு(1878-03-26)மார்ச்சு 26, 1878
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புநவம்பர் 8, 1958(1958-11-08) (அகவை 80)
வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம்
இறப்பிற்கான
காரணம்
இயற்கை
அறியப்படுவதுதொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு விளக்கக் குறிப்புகள் எழுதியமை
சமயம்சைவ சமயம்
பெற்றோர்சின்னையர்
சின்னம்மாள்
வாழ்க்கைத்
துணை
அன்னலட்சுமி

சி. கணேசையர் (ஏப்ரல் 1, 1878 - நவம்பர் 8, 1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவசிரோன்மணி என்ற பட்டம் பெற்றவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு) இவர் இமயம்போல் போற்றப்படுகிறார்.

பிறப்பு

யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே ஏறத்தாழ 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் விவசாயக் கிராமத்தில் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய ஆதீன பரம்பரையில் வாழ்ந்துவந்த சைவ அந்தணர் குல சின்னையர் என்பவருக்கும் சின்னம்மாளுக்கும் ஐந்தாவது புதல்வராக 15-04-1878 இல் கணேசையர் பிறந்தார்.

கல்வி

கணேசையரது குடும்பம் கற்றவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு விளங்கிற்று. இவருடய பெரிய தந்தையாரால் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர்முன்றலில் (சொந்த செலவில்) நடத்தப்பட்டுவந்த சைவப்பள்ளிக்கூடத்தில் ஐயர் எட்டாம் வகுப்புவரை கல்விகற்றார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார். மேலும் இவரது பெரிய தந்தையாரிடமும் (வீட்டில்) தனிப்பட்ட முறையில் பாடங்கேட்டமை இவரை வகுப்பில் முதன்மாணவர் ஆக்கியது. அதன்பின் யாழப்பண நகரைச் சேர்ந்த வண்ணார்பண்ணையில் வசித்து வந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார்.

பொன்னமபலப்பிள்ளையவர்கள் இறந்தபின் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார்.

இல்லற வாழ்வு

தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியாகிய அன்னலட்சுமி அம்மையைத் திருமணஞ் செய்தார். அம்மையாரும் வடமொழி, தென்மொழி அறிவுடையவர். நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர். அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு "அன்னலட்சுமி கூபம்" எனப் பெயரிட்டு வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனை தருமசாதனம் பண்ணியிருக்கிறார்கள். அவ்வாலயத்துக்கு முன்னே பல பேர், பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூறாமையால் அப்பணியைக் கைவிட்டிருந்தனர். ஐயர் வெட்டுவித்த கிணறும் நாற்பது அடிவரை அகழப்பட்டும் நீரூற்றிலது ஐயர் அவர்கள்,

ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை - நாட்டிடுவாய் மாமருதி வீசா மதமா முகத்தோனே காமுறுவேற் குள்ளம் கனிந்து

என்று பாடியும் பணிந்தும், தம்பணியைத் தொடர்ந்து செய்து நீரூறக்கண்டு மகிழ்ந்தனர். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உள்ளது[1].

இலக்கண - இலக்கியப்பணி

இலக்கண வித்தகர்

கணேசையரவர்கள் அவர்தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது.

“இன்றுவரை எமக்குக் கிடைத்த பழந்தமிழ் நூல்களிற் மிகத் தொன்மையானது தொல்காப்பியமென்னும் இலக்கண நூல். அது தமிழர்களின் நாகரிக வழக்க ஒழுங்குகளை ஆராய்வார்க்கு உறுதுணை பயக்கவல்லதோர் சீரிய நூல். அந்நூல் ஆக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே அதனுரைகள் ஆக்கப்பட்டன. அவ்வுரைகளும் ஆக்கப்பட்டுச் சில நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. ஏட்டு வடிவிலிருந்த அந்நூலுரைகள் காலத்துக்குக் காலம் பெயர்த்தெழுதப்பட்டமையானும், விளங்குதற்கரியனவாயிருந்தமையானும் அவற்றுக்கண் பிழைகள் புகுந்து கற்பார்க்குப் பெரிதும் துன்பம் தந்தன. அவற்றைச் செம்மை செய்து பாதுகாக்க வேண்டுமென ஐயர் அவர்களுக்கு ஒரு பெருவிருப்பமுண்டாயிற்று. அந்நூலுரைகளைப் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப மாணவர்களுக்குக் கற்பித்து வந்ததினால் ஐயர் அவர்களுக்குக் அவ்விருப்பத்தினை நிறைவேற்றுவதில் பெருஞ் சிரமம் ஏற்படவில்லை. ஏட்டுப் பிரதிகள் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதிவந்தனர். தாங்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டனர். அவற்றின் பதிப்பாசிரியர் ஈழகேசரி நா. பொன்னையா அவர்களாகும். முற்கால நூலுரைகளைக் கற்பித்தலில் கஷ்டமுற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஏனைய அறிஞர்களும், மாணவர்களும் அவற்றை மிக்க விருப்பத்தோடும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர். தொல்காப்பியமாகிய பெருங்கடலிற் புகுவோர்க்கு ஐயர் அவர்களின் குறிப்புக்கள் மரக்கலம் போல உதவுவன. ஐயர் அவர்கள் செய்த தொண்டுகளில் மிக உயர்ந்ததாகக் கருதத்தக்கது இத்தொண்டேயாகும்”<[1].

“ஐயரவர்கள் தனது இளவயதிலேயே தொல்காப்பியத்தினுள் துணிந்து பிரவேசிக்க காரணம் அவர் பெற்ற இலக்கணக் கல்வியும் தேடலுமேயாகும். இவரது தொல்காப்பிய பதிப்புகள் (எழுத்ததிகாரம் – 1937, சொல்லதிகாரம் – 1938, பொருளதிகாரம் இரண்டாம் பகுதி – 1943, பொருளதிகாரம் முற்பகுதி – 1948) வெளிவந்ததும் ஈழத்திருநாடின் இலக்கியப் புகழும், ஐயரவர்களின் திறமும் தமிழ்நாடு எங்கணும் பரவி வியாபித்தது. ‘தொல்காப்பியக்கடல்’ என்றும், ‘ஈழத்து இலக்கிய ஞான்று’ என்றும் ஐயரவர்கள் அக்காலத்தில் பலவாறாகப் புகழ்ந்துரைக்கப்பட்டார்”. – சிவலிங்கராஜா-

இலக்கண - இலக்கிய ஆய்வாளன்

மகாவித்துவான் கணேசையரவர்கள் தனது 25வது வயதிலே அக்காலத்தில் மதுரை தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். இலக்கண ஆராய்ச்சி மட்டுமன்றி பல இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் இவரால் எழுதப்பட்டு ‘செந்தமிழ்’ இதழில் வெளிவந்தன. – கணேசையர் ஆண்டுமலர்.

கட்டுரையாளன்

கணேசையரவர்கள் சிறந்த இலக்கண ஆய்வாளராக – இலக்கண வித்தகராக மட்டுமன்றி சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ‘மதுரை செந்தமிழ்’ ஈழகேசரி பத்திரிகை’ மற்றும் அக்காலத்தில் வெளிவந்த சிறப்பு மலர்களிலும் ஐயரின் கட்டுரைகள் இடம்பிடித்தன. மேலும் இவ்வாறான இதழ்கள் – பத்திரிகைகள் இவருடய கட்டுரைகளுக்கு பெருமதிப்பளித்து பிரசுரித்து வந்தன. இலக்கணத்தில் சிக்கலான- மயக்கமுள்ள பகுதிகளை தேர்வுசெய்து அவற்றை ஆய்ந்து – தெளிந்து அதுசம்பந்தமான கட்டுரைகளையே ஐயரவர்கள் அதிகமாக எழுதியுள்ளார்கள். மேலும் சமயம் சார்ந்த அல்லது சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தை நன்னெறிப்படுத்தும் உயரிய நோக்கு இவற்றில் மேலோங்கிக் காணப்படுகிறதெனலாம். ‘செந்தமி’ழில் இவர் எழுதிய ஏக காலத்தில் பல தலைசிறந்த தமிழ்நாட்டு தமிழறிஞர்களும் அதில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

பாட பேத ஆய்வாளன் - பதிப்பாசிரியர்

தமிழ்மொழி நூல்களின் பதிப்பு முயற்சிகள் தொடங்குவதற்கு முன்பே பல இலக்கண இலக்கிய ஆக்கங்கனள ஏடுகள் மூலம் கற்றுணர்ந்த ஈழத்து அறிஞர்களிடம் பாடபேத ஆய்வு பற்றிய தெளிவான விளக்கம் அவர்களிடம் மேலோங்கி இருந்தது என்பதற்கு பழநதமிழிலக்கிய – இலக்கண ஆக்கங்களுக்கு அவர்கள் எழுதிய உரைகளே சிறந்த எடுத்துக் காட்டாகும். ஐயரவர்களும் இத்துறையில் மிகச்சிறந்து விளங்கினார். நவீன மூலபாடத் திறனாய்வாளனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாடபேத ஆய்வினை தனது படைப்புகளில் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவரின் தொல்காப்பியப் பதிப்புகள் புகழ் பெற்றமைக்கான பல காரணங்களுள் அவர் அதில் பாடபேதங்களை சிறப்பாக விளக்கியிருந்தமையும் ஒன்றாக அமைகின்றது. மேலும் மூல பாடத் திறனாய்வு பற்றிய அறிவை ஐயரவர்கள் தனது இளவயதிலேயே பெற்றிருந்தார் என்பதற்கு ‘செநதமிழில்’ இவர் எழுதிய கட்டுரைகள் சில சான்று பகர்கின்றன.

பத்தான்பதாம் நூற்றாண்டில் அச்சு இயந்திர வருகையும், அதனோடிணைந்த பொருளாதார மாற்றங்களும் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்தலில் பாரிய செல்வாக்கு செலுத்தியது. இம்முயற்சியில் முன்னின்று உழைத்தவர்களுள் முதன்மையானவர்கள் ஈழநாட்டவர்களே. இவர்களது வழியில் கணேசையரவர்களும் பதிப்பு துறையில் சிறந்து விளங்கினார்.

விவாதத் திறன்

கணேசையரவர்கள் காலத்தில் ஈழநாட்டு தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கும் இடையில் பல விவாதங்கள் பத்திரிகைகள் – சஞ்சிகைகள் மூலமாக நடந்துள்ளன. ஐயரவர்கள் தனக்கு சந்தேகமான இலக்கணப்பகுதிகள் சம்பந்தமாகவும். தனது அறிவிற்கு பிழை என்று படுகின்ற – சில அறிஞர்களது மனம்போன போக்கிலான, தவறான கருத்துக்கள் தொடர்பாகவும் தனது விவாதங்களை மேற்கொண்டுள்ளார்.

“மகாவித்துவான் கணேசையரவர்கள் காலத்தில் இந்தியாவில் சேது சமஸ்த்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கரவர்கள், திரு.மு.இராகவையங்கரவர்கள், திரு அரசன் சண்முகனார், திரு நாராயணங்கார், மறைமலையடிகள் போன்றவர்களும் ஈழத்தில் வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர் போன்ற பலரும் இலக்கணம் வளர்த்தனர்” – சிறப்பு மலர்

ஐயரவர்கள் நடத்திய விவாதங்களில் தமிழ்நாட்டின் திரு அரசன் சண்முகனாருடனான விவாத மோதலே இவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் அவர்கள் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் “ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு” என நிறுவியிருந்தார் ஆனால் பல நூல்களையும் ஒப்புநோக்கி ஆராய்ந்த ஐயரவர்கள் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும் அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவியிருந்தார்கள். மேலும், சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் அங்ஙனமே புகழை மிகுவித்தது. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் எழுதிய கட்டுரைகளும் அறிஞர்க்கு விருந்தாயின.

கவிபாடும் புலமை

இத்தனை சிறப்புடைய மகாவித்துவான் கணேசையரவர்கள் மரபுக்கவிபாடும் மகத்தான வல்லமையையும் கொண்டிருந்தார். ஈழத்தின் சிறந்த புலவர்களுள் ஒருவரான குமாரசாமிப் புலவரவர்கள் ‘கவிபாடும் புலமைக்கோனே’ எனப் பாராட்டியிருந்தார்

‘மருதடி விநாயகர் பிரபந்தம்’, ‘மருதடி விநாயகர் இருபா இருபஃது’ ‘மருதடி விநாயகர் அந்தாதி’ ‘மருதடி விநாயகர் ஊஞ்சல்’ ‘ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஊஞசல்’, ‘திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை’போன்றன ஐயரவர்களது படைப்புக்களுட் சிலவாகும் மேலும், அக்காலப் பத்திரிகைகளிலும் நினைவு மலர்களிலும் ஐயரால் இயற்றப்பட்ட பாக்கள் - இரங்கல் பாக்கள் வெளிவந்துள்ளன. – ஆண்டுமலர்

சங்க இலக்கிய செய்யுள்களை நுணுகி ஆராய்ந்து அவர் எழுதிய கட்டுரைகளில் ஐயவர்களின் கவிதை – ரசனை - நயம் நன்கு புலப்படுகிறது. கவிதைகளின் உயிர்நாடியை சரியாகப் புரிந்து இவர் கட்டுரைகளை எழுதியுள்ளார் – சிவலிங்கராஐா

போதனாசிரியர்

மகாவித்துவான் கணேசையரவர்கள் மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். வண்ணார்பண்ணையில் ஆரம்பமான ஐயரவர்களின் ஆசிரியப்பணி விவேகானந்தா வித்தியாசாலையிலும் பின் நாவலர் காவியப் பாடசாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் முதலிய ஊர்களிலுள்ள பாடசாலைகளிலும் தொடர்ந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்க பாடசாலைகளில் கற்பதற்குரிய ‘ஆசிரிய தராதரப் பத்தித்தையும்’ ஐயரவர்கள் ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்.

ஈழ நாட்டின் சரி்த்திரப் பிரசித்தி பெற்ற நைநாதீவின் சைவப்பாடசாலையில் ஐயரவர்கள் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியக் கடமையின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார்.

1921ம் ஆண்டு கணேசையரவர்களின் கற்பித்தல் சேவையில் மற்றுமொரு மாற்றம் நிகழ்ந்தது. சதாசிவ ஐயரால் (ஸ்தாபகர் – ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கம்) நிறுவப்பட்ட சுன்னாகம் பராசீன பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை கணேசையரவர்கள் ஏற்று 1932 வரை திறம்பட செயற்பட்டார். இக்காலத்தில் இவர் தனது இலக்கண முதிர்ச்சியை இயன்றவரை பயன்படுத்தி ஈழத்தின் சிறந்த பண்டிதர் பரம்பரையை உருவாக்கியிருந்தார். மேலும் இக்காலத்தில் இவர் தன்னுடய கற்பித்தல் செயற்பாட்டிற்காக எழுதியிருந்த பாடக்குறிப்புகள் பின்னர் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்தன.

மேலும் இப் பிராசீன பாடசாலைச் சூழல் ஐயரவர்களின் ஆய்வுச் செயற்பாட்டிற்கும், வடமொழிப் புலமை பெறுவதற்கும் பேருதவியாக அமைந்தது. இக்காலப்பகுதியில் இவரின் கற்பித்தல் முறைமையை – சிறப்பைப்பற்றி இவரிடம் கற்ற பண்டிதர்கள் பலர் நூல்களை எழுதியுள்ளனர்.

பிராசீனப் பாடசாலையை விட்டு நீங்கியபின் ஐயவர்கள் தனிப்பட்ட முறையிலான கற்பித்தலில் ஈடுபடுதல் மற்றும் தன்னை நாடிவரும் அறிஞர்களது சந்தேகங்களை தீர்ப்பதிலுமே பெரும்பாலும் ஈடுபட்டிருந்தார். தனது சேவைக்கு எக்காலத்திலும் பிரதியுபகாரம் எதிர்பாராமை இவருடய தலைசிறந்த பண்பாகும்.

“ஐயர் அவர்கள் வருத்தலை விளானில் சனி, ஞாயிறு வாரங்களில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும், தருக்க சிங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள். இந்நாளிற் பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர்களாக விளங்குபவரிற் பலர் ஐயர் அவர்களிடத்திற் பாடங்கேட்டவர்களே ஆவர். ஆசிரிய கலாசாலைகள், பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்களும், மாணவர்களும் ஏனைய கல்விமான்களும் இடையிடை ஐயர் அவர்களைச் சந்தித்துத் தமக்கேற்றப்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொண்டதுண்டு. நாள்தோறும் மாலைவேளையில் மருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தனர். மாணவர் சித்திரப் பாவையின் அத்தக அடங்கி இருந்து பாடங்கேட்டலே நல்லது என்ற கருத்துள்ளவர் ஐயர் அவர்கள். பிராக்குப்பார்த்தல், சிரித்தல், வீண்;கதை பேசல், தொடர்பில்லாத வினாக்களை வினவல், சோர்ந்திருத்தல் முதலான குற்றங்களை மாணவர் புரியின் மிகக் கோபிப்பார்கள். சிறிது அசைந்தாலும் அஃதென்ன என்று கேட்பார்கள். அதனால் எறும்பு கடித்தாற்கூட மாணவர் அசையாதிருந்து பாடங் கேட்பர். தமக்கு எறும்பு கடித்தாலும் அதனை மெல்ல எடுத்துத் தன்பாட்டிலே போக விட்டுவிடுவார்கள். அதனைக் காணுகின்ற மாணவர்கள் தாமும் அங்ஙனமே செய்வர். இலக்கண நுட்பங்களைச் சிரமப்படாது விளக்கிக் காட்டுவார்கள். சங்க இலக்கியங்கள் கற்பிக்கும் போது அப்புலவர்களின் புலமையை வியந்து மெய்ம்மறந்து புகழுவார்கள். பல நூற்பயிற்சியும், நுண்ணறிவும் கொண்ட ஐயர் அவர்களிடம் பாடம் கேட்பது பெரும் பேறெனவே மாணவர் கருதுவர். மாணவரிடம் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்க மாட்டார்கள். சிலபோது தமக்குத் தேவை ஏற்படின் பொருள் வசதியுள்ள மாணவர்கள் சிலரிடம் கடனாகப் பணம் வாங்கி அதனை மறந்துபோகாது அப்பணத்திலும் பெறுமதி கூடிய நூல்களை அவர்களுக்கு வழங்கிவிடுவார்கள். கல்வி வன்மையால் புகழ் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுவார்கள் “உன்னுகின்றனை உனைமணோர் பெரியனென்றுணருமா செய” எனவரும் பாடலை எடுத்துக்காட்டி இறைவனை வணங்கு அவன் உன்னை உலகத்தவர் பெரியன் என்று சொல்லுமாறு செய்வன் என்பார்கள். அவர்கள் கற்பியாது விட்டாலும் அவர்கள் முன்னிலையில் இருப்பதே பெருங்கல்வியைத் தரும். ஆசிரிய இலக்கணம் யாவும் நிறைந்த அவர்களின் மாணவர்கள் பலரிடம் அவர்களின் அடக்க குணம் பொருந்தி இருத்தலை இன்றும் நாம் காணலாம்”.- வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம்

பன்முகப் பணிகளும் பாராட்டுக்களும்

பன்முகப் பணிகள்

ஐயரவர்களின் பன்முகப் பணிகள் என்று பார்க்கும்போது, ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரிதத்தை எழுதியமை மற்றும் தனது ஆசிரியரும் நண்பருமான சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாற்றையும் ஒரு தனி நூலாக எழுதியமை என்பவற்றை குறிப்பிடலாம். சிறந்த ஆய்வாளரான ஐயரவர்களால் தகுந்த ஆதாரங்களுடன் எமுதப்பட்ட இந்நூல்கள் ஈழத்து இலக்கிய அறிஞர்கள் பற்றிய ஆய்விற்கு சிறந்த உசாத்துணை ஏடுகளாக அமைகின்றது.

யாழ்ப்பணதிற்கே தனித்துவமான ‘புரணப்படிப்பு’ கலாசாரம் ஐயரவர்களையும் பாதித்தது. ஆலய புராணப் படிப்புகளில் கலந்துகொள்ளல், குறிப்பு எடுத்தல் போன்ற போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருநதார். மேலும் தன்னைச் சூழவுள்ள சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளவராக ஐயரவர்கள் இறுதிக்காலத்தில் இருந்தார். ஆகம- சோதிட விற்பன்னர்களைக் கொண்ட அந்தண பரம்மரையில் வந்த ஐயரவர்கள் நல்லநாள் அறிதல், மழை வருதல் – வராமையறிதல், வீடு, கிணறு முதலியவற்றிற்கு நிலம் வகுத்தல், நினைத்த காரியம் கேட்டல் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றிவந்தார் – பண்டிதர் இ.நமசிவாயம்

பொற்கிளிப்பரிசு

தன்னலம் கருதாது தமிழிற்கு தொண்டாற்றிவந்த ஐயரவர்களுக்கு யாழ்ப்பாணத்து அறிஞர் பெருமக்களால் பொற்கிழியொன்று பரிசளிக்கும் வைபவம் 1938ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் இவரது பவள விழாவையொட்டி நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தில் முன்னொருபோதும் அறியப்பட்த அளவிற்கு சிறந்த விழாவாக இது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. யாழ் வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் – அறிஞர்கள் மத்தியில் இடம்பெற்ற இவ்விழாவில் ஈழத்தின் சகல பாகங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் உண்மையான உணர்வுடன் பங்கேற்றிருந்தது மட்டுமன்றி சுவாமி விபுலானந்தர் முதற்கொண்டு சகலரும் ஐயரவர்களை உளமாரப் பாராட்டியிருந்தார்கள். விழாவில் தலைவரவர்களும் (திரு.சு. நடேசபிள்ளை) ஐயரவர்களை வாழ்த்தி (அன்னறய பெறுமதியில்) ஈராயிரம் பெறுமதி கொண்ட பொற்கிளி ஒன்றை அரங்கு நிறைந்த கரகோஷத்துடன் வழங்கினார்.

சரித்திரப் பிரசித்திபெற்ற இவ்விழாவின் பின்னரும் ஐயரவர்கள் அயராது முயன்று தொல்காப்பியத்தில் தான் எழுதிய உரைகளின் எஞ்சிய பாகங்களையும் வெளிக்கொணர்ந்து தமிழிற்குப் பெருமை சேர்த்தார்.

மனமாற்றம்

இவ்வாறு தமிழிற்கும் சமூகத்திற்கும் அயராது தொண்டாற்றிவந்த ஐயரவர்கள் தனது வாழ்நாளின் இறுதிப் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியின் ஊரான வருத்தலை விளானில் வீற்றிருந்த மருதடி விநாயகர் ஆலய சூழலில் கழிக்கலானார்.

மேலும் தான் கொண்ட அறிவுச்செல்வத்தைவிட மற்றய எல்லாவற்றையும் விட்டு நீங்கி பற்றற்ற ஒரு துறவற நிலையை எய்தினார். தனது பெறுதிமிக்க ஏடுகள் – புத்தகஙகள் அனைத்தையும் தனது மாணாக்கர்களிடமே கொடுத்துவிட்டார். தனக்கு கிடைத்த பொற்கிழியைக் கூட தங்கமுடியாக்கி புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை ஐங்கரனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

இவ்வாறு வருத்தலை விளான் ஆலய சூமலில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்துவந்த ஐயரவர்கள், ‘சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் நடத்தப்பட்ட 4வது தமிழ்விழா (1951ல்) யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக்கல்லூரி முன்றலில் நடைபெற்றபோது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இவ்விழாவில் உலகப் புகழ் பெற்ற பௌதீக விஞ்ஞான நிபுணர் டாக்டர் K.S.கிருஸ்ஷ்ணன் F.R.S அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

வித்துவ சிரோமணிப் பட்டம்

ஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் கணேசையருக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

இறுதிக் காலம்

கணேசையரின் இறுதிக் காலத்தில் வருத்தலை விளான் மருதடி விநாயகர் ஆலய சூழலில் ஓர் ஆச்சிரமம் அமைத்து துறவற வாழ்ககையை மேற்கொண்டிருந்தார். இக்காலத்தில் ஈழகேசரி நிறுவனத்தாரும், உறவினர் – நண்பர்களும் குறிப்பறிந்து இவருக்கு உதவி வந்தனர். இறுதியாக 03-11-1958 அன்று காலமானார்கள்.

இவரது நூல்களிற் சில..

  • குசேலர் சரித்திரம்
  • ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம்
  • குமாரசுவாமிப்புலவர் வரலாறு

கணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம்

செந்தமிழ் இதழில்

1903 -1904 இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் 1904 -1905 இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் 1905 1906 இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் 1906 - 1907 இராமவதார் அருஞசெய்யுள் விளக்கம் 1907 - 1908 திருக்குறள் பரமேழகர் உரைவிளக்கம் பெரியபுராண முதற்செய்யுளுரை இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் 1909 – 1910 இந்திய அரசர் போர்வீரம் இருகண்ணொருமணி திணைமயக்கம் திருக்குறள் பரிமேழழகர் உரைவிளக்கம் பொருள் கோடல் இராமவதாரச் செய்யுட் படாந்தரம் 1913 சாவாவுடம்பு 1921 – 1922 கவித்தன்மை குமாரசுவாமிப் புலவர் யாப்பருங் கலங்காரிகையுரைத் திருத்தம் வடசொல் வடமொழி முதுமொழியன்றோ 1922 – 1923 உடம்படு மெய் 1923 – 1924 வசிட்டரும் வள்ளுரும் கூறிய அரசியல் 1926 – 1927 அந்தணர் நூல் ஆறனுருபு பிறிதுருபேற்றல் முன்னைத் தமிழ்நாட்டு பெண்களின் கற்புநிலை சில ஆராய்ச்சி 1927 – 1928 அளபெடை கவியின்பம் சிறுபொழுது தொகைநிலை 1928 – 1929 ஒரு செய்யுட் பொருள் ஆராய்ச்சி கவியின்பம் தொல்காப்பியச் சூத்திரப் பொருள் ஆராய்ச்சி பிறிது பிறிதேற்றல் 1929 – 1930 இருபெயரொட்டுப்பெயரும் அன்மொழித்தொகையும் தமிழ்மொழி வளர்ச்சி பரிசோதனைத் தொடர் 1930 – 1931 சிறு பொழுதாராய்ச்சி மதுரைக் காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு 1931 – 1932 சேனாவரையப் பதிப்பும் பிழை திருத்தமும் 1935 – 1936 சில ஆராய்ச்சி 1937 – 1938 சீவகசிந்தாமணி உரைநயம் 1940 – 1941 இயற்கை நவிற்சியும் செயற்கைப் புணர்ச்சியும் கம்பனும் உவமலங்காரமும் பிழையும் திருத்மும் மெய்ப்பாடு 1944 – 1945 தமிழ்நாட்டு மணம் 1945 – 1946 பொருட்புடைப் பெயர்ச்சி 1946 – 1947 அனுதாபக் குறிப்பு இரங்கற்பா இல்லறக் கிழத்தி மாண்புகள் செந்தமிழ் தமிழ்நாட்டு மக்களின் சில ஒழுக்க மரபுகள் 1947 – 1948 இராமவதாரமும் கலித்தொகையும் கம்பரும் அவலச்சுவையும் நீர் விளையாட்டு 1948 – 1950 கவிச்சக்கரவர்த்தி கம்பனே உலகியலும் இலக்கியமும் பெண்களுக்கு பெருந்தகைமை கற்பே தெய்வப் புலவரின் நாவுணர்ச்சி 1951 – 1952 இராமவதாரத்திற் கவிநயம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம் - மகாஜனாக் கல்லூரி

உசாத்துணை

  • சிவலிங்கராஜா, எஸ்., வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும்

வெளி இணைப்புகள்

தளத்தில்
சி. கணேசையர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கணேசையர்&oldid=968242" இலிருந்து மீள்விக்கப்பட்டது