கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Nadarajah.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:COM:OTRS|No p
வரிசை 3: வரிசை 3:
{{தகவற்சட்டம் நபர்
{{தகவற்சட்டம் நபர்
|name = பண்டிதர் கா. செ. நடராசா
|name = பண்டிதர் கா. செ. நடராசா
|image = Nadarajah.jpg
|image =
|imagesize = 200px
|imagesize = 200px
|caption =
|caption =

09:25, 4 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பண்டிதர் கா. செ. நடராசா
பிறப்பு(1930-03-21)21 மார்ச்சு 1930
இணுவில், யாழ்ப்பாணம்
இறப்புசூன் 27, 2006(2006-06-27) (அகவை 76)
தமிழ்நாடு
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்இணுவையூர் செ. நடராசன்
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்கா. செல்லையா, சீனுக்குட்டி
வாழ்க்கைத்
துணை
பரமேசுவரி (தி. 1961)
பிள்ளைகள்குமரன், கார்த்தியாயினி, குருபரன், கார்த்திகேயன்

பண்டிதர் கா. செ. நடராசா (21 மார்ச் 1930 - 27 சூன் 2006) இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞரும் ஆவார். இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் எழுதியவர்.[1]

வாழ்க்கை குறிப்பு

இவர் இணுவையம்பதியில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும், சுருட்டுத் தொழிலுக்கும் செல்வார்.[2]

கல்வி

சுருட்டுக்கொட்டிலிலே இராமாயணம், மகாபாரதம், ஆகியவை பற்றிய அறிவைப் பூரணமாகப் பெற்றுக்கொண்டார். தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றார்.

சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ்  இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதாவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் இ.திருநவுக்கரசு. பண்டிதர் இ. இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.பண்டிதர் தேர்விலும் சித்தி பெற்ரார்.[2] கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 11ஆம் வயதில் நடனக்கலைஞர் ஏரம்பு சுப்பையவிடம் தாளக்காவடியாட்டத்தை முறையாகக் கற்றுக்கொண்டார்.[2]

1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட மேற்படிப்பைத்  தொடங்கினார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]

தொழில்

1952 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று மலையகம் சென்று டிக்கோயாவிலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மலைய மக்களிடையே சமய,சமூக,கல்வித்துறைகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.[2]

1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக மீண்டும் 1967 ஆம் ஆண்டு பூண்டுலோயா மகா வித்தியாலயத்தலும், 1968 இல் லிந்துலை சிங்கள தமிழ் மகா வித்தியாலயத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார். 1974 இல் கோப்பாய் கிறித்தவ கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.[2]

அரசியலீடுபாடு

இவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாத யாத்திரையோடு இவரின் அரசியற் பணி ஆரம்பமாகின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலம். இணுவிற் கந்தசுவாமி கோயில் முன்றலில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகாநாடு ஒன்று நடைபெற்றது (1956) அந்த மகாநாட்டில் தமிழர்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைத்து காங்கேசன் துறையிலிருந்து திருமலை வரை பாதயாத்திரை ஒன்றை நடாத்தவேண்டும் என்று உறுதி பூணப்பட்டது. அதன்படி கோப்பாய் எம்பி வன்னியசிங்கம், செனற்றர் இ.எம்.பி.நாகநாதன் தலைமையில் காங்கேசன் துறையிலிருந்தும், கந்தசாமி ஆசிரியர் தலைமையில் இணுவிலில் இருந்தும் புறப்பட்ட இளைஞர் அணியுள் ஒருவராக நடராசாவும் இணைந்து கொண்டார். இதன் எதிரொலியாக மலையகத்தின் பல இடங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். இவர் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவுகளில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களே தமிழா விழித்தெழு என்னும் நூலாக உருவாக்கம் பெற்றது. 

பேச்சாளராக

 நடராசா ஒரு சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். தமிழ் ஆர்வலர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி 1960, 1961 ஆம் ஆண்டுகளில் சிலப்பதிகாரம் பற்றியதோர் தொடர் சொற்பொழிவினை கற்றன் ஹைலன்ஸ் கல்லூரியில் நிகழ்த்தி வந்தார். இச்சொற்பொழிவுகளை மலையகத்தில் இருந்து வெளிவந்த குறுஞ்சி மலர் என்னும் பத்திரிகை பிரசுரித்து வந்தது. சிலப்பதிகாரம் பற்றிய இந்தச் சிந்தனைகளே இளங்கோவின் கனவு என்ற நூலாகத் தோற்றம் பெற்றது. இக்காலத்தில் நாவலப்பிட்டியில் நா.முத்தையா அவர்கள் ஆசிரியராக இருந்த ஆத்மஜோதி என்ற சஞ்சிகையில்  சமயக்கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமசஞ்சிகை நிகழ்ச்சிதிற் கலந்து கொண்டு நாட்டார் வாழ்வியல் என்ற நிகழ்விலும் , சமூக சாகரம் போன்ற நிகழ்விலும் கலந்து கொண்டு தொடர் உரையாற்றியுளார். சைவநற்சிந்தனை வழங்கியுள்லார். இசைச்சித்திரங்களையும் எழுதியுள்ளார்.[3]  

திருமணம்

1961 ஆம் ஆண்டு  இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியை சீர்திருத்த முறையில் மிகவும் எளிமையாக மணந்து கொண்டார். இவர்களுக்கு குமரன், கார்த்தியாயினி, குருபரன், கார்த்திகேயன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

1987 இல் இந்திய இராணுவத்தின் வருகையால் இணுவில் மருதனார் மடத்தில் இருந்த இவருடைய இல்லம் இராணுவத்தினரின் இருப்பிடமாகியது. இவர் தன் இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து கொழும்பிற்குச் சென்றார். இங்கு வசித்த போது இந்து கலாசார அமைச்சின் வேண்டு கோளுக்கிணங்கி இந்து கலைக்களஞ்சியத்திற்குக் கட்டுரைகளை எழுதினார். தெட்சணகைலாய புராணத்திற்கு உரை எழுதினார். இவற்றை இந்து கலாசார அமைச்சே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1997 இல் தனது மனைவியுடன் இந்தியா சென்று தமிழ் நாட்டிலே தனது மூத்த புதல்வன் குமரனுடன் வசித்தபோது 2001 இல் திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் மகாநாட்டிற்குக் கட்டுரை சமர்ப்பித்து ஆய்வரங்கிலும் கலந்து கொண்டுள்ளார். 27.6. 2006 ஆம் ஆண்டு காலமானார்.[2]

எழுதிய நூல்கள்

  • தமிழா விழித்தெழு - 1958: டாக்டர். மு.வரதரஜனின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
  • இளங்கோவின் கனவு - 1961: சுவாமி தனிநாயகம் அடிகளாரின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
  • இணுவிற் கந்தசுவாமி கோயில் விடுதலை இயக்க வரலாறு
  • தலவாக்கொல்லை திருமுருகன் ஊஞ்சல்
  • இணுவை அப்பர் - 1977
  • வள்ளுவரும் பிரபஞ்சமும் - 1990
  • இந்து கலைக்களஞ்சியக் கட்டுரைகள் - பாகம் இரண்டு, பாகம் மூன்று - 1991 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.
  • தெட்சணகைலாயபுராணம் பாகம் ஒன்று, பாகம் இரண்டு ஆகியவற்றிற்கு உரை - 1992 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.

மேற்கோள்கள்

  1. "இணுவை அப்பர்". pp. பக். 77. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 நூலாசிரியர் கலாபூஷணம் மூத்ததம்பி சிவலிங்கம், நூலின் பெயர் இணையிலி, வெளியீடு இணுவில் சைவதிருநெறிக்கழகம், கல்வி இயல்: பக்கம் 100 - 101.
  3. நூலின் பெயர்; தமிழ் புலமை நாகரீகத்தின் ஓர் இழப்பு நினைவு மலர்.ஆ.இரகுபதிபாலஶ்ரீதரன்.கட்டுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._செ._நடராசா&oldid=1946622" இலிருந்து மீள்விக்கப்பட்டது