முதலாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி அழிப்பு: io:Unesma mondo-milito
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: io:Unesma mondomilito
வரிசை 221: வரிசை 221:
[[id:Perang Dunia I]]
[[id:Perang Dunia I]]
[[ilo:Umuna a Sangalubongan a Gubat]]
[[ilo:Umuna a Sangalubongan a Gubat]]
[[io:Unesma mondomilito]]
[[is:Fyrri heimsstyrjöldin]]
[[is:Fyrri heimsstyrjöldin]]
[[it:Prima guerra mondiale]]
[[it:Prima guerra mondiale]]

12:41, 26 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

முதல் உலகப் போர்
முதல் உலகப் போர்
படிமம்:WW1 TitlePicture For Wikipedia Article.jpg
மேலிருந்து வலஞ்சுழியாக: மேற்குமுனையில் பதுங்குகுழி; ஒரு பிரித்தானியாவின் மார்க் IV தாங்கி பதுங்குகுழி ஒன்றைத் தாண்டிச் செல்கிறது; ராயல் கடற்படையின் போர்க்கப்பல் எச்எம்எஸ் இரெசிஸ்ட்டிபிள் கடற் கண்ணி வெடியில் சிக்கி மூழ்குகிறது; a Vickers machine gun crew with gas masks, and German Albatros D.III biplanes
காலம் 28 ஜூலை 191411 நவம்பர் 1918
இடம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்)
அணிகள்
நேச நாடுகள்:
ரஷ்யப் பேரரசு
பிரான்ஸ்
பிரித்தானியப் பேரரசு
இத்தாலி
ஐக்கிய அமெரிக்கா

மற்றும் பல.

மைய நாடுகள்:
ஆஸ்திரியா-ஹங்கேரி
ஜேர்மன் பேரரசு
ஓட்டோமான் பேரரசு
பல்கேரியா
தலைவர்கள்
நிக்கோலாஸ் II
அலெக்சேய் புருசிலோவ்
ஜார்ஜஸ் கிளெமென்சியு
ஜோசப் ஜோப்ரே
பேர்டினண்ட் ஃபோக்
ராபர்ட் நிவேலே
Philippe Petain
மன்னர் ஜார்ஜ் V
ஹெர்பேர்ட் எச். அஸ்குயித்
டே. லாயிட் ஜார்ஜ்
டக்ளஸ் ஹேக்
ஜான் ஜெலிக்கோ
விக்டர் இம்மானுவேல் III
லுய்கி கடோர்னா
ஆர்மண்டோ டயஸ்
வூட்ரோ வில்சன்
ஜான் பேர்ஷிங்
பிராண்ஸ் ஜோசப் I
Conrad von Hötzendorf
வில்ஹெல்ம் II
எரிக் வொன் பால்கென்ஹெயின்
பால் வொன் ஹின்டென்பர்க்
ரெயின்ஹார்ட் ஸ்கீர்
எரிக் லுடெண்டார்ஃப்
மெஹ்மெட் V
இஸ்மாயில் என்வர்
முஸ்தாபா கெமால்
பேர்டினண்ட் I
இழப்புக்கள்
இறந்த படையினர்:
5,525,000
காயமுற்ற படையினர்: 12,831,500
காணாமல்போன படையினர்: 4,121,000[1]
இறந்த படையினர்:
4,386,000
காயமுற்ற படையினர்: 8,388,000
காணாமல்போன படையினர்: 3,629,000[1]

முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.

இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, ஓட்டோமான் போரரசு என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.

1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும்.

ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும்.

போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது[2]. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன[2]. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன.

காரணங்கள்

படிமம்:WWIchartX-ta.png
கூட்டணிகள்

1914 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பாஸ்னிய சேர்பிய மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன் ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில் வைத்துச் சுட்டுக் கொன்றான். பிரின்சிப், தெற்கு சிலாவியப் பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ ஹங்கேரியில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இளம் பாஸ்னியா என்னும் அமைப்பின் உறுப்பினன். சரயேவோவில் நடைபெற்ற இக் கொலையைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வுகளைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது.[3] ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சேர்பியாவைக் கோரியது. எனினும், சேர்பியா இதற்குச் செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ ஹங்கேரி சேர்பியா மீது போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் ஒன்று செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது.

ஆயுதப் போட்டி

ராயல் கடற்படையின் எச்எம்எஸ் டிரெட்நோட்.

ஜேர்மனிக்கு, பிரித்தானியாவைப் போல பெரிய பேரரசின் வணிகச் சாதகநிலை இல்லாமல் இருந்தபோதும், 1914 ஆம் ஆண்டளவில் அந் நாட்டின் தொழில்துறை பிரித்தானியாவினதைக் காட்டிலும் பெரிதாகி விட்டது. இதனால், தத்தமது கடற்படைகளை வலுவாக வைத்திருக்கவேண்டி போருக்கு முந்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் பெருமளவிலான போர்க் கப்பல்களைக் கட்டின. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்தக் கடற்படைப் போட்டி 1906 ஆம் ஆண்டளவில் எச்எம்எஸ் டிரெட்நோட் (HMS Dreadnought) என்னும் போர்க்கப்பலின் வெள்ளோட்டத்துடன் மேலும் தீவிரமானது. இப் போர்க் கப்பலின் அளவும், வலுவும் இதற்கு முந்திய கப்பல்களை காலம் கடந்தவை ஆக்கின. பிரித்தானியா பிற துறைகளிலும் தனது கப்பற்படையின் முன்னணி நிலையைப் பேணிவந்தது.

டேவிட் ஸ்டீவன்சன் என்பார் இந்த ஆயுதப் போட்டியை, தன்னைத்தானே சுழல்முறையில் வலுப்படுத்திக்கொண்ட உச்சநிலையிலான படைத்துறைத் தயார்நிலை என விளக்கினார்."[4] டேவிட் ஹெர்மான் கப்பல் கட்டும் போட்டியை போரை நோக்கிய ஒரு நகர்வாகவே பார்த்தார்.[5] எனினும் நீல் பெர்கூசன் என்பார், பிரித்தானியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்ததால், ஏற்படவிருந்த போருக்கான காரணமாக இது இருக்க முடியாது என வாதிட்டார்.[6] இந்த ஆயுதப் போட்டிக்கான செலவு பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தின. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய பெரிய வல்லரசுகளின் ஆயுதங்களுக்கான மொத்தச் செலவு 1908 க்கும் 1913 க்கும் இடையில் 50% கூடியது.[7]

திட்டங்கள், நம்பிக்கையின்மை, படைதிரட்டல்

போருக்குச் செல்லும் வழியில் பிரான்சின் கனரக குதிரைப்படையினர், மார்புக் கவசங்களையும் தலைக் கவசங்களையும் அணிந்தபடி, பாரிஸ் நகரில் அணிவகுத்துச் செல்கின்றனர், ஆகஸ்ட் 1914.

ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட படைதிரட்டல் திட்டங்கள் பிணக்குகளைத் தாமாகவே தீவிரமாக்கின எனப் பல அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பல மில்லியன் கணக்கான படையினரைச் செயற்படவைத்தல், நகர்த்துதல், வசதிகள் அளித்தல் போன்றவற்றின் சிக்கலான தன்மைகளினால், தயார்ப் படுத்துதலுக்கான திட்டங்களை முன்னராகவே தொடங்கவேண்டி இருந்தது. இத்தகைய தயார்ப்படுத்தல் உடனடியாகவே தாக்குதலை நடத்தவேண்டிய நிலையையும் நாடுகளுக்கு ஏற்படுத்தியது.

குறிப்பாக, ஃபிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) என்னும் வரலாற்றாளர் ஜேர்மனியின் ஸ்கீல்பென் திட்டத்தின் உள்ளார்ந்த தீவிரத்தன்மை பற்றி எடுத்துக்காட்டினார். ஜேர்மனிக்கு இரண்டு முனைகளில் போரிடவேண்டிய நிலை இருந்ததனால் ஒருமுனையில் எதிரியை விரைவாக ஒழித்துவிட்டு அடுத்த முனையில் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்தது. இதனால், வலுவான தாக்குதல் ஒன்றின் மூலம் பெல்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டு, பிரான்சின் படைகள் தயாராகுமுன்பே அதனைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதும் திட்டமாக இருந்தது. இதன் பின்னர் ஜேர்மன் படையினர் தொடர்வண்டிப் பாதை வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று மெதுவாகத் தயாராகிக் கொண்டிருக்கும் ரஷ்யப் படைகளை அழிப்பது திட்டம்.

பிரான்சின் திட்டம் 17, ஜேர்மனியில் தொழிற்றுறை மையமான ரூர் பள்ளத்தாக்கைத் (Ruhr Valley) தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கோட்பாட்டு அடிப்படையில் இது, ஜேர்மனி நவீன போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஒழித்துவிடும்.

ரஷ்யாவின் திட்டம் 19, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனி, ஓட்டோமான்கள் ஆகியோருக்கு எதிராக ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்க வேண்டுமென எதிர்பார்த்தது. எனினும், திருத்தப்பட்ட திட்டம் 19 இன் படி ஆஸ்திரியா-ஹங்கேரியே முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் கிழக்குப் பிரசியாவுக்கு எதிராகப் படைகளை அனுப்புவதற்கான தேவை குறைகின்றது.

மூன்று திட்டங்களுமே விரைவாகச் செயற்படுவது வெற்றியை முடிவு செய்யும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. விரிவான கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன. போருக்கான ஆயத்தங்கள் தொடங்கிய பின் திரும்பிப் பார்க்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு.

இராணுவவாதமும் வல்லாண்மையும்

முன்னாள் ஐக்கிய அமெரிக்க சனாதிபதியான வூட்ரோ வில்சனும், வேறு சிலரும் போருக்கான காரணமாக இராணுவவாதத்தைக் (militarism) குற்றம் சாட்டினர்.[8] ஜேர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி போன்ற நாடுகளில் வல்லாண்மை வாதிகளும், படைத்துறைத் தலைவர்களும் கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், சனநாயகத்தை அமுக்கிவிட்டு இராணுவ அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான அவர்களின் ஆசையின் விளைவே போர் என்றும் சிலர் கூறுகின்றனர்.[9] இந்தக் கருத்து ஜேர்மனிக்கு எதிரான பரப்புரைகளில் பெரிதும் பயன்பட்டது.[10][11] 1918 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியின் முயற்சிகள் தோல்வியடையத் தொடங்கியபோது இரண்டாம் கெய்சர் வில்கெல்ம் போன்ற தலைவர்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அத்துடன், இராணுவவாதமும், வல்லாண்மையியமும் (aristocracy) முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கைகளும் உருவாகின. இந்த அடிப்படை 1917 ல் ரஷ்யா சரணடைந்ததன் பின்னர், அமெரிக்கா போரில் பங்குபற்றுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது.[12]

நேச நாடுகளின் கூட்டணியின் முக்கிய பங்காளிகளான பெரிய பிரித்தானியாவும், பிரான்சும் மக்களாட்சியைக் கொண்ட நாடுகள். இவை ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஓட்டோமான் பேரரசு போன்ற சர்வாதிகார நாடுகளுடன் போரிட்டன. நேச நாடுகளில் ஒன்றாகிய ரஷ்யா 1917 ஆம் ஆண்டு வரை ஒரு பேரரசாக இருந்தது, எனினும் அது ஆஸ்திரியா-ஹாங்கேரியினால் சிலாவிய மக்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்தது. இப் பின்னணியில் இப் போர் தொடக்கத்தில் சனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராகவே பார்க்கப்பட்டது. எனினும், போர் தொடர்ந்தபோது இது அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.

நாடுகளின் சங்கமும் (League of Nations), ஆயுதக்குறைப்பும் உலகிக் நிலைத்த அமைதியை ஏற்படுத்தும் என வில்சன் நம்பினார். எச். ஜி. வெல்ஸ் என்பாரின் கருத்தொன்றைப் பின்பற்றி போரை, "எல்லாப் போர்களையும் முடித்து வைப்பதற்கான போர்" என விபரித்தார். பிரித்தானியாவும், பிரான்சும் கூட இராணுவவாதத்தில் சிக்கியிருந்த போதும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை அடைவதற்காக, அவர்களுடன் சேர்ந்து போரிட அவர் தயாராக இருந்தார்.

பிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) போருக்காகப் பெரும்பாலும் ஜேர்மனியின் வல்லாண்மைவாதத் தலைவர்களையே குற்றஞ்சாட்டினார்[13]. ஜேர்மனியின் சமூக சனநாயகக் கட்சி பல தேர்தல்களில் வெற்றிபெற்று இருந்தது. அவர்களுடைய தங்களுடைய வாக்கு விகிதத்தை அதிகரித்து 1912 ஆம் ஆண்டில் பெரும்பான்மைக் கட்சியானது. எனினும் திரிவு செய்யப்பட்ட அவைகளுக்கு, கெய்சருடன் ஒப்பிடும்போது குறைவான அதிகாரங்களே இருந்தன. இச் சூழலில் ஒருவகையான அரசியல் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அஞ்சப்பட்டது. ரஷ்யாவிலும் படைப் பெருக்கமும், 1916-1917 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய சீர்திருத்த நடைவடிக்கைகளும் நடந்து வந்தன. இவைகளுக்கு முன்பே போரில் ரஷ்யா தோல்வியுற்று, ஜேர்மனி ஒன்றிணைக்கப்படக் கூடிய நிலை இருந்தது. தனது பிந்திய ஆக்கங்களில், ஜேர்மனி 1912 ஆம் ஆண்டிலேயே போரைத் திட்டமிட்டு விட்டதாக பிஷர் வாதித்தார்[14].

வரலாற்றாளரான சாமுவேல் ஆர். வில்லியம்சன் போரில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் பங்களிப்பை வலியுறுத்தினார். சேர்பியத் தேசியவாதமும், ரஷ்யாவுக்கு பால்க்கன் பகுதி தொடர்பில் இருந்த குறிக்கோள்களும், 17 வெவ்வேறு நாட்டினங்களைக் கொண்டிருந்த முடியாட்சியைச் சீர்குலைத்ததாக அவர் கருதினார். ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட போரையே எதிர்பார்த்தது என்றும், வலுவான ஜேர்மனியின் ஆதரவு ரஷ்யாவைப் போரிலிருந்து விலக்கி வைத்து பால்கனில் அதற்கு இருக்கும் கௌரவத்தைக் குறைக்கும் என அது எண்ணி இருந்ததாகவும் அவர் கருத்து வெளியிட்டார்[15].

அதிகாரச் சமநிலை

போருக்கு முந்திய ஐரோப்பியப் படைத்துறைக் கூட்டணிகள்.

போருக்கு முந்திய காலத்தில் வல்லரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளின் இலக்கு அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்வதாகும். இது, வெளிப்படையானதும், இரகசியமானதுமான கூட்டணிகளையும், ஒப்பந்தங்களையும் உள்ளடக்கிய விரிவான வலையமைப்புக்களோடு தொடர்புபட்டது. எடுத்துக் காட்டாக பிராங்கோ-பிரஷ்யப் போருக்குப் (1870–71) பின்னர், தனது மரபுவழியான எதிரியான பிரான்சின் பலத்தைச் சமப்படுத்துவதற்கு வலுவான ஜெர்மனியைப் பிரித்தானியா விரும்பியது. ஆனால், பிரித்தானியாவின் கடற்படைக்குச் சவாலாக ஜேர்மனி தனது கப்பற்படையைக் கட்டியெழுப்ப முற்பட்டபோது, பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டது. ஜேர்மனியின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் துணை தேடிய பிரான்ஸ், ரஷ்யாவைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனியின் ஆதரவை நாடியது.

முதல் உலகப் போர் தொடங்கிய பின்னர், இவ்வாறான ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு மட்டுமே எந்தநாடு எந்தப் பக்கத்துக்குச் சார்பாகப் போரிட்டது என்பதை முடிவு செய்தது. இத்தாலி, ஆஸ்திரியா-ஹங்கேரியுடனும், ஜேர்மனியுடனும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. எனினும் அது அந் நாடுகளுக்குச் சார்பாகப் போரில் இறங்கவில்லை. அது பின்னர் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது. எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் ஜேர்மனிக்கும், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் இடையே முதலில் தற்பாதுகாப்புக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதனை 1909 ஆம் ஆண்டில் ஜேர்மனி விரிவுபடுத்தி, ஆஸ்திரியா-ஹங்கேரி போரைத் தொடங்கினாலும் கூட ஜேர்மனி அதன் பக்கம் இருக்கும் என உறுதி கூறியது[16].

பொருளியல் பேரரசுவாதம்

விளாடிமிர் லெனின் பேரரசுவாதமே போருக்கான காரணம் எனக் குறிப்பிட்டார். இவர் கார்ல் மார்க்ஸ், ஆங்கிலப் பொருளியலாளரான ஜான் ஏ. ஹொப்சன் ஆகியோரின் பொருளியல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டினார்.[17] இவர்கள், விரிவடையும் சந்தைகளுக்கான போட்டி உலகளாவிய பிணக்குகளை உருவாக்கும் என்று எதிர்வு கூறியிருந்தனர். பிரித்தானியாவின் முதன்மையான பொருளியல் நிலை, செருமானியத் தொழில் துறையின் விரிவான வளர்ச்சி அச்சுறுத்தியது என்றும், பெரிய பேரசு ஒன்றின் சாதகநிலை செருமனிக்கு இல்லாத காரணத்தால், அது செருமானிய மூலதனங்களுக்கான இடங்களுக்காகப் பிரித்தானியாவுடன் தவிர்க்கமுடியாதபடி போரிட வேண்டியிருந்தது என்றும் லெனின் எடுத்துக் காட்டினார். இவ் வாதம் போர்க்காலத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்ததுடன், பொதுவுடமையியத்தின் வளர்ச்சிக்கும் துணையாக இருந்தது.

வணிகத் தடைகள்

அமெரிக்காவில் பிராங்க்லின் ரோஸ்வெல்ட்டின் கீழ் உள்நாட்டுச் செயலாளராக இருந்த கோர்டெல் ஹல் என்பார், வணிகத் தடைகளே முதல் உலகப் போர், இரண்டாம் உலகபோர் இரண்டுக்குமான அடிப்படைக் காரணங்கள் என நம்பினார். 1944 ஆம் ஆண்டில், பிணக்குகளுக்குக் காரணங்கள் என அவர் நம்பிய வணிகத் தடைகளைக் குறைப்பதற்காக பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உதவினார்.[18][19]

இன, அரசியல் போட்டிகள்

பால்க்கன் பகுதிகளில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் செல்வாக்குக் குறைந்து, பரந்த-சிலேவியா இயக்கம் வளர்ச்சி பெற்றுவந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், சேர்பியாவுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாததெனவே கருதப்பட்டது. ஆஸ்திரிய எதிர்ப்பு உணர்வு அதிகமாகக் காணப்பட்ட சேர்பியாவின் வளர்ச்சியுடன் இனவழித் தேசியம் பொருந்தி வந்தது. ஆஸ்திரியா-ஹங்கேரி, முன்னைய ஓட்டோமான் பேரரசின் மாகாணமாக இருந்ததும், சேர்பியர்கள் அதிகம் வாழ்ந்து வந்ததுமான பொஸ்னியா-ஹெர்சகொவினாவை 1878 ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டது. 1908 ஆம் ஆண்டில் இது முறையாக ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் இணைக்கப்பட்டது. அதிகரித்து வந்த இன உணர்வுகளின் வளர்ச்சி, ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியுடனும் பொருந்தி வந்தது. இன மற்றும் மதப் பிணைப்புக்கள் காரணமாகவும், கிரீமியப் போர்க் காலத்திலிருந்து ஆஸ்திரியாவுடன் இருந்து வந்த போட்டி காரணமாகவும், ரஷ்யா பரந்த-சேர்பியா இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. தோல்வியடைந்த ரஷ்ய-ஆஸ்திரிய ஒப்பந்தம், நூற்றாண்டுகளாக பால்க்கன் பகுதித் துறைமுகங்கள் மீது ரஷ்யாவுக்கு இருந்த ஆர்வம் என்பனவும் இதற்கான காரணங்களாக இருந்தன.[20]

ஜூலை நெருக்கடியும் போர் அறிவிப்பும்

1914 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் இருந்து வில்ஹெல்மின் போர் அறிவிப்பு - (text)

முடிக்குரிய இளவரசர் கொல்லப்பட்டதை ஒரு சாட்டாக வைத்து சேர்பியப் பிரச்சினையைக் கையாள ஆஸ்திரியா-ஹங்கேரிய அரசு முற்பட்டது. ஜேர்மனியும் இதற்கு ஆதரவாக இருந்தது. 1914 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி, பத்துக் கோரிக்கைகளுடன் கூடிய காலக்கெடு ஒன்றை ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு விதித்தது. இக் கோரிக்கைகளுட் சில மிகவும் கடுமையாக இருந்ததால் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஐயம் வெளியிட்ட சேர்பியா ஆறாவது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. பதில் அளிப்பதற்கான தொடக்க வரைவுகளில் இந்த ஆறாவது கோரிக்கையை ஏற்க சேர்பியா விருப்பம் தெரிவித்தது எனினும், ரஷ்யாவின் ஆதரவில் நம்பிக்கை வைத்த சேர்பியா பின்னர் இறுதி வரைவில் அதனை நீக்கிவிட்டது. அத்துடன் ஆயத்த நிலைக்கும் ஆணை பிறப்பித்தது. இதற்குப் பதிலாக ஜூலை 28 ஆம் தேதி ஆஸ்திரியா-ஹங்கேரி போர் அறிவிப்பை வெளியிட்டது. தொடக்கத்தில் ரஷ்யா ஆஸ்திரியாவின் எல்லையைக் குறிவைத்து பகுதித் தயார் நிலையொன்றுக்கு ஆணை பிறப்பித்தது. எனினும், ரஷ்யத் தளபதிகள், பகுதித் தயார்நிலை சாத்தியம் அற்றது என "சார்" (Czar) மன்னருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 31 ஆம் நாள் முழுத் தயார்நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டது. போருக்கான ஜேர்மனியின் ஸ்கிளீபென் திட்டம் விரைவாகப் பிரான்சைத் தாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், ரஷ்யா தயார்நிலைக்கு வர அனுமதிக்க முடியாத நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டது. இதனால், ஆகஸ்ட் முதலாம் தேதி ஜேர்மனி, ரஷ்யா மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிரான்சின் மீதும் போர் அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன் பின்னர், பாரிஸ் நோக்கிப் படை நடத்துவதற்காக நடுநிலை நாடான பெல்ஜியத்தின் இறைமையை மீறி அதனூடாகச் சென்றது. 1830 ஆம் ஆண்டின் பெல்ஜியப் புரட்சியின் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின்படி பெல்ஜியத்தின் நடுநிலைமையைப் பிரித்தானியா உறுதிப்படுத்தி இருந்தது. இதன் காரணமாகப் பிரித்தானியாவும் போரில் தலையிட வேண்டியதாயிற்று. இத்துடன் ஆறு ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து போரில் ஈடுபட்டிருந்தன. இது நெப்போலியன் காலத்துக்குப் பிற்பட்டு ஐரோப்பாக் கண்டத்தில் இடம் பெற்ற மிகப் பெரிய போராக இருந்தது.[21]

நிகழ்வுகளின் காலவரிசை

தொடக்க நடவடிக்கைகள்

மைய நாடுகளிடையே குழப்பநிலை

மைய நாடுகளின் போர் வியூகம் தொடர்புக் குறைபாடுகள் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளானது. ஆஸ்திரியா-ஹங்கேரியின் சேர்பியா மீதான படையெடுப்புக்கு ஆதரவு அளிக்க ஜேர்மனி ஒப்புக்கொண்டிருந்தது. எனினும், இதன் விளக்கம் குறித்து இரு நாடுகளிடையே வேறுபாடுகள் நிலவின. ஆஸ்திரியா-ஹங்கேரியத் தலைவர்கள், தமது வடக்கு எல்லையில் ரஷ்யாவைக் கவனித்துக் கொள்ளும் பணியை ஜேர்மனி ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஜேர்மனியோ, பெரும்பாலான ஆஸ்திரியா-ஹங்கேரியப் படைகள் ரஷ்யாவுடனான எல்லைக்கு அனுப்பப்படும் என்றும், அதே வேளை தாம் பிரான்சைக் கையாள்வதென்றும் திட்டமிட்டது. இக் குழப்ப நிலையினால், ஆஸ்திரியா-ஹங்கேரியப் படைகளைப் பிரித்து ரஷ்ய எல்லைக்கும், சேர்பியாவுக்கும் அனுப்பவேண்டி இருந்தது.

ஆப்பிரிக்கப் படைநடவடிக்கைகள்

போரின் தொடக்ககால நடவடிக்கைகளில் ஒன்று பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றை உள்ளடக்கி ஆப்பிரிக்காவில் இடம் பெற்றது. ஆகஸ்ட் 7 ஆம் நாள், பிரித்தானிய, பிரான்சியப் படைகள் ஜேர்மனியின் பாதுகாப்புப் பகுதியான டோகோலாந்துக்குள் புகுந்தன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஜேர்மனியின் படைகள் தென்னாபிரிக்காவைத் தாக்கின. போர்க்காலம் முழுதும் தீவிரமான தாக்குதல்கள் ஆப்பிரிக்காவிலும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருந்தன.

ஹோட்-ரின், பிரான்ஸ், 1917

சேர்பியப் படையெடுப்பு

சேர்பியப் படைகள், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிரான சேர்ச் சண்டை எனப்பட்ட சண்டையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் இருந்து ஈடுபட்டிருந்தன. இவை, டிரினா, சாவா ஆகிய ஆறுகளின் தெற்குக் கரையில் இருந்து தற்காப்புத் தாக்குதலை நடத்தின. அடுத்து இரண்டு கிழமைகளில் ஆஸ்திரியா-ஹங்கேரித் தாக்குதல்கள் பெரும் இழப்புக்களுடன் பின்னடைவுகளைச் சந்தித்தது. நேச நாடுகள் கூட்டணியின் குறிப்பிடத்தக்க முதல் வெற்றியான இது, ஆஸ்திரியாவின் விரைவான வெற்றி குறித்த கனவுகளைத் தகர்த்தது. இதனால், ஆஸ்திரியா தனது படைகளில் பெரும்பகுதியை சேர்பிய முனையில் ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டதால், ரஷ்ய முனையிலான நடவடிக்கைகள் பலவீனமாயின.

பெல்ஜியத்திலும் பிரான்சிலும் ஜேர்மன் படைகள்

தொடக்கத்தில் இடம்பெற்ற எல்லைச் சண்டைகளில் (14 ஆகஸ்ட்–24 ஆகஸ்ட்) ஜேர்மனிக்குப் பல வெற்றிகள் கிடைத்தன. எனினும் ரஷ்யா கிழக்குப் பிரஷ்யாவைத் தாக்கியதால் மேற்கு முனையில் போராட வேண்டிய ஜேர்மன் படைகள் திசை திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. தானென்பர்க் சண்டை (17 ஆகஸ்ட் – 2 செப்டெம்பர்) என ஒருங்கே அழைக்கப்பட்ட தொடரான பல சண்டைகளில் ஜேர்மனி ரஷ்யாவைத் தோற்கடித்தது. எனினும் ரஷ்யப் போரினால் கவனம் திசை திரும்பியதால், போதிய வேகமின்மை காரணமாக ஜேர்மனியின் தளபதிகள் எதிர்பாராதபடி, மற்ற முனையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஸ்கிளீபென் திட்டப்படி, வலப்புறத்தில் ஜேர்மன் படைகள் பாரிசுக்கு மேற்குப்புறம் முன்னேற வேண்டும். ஆனால், குதிரைகளால் இழுக்கப்பட்ட போக்குவரத்து வண்டிகளில் இடவசதி, வேகம் என்பன போதாமையினால், ஜேர்மனியின் வழங்கல் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதியாக பிரித்தானிய, பிரான்சியப் படைகள் ஜேர்மனியின் படைகளை மார்னே முதற் சண்டை (5 செப்டெம்பர்–12 செப்டெம்பர்) என அழைக்கப்பட்ட போரில் பாரிசுக்குக் கிழக்கே தடுத்து நிறுத்தின. இதனால் மைய நாடுகள் விரைவான வெற்றியைப்பெறும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டதுடன், அவர்கள் இரு முனைகளில் போரிடவேண்டிய தேவையையும் ஏற்படுத்தியது. ஜேர்மனியின் படைகள் பிரான்சுக்குள் புகுந்து பாதுகாப்பான நிலையில் இருந்ததுடன், பிரித்தானிய பிரான்சியப் படைகளில் 230,000 பேரை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்தது. இது ஜேர்மனி இழந்ததிலும் அதிகமாகும்.

ஆசியாவும் பசிபிக் பகுதிகளும்

பதுங்கு குழிகளில்: வளிம முகமூடிகளுடன் காலாட்படைகள், Ypres, 1917

நியூசிலாந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி இன்று மேற்கு சமோவா என அழைக்கப்படும் அன்றைய ஜேர்மன் சமோவாவைக் கைப்பற்றியது. செப்டெம்பர் 11 ஆம் தேதி, ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் இராணுவப் படைகள், ஜேர்மன் நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருந்த இன்று நியூ பிரிட்டன் என அழைக்கப்படும் நியூ பொம்மேர்ன் தீவில் இறங்கின. ஜேர்மனியின் மைக்குரோனீசியக் குடியேற்றங்களையும்; சிங்டாவோ சண்டைக்குப் பின், சீனாவின் ஷாண்டாங் குடாநாட்டில் இருந்த ஜேர்மனியின் நிலக்கரித் துறைமுகமான சிங்டாவோவையும் ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. சில மாதங்களிலேயே நேச நாடுகளின் படைகள் பசிபிக் பகுதியில் இருந்த எல்லா ஜேர்மனியின் ஆட்சிப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டன.

தொடக்க கட்டங்கள்

பதுங்குகுழிப் போர் தொடக்கம்

முதலாம் உலகப் போருக்கு முந்திய படைத்துறை உத்திகள் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு இணையாக வளரத் தவறியிருந்தன. இப்போது, பெரும்பாலான போர்களில் காலங்கடந்த முறைகளால் ஊடறுக்க முடியாத கவர்ச்சிகரமான பாதுகாப்பு முறைமைகள் உருவாக்கப்பட்டன. முட்கம்பி வேலிகள் பெருமளவில் காலாட் படைகள் முன்னேறுவதற்குத் தடையாக இருந்தன. தொலைதூர கனரக ஆயுதங்கள், 1870 ஆண்டின் ஆயுதங்களைக் காட்டிலும் கூடிய பாதிப்புக்களை விளைவிக்கக் கூடியனவாக இருந்ததுடன், இயந்திரத் துப்பாக்கிகளுடன் சேர்ந்து, திறந்த வெளிகளைப் படைகள் கடந்து செல்வதைக் கடினமாக்கியிருந்தன. இப் போரில் ஜேர்மனி நச்சு வளிமங்களைப் போராயுதமாக அறிமுகப்படுத்தியது. விரைவிலேயே எதிரணியும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியது. எனினும், சண்டைகளை வெல்வதில் இது முக்கிய பங்கு வகித்ததாகத் தெரியவில்லை. நச்சு வளிமங்களின் விளைவுகள் கொடூரமானவையாக இருந்தன. தாக்கப்பட்டவர்கள் மெதுவாகவும், கூடிய வலிகளுடனும் இறந்தனர். இப் போரில், நச்சு வளிமங்கள் மிகுந்த அச்சத்தை விளைவிப்பனவாகவும், மிகவும் கொடூரமான நினைவுகளை ஏற்படுத்தியன ஆகவும் இருந்தன. இரு அணித் தளபதிகளுமே பதுங்குகுழி நிலைகளைப் பாரிய இழப்பின்றித் தகர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியத் தவறியிருந்தனர். காலப் போக்கில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய தாக்குதல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது "தாங்கி" ஆகும். பிரித்தானியாவும், பிரான்சுமே இதனை முக்கியமாகப் பயன்படுத்தினர். இவர்களிடமிருந்து கைப்பற்றியவற்றையும், தாமே உருவாக்கிய குறைந்த அளவு தாங்கிகளையும் ஜேர்மனியும் பயன்படுத்தியது.

முதலாம் மார்னே சண்டைக்குப் பின்னர், நேச நாடுகளின் படைகளும், ஜேர்மனியின் படைகளும், கடல் நோக்கிய ஓட்டம் (Race to the Sea) எனப்பட்ட, தொடரான பல சுற்றுவழி நகர்வுகளை மேற்கொள்ளலாயின. பிரித்தானியாவும், பிரான்சும் லோரைனில் இருந்து பெல்ஜியத்தின் பிளெமியக் கரை வரை நீண்டிருந்த பதுங்குகுழிகளில் இருந்து போரிட்ட ஜேர்மனியின் படைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. பிரித்தானியாவும், பிரான்சும் தாக்குதலில் குறியாக இருந்தபோது, ஜேர்மனியின் படைகள் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனால், பாதுகாப்புக்கு ஏற்றவாறு ஜேர்மனியின் பதுங்குகுழிகள் எதிரிப்படைகளினதைக் காட்டிலும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் பதுங்குகுழிகள் ஜேர்மனியின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுக்கும் வரையிலான தற்காலிகத் தேவைக்கானவையாகவே இருந்தன. எவருமே வெற்றிபெற முடியாதிருந்த இந்த நிலையை மாற்றுவதற்கு, இரு பகுதியினருமே அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தலாயினர். 1915 ஆம் ஆண்டு ஏப்ரலில், 1899 இலும் 1907 இலும் ஏற்படுத்தப்பட்ட ஹேக் மாநாட்டு முடிவுகளுக்கு எதிராக, ஜேர்மனி குளோரீன் வளிமத்தை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இவ்வளிமம் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நேசப் படைகள் பின்வாங்கியதால், அவற்றின் முன்னரங்க நிலைகளில் 6 கிலோமீட்டர் (4 மைல்கள்) நீளமான வெளியொன்றை ஏற்படுத்த ஜேர்மனியால் முடிந்தது. கனடாவின் படைகள் இரண்டாம் ஈபிரெ சண்டையில் (Second Battle of Ypres) இந்த உடைப்பை மூடிவிட்டனர்.

ஜேர்மனியின் நிலைகள் மீதான பிரான்சின் ஒரு தாக்குதல். சம்பேன், பிரான்ஸ், 1917

சொம்மா சண்டையின் முதல் நாளான 1916 ஜூலை முதலாம் தேதி பிரித்தானியப் படைகளுக்கு மறக்கமுடியாத நாளாக விளங்கியது. இந் நாளில் அப்படைகளுக்கான பாதிப்பு 57,470 போராக இருந்தது. இதில் 19,240 பேர் இறந்துவிட்டனர். பெரும்பாலான பாதிப்புக்கள் தாக்குதல் தொடங்கிய முதல் மணிநேரத்தில் இடம்பெற்றன. சொம்மாத் தாக்குதல் முழுவதிலுமான பிரித்தானியப் படைகளின் இழப்பு சுமார் ஐந்து இலட்சம் பேராகும்[22].

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தரப்பினருமே எதிர்த்தரப்பினருக்கு முடிவான தோல்வியை ஏற்படுத்த முடியவில்லை. எனினும், வேர்டனில் 1916 ஆம் ஆண்டு முழுதும் தொடர்ந்த ஜேர்மனியின் நடவடிக்கைகளும், சொம்மாவில் நேசப்படைகளுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரான்சின் படைகளை நிலைகுலையும் நிலைக்கு அருகில் கொண்டுவந்தது. வீணான முன்னரங்கத் தாக்குதல்களும், நடைமுறைக்கு ஒவ்வாத முறைகளை இறுக்கமாகப் பின்பற்றியதும், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் படைகளுக்குக் கடும் இழப்புக்களை ஏற்படுத்தியதுடன், பரவலான படைவீரர்களின் கலகங்களுக்கும் வித்திட்டது.

1915 தொடக்கம் 1917 வரையான காலப்பகுதி முழுவதும், எடுத்துக்கொண்ட போர் உத்திகள், வியூகங்கள் என்பன காரணமாக பிரித்தானியப் பேரரசுக்கும், பிரான்சுக்கும் ஜேர்மனியைவிடக் கூடிய அளவில் இழப்புக்கள் ஏற்பட்டன. ஜேர்மனி, வேர்டன் சண்டையின்போது ஒரேயொரு முக்கிய தாக்குதலை மட்டுமே நிகழ்த்திய வேளையில், ஜேர்மனியின் நிலைகளை ஊடறுப்பதற்காக நேசப்படைகள் பல தாக்குதல்களை நடத்தின. உத்தி அடைப்படையில், ஜேர்மனியின் தற்காப்புக் கொள்கை, இழப்புக்களைத் தாங்கக்கூடிய இலகுவான முன்னணி நிலைகளுடனும், வலுவான எதிர்த்தாக்குதல்களை உடனடியாக நடத்தக்கூடிய முக்கியமான நிலைகளுடனும் கூடிய பதுங்குகுழிப் போருக்கு பொருத்தமானதாக அமைந்தது. இது, எதிரிகளின் தாக்குதல்களைக் குறைந்த இழப்புடன் முறியடிப்பதற்கு உதவியாக அமைந்தது. மொத்தமாகப் பார்க்கும்போது தாக்குதல், தற்காப்பு இரண்டிலுமே உயிரிழப்புக்கள் பாரிய அளவிலேயே இருந்தன.

எந்தவொரு நேரத்திலும் சுமார் 800,000 போர்வீரர்கள், பிரித்தானியப் பேரரசின் சார்பில் மேற்குப் போர்முனையில் இருந்தனர். 1000 பட்டாலியன்கள் வடகடல் முதல், ஓர்னே ஆறு வரையிலான நிலைகளில், நான்கு கட்டச் சுழற்சி முறையில் ஒரு மாத காலத்துக்கு இருந்தனர். இம்முறை தாக்குதல்கள் நடைபெறாத காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. முன்னணி 9,600 கிலோமீட்டர்கள் (5,965 mi) க்கு மேற்பட்ட பதுங்கு குழிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பட்டாலியனும், தமது முன்னணி நிலைகளில் ஒரு வாரமும், பின்னர் பின்னுள்ள துணை நிலைகளுக்கு நகர்ந்து அங்கே இன்னொரு வாரமும் பணிபுரிந்தனர். அடுத்த கிழமை அங்கிருந்து பின் நகர்ந்து ஒதுக்கு (reserve) நிலைகளில் இருப்பர். நான்காவது கிழமை நிலைகளை விட்டு நீங்கி இளைப்பாறுவர்.

1917ல் இடம்பெற்ற அராஸ் சண்டையில் பிரித்தானியாவுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க ஒரே வெற்றி விமி மலைமுகட்டைக் கைபற்றியமை ஆகும். சர் ஆர்தர் கியூரி (Arthur Currie), ஜூலியன் பிங் (Julian Byng) ஆகியோர் தலைமையிலான கனடாப் படைகள் இதனைக் கைப்பற்றின. தாக்குதல் படைகள் முதல் தடவையாக நிலைகளைக் கைப்பற்றி விரைவாக நிலைகளை வலுப்படுத்தி அவற்றைத் தக்க வைத்துக்கொண்டு நிலக்கரி வளம் மிக்க டுவே (Douai) சமவெளியைப் பாதுகாத்தன.[23].

கடற்போர்

படிமம்:Grand Fleet sails.jpg
பிரித்தானியப் பெருங் கப்பற்படை.

போரின் தொடக்கத்தில், ஜேர்மன் பேரரசு, உலகின் பல பகுதிகளிலும் ஓரளவு தாக்குதற் திறன் கொண்ட கப்பல்களை வைத்திருந்தது. இவை பின்னர் நேச நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்பட்டன. பிரித்தானிய ராயல் கடற்படை அக் கப்பல்களைத் தாக்கி அழித்து வந்தது. எனினும், வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க முடியாத சில இக்கட்டான நிலைகளும் ஏற்படவே செய்தன. எடுத்துக்காட்டாக, சிங்டாவோவில் இருந்த கிழக்காசியப் படைப்பிரிவைச் சேர்ந்த இலகு போர்க்கப்பலான எம்டன், 15 வணிகக் கப்பல்களை அழித்ததுடன், ஒரு ரஷ்ய இலகு போர்க்கப்பலையும், பிரான்சின் அழிப்புக் கப்பலொன்றையும் மூழ்கடித்தது. ஆனாலும், ஜேர்மனியின் கிழக்காசியப் பிரிவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய கப்பல்களான ஸ்கார்னோஸ்ட், நீசெனோ, இலகு போர்க்கப்பல்களான நேர்ன்பர்க், லீப்சிக் மற்றும் இரண்டு போக்குவரத்துக் கப்பல்களுக்கு வணிகக் கப்பல்களைத் தாக்கும் ஆணை வழங்கப்படவில்லை. அவை ஜேர்மனியை நோக்கிச் சென்றன. வழியில் பிரித்தானியக் கப்பற்படையினரை எதிர் கொண்ட டிரெஸ்டென் என்னும் கப்பலும் உள்ளிட்ட ஜேர்மனியின் கப்பல்கள், கொரோனெல் சண்டை எனப்பட்ட சண்டையில் இரண்டு ஆயுதம் தாங்கிய கப்பல்களை மூழ்கடித்தன. எனினும் 1914இ இடம்பெற்ற போக்லாந்துத் தீவுச் சண்டையில், டெஸ்டென் தவிர்ந்த எல்லாக் கப்பல்களுமே அழிக்கப்பட்டன.[24].

போர் தொடங்கியதுமே ஜேர்மனி மீதான கடற் தடையொன்றைப் பிரித்தானியா ஏற்படுத்தியது. இந்த உத்தி, ஜேர்மனிக்கான முக்கியமான இராணுவ, குடிமக்களுக்கான தேவைகளின் வழங்களை நிறுத்துவதில் வெற்றிகண்டாலும், இது முன்னைய இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாக அமைந்தது[25]. அனைத்துலகக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிரித்தானியா கடற் கண்ணிகளை விதைத்து, எக்கப்பலும் கடலின் எப்பகுதிக்குள்ளும் நுழைய முடியாதவாறு தடுத்தது. இது நடுநிலைக் கப்பல்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது.[26] இந்த உத்திக்குக் குறைவான எதிர்ப்பே இருந்ததால், அதையே தனது வரையறையற்ற நீர்மூழ்கிக் கப்பல் போருக்கும் ஜேர்மனி எதிர்பார்த்தது.[27].

கடலில், ஆழ்கடற் கப்பற் படையின் ஒரு போர்க் கப்பல் பிரிவு

1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜூட்லாந்துச் சண்டை முதலாம் உலகப்போரின் மிகப்பெரிய கடற் சண்டையாக உருவானது. இப்போரின் முழு அளவிலான போர்க்கப்பற் சண்டை இது மட்டுமே. இது 1916 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாள், ஜூட்லாந்துக்கு அப்பால் வடகடலில் இடம்பெற்றது. வைஸ் அட்மிரல் ரெய்ன்ஹார்ட் ஸ்கீர் (Reinhard Scheer) என்பவர் தலைமையிலான கெய்சர்லிச் கடற்படையின் ஆழ்கடல் கப்பற்படையும், அட்மிரல் சர் ஜான் ஜெலிக்கோ தலைமையிலான ராயல் கடற்படையின் கிராண்ட் கப்பற்படையும் மோதிக்கொண்டன. போரில் எவரும் வெற்றிபெறாத நிலை ஏற்பட்டபோதும், பிரித்தானியாவின் பெரிய கடற்படைக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஜேர்மனியின் கப்பல்கள் பின்வாங்கிச் சென்றுவிட்டன. எனினும், அவை தாம் இழந்ததிலும் கூடிய இழப்புக்களைப் பிரித்தானியக் கடற்படைக்கு ஏற்படுத்தின. இருந்த போதிலும், பிரித்தானியா கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு நிகழ்வாகவே இது அமைந்தது. அத்துடன் போரின் எஞ்சிய பகுதி முழுவதும், ஜேர்மனியின் கப்பல்கள் அதன் துறைமுகங்களிலேயே இருந்தன.

ஜேர்மன் யூ-போட்டுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான வழங்கல்களின் போக்குவரத்தைத் துண்டிக்க முயன்றன.[28] தாக்குதல்கள் எச்சரிக்கை எதுவும் இன்றியே வருவது நீர்மூழ்கிப் போரின் இயல்பு ஆகும். இதனால் வணிகக் கப்பல்கள் தப்புவதற்கு மிகவும் குறைந்த சாத்தியங்களே உண்டு.[29] ஐக்கிய அமெரிக்கா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஜேர்மனி தனது தாக்குதல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் லூசித்தானியா என்னும் பயணிகள் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் கப்பல்களைத் தாக்குவது இல்லை என்று ஜேர்மனி உறுதியளித்தது. அதேவேளை பிரித்தானியா தனது வணிகக் கப்பல்களை ஆயுதமயமாக்கியது. இது அவற்றை போர்நோக்கமற்ற கப்பல்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அடங்காமல் செய்தது. இறுதியாக, அமெரிக்கா போரில் ஈடுபடப்போகிறது என்று உணர்ந்து கொண்ட ஜேர்மனி, கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிப் போர் என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க முடிவு செய்தது.[30] அமெரிக்கா பெருமளவில் படைகளை வெளியே அனுப்பமுன் நேச நாடுகளின் கடல் வழிகளை நெருக்குவது ஜேர்மனியின் நோக்கமான இருந்தது.

வணிகக் கப்பல்கள் அழிப்புக் கப்பல்களின் பாதுகாப்புடன் கூடிய அணிகளாகச் செல்லத் தொடங்கியதும் யூ-போட்டுகளின் அச்சுறுத்தல்கள் குறையலாயின. இந்த உத்தி யூ-போட்டுகளுக்கான இலக்குகளை இல்லாதாக்கியது. இதனால் இழப்புக்கள் குறைந்தன. புதிய கருவிகளின் அறிமுகம், கடலுக்கு அடியிலேயே நீர்மூழ்கிகளைத் தாக்கக்கூடிய வாய்ப்புக்களையும் உருவாக்கின. கப்பல்கள் ஒன்று சேரும்வரை காத்திருக்க வேண்டி இருந்ததால் அணிகளாகச் செல்லும் உத்தியின் மூலம் வழங்கல்களில் தாமதங்கள் ஏற்பட்டன.

வானூர்தி தாங்கிகளும் முதன் முதலாக முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டன. எச்எம்எஸ் பியூரியஸ் என்னும் வானூர்தி தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட சொப்வித் கமல் (Sopwith Camels) என்னும் வானூர்திகள் 1918 ஆம் ஆண்டில், தொண்டேர்னில் உள்ள செப்பெலின் வானூர்தித் தரிப்பிடத்தை வெற்றிகரமாகத் தாக்கின. அத்துடன் இதிலிருந்து பிளிம்ப் (blimp) வானூர்திகள் மூலம் நீர்மூழ்கிகளைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்றன.[31]

தெற்குப் போர்முனைகள்

பால்க்கன் போர்

ரஷ்யாவுடன் போரிடவேண்டி இருந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரி அதன் படைகளின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே சேர்பியாவைத் தாக்கப் பயன்படுத்த முடிந்தது. பெரும் இழப்புகளுக்குப் பின்னர் ஆஸ்திரியர்கள் சேர்பியாவின் தலைநகரான பெல்கிரேடைக் கைப்பற்றிச் சிறிது காலம் வைத்திருந்தனர். 1914 இன் முடிவில், கொலூபரா சண்டை என அழைக்கப்பட்ட எதிர்த்தாக்குதல் ஒன்றை நடத்திச் சேர்பியர்கள் ஆஸ்திரியர்களை நாட்டை விட்டு விரட்டினர். 1915 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களிலும் ஆஸ்திரியா-ஹங்கேரி தனது ஒதுக்குப் படைகளில் பெரும்பாலானவற்றை இத்தாலியுடன் போரிடப் பயன்படுத்தியது. ஜேர்மனியும், ஆஸ்திரியா-ஹங்கேரியும் சேர்பியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு பல்கேரியாவை இணங்க வைத்தனர். ஆஸ்திரியா-ஹங்கேரியின் மாகாணங்களான சிலோவேனியா, குரோசியா, பாஸ்னியா என்பன சேர்பியாவை ஆக்கிரமிப்பதற்கும், ரஷ்யா, இத்தாலி என்பவற்றுடன் போரிடுவதற்கும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்குப் படைகளை அளித்தன. மான்டனீக்ரோ சேர்பியாவுக்குத் துணைநின்றது.

ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் சேர்பியா கைப்பற்றப்பட்டது. மைய நாடுகள் வடக்கிலிருந்து அக்டோபரில் தாக்குதலைத் தொடங்கின. நான்கு நாட்களின் பின்னர் பல்கேரியாவும் தெற்கிலிருந்து தாக்கத் தொடங்கியது. இரண்டு முனைகளில் போரிடவேண்டியிருந்த சேர்பியப் படைகள் தோல்வியை உணர்ந்துகொண்டு அல்பேனியாவுக்குப் பின்வாங்கின. அவர்கள் ஒரு தடவை மட்டுமே பல்கேரியருடன் போரிடுவதற்காகத் தமது பின்வாங்கலை நிறுத்தினர். சேர்பியர்கள் கொசோவோச் சண்டை என்னும் சண்டையில் தோல்வியடைந்தனர். 6-7 ஜனவரி 1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மொய்கோவாக் சண்டை என்னும் சண்டையின் மூலம் சேர்பியர்கள் பின்வாங்குவதற்கு மான்டனீக்ரோ உதவியது. எனினும் இறுதியில் ஆஸ்திரியா மான்டினீக்ரோவையும் கைப்பற்றியது. சேர்பியப் படைகள் கப்பல் மூலம் கிரீசுக்குச் சென்றன.

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 Evans, David. Teach yourself, the First World War, Hodder Arnold, 2004.p.188
  2. 2.0 2.1 Ashworth 2000, ப. 3–4
  3. ஹர்ராக் 1914
  4. Stevenson 1996
  5. ஹெர்மான் 1996
  6. பெர்கூசன் 1999
  7. பிரம்கின், ப. 94
  8. 30 October 1918 in ஹூவர், ப. 47
  9. பிஷர் 1967
  10. மார்ஸ்டென் 2001, ப. 177
  11. Isenberg 1981
  12. ரொஸ் 1996
  13. Southgate
  14. Fischer 1975, ப. 470
  15. Rotberg, Rabb & Gilpin 1989, ப. 225
  16. பிரம்கின் 2004, ப. 266-267
  17. ஹொப்சன் 1948, ப. 3­5,71,­72,77,­78,80,­81,92,­93
  18. ஹல் 1948, ப. 81
  19. விகின் 2006
  20. செசில் 1996, ப. 176
  21. ஜோல் 1992, ப. 10–38
  22. டுஃபி
  23. "Vimy Ridge, Canadian National Memorial" ([தொடர்பிழந்த இணைப்பு]Scholar search), Australians on the Western Front 1914-1918, New South Wales Department of Veteran's Affairs and Board of Studies, 2007 {{citation}}: External link in |format= (help)
  24. டெய்லர்2007, ப. 39–47
  25. கீனே 2006, ப. 5
  26. ஹால்பேர்ன் 1995, ப. 293
  27. சீகெர் 2001, ப. 50
  28. "Coast Guard in the North Atlantic War". பார்க்கப்பட்ட நாள் 2007-10-30.
  29. கில்பர்ட் 2004, ப. 306
  30. ஜான்ஸ், ப. 80
  31. Price

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_உலகப்_போர்&oldid=1265886" இலிருந்து மீள்விக்கப்பட்டது