சி. கணேசையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் ஐ மாற்றுகின்றது
வரிசை 158: வரிசை 158:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:1878 பிறப்புகள்]]
[[பகுப்பு:1878 பிறப்புகள்]]
[[பகுப்பு:1958 இறப்புகள்]]
[[பகுப்பு:1958 இறப்புகள்]]

13:54, 27 மே 2012 இல் நிலவும் திருத்தம்

சி. கணேசையர்
சி. கணேசையர்
பிறப்பு(1878-03-26)மார்ச்சு 26, 1878
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புநவம்பர் 8, 1958(1958-11-08) (அகவை 80)
வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம்
இறப்பிற்கான
காரணம்
இயற்கை
அறியப்படுவதுதொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு விளக்கக் குறிப்புகள் எழுதியமை
சமயம்சைவ சமயம்
பெற்றோர்சின்னையர்
சின்னம்மாள்
வாழ்க்கைத்
துணை
அன்னலட்சுமி

சி. கணேசையர் (ஏப்ரல் 1, 1878 - நவம்பர் 8, 1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவசிரோன்மணி என்ற பட்டம் பெற்றவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு) இவர் இமயம்போல் போற்றப்படுகிறார்.

பிறப்பு

யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே ஏறத்தாழ 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் விவசாயக் கிராமத்தில் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய ஆதீன பரம்பரையில் வாழ்ந்துவந்த சைவ அந்தணர் குல சின்னையர் என்பவருக்கும் சின்னம்மாளுக்கும் ஐந்தாவது புதல்வராக 15-04-1878 இல் கணேசையர் பிறந்தார்.

கல்வி

கணேசையரது குடும்பம் கற்றவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு விளங்கிற்று. இவருடய பெரிய தந்தையாரால் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர்முன்றலில் (சொந்த செலவில்) நடத்தப்பட்டுவந்த சைவப்பள்ளிக்கூடத்தில் ஐயர் எட்டாம் வகுப்புவரை கல்விகற்றார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார். மேலும் இவரது பெரிய தந்தையாரிடமும் (வீட்டில்) தனிப்பட்ட முறையில் பாடங்கேட்டமை இவரை வகுப்பில் முதன்மாணவர் ஆக்கியது. அதன்பின் யாழப்பண நகரைச் சேர்ந்த வண்ணார்பண்ணையில் வசித்து வந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார்.

பொன்னமபலப்பிள்ளையவர்கள் இறந்தபின் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார்.

இல்லற வாழ்வு

தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியான அன்னலட்சுமியைத் திருமணஞ் செய்தார். அன்னலட்சுமியும் வடமொழி, மற்றும் தமிழறிவு பெற்றவர். நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. மனைவியார் இறந்தபின் கணேசையர் மனைவியின் நினைவாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு "அன்னலட்சுமி கூபம்" எனப் பெயரிட்டு வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனை நன்கொடையாக அளித்தார். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உள்ளது[1].

இலக்கண - இலக்கியப்பணி

இலக்கண வித்தகர்

கணேசையர் தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது. தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதி வந்தார். தான்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். ஈழகேசரி நா. பொன்னையா அதன் பதிப்பாசிரியராக இருந்தார்<[1]. எழுத்ததிகாரம் (1937), சொல்லதிகாரம் (1938), பொருளதிகாரம் இரண்டாம் பகுதி (1943), பொருளதிகாரம் முற்பகுதி (1948) ஆகியன வெளிவந்தன. ‘தொல்காப்பியக்கடல்’ என்றும், ‘ஈழத்து இலக்கிய ஞான்று’ என்றும் கணேசையர் புகழப்பட்டார்.

இலக்கண - இலக்கிய ஆய்வாளன்

கணேசையர் தனது 25வது வயதிலே அக்காலத்தில் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். இலக்கண ஆராய்ச்சி மட்டுமன்றி பல இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் இவரால் எழுதப்பட்டு ‘செந்தமிழ்’ இதழில் வெளிவந்தன<[2].

கட்டுரையாளன்

கணேசையர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ‘மதுரை செந்தமிழ்’ ஈழகேசரி பத்திரிகை’ மற்றும் அக்காலத்தில் வெளிவந்த சிறப்பு மலர்களிலும் ஐயரின் கட்டுரைகள் இடம்பெற்றன. இலக்கணத்தில் சிக்கலான பகுதிகளைத் தேர்வுசெய்து அது சம்பந்தமான கட்டுரைகளையே அதிகமாக எழுதியுள்ளார்கள். மேலும் சமயம் சார்ந்த அல்லது சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன.

விவாதத் திறன்

கணேசையர் காலத்தில் ஈழநாட்டு தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கும் இடையில் பல விவாதங்கள் பத்திரிகைகள் – சஞ்சிகைகள் மூலமாக நடந்துள்ளன. ஐயரவர்கள் நடத்திய விவாதங்களில் தமிழ்நாட்டின் அரசன் சண்முகனாருடனான விவாத மோதலே இவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் “ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு” என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும் அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவியிருந்தார்கள்.

மேலும், சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் புகழ் பெற்றது. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

கவிபாடும் புலமை

கணேசையர் மரபுக்கவிபாடும் வல்லமையையும் கொண்டிருந்தார். ஈழத்தின் சிறந்த புலவர்களுள் ஒருவரான குமாரசாமிப் புலவர் ‘கவிபாடும் புலமைக்கோனே’ எனப் பாராட்டியிருந்தார்

‘மருதடி விநாயகர் பிரபந்தம்’, ‘மருதடி விநாயகர் இருபா இருபஃது’ ‘மருதடி விநாயகர் அந்தாதி’ ‘மருதடி விநாயகர் ஊஞ்சல்’ ‘ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஊஞசல்’, ‘திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை’ போன்றன இவரது படைப்புக்களுள் சிலவாகும். மேலும், அக்காலப் பத்திரிகைகளிலும் நினைவு மலர்களிலும் ஐயரால் இயற்றப்பட்ட பாக்கள் - இரங்கல் பாக்கள் வெளிவந்துள்ளன[2].

போதனாசிரியர்

கணேசையர் மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். வண்ணார்பண்ணையில் ஆரம்பமான அவரது ஆசிரியப்பணி விவேகானந்தா வித்தியாசாலையிலும் பின் நாவலர் காவியப் பாடசாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் முதலிய ஊர்களிலுள்ள பாடசாலைகளிலும் தொடர்ந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பதற்குரிய ‘ஆசிரிய தராதரப் பத்திரத்தையும்’ பெற்றிருந்தார்.

ஈழ நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் சைவப்பாடசாலையில் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியப் பணியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார்.

ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்க நிறுவனர் சதாசிவ ஐயரால் நிறுவப்பட்ட சுன்னாகம் பராசீன பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை 1921 ஆம் ஆண்டில் கணேசைர் ஏற்று 1932 வரை செயற்பட்டார். இக்காலத்தில் இவர் ஈழத்தின் சிறந்த பண்டிதர் பரம்பரையை உருவாக்கியிருந்தார். இவர் தன்னுடய கற்பித்தல் செயற்பாட்டிற்காக எழுதியிருந்த பாடக்குறிப்புகள் பின்னர் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்தன.

இப்பாடசாலையை விட்டு நீங்கியபின் தனிப்பட்ட முறையிலான கற்பித்தலில் ஈடுபட்டார். வருத்தலை விளானில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும், தருக்க சிங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள். நாள்தோறும் மாலைவேளையில் மருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தார்[3].

பன்முகப் பணிகளும் பாராட்டுக்களும்

பன்முகப் பணிகள்

கணேசையர் ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரிதம், சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைத் ஒரு தனி நூல்களாக எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கே தனித்துவமான ‘புராணப்படிப்பு’ கலாசாரம் இவரையும் பாதித்தது. ஆலய புராணப் படிப்புகளில் கலந்துகொள்ளல், குறிப்பு எடுத்தல் போன்ற போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருநதார். ஆகம- சோதிட விற்பன்னர்களைக் கொண்ட அந்தண பரம்மரையில் வந்த ஐயரவர்கள் நல்லநாள் அறிதல், மழை வருதல் – வராமையறிதல், வீடு, கிணறு முதலியவற்றிற்கு நிலம் வகுத்தல், நினைத்த காரியம் கேட்டல் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றிவந்தார்[4].

பொற்கிழிப்பரிசு

தமிழிற்கு தொண்டாற்றிவந்த கணேசையருக்கு யாழ்ப்பாணத்து அறிஞர் பெருமக்களால் பொற்கிழியொன்று பரிசளிக்கும் வைபவம் 1938 ஆம் ஆண்டு ஐப்பசி 5ம் நாள் இவரது பவள விழாவையொட்டி நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறிஞர்கள் மத்தியில் சு. நடேசபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சுவாமி விபுலாநந்தர் உட்படப் பலர் பங்கேற்றிருந்தனர். விழாவில் ஈராயிரம் ரூபாய் பெறுமதி கொண்ட பொற்கிழி ஒன்று பரிசிலாக வழங்கப்பட்டது. இவ்விழாவின் பின்னரும் கணேசையர் தொல்காப்பியத்தில் தான் எழுதிய உரைகளின் எஞ்சிய பாகங்களையும் வெளிக்கொணர்ந்தார்.

வித்துவ சிரோமணிப் பட்டம்

ஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் கணேசையருக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

இறுதிக் காலம்

கணேசையர் தனது வாழ்நாளின் இறுதிப் பத்தாண்டுகளுக்கு மேலாக தனது மனைவியின் ஊரான வருத்தலை விளானில் உள்ள மருதடி விநாயகர் ஆலய சூழலில் கழிக்கலானார். தனது பெறுதிமிக்க ஏடுகள் – புத்தகஙகள் அனைத்தையும் தனது மாணாக்கர்களிடமே கொடுத்துவிட்டார். இறுதிக் காலத்தில் வருத்தலை விளான் மருதடி விநாயகர் ஆலய சூழலில் ஓர் ஆச்சிரமம் அமைத்து துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். இக்காலத்தில் ஈழகேசரி நிறுவனத்தாரும், உறவினர் – நண்பர்களும் இவருக்கு உதவி வந்தனர். இறுதியாக 03-11-1958 அன்று காலமானார்கள்.

இவரது நூல்களிற் சில..

  • குசேலர் சரித்திரம்
  • ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம்
  • குமாரசுவாமிப்புலவர் வரலாறு

கணேசையர் எழுதிய சில கட்டுரைகளின் விபரம்

  • இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்
  • இராமவதார் அருஞசெய்யுள் விளக்கம்
  • திருக்குறள் பரமேழகர் உரைவிளக்கம்
  • பெரியபுராண முதற்செய்யுளுரை
  • இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்
  • இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம்
  • இந்திய அரசர் போர்வீரம்
  • இருகண்ணொருமணி
  • திணைமயக்கம்
  • திருக்குறள் பரிமேழழகர் உரைவிளக்கம்
  • பொருள் கோடல்
  • இராமவதாரச் செய்யுட் படாந்தரம்
  • சாவாவுடம்பு
  • கவித்தன்மை
  • குமாரசுவாமிப் புலவர்
  • யாப்பருங் கலங்காரிகையுரைத் திருத்தம்
  • வடசொல்
  • வடமொழி முதுமொழியன்றோ
  • உடம்படு மெய்
  • வசிட்டரும் வள்ளுரும் கூறிய அரசியல்
  • அந்தணர் நூல்
  • ஆறனுருபு பிறிதுருபேற்றல்
  • முன்னைத் தமிழ்நாட்டு பெண்களின் கற்புநிலை
  • சில ஆராய்ச்சி
  • அளபெடை
  • கவியின்பம்
  • சிறுபொழுது
  • தொகைநிலை
  • ஒரு செய்யுட் பொருள் ஆராய்ச்சி
  • கவியின்பம்
  • தொல்காப்பியச் சூத்திரப் பொருள் ஆராய்ச்சி
  • பிறிது பிறிதேற்றல்
  • இருபெயரொட்டுப்பெயரும் அன்மொழித்தொகையும்
  • தமிழ்மொழி வளர்ச்சி
  • பரிசோதனைத் தொடர்
  • சிறு பொழுதாராய்ச்சி
  • மதுரைக் காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு
  • சேனாவரையப் பதிப்பும் பிழை திருத்தமும்
  • சில ஆராய்ச்சி
  • சீவகசிந்தாமணி உரைநயம்
  • இயற்கை நவிற்சியும் செயற்கைப் புணர்ச்சியும்
  • கம்பனும் உவமலங்காரமும்
  • பிழையும் திருத்மும்
  • மெய்ப்பாடு
  • தமிழ்நாட்டு மணம்
  • பொருட்புடைப் பெயர்ச்சி
  • அனுதாபக் குறிப்பு
  • இரங்கற்பா
  • இல்லறக் கிழத்தி மாண்புகள்
  • செந்தமிழ்
  • தமிழ்நாட்டு மக்களின் சில ஒழுக்க மரபுகள்
  • இராமவதாரமும் கலித்தொகையும்
  • கம்பரும் அவலச்சுவையும்
  • நீர் விளையாட்டு
  • கவிச்சக்கரவர்த்தி கம்பனே
  • உலகியலும் இலக்கியமும்
  • பெண்களுக்கு பெருந்தகைமை கற்பே
  • தெய்வப் புலவரின் நாவுணர்ச்சி
  • இராமவதாரத்திற் கவிநயம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம் - மகாஜனாக் கல்லூரி
  2. 2.0 2.1 கணேசையர் ஆண்டுமலர்
  3. வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம்
  4. பண்டிதர் இ.நமசிவாயம்

உசாத்துணை

  • சிவலிங்கராஜா, எஸ்., வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும்

வெளி இணைப்புகள்

தளத்தில்
சி. கணேசையர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கணேசையர்&oldid=1120540" இலிருந்து மீள்விக்கப்பட்டது