க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க்
க்
தமிழ் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட்
ண் த் ந் ப் ம்
ய் ர் ல் வ் ழ்
ள் ற் ன்

க் (க்) என்பது தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் பதினான்காவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ககர மெய்" அல்லது ககர ஒற்று என்பர். எனினும், பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இக்கன்னா" என வழங்குவர்.

"க்" இன் வகைப்பாடு[தொகு]

கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்தின் பரினாம வளர்ச்சி

தமிழ் எழுத்துகளில் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் க் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. அதனால், இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் க் வல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வன்மையான ஓசை உடையது ஆதலால் வல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.

இனவெழுத்துகள்[தொகு]

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது க், ங் என்னும் இரண்டும் அடி நாக்கு மேல்வாயின் அடியைப் பொருந்த உருவாகின்றன. இதனால் க், ங் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].

ககரம் வருமிடங்கள்[தொகு]

க் தனியாகச் சொல்லுக்கு முதலிலோ அல்லது இறுதியிலோ வருவதில்லை. க் சொல்லில் இடையில் வரும் எனினும், இது பக்கம், அக்காள், செக்கு போன்ற சொற்களில் வருவது போல இன்னொரு ககர உயிர்மெய்யுடன் சேர்ந்தே இடையில் வரும். க் 12 உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உருவாகும் எல்லாக் ககர உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரக்கூடியன. இவை சொல்லுக்கு இறுதியிலும் வருவன. பிற மொழிச் சொற்களையோ பெயர்களையோ தமிழில் கையாளும்போது மேற்சொன்ன விதிகளைப் பலர் தற்காலத்தில் கைக்கொள்வதில்லை. கார்த்திக், கட்டாக், ஜோக் போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். விக்டோரியா, ஆக்சிஜன் என்று க் பிற உயிர் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இடையில் வரும்படி பயன்படுவதையும் தற்காலத்தில் காணலாம்.


ககர உயிர்மெய்கள்[தொகு]

க் தமிழ் எழுத்துக்களில் அடிப்படையான எழுத்து. ஒலி அடிப்படையில் க் உடன் பிற உயிர்கள் சேரும்போது ககர உயிர்மெய்கள் பெறப்பட்டாலும், வரி வடிவத்தில் அகரத்தோடு சேர்ந்த ககர வர்க்க எழுத்தே அடிப்படையான வரிவடிவமாக உள்ளது. இவ்வரிவடிவுடன் புள்ளி ஒன்றைச் சேர்ப்பதன் மூலமே தனி மெய்யான க் பெறப்படுகின்றது.


ககர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.

சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர்
க் + அ கானா
க் + ஆ கா காவன்னா
க் + இ கி கீனா
க் + ஈ கீ கீயன்னா
க் + உ கு கூனா
க் + ஊ கூ கூவன்னா
க் + எ கெ கேனா
க் + ஏ கே கேயன்னா
க் + ஐ கை கையன்னா
க் + ஒ கொ கோனா
க் + ஓ கோ கோவன்னா
க் + ஔ கௌ கௌவன்னா

குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11
  2. இளவரசு, சோம., 2009. பக். 44, 46

உசாத்துணைகள்[தொகு]

  • இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
  • பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
  • வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க்&oldid=3401367" இலிருந்து மீள்விக்கப்பட்டது